“இதுக்கொண்ணும் கொறச்சலில்ல அப்பத்தா…” என சொல்லியவன்,
“பசிக்குது. வா வயித்துக்கு எதையாச்சும் அள்ளி போடுவோம்…” என எழுந்து டேபிளுக்கு அழைத்து செல்ல அங்கே இட்லி கறி குழம்புடன், இடியாப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் இருந்தது.
“இம்புட்டு வெரசா ஆட்டுக்காலா?…” என வாசம் பிடித்தான் ஜகா.
“பாரேன் பல்லம்புட்டும் அம்புடுத்த? கெழவி இந்த ஒத்த சிரிப்புக்கு எம்புட்டுன்னாலும் செய்யலாம்த்தா. ஆனா ஒத்த சொட்டு தண்ணிய கண்ணுல வெக்காத. மனசாறல…” சாப்பிடுவதை போல தன் உணர்வுகளை அடக்கினான் ஜகா.
எப்போதும் அதட்டி, மிரட்டி கம்பீரமாய் சண்டையிட்டே பார்த்திருந்த தன் மூத்த தாயை போன்றவரின் இந்த கலக்கம் இளையவர்களை ஆட்டிப்பார்த்திருந்தது.
“என்னவோ ஒத்தநாலு பெசக்கிட்டேன். இதுக்கு இம்புட்டா? நாமுச்சூடும் சொல்லிக்கிட்டே கெடக்காம சோலிய பாருங்க…” என தானும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிள்ளைகளை அதட்டினார்.
சிரித்தபடி வடிவு மதுராவிற்கும், அவளின் பெற்றோருக்கும் சேர்த்தே எல்லாவற்றையும் எடுத்து வைத்தார் உணவு பாத்திரத்தில்.
ஜகா காந்திமதியை நாயகியின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு பாண்டியனை தேடி அவனுக்கான உணவுடன் தோப்பிற்கு சென்றான்.
“ஒன்னிய கேட்டேனா சோறு கொண்டு வான்னு…” என தம்பியை முறைக்க,
“செரிண்ணே, நானுமே இன்னும் சாப்புடல. சேந்து ஒக்காருவோம்…” என அண்ணனிடம் சொல்லிக்கொண்டே கிணற்றடியில் அமர்ந்தான்.
மற்றவர்கள் முன்னிலையில் ஒன்றும் சொல்லாமல் பாண்டியனும் கையை அலம்பிவிட்டு வந்து அமர தட்டில் இடியாப்பமும், ஆட்டுக்கால் பாயாவும் இருந்தது.
“இன்னிக்கு என்ன விசேசம்டா?…” என கேட்டுக்கொண்டே ஒரு இடியாப்பத்தை மொத்தமாய் சுருட்டி வாய்க்குள் அடைத்துவிட அடுத்தடுத்து எடுத்து வைத்தான் ஜகா.
“நாந்தேம் ரொம்பநாளாச்சேன்னு கேட்டேம்ண்ணே…” என ஜகாவும் சொல்ல இரண்டு நிமிடத்தில் பாண்டியனின் காலை உணவு முடிந்தது.
“செரி, நா போயிட்டு நீங்க சொன்ன நேரத்துக்கு வருதேன்…” என சொல்ல,
“அதெல்லா வேணாம். நானே வாரேன். நீயி அங்க வந்துடு. காச தூக்கிக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டும் அலைவியோ?…” என சொல்லி அனுப்ப சரி என்று ஜகா கிளம்பிவிட்டான் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு.
பாண்டியனும் வேலையில் ஆழ்ந்துவிட பத்துமணிக்கு கால்மணி நேரம் முன்பே ஜகா அழைத்து சொல்லவும்,
சொல்லிய நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே நாயகியின் வீட்டின் முன் புல்லட்டை நிறுத்த,
“குட்மார்னிங்…” என்றவளின் குரலில் திடுக்கிட்டு திரும்ப மதுரா மஞ்சள், அரக்கு நிற பாவாடை தாவணியில் நிற்கவும் விழிகளை திருப்பிக்கொண்டான்.
“நான் சொன்னது கேட்கலையோ? குட்மார்னிங்…” என மீண்டும் சத்தமாகவே மதுரா சொல்ல,
“ஹ்ம்ம், வணக்கம்…” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வீட்டினுள் சென்றான்.
அவனுடன் மதுராவும் சேர்ந்து வந்திருக்க இருவருமாக தலைவாசல் வழியே வீட்டினுள் நுழைய இரு பாட்டிகளுக்குள் நெஞ்சம் நிறைந்தது.
“யாத்தே எங்கண்ணு ரெண்டும் போதலையே…” என காந்திமதி உற்சாகத்துடன் சொல்லியும்விட எழில்மணி முகம் கடுத்தது.
பாண்டியன் எதையும் கண்டுகொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தவனை மகேஷ்ஸ்வரி அமர சொல்லவும் அமர்ந்தவன்,
“எல்லாத்துக்கும் தயார் பண்ணிட்டேன். ஆகவேண்டிய சோலிய பாக்கலாம்…” என சொல்லியவன்,
“வக்கீலு எதாச்சும் ஒங்களுக்கு தனியா இருக்காவளா?…” என மகேஷ்வரியிடமே கேட்க அவன் பேச்சுக்கள் முதல் நாளுமே கூட மகேஷ்வரியிடம் தான் இருந்ததை எழில்மணி ஞாபகம் வைத்தார்.
‘கம்பெனி நடத்தறது நான். ஆனா இவன் கேள்வி எல்லாம் எங்கன்னு பாரு? எல்லாம் என் நேரம். முதல்ல எல்லா பிரச்சனையையும் முடிச்சுட்டு எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் இவன்கிட்ட பணத்தை திருப்பி குடுக்கனும்’ என நினைத்துக்கொண்டார்.
வெறும் பார்வையாளராக மட்டுமே அங்கிருக்க மகேஷ்வரி பாண்டியனிடம் பேசிக்கொண்டிருக்க சிலவற்றை மதுராவும் சொல்ல தீவிர பாவனையுடன் எல்லாமே கவனமாக கேட்டுக்கொண்டான் பாண்டியன்.
பேசிக்கொண்டே கைகடிகாரத்தில் நேரத்தை பார்க்க ஜகாவும் சரியாய் உள்ளே வந்துவிட்டான் பெரிய பெட்டிகளுடன்.
“காச கொண்டாந்தாச்சு…” என்ற பாண்டியன் எழுந்து நிற்க ஜகா அவனிடம் பத்திரங்களை கொண்டுவந்து நீட்டினான்.
“என் தம்பிதேன். ஜகவீரபாண்டியன்…” என்றும் அறிமுகப்படுத்த,
“ஹலோ…” என்றாள் மதுரா அவனிடம்.
பதிலுக்கு ஜகாவும் வணக்கம் வைக்க பாண்டியனின் கவனம் பத்திரத்தில் இருந்தது.
தானும் ஒருமுறை படித்து பார்த்துவிட்டு நிமிரவும் தான் காந்திமதிக்கும், மற்றவர்களுக்குமே என்னவென்று விளங்கியது.
காந்திமதிக்கு சுத்தமாக ஒப்பவில்லை பேரனின் இந்த செயல். இப்படி செய்கிறானே என பதைத்து போய் பார்த்தார் பாண்டியனை.
“இந்த பத்திரத்துல எல்லாம் எழுதியாச்சு. நல்லா பொறுமையா படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுங்க…” என்று பாண்டியன் நீட்டிய பத்திரங்களை எழில்மணி வாங்கி படித்தார்.
“எதுக்கய்யா பத்திரமெல்லா? நம்ம மணிய நமக்கு தெரியாதாக்கும்?…” காந்திமதி சங்கடத்துடன் கேட்க அவருக்கு பதில் கூறாமல்,
“தொழில் வேற சொந்தம் வேற. காசு எப்பவும் காசு தான். அதுவும் நான் இவங்களுக்காக வெளில கையெழுத்து போட்டுத்தேன் வாங்கிருக்கேன்…” என்றான் எழில்மணிக்கு புரியும்படி.
மகேஷ்வரிக்கும், மதுராவிற்கும் இது பெரிதாய் தெரியவில்லை. காந்திமதி தான் இருமனதாய் பார்த்தார்.
ஜகா இது எல்லாம் நடப்பது தானே என்று சாதாரணமாக நிற்க, இவனுக்கு தேவைதான் என நாயகி நின்றார்.
எழில்மணி பாண்டியன் சொல்லியதை போல மெதுவாய், மிக பொறுமையாய் வரிக்கு வரி படித்து பார்த்தார்.
எங்கேயும் தவறு இருக்கிறதா என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறை தான் அவரின் அலசலில்.
அந்த பத்திரத்தில் எல்லாமே நியாயமாகவே எழுதி இருந்தது. எங்கேயும் அவரால் தவறை கண்டுபிடிக்கமுடியவில்லை.
மாத வட்டி எவ்வளவு என்பது முதற்கொண்டு எத்தனை காலத்திற்குள் அசலை செலுத்தவேண்டும் என்பது வரை தெளிவாய் விளக்கமாய் எழுதி இருந்தான் பாண்டியன்.
இருவருக்கும் பாதகமில்லாத அளவிற்கு தான் அந்த பத்திரமும் இருக்க எழில்மணி நிம்மதியுடன் கையெழுத்திட்டார்.
இறுதியில் இவனிடம் கடன் வாங்கி தன் பிரச்சனையை சமாளிக்க வேண்டியதாக இருக்கிறதே என ஒருபக்கம் எழில்மணியின் உள்மனம் குமைந்தது.
ஆனாலும் வேறு வழி இருக்கவில்லையே. இவ்வளவு பெரிய தொகையை அத்தனை சுலபமாக யாரும் தூக்கி தந்துவிட மாட்டார்களே என புரிந்துகொண்டார்.
ஆனாலும் நகரத்தில் அத்தனை உயரத்தில் இருக்கும் தனக்கே உதவுமளவா இவனிடம் செல்வாக்கும், செல்வமும் என ஒருகணம் பொறாமையும் எட்டிப்பார்த்தது.
எந்தவித அலட்டலும் இன்றி இதனை பெரிதாகவும் நினையாமல் பாண்டியன் பணத்தை நீட்ட மகேஷ்வரி பெற்றுக்கொண்டார்.
கையெழுத்து மட்டுமே எழில்மணி போட்டது. பணத்தை கை நீட்டி வாங்க முன்வரவில்லை அவர்.
“செரியாருக்கான்னு எண்ணி பாத்துக்கிடுங்க. சரியாத்தேன் இருக்கும். ஆனாலும் ஒங்க திருப்திக்குத்தேன்…” என சொல்ல,
“நிஜமாவே நீங்க செஞ்ச இந்த உதவியை வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டோம். தேங்க் யூ சோ மச்…” என்றாள் மதுரா மனதார.