“பொறவு, மணிக்கு என்னத்துக்குத்தா மணி? எல்லா எளையவேன் சோலிதேம். எப்புடி நின்னியான் பாத்த தான? பாவத்த. ஆனாலும் ஒங்கப்பனுக்கு அவேன் வாயிக்கு இது தேவதேம்….” என்றும் சொல்ல,
“என்ன கெழவி, என்ன நெனச்ச போல? இந்தா வந்துட்டேன்….” என காலரை தூக்கிவிட்டபடி உள்ளே வந்தான் ஜகா.
வீட்டில் இருந்த மற்ற உறவுகளும் கிளம்பி உறங்க சென்றிருந்தனர். வீட்டாட்கள் மட்டுமே அங்கே இருக்க ஜகா வரவும் காந்திமதி நெஞ்சை பிடிப்பதை போல பாவலா செய்தார்.
“நீ இருந்து பைசல் பண்ணு. எனக்கு சோலி கெடக்கு….” ஜகா அதிலிருந்து ஜகா வாங்க அத்தனைபேரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
“எந்த நேரமும் சிரிப்பு தான். என்னதான் பேசிப்பாங்களோ?…” என எழில்மணி கூட வெளியில் அமர்ந்து ஒரு புன்னகையுடன் சொல்லிக்கொண்டார்.
வைதேகிக்கு மனதின் சங்கடங்கள் எல்லாம் விலகி இந்த சூழ்நிலையில் புது உற்சாகமே வந்து அவளின் இயல்புநிலை திரும்பியது.
தாய், தகப்பன், அண்ணன் என்று வாழ்ந்திருந்தவள் தாயின் இறப்பின் பின் பெரும்பாலும் தனிமை மட்டுமே. தந்தை ஒருவரே ஆதரவென இருந்தவள்.
மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யும் இந்த குருவி கூட்டில் இனி தானும் ஒருத்தி என நினைக்கும் பொழுதே மனதெங்கும் சந்தோஷ மேகங்கள்.
“செரி, நீயி உள்ள போ சகா….” என வடிவு சொல்ல,
“ஆசிர்வாதம் பண்ணனுமே. ரெண்டுபேரும் வந்து முதல்ல பாட்டி, அத்தைக்கிட்ட வாங்கிக்கோங்க…” என்று சொல்ல மனதெல்லாம் நிறைவுடன் அவர்களை ஆசிர்வதித்தனர் அந்த பெண்மணிகள்.
“இந்த வீட்டோட அடுத்த மீனாட்சி…” என வடிவு மருமகளை நெட்டி முறிக்க,
“அப்ப நானு? எப்ப பாருங்க பெரியண்ணே கூட இதேம் சொல்லும். அப்பத்தா, ஆத்தாவ மீனாச்சின்னு. பொறவு பெரிய மதினி. இப்ப சின்ன மதினி…” துர்கா சிணுங்க,
“நீயுந்தேம் எங்க மீனாட்சி. இன்னொரு வீட்டுக்கு போக போற மீனாட்சி….” என்றான் தங்கையிடம் பாண்டியன்.