மதுராவின் நெற்றி காயம் நன்றாக வீங்கி பழுத்து நீர் கட்டிவிட்டது. அது முகத்தையும் சற்று வீக்கமாய் காண்பிக்க எழில்மணி பார்த்த நேரமெல்லாம் ஆடி தீர்த்தார்.
“எவ்வளவு எகத்தாளம் அவனுக்கு? வேணும்ன்னே பண்ணிருக்கான். அவனுக்கு என் பொண்ணை குடுக்கலைன்னு அவ்வளோ எரிச்சல், பொறாமை. என் பொண்ணை கட்டிக்க தகுதி, தராதரம்ன்னு ஒன்னு வேண்டாமா?…” என பேசி தீர்த்தார்.
ஊரில் வைத்து தாயையுமே தன் மகளை கொண்டே மிரட்டி அழைத்துவந்திருந்தார் எழில்மணி.
“என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது நீங்க கூட இருக்கனும்னு நினைக்கறேன். அது ஒரு தப்பா? நீங்க வர வரைக்கு நாங்களும் போகலை. உங்களுக்காக அவளோட நிச்சயமும் நிக்கட்டும்…” என அவர் எந்த நேரம் சொன்னாரோ.
அது தப்பிதமில்லாமல் பின்னாளில் நடந்தேவிட்டது. ஆணவ மனிதனின் அடுத்தடுத்த வீழ்ச்சி அங்கே நிகழ்ந்தது.
உலகநாயகியின் வருத்தமான முகம் கண்டு மகேஷ்வரிக்கே அத்தனை கஷ்டமாக போனது.
“இப்பவும் சொல்றேன், இந்த கல்யாணம் வேண்டாம். நான் பாட்டியை கூப்பிட்டது அவங்களோட உடல்நிலை இப்ப சரியில்லை. அதுக்காக தான்…” என்று பளிச்சென்று மகள் சொல்ல பல்லை கடித்தார் எழில்மணி.
தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்ததும் வரன் பார்த்திருக்கும் விஷயத்தை மகளிடமும், மனைவியிடமும் சொல்ல மகேஷ்வரி திடுக்கிட்டு போனார்.
இப்போது தான் மகளின் மனதை காயப்படுத்தும் விஷயம் ஒன்று நடந்திருக்க இந்த நிலைமையில் திருமணமா? என செய்வதறியாமல் மகளை பார்த்தார்.
அவரை போலவெல்லாம் அதிர்ந்து சமைந்துவிடவில்லை மதுரா. நேரடியாகவே தன் விருப்பமின்மையை தந்தைக்கு சொல்லிவிட்டாள்.
“நீங்களே அந்த அலையன்ஸ்க்கு கால் பண்ணி இதை ஸ்டாப் பண்ணிடறது நல்லது ப்பா….” என்று சொல்லியிருக்க,
“ஏன் நீ சொல்ல போறியா என்ன? அது மாதிரி நீ எதாச்சும் பண்ண கூடாது மது. இது நல்ல இடத்து சம்பந்தம்…” என எச்சரிக்கையாக மகளிடம் பேச,
“நான் ஏன் கால் பண்ணி சொல்ல போறேன்? நிச்சயம்ன்னு வீடு வரைக்கும் வந்தா அப்போ நோ சொல்லுவேன். அதுக்கு நீங்களே சொல்லிடறது பெட்டர் இல்லையா?…” என்ற மகளை பின்பு சரிசெய்துகொள்ளலாம் என மகேஷ்வரியிடம் பேச மனைவியும் இப்போது வேண்டாம் என்றார்.
“என்ன பேசற மகேஷ்? அகிலுக்கே பேசி முடிச்சிட்டாங்க. நாம பார்த்து வளர்ந்த பிள்ளை அவன். நாம முன்னாடியே மதுவுக்கு பார்த்திருக்கனும்…” என்று சொல்ல,
“நீங்க மதுவுக்கு எங்க மாப்பிள்ளை பார்த்தீங்க? உங்களுக்கு ஏத்த மருமகனை தானே பார்த்தீங்க. கிடைக்கவும் உடனே நடக்கனும்னு பிடிவாதம். மது அதுக்கு மேல பிடிவாதம் செய்வா. யோசிச்சு செய்ங்க. அதுவும் கல்யாணம் விளையாட்டில்லை. வியாபாரமும் இல்லை…” என்றார் கண்டிப்புடன் மகேஷ்வரி.
இருவரின் பேச்சில் எரிச்சலான எழில்மணி ‘தனக்கு தெரியாததா? இவர்கள் பெரிதாய் பேசுகிறார்கள்’ என நினைத்தார்.
வீட்டில் இத்தனை கலவரம் நடந்திருக்க அதில் தெளிவதற்குள் இப்படி நாயகியின் உடல்நிலை குறித்த செய்தி வந்துவிட வந்தவேளை கையோடு தாயை அழைத்தும் சென்றுவிடலாம் என முடிவெடுத்துவிட்டார்.
அதிலும் முட்டுக்கட்டையாக பாண்டியன் நிற்க பற்றிக்கொண்டு வராத குறை தான் அவருக்கு.
“இப்ப மாப்பிள்ளை வீட்டுல நான் என்ன சொல்லுவேன்? என் மக முகத்தையே பாழாக்கிட்டானே…” என பார்த்து பார்த்து பொருமிக்கொண்டு இருந்தார்.
“அதுக்குன்னு அப்படி பொண்ணை தூக்குவேன்னு பேசுவாங்களா அந்த மிஸ்டர்.சொக்?….” என மதுரா கேட்க,
“சும்மா இல்லாம உங்கப்பா தான் வாண்டா சண்டைக்கு வாரியான்னு கேட்டார். வீண் வம்புக்கு வர அந்த பிள்ளை என்ன உங்கப்பா மாதிரி…” என்னும்பொழுதே எழில்மணி திரும்பி பார்க்க,
“உங்க நெத்தியில விழுந்திருக்கனும். தவறி என் பொண்ணு நெத்தியில பட்டுடுச்சு…” என மகேஸ்வரி சொல்ல,
“மகேஷ்…”
“ப்ச், போங்க, உங்ககிட்ட என்ன பேச?…” என்றவர் மகளிடம் திரும்பினார்.
“இவர் பேசாம இருந்திருந்தா அந்த பிள்ளை அவங்கம்மாவை பாட்டியை கூட்டிட்டு கிளம்பிருப்பாங்க. அதுவும் மோர் கொண்டுவர முன்ன கிளம்பினவங்களை உங்கப்பா தான் நிப்பாட்டி கேட்டுட்டு போன்னு ஓணானை எடுத்து பேண்ட்குள்ள விட்டுட்டார்…”
சிரிக்காமல் மகேஷ்வரி சொல்ல மருமகளின் பேச்சில் நாயகியுமே சிரித்துவிட்டார்.
“இருக்கட்டும், அதுக்குன்னு இப்படியா கோவம் வரனும்? பேசினா பதிலுக்கு பேசனும். அதைவிட்டுட்டு என்ன பழக்கம் இது, கையில கிடைக்கிறதை எடுத்து வீசறது?…” என்ற மதுரா,
“ஒருநாள் இருக்கு அந்த மிஸ்டர்க்கு…” என சூளுரைக்க,
“யாருமே எதிர்பார்க்கலை மது. நீ வருவன்னு கூட நாங்களும் நினைக்கலை. நீ பின் பக்கமா தானே போன?…”
“ப்ச், போன் பேசிக்கிட்டே வீட்டை சுத்தி நடந்து வந்தேன். அப்படியே முன்னாடி வந்துட்டேன். வந்ததுக்கு வாங்கியும் கட்டியாச்சு…” என தன் நெற்றியை தொட்டுக்கொண்டவள்,
“ஒரு நிமிஷம் ஷாக். அதோட என்ன நடந்துச்சுன்னு தெரியலை. நீங்களும் மிஸ்டரை ஒன்னும் சொல்லாம என்கிட்ட வந்து அவங்க கிளம்பற வரை அமைதியா இருந்தீங்களா. அதுலயே புரிஞ்சது…”
“என்ன புரிஞ்சதாம் மது?…” மகேஷ்வரி மகளின் புரிதலில் என்றைக்கும் போல மெச்சுதலாய் பார்த்தார்.
“பிரச்சனை அவர் செஞ்சிருந்தா நீங்க சும்மா விட்டிருக்கமாட்டீங்களே? அதான் நானும் கேட்டுட்டு பேசலாம்ன்னு இருக்கறதுக்குள்ள கிளம்பிட்டார். ஆனா எவ்வளோ அலட்சியம் அவங்களால காயப்பட்டு நிக்கறேன். ஒரு அப்பாலஜி கூட கேட்கலை…”
அதிலும் இவற்றிற்கு பதில் சொல்லமுடியாமல் எழில்மணி முறைத்து நிற்க இன்னுமே தேவையா உனக்கு என்றிருந்தது.
“இப்ப இதுக்கு கைவைத்தியம் எதாச்சும் இருக்காம்மா?…” என தாயிடம் கேட்க,
“குக்கிராமம்ப்பா. இங்கின பெருசா என்ன வைத்தியம் இருக்க போவுது?…” என இடக்காக சொன்னாலும் மரிக்கொழுந்துவிடம் சொல்லி பேத்திக்கு நெல், மஞ்சள் அரைத்து பத்து போட்டுவிடசெய்தார்.
“சரி கிளம்புவோமா? இப்படியே ப்ளைட்ல போக முடியாது. கார் புக் பண்ணிடறேன்…” என எழில்மணி சொல்ல மகேஷ்வரி உலகநாயகியிடம் கண்ணசைத்தார்.
வேறு வழியின்றி நாயகியுமே சம்மதிக்க மாலை நேரம் அனைவரும் கிளம்பினார்கள் சென்னைக்கு.
மரிக்கொழுந்துவிடம் சொல்லி தகவலை காந்திமதிக்கு தெரிவிக்கும்படி சொல்லி கிளம்ப,
“ரொம்ப முக்கியம். அவங்க சங்காத்தாம் இனி வேண்டாம். சொல்ல தேவையும் இல்லை…” என்ற மகனிடம்,
“நா வரவே இல்ல. நீ கெளம்பு…” என்ற நாயகி,
“இங்காருத்தா இவேன் கூடவெல்லாம் மனுஷி குப்ப கொட்ட முடியாது. என்னிய பேச வச்சே தொண்டத்தண்ணியா வத்தவெப்பான்…” என வெளிவாசலில் இருந்த கைப்பிடி சுவற்றில் அமர்ந்துகொள்ள அவருக்கு கால் வலி வேறு உயிர் போனது.
“தெரியாம சொல்லிட்டேன். கிளம்புங்கம்மா…” என கெஞ்சி கிளப்பினார் எழில்மணி.
மனதிற்குள் இதுதான் இந்த ஊருக்கு கடைசி, இனி தன் அம்மா தன்னுடன் மட்டுமே என கனவு கண்டுகொண்டே எழில்மணி கிளம்பி சென்றுவிட மறுநாளே காய்ச்சல் வேறு மதுராவிற்கு.
காயத்தினால் காய்ச்சலும் கண்டிருக்க அலுவலகமும் செல்ல முடியவில்லை. வீட்டில் இருக்க சொல்லிவிட்டார் எழில்மணி.
சென்னை சென்று சேரும் முன்பே நாயகியை கவனிக்க நர்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்துவைத்துவிட்டார்.
ராஜ கவனிப்பு தான் நாயகிக்கு. ஆனால் அங்கே கொஞ்சமும் ஒட்டவில்லை. அது அவரின் முகத்திலேயே தெரிய மகேஷ்வரி என்ன நினைப்பாரோ என பார்த்தார்.
“நான் எதுவும் சங்கடப்படமாட்டேன் த்தை. என்னை அங்க வந்து இருக்க சொன்னா என்னால வாழ்க்கை முழுக்க இருக்க முடியுமா? அப்படித்தான். மனசு ஒப்புக்கலைன்னா சொர்க்கமாவே இருந்தாலும் நமக்கு தூசு தான்…” என்றார்.