“வீட்டுக்கு வந்து சொல்லுவோம். நீ கிளம்பு. அப்பறம் இன்னைக்கு கேட்டரிங் சர்வீஸ்ல இருந்து உன் வெடிங்ல என்னென்ன டிஷ் வேணும்னு கேட்டு லிஸ்ட் கொண்டு வரேன்னாங்க. நாங்க இங்க வந்துட்டோம். நீ வீட்டுக்கு போ…”
“ம்மா…”
“போன்னு சொல்றேன்ல அகில். அதோட உன் மாமனார் வீட்டுல இருந்து ஆளுங்க வராங்க. நாங்க இங்க வர வழில தான் கால் பண்ணினாங்க. நானே உனக்கு கூப்பிட்டு வீட்டுக்கு போக சொல்லனும்னு இருந்தேன்….” என்றார் வசுந்தரா.
“இப்ப எதுக்கும்மா? நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க…” அகிலின் பேச்சு அங்கே எடுபடவே இல்லை.
“கிளம்புன்றேன்ல. கேட்டரிங்ல இருந்து வரவும் நீயே செலெக்ட் பண்ணு. நான் வரவும் பார்த்துட்டு அவங்ககிட்ட கன்பார்ம் பண்ணிப்போம். அப்படியே உன் மாமனார் வீட்டாளுங்க வரவும் அவங்களை மண்டபத்துக்கு கூட்டிட்டு போய் காமிச்சிடு. மண்டபம் எப்படி இருக்குன்னு பார்க்கத்தான் வராங்க…” என்றார் அவனின் தாய்.
வெறுத்து போனான். இப்படியே எங்காவது ஓடிவிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது அவனுக்கு.
அவனின் முகம் கசங்கிப்போய் மதுராவை சந்திக்க பரிதாபத்துடன் பார்த்தாள் அவனை.
பரிதாபமான நிலை தானே அவனதுவும். அந்த பார்வையிலேயே செத்துவிட்டான் உள்ளுக்குள்.
முன்பு வசுந்தராவின் பேச்சில் கட்டுப்படுபவனை நல்ல மகன் என்று நினைத்தவள், இப்போது பார்க்க அடிமை போல தோன்றியது.
அப்படித்தான் வளர்ந்த மகனை மிரட்டிக்கொண்டிருந்தார் வசுந்தரா. எப்போதும் மகனை கண்டிப்பில் வைத்திருக்கையில் அது கண்டிப்பு, அக்கறை என நினைத்திருக்க அப்படி அல்ல என்று தோன்றியது.
அதற்கும் மேலாக அகிலனை திருமணம் செய்துகொண்டு வரும் பெண்ணின் நிலை என்னவாக கூடும் என்ற ஒரு எண்ணமும் தோன்ற தலையை உலுக்கிக்கொண்டாள் மதுரா.
‘இதென்ன சம்பந்தமில்லாமல்? ஆம் அவனுக்கும் தனக்குமே சம்பந்தமில்லை. அப்படி இருக்க அவர்கள் வாழ்க்கையை நினைக்க தான் யார்? தன் நிலைமையே இங்கே கவலைக்கிடம்’ என்று எண்ணும் பொழுதே அகிலன் கிளம்பியிருந்தான்.
யோசனைகளை எல்லாம் ஓரம்கட்டி நிகழ்விற்கு வந்தவள் பார்வை தந்தையிடம் சென்றது.
அமர்ந்த இடமும், அமர்ந்திருந்த விதமும் சோர்வாய் காட்டினாலும் இந்த பிரச்சனையை எப்படியும் சரி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை பெருமளவு இருந்தது.
ஒன்றிற்கு இரண்டு நிறுவனம், பங்குச்சந்தையில் வரவிருக்கும் வருமானம் என கொஞ்சம் தைரியமாகவே இருந்தார் எழில்மணி.
அதனை சோதிப்பதை போலிருந்தது நாராயணனின் அடுத்த பேச்சு. சத்தியமாய் அவர் கேட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“நாராயணா? என்னடா கேட்ட?…” எழில்மணி நெஞ்சை நீவியபடி மீண்டும் கேட்டார்.
“கம்பெனியை நீயே வச்சுக்க மணி. என்னோட பங்கை பிரிச்சு குடுத்திடு. நான் அகிலனுக்கு தனியா கம்பெனி வச்சு தர போறேன்…” என்றவர்,
“இதுக்கு மேல நம்மளால சேர்ந்து கம்பெனி நடத்த முடியாது. பிரிச்சுப்போம். கம்பெனியை மூடினாலும் சரி, இல்லை பணத்தை எனக்கு செட்டில் பண்ணிட்டு நீயே நடத்தினாலும் சரி. ஆனா பைனான்ஸ் கம்பெனில இனி நான் இல்லை…” என்று சொல்ல சர்வாங்கமும் நடுங்கியது எழில்மணிக்கு.
“என்னடா? என்னடா இப்படி பேசற? அதுவும் இந்தமாதிரி சூழ்நிலையில?…” என்றார் கண்ணில் நீருடன்.
“வேற என்ன செய்ய சொல்ற மணி? இடமும் போச்சு. பணமும் போச்சு. ஷேர்ஸ் எல்லாம் டவுன். இப்படி ஒரு சூழ்நிலையில எதை வச்சு ரன் பண்ணுவ நீ?…” என்றவர்,
“என்னால உன்னை மாதிரி இருக்க முடியாது. என் பணம் எனக்கு வேணும். இத்தனை வருஷ பழக்கம். அசிங்கப்படாம இப்படியே பிரிச்சிக்கறது நல்லது. இல்லைன்னா நானும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன்…” என சொல்ல,
“உங்களுக்கு சேரவேண்டிய பணம் தன்னால வந்து சேரும். இனி அது எங்க கம்பெனி. நீங்க கிளம்பலாம்…” என அடுத்த நிமிடம் வாசலை நோக்கி கையை நீட்டிவிட்டார் மகேஷ்வரி.
“என்ன மகேஷ், மரியாதை இல்லாம பேசற?…” வசுந்தரா கேட்க,
“மரியாதையா தான் சொல்றேன் வசுந்தரா, அதான் சொல்லிட்டீங்களே கம்பெனியை மூடினாலும் சரி, தனியா நடத்தினாலும் சரின்னு. அதுக்கப்பறம் பேச என்ன இருக்கு?…” மகேஸ்வரி சொல்ல,
“ச்சே, ச்சே. சொந்தமும் இல்லைன்னு முன்னாடியே சொல்லிட்டீங்க. இப்ப ப்ரென்ட்ஷிப்பும் இல்லை. உங்ககிட்ட கோபப்பட என்ன இருக்கு? உங்களை தப்பாவும் நினைக்கலை. மனுஷங்க தானே? எப்படி வேணாலும் மாறுவாங்க. அதுவும் பிரச்சனை இல்லாம வாழ நினைக்கிறவங்க அப்படித்தானே?…”
சுருக்கென்று கூறினாலும் தன்னம்பிக்கையுடன் சொல்லிய மகேஷ்வரி எழில்மணியை பார்க்க நிலைகுத்திய கண்களுடன் சமைந்துபோயிருந்தார்.
“நீங்க வருத்தப்படாதீங்க. சமாளிச்சிடலாம்….” என்ற மகேஷ்வரி,
“மிஸ்டர் நாராயணன் எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும். என்ன நடந்திருக்குன்னு தெரிஞ்சுக்கவாச்சும் டைம் வேணும். ஒரு பத்து நாள் வெய்ட் பண்ணுங்க. சொல்றேன்…” என்று சொல்லிவிட நாராயணன் முகம் தொங்கி போனது.
எப்போதும் அண்ணா என்று வாய் நிறைய அழைக்கும் மகேஷ்வரி இன்று ஒற்றை அழைப்பில் தள்ளி நிறுத்திவிட நிமிர்ந்து பார்க்க முடியாமல் உள்ளுக்குள் குறுகி தான் நின்றார்.
எத்தனை தான் வருந்தினாலும் பணம் என்று வரும் பொழுது தான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
அவரின் சத்தத்தில் நாயகி வந்து பார்த்துவிட்டு என்ன என கேட்க விஷயத்தை சொல்லியா மதுரா,
“நீங்க டென்ஷனாகாதீங்க பாட்டி. முதல்ல என்னன்னு பார்த்துப்போம். அப்பறம் எப்படி சரி பன்றதுன்னு முடிவு பண்ணுவோம்…” என்றவள் எழில்மணியை முதலில் கொஞ்சமாய் உண்ண வைத்துவிட்டு தன் தோழி மூலமாக வக்கீலை அழைத்தாள்.
வந்தவரிடம் இடம் பற்றி விசாரிக்க அப்பட்டமாய் போலி பத்திரத்தை வைத்து ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.
“இதுக்கு வேற ஒன்னும் பண்ண முடியாதா லாயர் ஸார்?…” என மதுரா கேட்க,
“ஒரு கம்ப்ளைன்ட் பண்ணி வைங்க. அவ்வளோ தான். ஆள் சிக்கினா பணம் கிடைக்குமான்னு பார்க்க முடியும். மத்தபடி இடத்துல உரிமை இல்லை…” என்று சொல்லிவிட்டார்.
அடுத்த இடியாக இன்னும் மூன்று நாட்களில் இரு நிறுவனத்தின் ஊழியர்களுக்குமே சம்பளம் வழங்க வேண்டும்.
இதில் எங்கிருந்து எப்படி கசிந்தது என்று தெரியாமல் எழில்மணி பைனான்ஸ் கம்பெனி பற்றிய ஊடக செய்திகள் வேறு வாட்டியது.
பங்குச்சந்தை வீழ்ச்சியில் ***** நிறுவனத்தின் முதலீடும் சரிவு என கொட்டை எழுத்தில் செய்தியை பரப்ப பணம் எழில்மணி நிறுவனத்தில் பணம் செலுத்தியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு.
இப்படி அடுத்தடுத்த இடியாக தலையில் விழ குடும்பம் ஆட்டம் கண்டது. பண பிரச்சனை உயிரை வாங்கியது.
தப்பித்து மூச்செடுக்க கூட முடியாமல், உதவி என அழைக்கையில் நண்பர்கள் எல்லாம் பின்வாங்கினார்கள்.
யாரின் மூலமாவது பணம் பெற்று மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் சிதைய துவங்கி இருந்தது.
பதினைந்து நாட்கள் நரகம் என்னும் அளவிற்கு அதனை சமாளித்து இருப்பதை கொடுத்து, என நிமிரும் முன் நாராயணன் வேறு இப்போதே பணத்தை குடுத்தாலே ஆகிற்று, இல்லை சொத்தை எழுதி வைக்கும்படி கேட்க,
“யார் சொத்த யாரு கேட்கறது? அவ்வளோ தான் மரியாதை. கம்பெனியால நீங்க எவ்வளோ பலனடைஞ்சிருக்கீங்கன்னு எங்களுக்கும் தெரியும் ஸார். ஒன்னொண்ணுக்கும் கணக்கு பார்த்தா உங்களுக்கு ரொம்ப ஒன்னும் மிஞ்சாது…” என மதுரா விரட்டிவிட்டாள்.
“என்ன பணத்தை குடுக்காம ஏமாத்த ப்ளான் பன்றீங்களா?…” நாராயணன் குதிக்க,
“உங்க பணம் தானே? அதான் ஒன் மந்த் டைம் இருக்கே? குடுக்கலாம்…” என்று சொல்ல,
“என்ன? ஒருமாசமா? நான் எப்ப சொன்னேன்?…” என்றவரிடம்,
“கம்பெனி ஆரம்பிக்கும் போது நீங்களும் அப்பாவும் சைன் பண்ணிருக்கீங்களே, யாராச்சும் ஒருத்தருக்கு விலகனும்னு தோணினாலும் அவங்களுக்கு சேரவேண்டிய பணத்தை இத்தனை நாள் இடைவெளில குடுக்கலாம்ன்னு. இன்னும் முழுசா ஒருமாசம் டைமிருக்கு…” என்றவள்,
“மீறி பிரச்சனை பண்ணுனீங்க, எல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்து எடுத்து என்னோட பைல்ல ஸ்டோர் பண்ணி லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன். அப்பறம் கோர்ட் மூலமா உங்களை பணம் தேடி வரும். பரவாயில்லையா?…” என்று கேட்க வாயை மூடிக்கொண்டார்.
“வீட்டை, கம்பெனியை எழுதி வாங்கலாம்ன்னு நீங்க நினைக்கிறது புரியுது. ஆனா நாங்க வாழ்ந்த வீடு. எங்களோட உழைப்பு கம்பெனி. எங்க சந்தோஷம் நிறைஞ்ச இந்த வீடு, கம்பெனி நிச்சயம் இன்னொருத்தர் கைக்கு போகாது. கிளம்புங்க…” என வெளியேற்றினாள்.