இத்தனை வருடங்கள் மாமியார் மருமகள் என்று இருந்தாலும் தன்னை பிள்ளையாய் தாங்கிய தாயின் அரவணைப்பிற்கு பரிதவித்து போயிருந்தார் வடிவு.
எங்கே அவருக்கும் முடியாமல் போய்விடுமோ என வைதேகி உடனே அவருக்கு ஒரு மாத்திரையை தந்து உறங்க வைத்தாள்.
காந்திமதியின் நடமாட்டம் இல்லாத அந்த வீடே உயிர்ப்பிழந்து போயிருந்தது.
எழில்மணி வந்து பார்த்துவிட்டு சென்றவர் தினமும் அழைத்து பேசிவிடுவார். ஒருவாரம் இப்படியே கடக்க நள்ளிரவில் காந்திமதியிடம் அசைவு.
ஒருவர் மாற்றி ஒருவர் யாரேனும் அவருடன் இரவு விழித்திருப்பார்கள். அன்று பாண்டியன் விழித்திருக்க காந்திமதியின் விரலை பற்றியபடி தான் அமர்ந்திருந்தான்.
இதுநாள்வரை அசைவற்று இருந்த விரலில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தவன் உடனே பரபரப்பானான்.
“அப்பத்தா, கெழவி. கெழவி என்னிய பாரு. ஒன்னோட ராசா, சாமி வந்திருக்கேம்த்தா. எந்தித்தா. என்னிய கூப்புடுத்தா…” என அழைக்க அந்த அறையில் கீழே படுக்கையை விரித்து படுத்திருந்த அனைவருமே எழுந்துகொண்டனர்.
“ஆத்தா, இங்க பாரு கெழவி அசையுது. கண்ண பாரேம்….” என்று பாண்டியன் கூற வைதேகி உடனே பரிசோதித்தாள்.
மருத்துவமனைக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு ஆம்புலன்ஸுடன் மருத்துவரை அனுப்ப சொல்லியவள்,
“பேசுங்க மாமா. பேசிட்டே இருங்க. பேச பேச ரியாக்ட் பன்றாங்க பாட்டி…” என வைதேகி சொல்லி அவளும் பேசினாள்.
“கெழவி எந்திச்சி வாத்தா. ஒத்த உசுரா அம்புட்டுபேரையும் ஆட்டி வைக்கித. வீடு வீடா இல்லத்தா. ஒம்பேத்தி புள்ளைய பாக்க வேணாமா நீயி?…” என கேட்க துர்கா ஓவென்று அழுதாள்.
“வா அப்பத்தா. இனிமேட்டு ஒங்கூட சண்டை போட மாட்டேம். எந்திச்சு வாத்தா. எஞ்சாமில…” என சொல்லி சொல்லி அழ அனைவரின் பேச்சுக்குரலுக்கும் செவி சாய்ந்தவரிடம் இன்னும் அசைவு.
அனைவரும் எழுந்ததில் விக்கிரமபாண்டியனும் எழுந்துவிட எல்லோரும் அழ அவனும் பயத்தில் அலறி அழுதான்.
இதோ அவரின் மருமகள். சவலைப்பிள்ளையாய் தேம்பி நின்றவரை பார்த்ததும் நெஞ்சமெல்லாம் விம்மிவிட்டது காந்திமதிக்கு.
‘அழாதத்தா, ஒன்னிய விட்டு போவாட்டேம்’ என சொல்ல அவர் உயிர் தவித்தது. நா எழவில்லை.
“கெழவி என்னிய பாருத்தா. இங்காரு. சகான்னு சொல்லுத்தா. ஒருமடக்கு தண்ணி உள்ள எறங்கமின்ன தொண்டையெல்லாம் வலிச்சு தொலையுது…” என்ற ஜகாவுக்கு அப்படி ஒரு அழுகை.
காந்திமதி சிரிக்க முயன்றார். அனைவரையும் கண்ணில் நிறைக்க முயன்றார். ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தவித்தவர் விழிகள் அவரின் கொள்ளுபேரனிடம் சரணடைந்தது.
அவனை பார்த்ததுமே பாண்டியன் தன் மகனை அவரின் முகத்தருகே கொண்டு செல்ல காந்திமதியின் விழிகள் பளபளத்தது.
இங்கே நடப்பவை மருதுவும் உணர்ந்தான் போல வீறிட்டு ‘ம்மா’ என கத்தினான் நானுமிருக்கிறேன் வா என வெளியில் இருந்து.
ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்க வைதேகியும், மதுராவும் மருத்துவர்கள் எங்கே வந்துகொண்டிருக்கிறார்கள் என்று போனில் மாற்றி மாற்றி விசாரித்துக்கொண்டிருந்தனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு காந்திமதியை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் போராட்டத்துடன் குடும்பங்களின் வேண்டுதல்களை பெற்றுக்கொண்டு முழுதாய் உயிர்பெற்று வந்தார் காந்திமதி.
அன்று தான் காந்திமதியை வேறு அறைக்கு மாற்றி அனைவரையும் மொத்தமாக பார்க்க அனுமதித்திருந்தனர்.
அழுகை ஓய்ந்து மகிழ்ச்சி திரும்ப ஆரம்பித்திருந்தது. புன்னகையுடன் நிம்மதியான மனதுடன் சூழ்ந்திருந்தனர்.
மருத்துவமனையில் வைத்து ஜகாவிடம் தனது தண்டட்டியை எங்கே என கேட்டவர் அவன் கொண்டுவந்து தரவும்,
பாட்டு சத்தமும், மேள சத்தமும், மக்களின் கூட்டமும், பேச்சுக்குரல்களின் சலசலப்பும் என அவ்விடத்தையே கிடுகிடுக்க செய்துகொண்டிருந்தது.
பின்னே மதுரை சித்திரை திருவிழா என்றால் இவையெல்லாம் இல்லாமலா? மல்லிகையாய் மணத்தது மதுரை.
ஊரே கொண்டாடி வரும் திருவிழாவில் வடிவு தன் மாமியாரின் உடல்நிலை சரியானதற்காக மொட்டை போட்டிருந்தார். அது ஒவ்வொரு திருவிழாவிற்கும் தான்.
அதற்கு குடும்பமாக வந்திருந்தனர். வெயில் கசகசப்பு எங்களை ஒன்றும் செய்யாது என்பதை போல பட்டுடுத்தி ஆண்களும், பெண்களும் கூட்ட நெரிசலிலும் முகம் கொள்ளா சிரிப்புடனும், குதூகலத்துடனும் வலம் வந்தனர்.