ஆனாலும் பார்ப்பவர்களிடமெல்லாம் என்னவோ எழில்மணி தன்னுடைய பணத்தை தராததை போலவே பேசி வைத்துவிட சில நல்ல நண்பர்களும் எழில்மணிக்கு உதவ தயங்கினார்கள்.
அகிலன் தன்னாலான உதவியை செய்ய மதுராவை சந்திக்க முயல பார்க்கவே மறுத்துவிட்டாள் அவள்.
அவர்கள் சம்பந்தமான எந்தவித உதவியும், ஆலோசனையும் தேவையே இல்லை என்பதாக.
மகனின் நிலை இப்படி இருப்பதை கண்டு உலகநாயகி தன்னுடைய கிராமத்து சொத்துக்களை வைத்து பணம் புரட்ட கிளம்பி வந்த இடத்தில் பாண்டியனிடம் சொல்லி அழ அவன் மூலம் கடும் இருளில் வெளிச்சமாய் ஒரு வழி.
சென்னையிலிருந்து கிளம்பி வந்த எழில்மணி அங்கே யாரையுமே ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
தோற்றுவிட்டு வந்ததை போலிருந்தது அவரின் குறுகிய உடலமைப்பும், தாழ்ந்த பார்வையும்.
வந்து ஒருநாள் மட்டுமே ஓய்வெடுக்கட்டும் என்று விட்டவன் மறுநாள் பேச என்று அவர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்றான் காந்திமதியுடன்.
சென்றதுமே மகேஷ்வரியிடம் தாங்கள் இருப்பதாக தைரியம் சொல்லிய காந்திமதி மதுராவின் நெற்றியை பார்த்தார்.
“கண்ணுமுன்னு தெரியாம எரிஞ்சி இப்படியாக்கிட்டானே? இருக்கு அவனுக்கு. நீயும் பதிலுக்கு வீசிப்புடுத்தா. அப்பத்தேன் அவேனுக்கு வெளங்கும்…” என்று வேறு சொல்ல,
“அப்பத்தா, கம்மின்னிரு…” என்றவன் நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தான்.
அதிலும் கவனமாக மதுராவை பார்ப்பதை தவிர்த்துவிட்டு பார்வை எழில்மணியிடமும், நாயகியிடமும் மட்டுமே.
அவ்வப்போது மகேஷ்வரியையும் பார்த்துக்கொண்டான். எழில்மணி எதுவும் பேசவில்லை.
மகேஷ்வரி தான் எல்லாமே விளக்கினார். அவ்வப்போது மதுராவும் சொல்ல கேட்டுக்கொண்டான் அவன்.
எழில்மணி மனதெங்கும் ஒரு யோசனை, இவன் பணத்தை கொடுத்து பெண்ணை கேட்பானோ என்று.
அது விழிகளிலும் அப்பட்டமாய் தெரிய சந்தேகத்துடனே தான் பாண்டியனை பார்த்துக்கொண்டிருந்தார்.
“செரிங்க, நாள விடியவும் காசோட வருதேன்…” என்று சொல்லிக்கொண்டு எழுந்துவிட,
“காசுக்கான வட்டியை நான் கரெக்ட்டா குடுத்திருவேன். சீக்கிரம் கடனையும் அடைச்சிருவேன். பதிலுக்கு வேற ஒன்னும் எதிர்பார்க்க கூடாது…” என்று எழில்மணி சொல்ல வந்ததே கோபம் பாண்டியனுக்கு.
“என்ன பேசறீங்க நீங்க?…” என மகேஷ்வரி கடிந்து வர,
“யாரையும் நம்ப முடியலை மகேஷ். இப்ப இந்த உதவி கூட எதுக்கோன்னு மனசுக்கு படுது. தப்பு தான். ஆனாலும் தோணுது. யோசிச்சு பார் நிச்சயம்ன்னு சொல்லி கிளம்பும் போது நடத்தி பாருன்னு இவன் சொல்லத்தான செஞ்சான். எங்க எதாச்சும் இவன் வேலையை பார்த்திருப்பானோன்னு மனசுக்குள்ள ஒரு பயம்…”
எழில்மணி மனதில் தோன்றியதை சொல்ல சொல்ல சொக்கநாதபாண்டியன் நிதானமிழந்தான்.
அமர்ந்திருந்த இருக்கையை எட்டி உதைக்கும் முன் மதுராவின் ‘அப்பா’ என்ற கண்டன குரல் தந்தையை அடக்க பார்க்க,
“யோவ், புத்தி போகுது பாரு. என்னத்தையாச்சும் செஞ்சிவிட்டு இப்படி அந்த புள்ளயை அழ வச்சு என்னைய கட்டிக்க வைக்கனும்னு என்னிக்கும் நான் நெனைக்க மாட்டேன். குடும்பமாவட்டும், தொழிலாவட்டும் நேரடியா போய்த்தான் எனக்கு பழக்கம்…” என்றவன்,
“அம்புட்டுக்கா கீவேல பாத்து ஒம்முதுவுல குத்தி அசிங்கபடுத்தி ஒம்பொண்ண நா கட்டிக்க நெனப்பேன்? எனக்கு வேற சோலிக்கழுத கெடையாதாக்கும்? என்ன கட்ட போறவ மருவாதியான பொழப்புதேன் என்னோட மருவாதி. ஒம்மேல இப்ப எனக்கு வார கட்டத்துக்கு…” என்று கைகள் இறுகியது பாண்டியனுக்கு.
அவனின் நரம்புகள் புடைக்க நின்ற கோலம் அத்தனைபேரையும் பயந்து பார்க்க வைத்துவிட்டது.
என்ன ஒரு ஆக்ரோஷம்? தவறு செய்யாதவனின் நெஞ்சுரமும், திமிர்தலும் எப்படி இருக்குமென்பதன் அடையாளமாய் நின்றான் சொக்கநாத பாண்டியன்.
“இந்தாரும்மைய்யா எனக்கு புடிச்சா நேருக்காவே கேட்டுட்டு போறேன். யே, கேட்கமாட்டேனா நானு? உன்ன எனக்கு புடிச்சிருக்கு. என்னிய கட்டிக்கிடுவியான்னு…” என அவனறியாமலேயே மதுராவை பார்த்துக்கொண்டே கோபமாய் சொல்ல,
“மது…” என மகளின் கையை பிடித்தவரின் அழைப்பில் சுதாரித்த மதுரா,
“ஐ மீன், உங்க ஆட்டிட்டியூட், இந்த பாசாங்கில்லாத பேச்சுன்னு எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க ஒரு அக்மார்க் ஜென்டில் மேன். அதான் சொன்னேன். அந்த அர்த்தத்துல தான் சொன்னேன்…” என்று சொல்ல இன்னுமே பாண்டியனின் பார்வை அவளிடம் அசைந்தபாடில்லை.
‘அம்மாடியோவ்’ என அயர்ந்து நின்றுவிட்டான் பாண்டியன். இப்படி செய்வதைரியாமல் எந்த சூழ்நிலையிலும் நின்றதில்லை.
இப்போது அப்படி நிற்க அவனின் பார்வையில் எழில்மணிக்கு தான் உயிர் போய் உயிர் வந்தது.
“தப்பா எடுத்துக்காதீங்க. நானுமே மனசுல எதையும் வச்சுக்கமாட்டேன். உங்க மேல ஒரு மரியாதை இருக்கு. அதுவும் இப்ப நிறையவே. அந்த அர்த்தத்துல சொன்னேன்…” என்று அழுத்தமாய் சொல்ல பாண்டியன் சுதாரித்து எழில்மணியிடம் திரும்பினான்.
மகளின் பேச்சில் கண்கள் சொருக ஒருவித மயக்க நிலைக்கே சென்றிருந்தார் எழில்மணி.
“எய்யா நீ ஒண்டும் செய்யலயாக்கும்? அப்ப ஒங்கலியாணம்…” என நேரம்கெட்ட நேரத்தில் காந்திமதி வேறு அவனின் காதில் கிசுகிசுக்க மதுராவிற்கும் கேட்டுவிட்டது.
“அப்பாத்தா கொல்லபோறேன் ஒன்னிய…” என அதிர்ந்து அதட்டியவன் மதுராவை பார்க்க அவனின் அதிர்ச்சியான முகபாவனையில் பக்கென்று சிரித்துவிட்டாள்.
“அப்படி எத்தனை பேரை தூக்கிருக்கார் உங்க பேரன்?…” என்ற மதுராவின் கேள்வியில் திருத்திருத்த காந்திமதி உடனே,
“என்னத்துக்கு அம்புட்டு பேத்த தூக்கனும்? கட்டி தங்கமாட்டம் இருக்க ஒன்னிய தவிர வேற ஆரையும் பாப்பானா என்ன?…” என்றவர் கண்கள் ஆசையில் மிதக்க மதுராவிற்கு சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
காந்திமதியின் ஆசையும், எண்ணமும் புரிந்தாலும் அதனை கேலியாகவே எடுத்துக்கொண்டாள் மதுரா.
இப்போது வரை ஆசையாக என்ன ஆர்வமாக கூட தன்னை பார்க்கவில்லையே அவன் என்று தோன்ற அப்படி ஒன்றுக்கு வாய்ப்பில்லை என நினைத்துக்கொண்டவளும் கிண்டலாகவே பேசிக்கொண்டிருந்தாள்.
“அதுசரி, எவ்வளோ நாள் தான் பேரனே பேத்தியை தூக்கிட்டு போறது? உங்க பேரனை கொஞ்சம் வெய்ட் கம்மி பண்ண சொல்லுங்க. நான் தூக்கிட்டு போறேன் பார் எ சேஞ்ச்…” என்று மதுரா சொல்ல,