இடிந்துபோய் அமர்ந்திருந்த எழில்மணியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை மகேஷ்வரியால்.
தங்களுக்கு திருமணமானதிலிருந்தே ஒருவித கர்வம் எழில்மணியை ஆட்டிப்படைத்தது.
அதிலும் கம்பெனியும் அவரிடம் முழுதாய் ஒப்படைக்கப்பட இதை தன்னைவிட யாரால் திறன்பட நடத்தமுடியும் எனும் கர்வம்.
அந்த திறன் இருந்ததனால் இன்றுவரை எல்லாவற்றிலுமே வெற்றி என்பதில் மிதப்பும் உண்டாகியிருக்க எப்போதும் செய்வது தானே கொஞ்சம் கூடுதலாய் என்று யோசிக்காமல் அகலக்கால் வைத்தாகிற்று.
நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், பணமிழப்பு என ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமும் கைவிட்டு சென்றதை போலிருந்தது.
தனியாய் மகளின் திருமணத்திற்கு மருமகனை சந்தோஷப்படுத்த மகள் பெயரில் வாங்கியிருந்த இடத்தில் உரிமை கோர முடியாதென இடத்தின் உண்மையான உரிமையாளர் வக்கீல் மூலம் காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு விஷயம் எழில்மணியிடம் வந்தது.
பலவருட பழக்கம், நம்பிக்கையான ஆள், இப்படி காலை வாருவான் என எதிர்பார்க்கவில்லை.
மகளுடன் கம்பெனிக்கு செல்ல கோர்ட்டிலிருந்து வந்திருப்பதாக தந்த நகல்களை வாங்கியவருக்கு பேரிடி.
அதனை வாங்கி பார்த்த மதுரா தந்தையின் இந்த பதட்டத்தில் பதறி போனாள் எதுவுமாகிவிடுமோ என்று.
“என்னப்பா? நீங்க ப்ராப்பர் டாக்குமென்ட் எல்லாம் செக் பண்ணிட்டு தானே ட்ரான்சாக்ஷன் பண்ணுனீங்க?…” என்று ஆற்றமாட்டாமல் சத்தமிட்டே கேட்டுவிட,
“பலவருஷமா வச்சிருந்தவர்கிட்ட பத்திரத்தை வாங்கி நாராயணன்கிட்ட குடுத்து ஈசி போட்டு பார்க்க சொல்லிட்டு தான் அமௌன்ட் குடுத்தேன். பணமும் ப்ளாக்லயும், வொய்ட்லயும் குடுத்தேன். அந்த இடத்துல பில்டிங் கட்டதான் போன வாரம் கொட்டேஷன் குடுக்க அந்த பில்டர்ஸ்ல இருந்து ஆள் வந்தது…” என்றவர்,
“நாராயணனுக்கு நல்லா தெரிஞ்சவர். அவன் மூலமா தான் பழக்கமும். அதுவும் பலவருஷ பழக்கம்டா…” என்று நொந்துபோனார்.
“எல்லாம் ஓகே ப்பா. இப்ப அந்த லேண்ட்ல நமக்கு உரிமை இல்லைன்னு கம்ப்ளைன்ட் வந்திருக்கே…” என்றவள் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமலும், பங்குசந்தையில் போட்டிருக்கும் பணத்தை பற்றி கேட்காமல் தந்தையுடன் கிளம்பிவிட்டாள்.
வீடு வந்ததும் மகேஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல அவரால் நம்ப முடியவில்லை.
“இல்ல இல்ல, அவனுக்கு தெரிஞ்சா அவனே அந்தாள் சட்டையை பிடிச்சு இழுத்துட்டு வந்திருவான்…” என்ற எழில்மணி உடனே நாராயணனுக்கு அழைக்க மறுமுனை ஏற்கப்பட்டது.
“நாராயணா…” என்றவர் விவரம் சொல்ல,
“இங்க பாரு மணி, நீ ஈசி பார்க்க சொல்லி அனுப்பின. நானும் பார்த்தேன். எல்லாம் சரின்னாங்க. மத்தபடி இதுக்குள்ள என்னை இழுக்காதப்பா…” என சொல்ல காலடியில் பூமி நழுவிய உணர்வு.
“என்னடா, என்ன இப்படி சொல்ற?…” என குரல் நடுங்க கேட்டார்.
கொஞ்சமா நஞ்சமா அந்த இடத்திற்கு அவர் கொட்டி கொடுத்த பணம்? உழைத்த உடல் தள்ளாடியது.
“நானே வீட்டுக்கு வரனும்னு இருந்தேன். நீயே கூப்பிட்டுட்ட. கொஞ்ச நேரத்துல வரேன்…” என்று போனை வைத்துவிட அவர்கள் நிறுவனத்திலிருந்து மேனேஜர் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க அங்கிள்…” என மதுரா தான் எடுத்தாள் எழில்மணி கை பேசியை.
“மேம் அப்பா இல்லைங்களா?…” என கேட்க,
“அப்பா கொஞ்சம் அப்செட். என்னன்னு என்கிட்ட சொல்லுங்க…” என கூற,
“ஸார் இன்வெஸ்ட் பண்ணியிருந்த ஷேர்ஸ் எல்லாம் டவுன். பெரிய லாஸ். இப்ப நாம புதுசா கொண்டுவர போற இந்த ஸ்கீமை பிரமோட் பண்ண முடியாது. அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன்…” என்றதும் மதுராவின் விழிகள் நிலைகுத்தி நின்றது.
“மேம், மது மேம்…” என மேனேஜர் அழைக்க,
“அங்கிள் இது ஆபீஸ்ல யாருக்கும் தெரியுமா?…” என கேட்க,
“நாராயணன் ஸார்க்கு மட்டும் தான் தெரியும்…” என்று சொல்ல தந்தையை எண்ணி பரிதாபம் கொள்வதா இல்லை, அடுத்து என்ன செய்வதென்று பார்ப்பதா என தலைசுற்றி நின்றாள் மதுரா.
ஒரே நாளில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் அவளை நிலைகுலைய செய்தது. தானும் தடுமாறி அமர்ந்தால் தகப்பன் இன்னுமே உடைந்துவிடுவார் என மௌனமாக நின்றவள் தனது லேப்டாப்பை உயிர்ப்பித்து என்னவென பார்த்தாள்.
ஆம், மொத்த பணமும் அடிவாங்கி இருக்க ஒன்றும் செய்யமுடியாத சூழ்நிலை. எப்போதும் இன்வெஸ்ட் செய்பவர் தான்.
அப்போதெல்லாம் அத்தனை பெரிதாய் பணத்தை செலுத்தியதில்லை. இந்த முறை பணமும் அதிகம், அதன் அடியும் வெகுபலம்.
தாங்க முடியாதவிதத்தில் தான் இருந்தது. எப்படியும் மீண்டுவிடலாம் என்று நினைத்திருக்க அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து வழியை அடைப்பதை போல வந்து நின்றார் நாராயணன்.
எழில்மணி வரவேற்கவே இல்லை அவரை. போனில் பேசியதில் வெகுவாய் தொய்ந்திருந்தார்.
எத்தனைவருட நட்பு? ஒரு பிரச்சனை என்றதும் கழன்றுகொள்ள பார்க்கிறானே என பொங்கி போய் பார்த்தார்.
லாபம் சம்பாதித்த பொழுதெல்லாம் கட்டிக்கொண்டு ஊர் சுற்றியதும், அதில் முக்குளித்ததும் மறந்துவிட்டதோ என வெறுமையான பார்வை தான் அவரிடம்.
“வாங்க…” என மகேஷ்வரி நாராயணன், வசுந்தரா இருவருக்கும் பொதுவாய் அழைப்பு விடுத்தார்.
மகள் மெல்லிய குரலில் எல்லாம் சொல்லியிருக்க அவர்களும் வந்து நின்ற விதம் சரியில்லாதிருக்க எதையும் எதிர்கொள்ளும் திடத்துடன் நின்றார் மகேஷ்வரி.
எழில்மணி அமைதியாக அமர்ந்திருந்தார் வந்தவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல்.
“இங்க பார் மணி, எனக்கும் அவன் ப்ரென்ட். அவ்வளோ தான். உன்கிட்ட பழகினானோ என்கிட்டயும் அப்படித்தான் பழகினான். நல்லவேளை நான் எதுவும் இப்படி லேண்ட் வாங்கி ஏமாறலை…” என தன் நெஞ்சில் கை வைத்து நிம்மதி கொண்டார்.
அன்றைக்கென்று நாராயணனும் வேறாக தெரிந்தார். அவர் பேச்சும், நடவடிக்கையும் புதிதாய் இருந்தது எழில்மணிக்கு.
“நான் தான் ஏமாந்துட்டேன். அதுக்கென்ன? போலீஸ்ல அவன் மேல கம்ப்ளைன்ட் குடுக்க போறேன். போன் பண்ணினாலும் ஆள் எடுக்கலை…” என்று பல்லை கடித்தார் எழில்மணி.
“நானும் ஒருவாரமா முயற்சி பண்ணினேன். வெளியூர் எங்கயும் போயிருக்கனோன்னு. இப்படி மொத்தமா ஏமாத்திட்டு போவான்னு எப்படி தெரியும்?…” என்றவர்,
“நீ சொன்னன்னு நானும் அந்த பத்திரத்தை வச்சு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல போய் செக் பண்ணினேன். அவ்வளோ தான் இதுல என் வேலை. நீ பத்திரம் பதிவு பண்ணும் போதும் கூட பெருசா அப்ஜெக்ஷன் இல்லையே. இல்லைன்னா அங்கயே போலி பத்திரம்ன்னு சொல்லியிருப்பாங்க தானே?…” என்றார் அவர்.
“ப்ச், இதை நான் எப்படி பார்க்கனும்னு தெரியும். நான் பார்த்துக்கறேன். நேர்ல வந்து கேட்டதுக்கு நன்றிப்பா…” என வெடுக்கென்று எழில்மணி பேச மதுரா யோசனையாய் பார்த்தாள்.
நிச்சயம் நாராயணன் வந்திருப்பது பெரிதாய் ஒரு விஷயத்திற்காக என்று புரிந்தது.
அத்துடன் இன்னுமே ஷேர்ஸ் பற்றி எதுவும் தான் சொல்லியிராதிருக்க எச்சரிக்கையுடன் நின்றாள். நாராயணன் பேசும் முன்,
“அப்பா…” என்ற சத்தத்தில் திரும்பி பார்க்க அகிலன் தான் வந்திருந்தான்.
அதுவரை சாதாரணமாக இருந்த வசுந்தராவின் பார்வை இருவரையும் ஆராய ஆரம்பிக்க இருக்கும் பிரச்சனையில் இதுவேறா என்று தோன்றியது மதுராவிற்கு.