வீட்டிற்கு வந்து மதுரா பேசியதை வடிவிடம் சொல்லி சொல்லி காந்திமதி அப்படி ஒரு சிரிப்பு.
அதுவும் பாண்டியன் காதில் விழும்படி வேறு சொல்ல உண்ண அமர்ந்தவன் வேகமாய் எழுந்துவிட்டான்.
எழில்மணி பிரச்சனையில் பணம் தருவதா சொல்லியதோடு அன்று முழுவதும் அது விஷயமாக அலைந்து திரிந்து, ஏற்பாடு செய்துவிட்டு அப்போது தான் வீடு வந்திருந்தான்.
“செத்த கம்மின்னிருக்கமாட்டீகளா? அதுதேன் சின்னப்புள்ள வெவரம் புரியாம பேசுதுன்னா வயசு பொண்ணுகிட்ட கோளாறா பேச தெரியாதா என்ன?…” என கத்தியவன்,
“சும்மாவே அந்த மனுஷன் என்னைய நெசத்துக்கே பொண்ண தூக்க வாரவனாட்டம் பார்க்காரு. இதுல இந்த பேச்சு வேறையா?…” என்று சத்தமிட்டதில் மாமியார் மருமகள் இருவரும் அமைதியாகி விட்டனர்.
“ராசா, ஒக்காந்து சாப்பிடுய்யா…” வடிவு தான் மகனிடம் மெல்ல சொல்ல,
“சொல்லி வை த்தா. என்னத்தையாச்சும் நெனப்ப வெதைக்காம இருக்கறதுதேன் நமக்கு நல்லதுங்கேன். இல்லாங்காட்டி…” என்றவன் மூச்சை ஆழ்ந்தெடுத்து காந்திமதியை பார்த்தான்.
“இங்காரு அப்பத்தா, நீ நெனைக்கிதது நடக்காது. அம்புட்டுத்தேன் சொல்லுவேன். இவ்வளோ ஆனப்பொறவும் அந்த புள்ளைய கட்டனும்னு நெனைக்காத. அத்த பேசவும் செய்யாத. வெளங்குச்சா?…” என சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்தான்.
அத்தனை அழுத்தம் திருத்தமாக வந்திருந்தது பாண்டியனின் பேச்சுக்கள். காந்திமதிக்கு உள்ளே திடுக்கிட்டது.
‘இப்படி சொல்லிவிட்டானே’ என கலங்கி போய் பார்த்தவர் அவன் உண்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.
சாப்பிட்டு கையை கழுவிவிட்டு எழுந்தவன் பெரிய நோட்டுடன் திண்ணைக்கு சென்றமர்ந்தான்.
“பொறவு சாமி, அந்த புள்ள வேணா. வேற பொண்ண பாக்கவா?…”
அவனின் பின்னாடியே விடாமல் வந்த காந்திமதி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றார்.