அவருக்கு தெரியும் பாண்டியனின் மனதும், விருப்பமும். ஆனாலும் இன்றுவரை அவன் அதனை காண்பித்ததில்லை தன்னிடம்.
தனக்கு ஒன்று என்றதும் பதறிக்கொண்டு முன்னால் வந்து நிற்கும் குடும்பம். இதைவிட சிறந்த வாழ்க்கை பேத்திக்கு அமைதுவிடுமா என நினைத்து குமைந்தார் நாயகி.
அதிலும் முதல்நாள் மகன் தெரிவித்த விஷயம் அத்தனை தூரம் அவரை வாட்டியிருக்க இன்னும் அதனை காந்திமதியிடம் கூட சொல்லவில்லை.
சொல்லவும் முடியவில்லை. தெரிந்தால் நல்லது என்று கடந்துவிட்டாலும் இன்னும் திருமணம் என்ற பேச்சில் தலைகொடுக்காத பேரனை எண்ணி வருந்தாமலா இருப்பார் என தோன்றியது.
மேலும் மேலும் அவர்களை துன்புறுத்துவதை போலிருக்க வயதான பெண்மணியின் உடலின் பலமும் குறைந்து படுக்கையில் வீழ்த்தியது.
மருத்துவரிடம் அக்கறையாக நின்று ஒவ்வொன்றாய் கேட்டுக்கொண்டவன் அவரை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிந்துகொண்டான்.
அதனை விழியகலாமல் பார்த்த காந்திமதி, நாயகியின் பார்வையை கண்டவன் மீசையை நீவியபடி திரும்பினான்.
“இந்த குளுக்கோஸ் முடியவும் வீட்டுக்கு போவலாமாம். போயி வண்டியை கொண்டாறேன்…” என்று கிளம்பியவன் அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தான்.
உலகநாயகியை அழைத்துக்கொண்டு அவரின் இல்லத்திற்கே சென்றவன் துணைக்கு காந்திமதியை இருக்க செய்தான்.
“ஊருக்கு சேதி சொல்லியாச்சா?…” என்றான் தன் தாயிடம்.
“நாந்தேன் போன போட்டேன். அந்தண்ணே எடுக்கல ராசா. பொறவு அவக சம்சாரத்துக்குத்தேன் போட்டேன்…”
“செரி அவக வார வரைக்கி இங்கன இருங்க. ரவைக்கு நா வந்து கூடிக்கிடுதேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் பாண்டியன்.
தன் வீட்டிலிருந்தே சமையலையும் செய்ய சொல்லி கொடுத்தனுப்பினான். மதிய உணவை முடித்துவிட்டு ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோம் என கிளம்பி வர வரும் வழியில் வடிவும் அழைத்துவிட்டார்.
“அங்கனக்கிதேன் வாரேன்ம்மா. கிட்ட வந்துட்டேன்…” பாண்டியன் சொல்ல,
“இங்கன அவக வீட்டாளுக மெட்ராசில இருந்து வந்துட்டாக ராசா…” மெல்லிய குரலில் வடிவு சொல்ல,
“ஓஹ், செரி…” என்றான்.
“வாரேமின்னு தாக்கல் கூட சொல்லாம கெளம்பிட்டாக போல. ப்ளைனுல வந்தாகலாம்…”
“செரி…”
“எல்லாருமே வந்திருக்காகய்யா…” இதனை சொல்லும் பொழுதே வடிவுக்கு மகன் என்ன நினைப்பானோ என்றிருக்க அவனின் அமைதியில்,
“நானே அப்பத்தாவோட வாரேம். நீயி சோலிய பாருவேன்…” என சொல்ல,
“கிட்டக்க வந்துட்டேம்த்தா…” என சொல்லி வைத்துவிட்டான் பாண்டியன்.
வடிவு செய்வதறியாமல் போனுடன் உள்ளே நுழைய எழில்மணி கோபத்துடன் நின்றிருந்தார்.
ஊரிலிருந்து வந்ததும் தங்களிடம் வெறும் தலையசைப்பும், பார்த்துக்கொண்டதற்கு நன்றியும் மட்டுமே. மற்றபடி அவர்கள் இருப்பதையே அவர் சட்டை செய்யவில்லை.
பேச்சுக்கள் எல்லாம் நாயகியிடம் மட்டுமே. ஆனால் மகேஷ்வரியும், மதுராவும் அப்படி இல்லாமல் நன்றாகவே பேசி நலம் விசாரித்தனர்.
காந்திமதி மருமகளின் பார்வையில் என்னெவென்று கேட்க பதில் சொல்லும் முன் மதுரா போனுடன் பேசிக்கொண்டே பின்பக்கமாக சென்றாள்.
அவள் செல்வதை பார்த்திருந்த வடிவு மகன் வருவதாய் மாமியாருக்கு மட்டும் சொல்ல வெளியே ஜீப் சத்தமும் கேட்டது.
“வந்துட்டியான்…” காந்திமதி சொல்ல அனைவரின் பார்வையும் வாசல்ப்புறம்.
உள்ளே வேகத்துடன் வந்தவன் விழிகளோ முதலில் நாயகியிடம் படிந்து நலம் கண்டுகொண்டு தாயிடம் திரும்பியது.
“வாங்க தம்பி…” மகேஷ்வரி முன்வந்து அவனை வரவேற்க எழில்மணி அதனை கண்டுகொள்ளாமல் நாயகியிடம் திரும்பிக்கொண்டார்.
“குடிக்க எல்லாருக்கும் மோர் கொண்டார சொல்லுத்தா…” என அருகில் நின்ற மரிக்கொழுந்துவிடம் நாயகி சொல்ல அவள் உள்ளே சென்றதும்,
“இப்ப இது ரொம்ப அவசியமாம்மா?…” என எகிற ஆரம்பித்தார் எழில்மணி. அதனை கண்டுகொள்ளாமல்,
“செத்த ஒக்காரத்தானய்யா…” தீனமான குரலில் சுரத்தே இன்றி நாயகி சொல்லிக்கொண்டே பாண்டியனை பார்த்தார்.
அவனும் எதுவும் பேசாமல் கிளம்புவதாக தலையசைத்து காந்திமதியையும், வடிவையும் பார்க்க காந்திமதி எழுந்துகொண்டார்.
“இருங்க ப்ளீஸ், மோர் குடிச்சிட்டு போகலாம் எங்க திருப்திக்கு…” மகேஷ்வரி அவர்களிடம் சொல்லி நிறுத்தவும்,
“ஆமாய்யா, செத்த இருவேன். இங்கன உக்காரு ராசா…” என்று நாயகியும் பாண்டியனை உபசரிக்க கடுப்பில் எழில்மணி மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“போகட்டுமே, விடுங்க. நல்லா பார்த்துக்கோங்கம்மா, இப்ப நானும் போய்ட்டா இங்க ஒத்தையில விழுந்து கிடக்கறது தான் உங்களுக்கு நிலைமை…” என தாயிடம் காய்ந்த எழில்மணி,
“சொல்ல சொல்ல கேட்கறீங்களா? என்கூட வந்து இருந்தா அங்க சிட்டில பெரிய ஹாஸ்பிட்டலா பார்த்து உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்த்திருப்பேன். இந்த குக்கிராமத்தில இவ்வளோ கஷ்டம் தேவையா உங்களுக்கு? கூட துணைக்கும் யாருமில்லாம…” என கத்திக்கொண்டு இருந்தார்.
“எங்க வர சொல்லுத நீயி?…” என எரிச்சலுடன் உலகநாயகி கேட்க,
“எங்கயா? ம்மா கடல் மாதிரி வீடு இருக்கு. கூப்பிட்ட குரலுக்கு உங்களுக்கு வேலை செய்ய வேலையாளுங்க அத்தனை பேர் இருக்காங்க. நீங்க வாங்க. உங்கள ஸ்பெஷலா பார்த்துக்க ஒரு நர்ஸ் கூடவே போட்டுடறேன்…” என்று எழில்மணி பெருமை பேசினார்.
“அதாம்ய்யா ஆரு வீடுங்கேன்?…” என்றவர் கேள்வியில்,
“என்னம்மா நீங்க? என் வீட்டுக்கு தான்….” என்றவரை கண்டு கேலியாய் சிரித்த நாயகி,
“உம் வீடுன்னா இதேம் மணி. அது ஒ மாமனார் வீடு. சம்பந்தகாரக வீடு. அங்கன வந்து ஒருவாக்கஞ்சி வேணா மதிப்பா இறங்கும். அடுத்தவேள கஞ்சி சுருக்குன்னுதேன் இருக்கும். எறங்காது…” என சொல்ல மகேஷ்வரி அமைதியாய் பார்த்தார்.
உலகநாயகியின் பேச்சில் நியாயம் அவருக்கும் புரிய இதில் இடையிடவில்லை மகேஷ்வரி.
“இங்காரு மணி…” என்று அவர் பேசும் முன் இருமல் வர மகேஷ்வரிக்கு முன் வடிவு அவரை நெருங்கி உடனே நெஞ்சை நீவி தண்ணீர் பருக வைத்தார்.
அதில் இன்னுமே கடுப்பான எழில்மணி தங்களுக்கில்லாத உரிமையா தன் தாயிடம் இவர்களுக்கு என ஆத்திரம் மிக அவரின் வார்த்தைகள் தடிக்க காத்திருந்தது.
அதிலும் அவர்களின் அனுசரணை தான் தன் தாய் தன்னை தேடாததற்கு காரணம் என நினைத்தார் எழில்மணி.
“இப்ப எதுக்கு இங்கயே உறவாடிட்டு இருக்கீங்க? பார்த்துகிட்ட வரைக்கும் போதும். நான் எங்கம்மாவை சென்னை கூட்டிட்டு போறேன். நீங்க போகலாம்…” எழில்மணி சத்தமாய் சொல்லியவர் பாண்டியனை பார்த்து,
“நீங்க முதல்ல உங்க குடும்பத்தை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்புங்க…” என்றதுமே அதுவரை அமைதியாய் இருந்த பாண்டியன்,
“அதை நீங்க சொல்லக்கூடாது. எனக்கு தெரியும் நான் என்ன பண்ணனும்னு…” அமர்த்தலாக கூறினான்.
வந்ததிலிருந்து அவனும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். நாயகியிடம் அமர்ந்து கரிசனையாக பேச கூட இல்லை என்பது கண்டுகொண்டவன் ‘இவரெல்லாம் என்ன மகன்?’ என எண்ணினான்.
எழில்மணிக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. அதிலும் தன் வீட்டிலேயே இருந்துகொண்டு தன்னையே அதிகாரம் செய்கிறானே என அவ்வளவு கோபம்.