“இதை ஏன் இவ்வளோ டீடெய்ல்டா சொல்லிட்டிருக்க வசு? இதெல்லாம் எனக்கு தேவையில்லாதது. உன்னோட குடும்ப விஷயம். அதோட சொந்தம் வேற, ப்ரெண்ட்ஷிப் வேற. சோ இது நான் தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்லை…” என்ற மகேஷ்வரி,
“என்ன மது?…” என்றார் மகளிடம்.
“பர்பெக்ட் ம்மா…” என சொல்லியவள்,
“நீங்க எப்பவும் போலவே இருங்க ஆன்ட்டி. எங்களுக்கு எந்தவித விளக்கமும் வேண்டாம்…” என மதுராவும் முகமாறுதல் இன்றி கூற வழக்கம் போல அவளின் இந்த ஆளுமை குணம் பிடிக்காமல் போனது.
முன்பிருந்தே என்னவோ மதுராவின் குணத்தில், அவளின் பேச்சில் என அந்த தோரணையை முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அகிலனின் விருப்பம் தெரிந்து அதிர்ச்சி ஒருபக்கம், அதிலும் பெண் தங்கள் வகை இல்லாது மதுராவாக இருக்க பேரதிர்ச்சி தான்.
குடும்பத்திற்குள், கைகளுக்குள் அடக்கமான பெண்ணை அவர் மகனுக்கு பார்க்க நினைக்க மகனின் இந்த காதலால் நிச்சயம் அது நடக்காது.
அதில் பெரிதும் நிம்மதி அவள் தங்கள் வகையில்லை என்பதே. அதைக்கொண்டே பேசி மகனுக்கு திருமண முடிவெடுத்து கச்சித்தமாக முடித்துக்கொண்டார்.
இப்போது அதன் சுவடே இல்லாததை போல நிமிர்வாய் பேசும் தாய், மகளின் இயல்பு வசுந்தராவை பொசுங்க செய்தது உள்ளுக்குள்.
அவரின் எண்ணவோட்டம் அறியாதவளில்லையே மதுராவும். அந்த ஆராய்ச்சி பார்வையே உள்ளுக்குள் ஜூவாலையை உருவாக்கியது.
‘என்னை பார்த்தது போதும், உன் மகனுக்கு திருமணம் செய்துவைத்து அழைத்து செல்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது.
இதன் பாதிப்பை யாரிடமும் காட்ட மதுரா விரும்பவில்லை. மொத்தமாய் அந்நினைவுகளில் இருந்து வெளிவர நினைத்தாலும் இப்படியான பார்வைகள் அவளை அதற்குள் இழுப்பதை போலிருந்தது.
அதிலும் வசுந்தராவின் இந்த பார்வை, தன் மனதை உடைத்து பார்க்க நினைக்கும் பார்வையே நிதானத்தை இழுத்து பிடிக்கவைத்தது.
உன் மகன், உன் பெருமை, உன் விருப்பம் இருந்துகொள் அப்படியே என்று வசுந்தராவை இன்னும் அழுத்தமாய் பார்த்தாள் மதுரா.
‘நல்லவேளை’ என மகேஷ்வரிக்கு தோன்றிவிட்டது வசுந்தரா வந்து பேசிய இந்த சில நிமிடங்களில்.
‘மனிதர்களின் மனமும், குணமும் இத்தகையான சமயங்களில் தானே வெளிப்படும்’ என்பதை புரிந்துகொண்டவர் ‘மகளுக்கு இதைவிட சிறப்பாய் ஒரு வாழ்க்கை’ காத்திருப்பதாக எண்ணிக்கொண்டார்.
“காபி, டீ சாப்பிடறீங்களா ஆன்ட்டி?…” என வசுந்தராவிடம் மதுரா கேட்க,
“நோ தேங்க்ஸ். உன்னை பார்த்துட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்…” என்றவர்,
“நிச்சயம் நடக்க போகுது. முகம் இப்படி வீங்கி இருந்தா எப்படி? பார்த்துக்கோ…” என சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. முடியுமென்றும் தோன்றவில்லை. எப்படி இவர்களால் எதையும் இலகுவாய் எடுத்துக்கொள்ள முடிகிறது என்றிருந்தது வசுந்தராவிற்கு.
உலகநாயகியை கூட பார்க்க நினைக்காமல் கிளம்பிவிட்டவரை கசந்த முறுவலுடன் பார்த்த மகேஷ்வரி,
“மது நீ ஓகே தானே?…” என்றார் மகளிடம்.
“ஹ்ம்ம், ஆல்ரைட் ம்மா…” என்றவள் மறுநாளே அலுவலகம் கிளம்பினாள்.
“வரவே கூடாது. நிச்சயம் முடியட்டும். அதோட இந்த காயத்தோட வருவியா நீ? பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க? கேட்கமாட்டாங்களா?…” என எழில்மணி மகளை தடுக்க,
“சொல்லவேண்டியது தானே? சும்மாருந்தவங்களை சீண்டிவிட்டேன். அதுக்கான பரிசுன்னு…” என கிண்டலாய் சொல்லியவள்,
“இதனால ஒன்னும் யாரும் எதுவும் நினைக்க போறதில்லை. நேத்தும் நீங்க வந்தது லேட். இன்னைக்கு ஆபீஸ்ல நிறைய கேட்கனும். வாங்கப்பா…” என்று சொல்லி கிளம்பினாள்.
அவர்களுக்கு முன்பே எழில்மணியின் சரிவிற்கான அடித்தளம் அங்கே காத்திருந்தது.
அடுத்த நான்கு நாளில் எல்லாம் இழந்ததை போல நிர்கதியான நிலைமையில் நின்றிருந்தார் எழில்மணி.
“எம்பேத்தி நெலமைய பாத்தியாடி? ஒத்த இடத்துல இல்லாம சிட்டுக்குருவியாட்டம் சுத்தி வருவா. என்னிய எப்பிடி பாத்துக்கிட்டா தெரியுமா?…” என இன்னுமே தேம்பி அழுதார் நாயகி.
“கலியாணத்த நிறுத்தினது வேணா என்னவோ நேரமுன்னலாம். ஆனா எல்லாமே மொத்தமால வந்து சேருது…” என்று புலம்பிக்கொண்டு இருந்தார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்த பாண்டியனின் முகத்தில் அமைதி மட்டுமே.
“என்னய்யா கம்மின்னிருக்க?…” காந்திமதி கேட்க,
“நா என்ன செய்யட்டும் த்தா?…” என்றான் தன் விரல்களை கூட்டி பிரித்துக்கொண்டே.
“யய்யா என்ன ராசா இப்பிடி சொல்லிப்போட்ட? அடிச்சாலும், புடிச்சாலும் என்ன ஏம்ன்னு வெசாரிக்க வேணாமாக்கும்?…” வடிவு மகனிடம் சொல்லவும் அவன் நாயகியை பார்த்தான்.
“முழுசா அழாம சொல்லு ஆத்தா…” என நாயகியிடம் கேட்டான்.
அவன் வரும் பொழுதே அழுதுகொண்டே எனவோ பேசிக்கொண்டிருக்க அரையும், குறையுமாக தான் விழுந்தது அவன் காதிலும்.
“என்னத்த சொல்லுவேன்? எதுலையோ அம்புட்டு காசையும் போட்டு எல்லாமே போச்சாமே. கூட சேந்து தொழில் பண்ணினவேன் என்னைய கேட்டா காச போட்ட, என் பங்கை குடு. நா தனியா பொழைக்கிறேன்னு நட்டசாதனைக்கின்னு நிக்கிதானாம்…” என்று சொல்லி சில நொடிகள் அழுது முடித்து,
“இப்ப ரெண்டு தொழிலுமே முழுவுதாம். தோப்பு தொரவுன்னு அம்புட்டையும் வச்சா கூட மீளமாட்டாதாமில்ல. கொள்ள பணத்துக்கு நா எங்க போவேன்?…” என புலம்பிக்கொண்டே இருந்தார்.
“எல்லாமே கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு இறுதியாய் சொல்லிய நிச்சயதார்த்த செய்தியில் மதுரா இதனை ஆர்வமாக எதிர்பார்த்திருந்திருப்பாளோ என்ற எண்ணம் துளியளவு எழுந்தது.