“எங்கப்பா சொன்னதால கட்டிக்கிட்டேன். கட்டினதால புடிச்சது….” என்று சொல்ல,
“எனக்காவ கூட சொல்லமாட்டியா நீயி? ராங்கி….” என அவளை மொத்தமாய் தனக்குள் கொண்டுவந்தவன் அவளில் தொலைந்து மிதந்து களைத்து மீண்டான்.
பனித்துளிகளின் மழையில் பெண்ணவள் பூவாய் நனைய இருவரின் இணைவில் உயிர்கள் பூத்தது.
சித்தம் கலங்க செய்யும் வித்தை தெரிந்தவனிடையில் மருத்துவ பெண் மனம் முழுதாய் மயங்கி நனைந்தது.
——————————–
காலையில் இருந்தே உறவு கூட்டத்தின் அழுகையில் அந்த வீடே கலங்கி போயிருந்தது. முதல்நாள் இரவில் இருந்து சொந்தபந்தம், சுற்றுவட்டாரம் எல்லாம் கூடிவிட்டனர்.
அவ்வப்போது வருவதும், வந்து பார்த்து செல்வதுமென ஆட்கள் வந்துபோய்க்கொண்டு இருந்தார்கள்.
காந்திமதியின் தலைமாட்டில் தலையில் கை வைத்தபடி நாயகி அமர்ந்திருக்க, அழுது ஓய்ந்த விழிகளுடன் வடிவு மொத்தமாய் உடைந்திருந்தார்.
வந்தவர்களுக்கு குடிக்க ஏதேனும் நீர் ஆகாரம் சுற்றி வந்துகொண்டு தான் இருந்தது.
ஒருவார தாடியுடன் ஜகா சோர்ந்த முகமும், உறங்கா விழிகளும் என தொய்ந்து போயிருந்தான்.
திருமணம் முடிந்து ஏழு மாதங்கள் தான் ஆகியிருந்தது அவனுக்கு. உள்ளே தன் அறைக்குள் செல்ல வைதேகி அவனுக்கு குடிக்க மோர் எடுத்து வந்தாள்.
“ஜகா இதை குடிங்க….” என நீட்ட,
“கெழவி எப்படி இருக்குடி? செக் பண்ணுனியா?….” என்று கேட்டவன் அவள் நீட்டியதை தொடவில்லை.
“இதை குடிங்க. சொல்றேன்…”
“எனக்கு வேண்டாம். நீ சொல்லு…”
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஒருவாரமாச்சு சரியா சாப்பிட்டு. எப்பவாவது குடிக்கிற இந்த டீ, ஜூஸ் கூடவா குடிக்க முடியாது?….” என்று அவள் பிடிவாதமாக சொல்ல வாங்கி ஒரே மடக்கில் குடித்தான்.
“பல்ஸ் அப்படியே தான் இருக்கு. எந்த இம்ப்ரூவ்மென்டும் இல்லை….” என்றாள் அவள்.
“அதெல்லாம் மாமா நல்லா பார்த்துக்கறாங்க. நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்…” என்றவள்,
“சும்மா முகத்தை தூக்கி வச்சுக்காதீங்க. எல்லாம் சரியாகிடும். பாட்டி எழுந்து வந்திருவாங்க….” என்று சொல்ல உடைந்து போய் அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினான் ஜகா.
“கெழவி இல்லன்னா இது வீடே இல்லடி. அது இல்லாம…” என சொல்ல சொல்ல அவனின் விழியில் நீர் பெருகிக்கொண்டே இருந்தது.
“அதெல்லாம் ஒன்னுமாகாது. சரியாகிரும்…” என்றவள் சமாதானம் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்று அனைவரும் அறிந்ததே.
பத்து நாட்களுக்கு முன்பு இரவு கீழே விழுந்தவர் தான் காந்திமதி. இன்னும் கண்விழிக்கவில்லை. நினைவும் திரும்பவில்லை.
நாளுக்குநாள் உடல்நிலை மோசமடைந்து ஒருகட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றானது.
மருத்துவர்களும் பார்த்துவிட்டு மருத்துவ உபகரணங்களுடன் அவரின் உயிரை பிடித்து வைத்ததோடு வீட்டில் வைத்தும் பார்த்துக்கொள்ளலாம் என்று அனுப்பிவிட்டனர்.
நினைவு திரும்பிவிட்டால் கூட அவர் உயிர்பிழைக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லியிருந்தனர்.
வீட்டில் ஒருவருக்கும் உயிர்ப்பில்லை. அத்தனையும் காந்திமதியின் விழிப்பில் தான் காத்துக்கிடக்கிறது.
மேடிட்ட வயிற்றுடன் மதுரா அறையில் இருந்து வெளியே வர மகேஷ்வரி அவளை உள்ளே இருக்கும்படி கூறினார்.
“அவங்க எங்கம்மா? போன் பண்ணேன். எடுக்கலை. இன்னும் வரலையா?…” என்றாள்.
இதுவரை அவளின் முகத்தில் என்றும் சிரிப்பில்லாமல் பார்த்ததில்லை மகேஷ்வரி.
இப்படி ஓய்ந்து இருப்பவளை பார்க்கவே தாள முடியவில்லை. பிள்ளை உண்டாகியிருக்கும் பெண்ணை தனியே கவனிக்கவும் முடியவில்லை.
வடிவு காந்திமதியை வீட்டிற்கு கொண்டுவந்ததில் இருந்து அவ்விடம் விட்டு அகலவில்லை.
“அத்தை சாப்பிட்டாங்களா? ம்மா, கொஞ்சம் இருந்து பார்த்துக்கோங்க ப்ளீஸ்….” என மதுரா கெஞ்ச,
“நீ சொல்லனுமா மது? இப்ப எனக்கு உன்னையும் நினைச்சு கவலையா இருக்கு…” என பேசிக்கொண்டிருந்தார்.
வெளியே புல்லட் சத்தம் கேட்க பாண்டியன் வந்துவிட்டதை அறிந்தவள் அங்கே செல்ல மகனுடன் பைக்கில் அமர்ந்தபடி போனில் பேசிக்கொண்டிருந்தான் சொக்கநாதபாண்டியன்.