“இங்கதேன் நாயகியாத்தா வீடு வரைக்கு போயிருக்கு…” என பாண்டியன் சொல்ல,
“அதானே ஒன்னு இங்கிட்டு, இல்ல அங்கிட்டு. ஆத்தாவுக்கு பொழுது போவனுமில்ல…” என்றவர்,
“ஏத்தா வடிவு இன்னும்பிட்டு ரசாத்த ஊத்துத்தா. கொழைய அடிச்சோறையும் ரெண்டுகரண்டி வைய்யி…” என கேட்டு வாங்கி வேகமாய் உண்டுகொண்டிருந்தார்.
“மெல்ல சின்னய்யா…” என அவரிடம் பாண்டியன் சொல்ல,
“இல்லய்யா கொள்ள சோலி கெடக்கு. நா போயித்தேன் பாக்கனும்…”
“அட என்ன சின்னய்யா வந்த சுளுவுல கெளம்புதேன்னுட்டு? இருந்து ரவைக்கு போவத்தான?…”
“இல்லப்பா, இன்னொரு நா நல்லசேதியோட வாரேன். இப்ப ரெண்டே முக்காமணி பஸ்ஸுக்கு போவனும்…” என சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
பேசிக்கொண்டே வெளியே வர வீட்டில் செய்த பலகாரம் என்று வடிவு தூக்குவாளியில் போட்டு அழகரிடம் தந்தார்.
“இதுல முந்திரிகொத்தும், தேங்கா முட்டாயும் இருக்கு. தங்கச்சிட்ட குடுங்கய்யா…” என்று சொல்ல,
“செரித்தா, ஒங்கைப்பக்குவமே பக்குவம். இத்த காக்க எந்த மவராசி ஒ வீடேறி வர போறாளோ? ஆராருந்தாலும் குடுத்துவச்ச புள்ள…” என சொல்லிக்கொண்டிருக்க ஆட்டோ வந்து நின்றது வெளிவாயிலில்.
“நம்ம வீட்டுக்குத்தான?…” என அழகர் பார்க்க பாண்டியன் யார் என்று கவனித்துவிட்டான்.
முதலில் காந்திமதி பாட்டி இறங்கமுடியாமல் இறங்க அடுத்ததாய் மகேஷ்வரி, அடுத்து மதுரா என மூவரும் வந்தனர்.
அதே நேரம் ஜகாவும் மதிய உணவிற்கு பைக்கில் வந்திறங்கியவன் அவர்களை பார்த்ததும் சிரித்தபடி பேசிக்கொண்டே உள்ளே வந்தான்.
“ஆத்தே இந்த புள்ளையா?…” மதுராவை பார்த்தவருக்கு தூரத்தில் பெரிதாய் ஞாபகமில்லாது போக அருகே வர வர அடையாளம் தெரிந்துவிட்டது.
அழகரை பார்த்த மதுராவிற்கு அவ்வளவு யோசிப்பு எல்லாம் தேவைப்படாமல் சட்டென கண்டுகொண்டாள்.
மறக்ககூடியவரா என்று பார்த்ததும் முறைத்தவள் அப்படியே முறைத்தபடி முன்னே வர,
“இதென்னய்யா என்னிய மொறைக்குது இந்த புள்ள?…” என்று அழகர் பாண்டியனிடம் கேட்க,
அழகருக்கு புரியவில்லை எதற்கு நன்றி சொல்ல இத்தனை தூரம் வயது பெண்ணுடன் வந்திருக்கிறார்கள் என்று.
தெரிந்துகொள்ளாமல் கிளம்பவும் மனதில்லை. எழில்மணியை பார்த்திருக்கிறார். அதிகமாகவே கேள்விப்பட்டும் இருக்கிறார்.
எழில்மணி செருக்கு நிறைந்த மனிதர் என்று ஊருக்குள் பிரசித்தி. இப்போது அந்த குடும்பம் இங்கே நன்றி சொல்வதா என அழகருக்கு குழப்பம்.
அதனை பாண்டியனும் கண்டுகொண்டான். தெரியவில்லை என்றால் தலை வெடித்துவிடாதா அவருக்கு என நினைத்தவன்,
“அதொண்ணுமில்ல சின்னய்யா நாயகியாத்தா கொஞ்ச நாமின்ன கீழே விழுந்து வாரிக்குச்சு. அத்த நாம இருந்து கவனிச்சோம்ன்னு நன்றி சொல்லிட்டு அவக பொறப்பாட்ட சொல்லவும் வந்துருக்காக….” என்றான் பாண்டியன்.
பேசிக்கொண்டே மற்றவர்களை எதுவும் பேசவேண்டாம் என்பதை போல கண்ணால் சமிக்சை செய்ய மகேஷ்வரி அமைதியாக நின்றுகொண்டார்.