“இங்க பாருங்க, உடைச்சே சொல்லிடறேன். நீங்க இப்படி எங்கம்மாவை பார்த்துக்கறதை பார்த்தா எனக்கென்னமோ இன்னும் என் பொண்ணை கட்டனும்னு உங்களுக்கு எண்ணம் இருக்கோன்னு சந்தேகமா இருக்கு. அப்படி ஒன்னு இருந்தா அதை மறந்திருங்க…” என்றவர் பேச்சில் இளக்காரம் பொங்க நன்றாய் திரும்பி நின்றான் அவன்.
“எய்யா மணி…” உலகநாயகி மகனை அதட்டலாய் அழைக்க,
“இரும்த்தா. நீயி என்னத்துக்கு சலும்புத?…” என அவரை மென்மையாய் அடக்கியவன்,
“பொண்ண கட்டனும்னு எண்ணமா?…” என்றவன் விழிகள் அங்கே மதுராவை காணாமல் துழாவி,
“கட்டிக்கிற மாரித்தேன் பெத்து வச்சிருக்கீரு மாமோய். ஆனா அப்படி ஒரு நெனப்பு இருந்தாங்காட்டி ஒம்மக்கிட்ட நா என்னத்துக்கு கேக்கனும்ங்கேன்? பொண்ண ஒத்த கையில தூக்கிட்டு வர தெரியாமலா?…” என்றவன் பேச்சில் எழில்மணி விக்கித்து போனார்.
“எங்க வந்து ஆருக்கிட்ட சலம்பல கூட்டுதோம்ன்னு ரோசனை வேணும். என்ன மாமோய் நா பேசுதது வெளங்குச்சா? கோளாறா பேசனும்….” என்றவன்,
“உங்க பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் முடிவே பண்ணியிருந்தா பிடிச்சு கேட்ட அன்னைக்கே அதை எப்படி நடத்திக்கனும்னு பார்த்திருப்பேன். செஞ்சு காட்டவா? (Ultram) …” என சொடுக்கிட்டவனின் முன்னால் ஆட்டம் கண்டது எழில்மணியின் அஸ்திவாரம்.
அதுவும் அவருக்கு புரியாதோ என்னும் விதமாய் எத்தனை இகழ்ச்சி பார்வையுடன் தெளிவாய் வேறு மீண்டும் பாண்டியன் சொல்ல அதுவே அவன் சாமானியன் அல்ல என்று அவருக்கு எடுத்துரைத்தது.
மகேஷ்வரி பதறி போய் சொக்கநாதபாண்டியனை பார்க்க எழில்மணியின் வாயில் வாஸ்து சரியில்லை அன்று.
“என்னிய சீண்டாம இருக்க வரைக்கித்தேன் ஒமக்கு மருவாதி…” என்று சுள்ளென சொல்லியவன் கோபம் விழியில் தீயாய் எரிந்தது.
“ஆத்தா ஒடம்ப கவனிச்சிக்கிடு. வாரேன்…” என்று சொல்லிவிட்டு தன் குடும்பத்துடன் வெளியேற திரும்ப,
“இதையும் கேட்டுட்டு போப்பா…” என்ற எழில்மணி அவசர அழைப்பு அவனை ஒரு நொடி நிறுத்திவிட்டது.
“ம்மா இன்னைக்கே எங்களோட நீங்க கிளம்புங்க. அடுத்தவாரம் உங்க பேத்திக்கு நிச்சயதார்த்தம்ன்னு சொன்னேன்ல. மாப்பிள்ளையும் என்னை மாதிரியே பிஸ்னஸ் பன்றவர் தான். மதிப்பா படிச்ச, நாகரீகம் தெரிஞ்சவர்…” என அடங்காமல் எழில்மணி சத்தமாய் சொல்லி பாண்டியனை சோதித்துவிட்டார்.
உலகநாயகிக்கு திடுக்கென்றது. போறவனையும் பிடித்து வம்பிற்கு தூண்டுகிறானே என பாண்டியனை பயந்து பார்த்தார்.
“அய்யா நீர் மோருங்க…” என தம்ளரை நீட்டிய மரிக்கொழுந்தை பார்த்த பாண்டியன் தன் கோபத்தை வேறு எங்கும் காட்டமுடியாமல் அந்த போனியில் காண்பித்தான்.
கைகொண்டு அடங்கா ஆவேசத்துடன் அவன் தட்டிவிட போன் பேசிவிட்டு அப்போது தான் முன்வாசல் வழியே உள்ளே நுழைந்த மதுராவின் நெற்றியை அழுத்தமாய் பதம் பார்த்தது அந்த போனி.
“மது…” என்ற அலறலுடன் மகேஷ்வரி மகளை நெருங்க எதிர்பாராத தாக்குதலின் வலியில் அலறலுடன் நெற்றியை பிடித்த மதுரா அரண்டு போய் பாண்டியனை பார்த்தாள்.
இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. கோபத்தில் அவனும் செய்துவிட, அந்தநொடி உள்ளே நுழைந்த மதுராவை காயப்படுத்திவிட்டது.
அடிபட்ட நெற்றியில் காயமும், அதில் வீக்கமும் நொடியில் தோன்றிவிட கண்ணீர் திரையிட்டுவிட்டது மதுராவிற்கு.
வாசலருகே நின்றவள் நகர்ந்து உள்ளே வர அவளின் முகத்தையும் நெற்றி காயத்தையும் பார்த்த பாண்டியனின் முகத்தில் அலட்சியபாவமே மிதமிஞ்சி இருந்தது.
அதனை அழுத்தமாய் பார்த்துவிட்டு எழில்மணியிடம் திரும்பியவன் பார்வையில் இருந்த உக்கிரத்தில் அவர் நடுங்கி போனார்.
“மவளுக்கு நிச்சயமாக்கும்? நடத்தும்…” என்றவன் சொல்லியவிதமே எழில்மணிக்கு சரியில்லாததாய் தோன்றியது.
‘இவன் இருக்கையில் சொல்லியிருக்க கூடாதோ?’ என காலம் கடந்த ஞானம் வேறு.
அதில் மகள் வேறு அடிபட்டு நிற்க பாண்டியனை தாண்டி மகளை நெருங்க முடியவில்லை அவரால்.
அவரிடம் எச்சரிக்கும் பார்வையொன்றை வீசியவன் திரும்பி வாசலுக்கு செல்ல மதுரா அவனின் இந்த ஆவேசம் ஏன் என்று தெரியாமல் அதிர்ந்து பார்த்தாள்.
அவன் வீசிய வேகத்தில் உடையில் பட்டு காலில் கொட்டி தரையில் எல்லாம் மோர் சிந்தியிருக்க கீழே இன்னும் உருண்டுகொண்டு இருந்தது அந்த போனி.
என்னவோ நடந்திருக்கிறது என்று மட்டும் புரிய அவளின் மௌனமான பார்வையை கவனித்தவன் கண்களும் இடுங்கியது.
‘நான் போனியை விசிறிய நேரம் நீ இடையில் ஏன் வந்தாய்? தவறு என்மீதில்லை’ என்பதை போலிருந்தது அவன் பார்வை.
ஒற்றை காலை தூக்கி வேஷ்டி நுனியை கையில் பிடித்து மடித்து கட்டியபடி மதுராவை தாண்டிக்கொண்டு அவன் சென்றுவிட எழில்மணி அதன் பின் இங்கே அத்தனை குதி குதித்தார்.
என்ன நடந்ததென்றே தெரியவில்லை. மாலை எழில்மணி குடும்பத்துடன் சென்னை கிளம்பியிருந்தார் என்ற தகவல் மட்டுமே சொக்கநாதபாண்டியன் இல்லம் வந்து சேர்ந்தது.
கசப்புடன் கேட்டுக்கொண்டவன் உணர்வுகளை விழுங்கிக்கொண்டான். அவனின் முகத்திலிருந்து வேறு எதையும் கணிக்கமுடியாமலிருக்க அன்றிரவு,
“யே ராசா, நெசமாவே பொண்ண தூக்க போறியாய்யா?…” என பொறுக்கமாட்டாமல் கேட்டு வந்து நின்ற காந்திமதியின் முகத்தில் என்ன முயன்றும் ஆர்வத்தை மறைக்க முடியவில்லை.
“சோலிய பாரு அப்பத்தா…” என ஒற்றை பார்வையில் அவரை எழுந்து செல்ல வைத்தவன் மீண்டும் அழைத்தான்.
“என்னய்யா?…” என மீண்டும் வந்து கேட்க,
“அந்த புள்ள நெத்தியில காயம் பெருசோ?…” என கேட்கவுமே நெஞ்சமெல்லாம் குளிர்ந்து போனது காந்திமதிக்கு.
“செரி போ…” என்றவன் முன் திண்ணையில் யோசனையோடு அமர்ந்திருக்க காந்திமதிக்கு கலவரமும், குதூகலமும் சரிசமாமாக இருந்தது.
“என்னத்தே?…” என்ற வடிவிடம்,
“புள்ளைய தூக்கத்தேன் போறான் போல யே சாமி. சொம்பையா எம்பேரன்? மதுரவீரன்டி…” என சொல்லிக்கொண்டு ஒரே குதியாட்டம் அந்த வயதில்.
“யேலே சகா…” என பேரனை அழைக்க உள்ளறையில் இருந்து வந்து நின்றவனிடம்,
“ஒ சோக்காளிகட்ட அவசியத்துக்கு சொல்லி வைய்யி…” என்று வேறு அலம்பலாய் சொல்ல அவன் புரியாமல் பார்த்தான்.
என்னவோ இப்போதே பேரனின் திருமணம் உறுதியாகிவிட்டதை போல காந்திமதிக்கு கையும், காலும் ஓடவில்லை.
அவரின் பேச்சுக்களும், பரபரப்பும் வடிவிற்கு ஒருபக்கம் சிரிப்பாகவும், கவலையாகவும் இருந்தது.
“இது நல்லதுக்கே இல்லத்தே, கம்மின்னு இரும். அவேன் அதத்தேன் செய்யனுமின்னா கூட வேணான்னு சொல்லுவீகாளா? நீகளே கொம்பு சீவுதேமின்னு நிக்கிதீய?…” என்று தலையில் அடித்துக்கொண்டார் வடிவு.
ஆனால் இறுதியாக எழில்மணி தன் மகளுக்கு பார்த்து வைத்திருந்த வரன் வீட்டில் திருமண நிச்சயதார்த்தத்தை அவர்களாக நிறுத்திவிட்டதாக உலகநாயகியுடன் சேர்ந்து கூடவே தகவலும் வந்து சேர்ந்தது.