“என்ன செய்யிவ? காத கழட்டி சூப்புக்கு தாரது தான?….” என்று சொல்ல அவனை அடிக்க முடியாமல் முறைத்தார்.
“சரி நாங்க கிளம்பறோம். விஷயத்தை இன்னும் மது அப்பாட்ட சொல்லவே இல்லை. போய் தான் சொல்லனும். சொல்லிட்டு கால் பன்றேன்…” என்ற மகேஷ்வரி அங்கிருந்தவர்களிடம் போன் நம்பர்களையும் வாங்கிக்கொண்டார்.
அவர்கள் இருவருக்கும் ஆட்டோ வரவழைத்து அனுப்பி வைக்க வீடு போய் சேர்ந்ததும் ட்ரைவரை அழைத்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பும் படி கூறினார் மகேஷ்வரி.
“என்ன மகேஷ்?…” என எழில்மணி கேட்க,
“வந்து சொல்றேன்…” என்றவர் ட்ரைவரிடம்,
“நாங்க வர இன்னும் ரெண்டுமூணு நாளாகும் போலருக்கு. நீங்க முன்னாடி கிளம்புங்க. எங்களோட எங்க சொந்தக்காரங்க வருவாங்க. அதனால சேர்ந்து வருவோம் அவங்க வேன்ல…” என கூறி அனுப்பினார்.
ட்ரைவரும் அப்போதே கிளம்பிவிட்டார் அங்கிருந்து. நாயகிக்கும், எழில்மணிக்கும் அதன் பின்னர் தான் விஷயத்தை கூற அதனை அறிந்து அத்தனை குதி குதித்தார் எழில்மணி.
“எங்கிட்ட முன்னாடியே சொல்லமாட்டியா நீ? என்ன நினைச்சிட்டு இதை செய்யற? எல்லாம் உன் இஷ்டமா? அதுவும் ரெண்டுமூணு நாளாகும்ன்னு வேற சொல்ற?…” என கேட்க,
“நான் தான்ப்பா சொல்ல சொன்னேன். செய்யறதை இன்னும் கொஞ்சம் பர்பெக்ட்டா செய்யனுமே? நாளைக்கே வரேன்னு ஏன் சொல்லனும்?…” என்றாள் மதுரா.
“அவன் எத்தனை வருஷமா நம்ம வீட்டுல வேலை பார்த்திட்டிருக்கான் தெரியும் தானே?…” எழில்மணி எரிச்சலுடன் பேச,
“நாராயணன் அங்கிள் அதைவிட உங்களுக்கு இன்னும் அதிக வருஷம் பழக்கம் தானே?…” பாண்டியன் கேட்டதையே மதுராவும் கேட்டாள்.
“அதுக்கு அவன் சொல்லித்தந்தபடி போகனுமா? ஏன் நமக்கு சொந்த புத்தி இல்லையா? அவன் என்ன நம்ம போறதை ரூல் பன்றது? அதுவும் அடியாள் மாதிரி தம்பியை கூட அனுப்புறது? இதெல்லாம் நல்லாயில்லை…” என கொந்தளித்தார்.
“காசு குடுத்திருக்கறது அவர். போற வழில என்னவோ நடந்து பணத்தை தொலைச்சிட்டு நின்னா நாளைப்பின்ன அவருக்கு எப்படி பணம் திரும்ப போகும்? எதை வச்சு நம்ம திருப்பி குடுப்போம்?…” என்ற மதுரா,
“நாம கேட்காமலே இத்தனை செய்யும் போது அப்ரிஷியேட் பண்ணலைனாலும் இப்படி சில்லியா கமென்ட் பண்ணாம இருந்தா போதும். இப்போதைக்கு இந்த பணத்தை எப்படி எந்தெந்த முறையில நாம சரியா கொண்டுபோகனும்னு தான் யோசிக்கனும்…” என்றாள்.
“அதுக்குன்னு அவன் வண்டில போறதா? அதுவும் ஓட்டை ஜீப்ல டொக்கு டொக்குன்னு. என்னன்னு போக முடியும்? எனக்கு வசதியா இருக்காது…” என்று இளக்காரமாக வேறு பேச,
“முடியலைன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்…” அழுத்தம் திருத்தமாக சொல்லிய மதுரா,
“ம்மா எதுவுமே வேண்டாம். பேசாம பணத்தை திருப்பி குடுத்துட்டு எல்லாத்தையும் விட்டுட்டு நாம இங்கயே இருந்துடுவோம். இவ்வளோ டென்ஷன் தேவையே இல்லை…” என்று சொல்லிவிட்டாள்.
ஒரு நொடியில் ஆடித்தான் போனார் எழில்மணி மகளின் இந்த விட்டேற்றியான எரிச்சல் பேச்சில்.
“மது…” என்ற அழைப்பிற்கு செவி சாய்க்காமல் நகர்ந்தாள்.
இத்தனை பேசுவதற்குள் தலை வேறு வலிக்க நெற்றியை பிடித்தபடி அமர்ந்தவள் முகமே சோர்ந்துவிட்டது.
சற்று நேரம் முன்பு எத்தனை சந்தோஷம், மூச்சு திணறும் அளவிற்கு மகிழ்ச்சியும், சிரிப்பும், ஆராவாரமுமாக இருந்து இப்போது பிரச்சனையின் பக்கம் வரவும் மீண்டும் அந்த அழுத்தங்கள் தொற்றிக்கொண்டது.
“மது காபி தரவா?…” என மகேஷ்வரி கேட்க,
“ஆமாம்மா, வேணும். அப்படியே லேப்டாப்பும்…” என்றாள்.
மரிக்கொழுந்துவிடம் சொல்லி அனைவருக்கும் காபியை வரவழைத்துவிட்டு வேலையை ஆரம்பித்தனர்.
இதில் நாராயணனுக்கு தரவேண்டிய பங்கு பணத்தையும் அதுவரை அவர் நிறுவனத்தில் எடுத்திருந்த கணக்கு வழக்கையும் தனியாக பிரித்து எடுத்து வைத்திருந்தாள் மதுரா.
முதலில் காலை சுற்றிய அந்த நாகத்தை வெட்டிவிடவேண்டும். அதுவும் அத்தனை எளிதில் இல்லாது அவர்களை போலவே நயவஞ்சகத்துடன் என்று நினைத்தாள் மதுரா.
என்ன செய்ய என்ன செய்ய என்று அத்தனை யோசித்தவளுக்கு ஜகாவின் ஞாபகம்.
அவனிடம் ஆலோசனை கேட்டால் என்ன என்று தோன்றியது. மறுநாள் செல்லும் வழியில் அவனிடம் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டாள் மதுரா.
பாண்டியன் சொல்லியதை போலவே முதல்நாள் இரவே அவர்கள் காரை கொண்டுவந்து நாயகியின் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டனர்.
எழில்மணி உறங்கியிருக்க ஜகா தான் வந்து காரை நிறுத்தியிருந்தான் மதுராவிடம் சொல்லிவிட்டு.
காலை எழுந்ததும் பெட்டிகளை தூக்கிக்கொண்டுவந்து வெளியே வைக்க வாசலில் யாரோ அங்கே நின்றுகொண்டிருந்தனர்.
“யார்ரா அது?…” எழில்மணி சத்தமிட,
“ஐயா நாந்தேன் முனியாண்டிங்க. வண்டி ஓட்ட பாண்டியண்ணே அனுப்பினாக…” என்று வந்து நின்றவனின் உருவமே மிரட்டியது.
“முரட்டு ஆளா இருக்கானே?…” என பார்த்தவர்,
“சரி இந்த பெட்டிகளை கொண்டுபோய் வண்டில வை…” என்று அங்கேயே நின்றார்.
‘என் நேரம் அந்த இடுக்கு பிடிச்ச ஜீப்ல போகனும்ன்னு இருக்கு’ என இன்னுமே உள்ளுக்குள் புலம்பிக்கொண்டு நின்றார் எழில்மணி.
முனியாண்டி சொல்லியதை செய்ய புல்லட்டின் சத்தம் காதை கிழித்துக்கொண்டு வர பாண்டியன் ஜகாவுடன் வந்திருந்தான்.
எழில்மணி அவனை முறைப்புடன் பார்த்துக்கொண்டு நிற்க அதனை கண்டுகொள்ளாமல் தன் தம்பியுடனே தீவிரமாக பேசிக்கொண்டு நின்றான்.
எட்டுமணியாகியிருக்க வீட்டினுள் இருந்து மதுராவும், மகேஷ்வரியும் வந்துவிட பாண்டியனை வந்து பார்த்தனர்.
அவனிடம் பேசிவிட்டு மீண்டும் நன்றி சொல்லி திரும்ப எழில்மணி கிளம்புவதாக சொல்ல கூட வாயை திறக்கவில்லை.
எங்கோ பார்த்துக்கொண்டு கோபத்தை காண்பித்தபடி நின்றிருந்தவர் கார் வந்த சத்தத்திலும் திரும்பாதிருக்க,
“ப்பா கார்ல ஏறுங்க…” என்ற மகளின் அழைப்பில் தான் தாயிடம் சொல்லிக்கொண்டு திரும்பினார்.
“மை குட்னஸ்…” அவரறியாமலே வந்திருந்தது அந்த வார்த்தை.
விழிகள் வியப்பிலும், அதிர்ச்சியிலும் விரிந்துகொள்ள கூடவே இந்த கிராமத்தில் இந்த காரா? என்னும் புகைச்சலும்.
“லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் நல்லாயிருக்குலப்பா. நம்ம பக்கெட் லிஸ்ட்ல கூட இருந்துச்சே. லேட்டஸ்ட் ஹையேன்ட் மாடல்…” என மதுரா அவரின் வாய் பிளப்பை பார்த்து சிரிப்புடன் சொல்ல,
“ஹாங். ம்ம் ம்ம்..” என்று முகத்தின் ஆச்சர்யபாவத்தை மறைத்துக்கொண்டு காரில் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டதும் தான் அருகே முனியாண்டியை பார்த்தார்.
“ஐயோ இவன் வேற பயமுறுத்துறானே? வேற ஆளே இல்லையாக்கும்…” என பொறுமிக்கொண்டு அந்த பக்கமே திரும்பாமல் ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்.
மதுராவும், மகேஷ்வரியும் பின்னால் ஏறிக்கொள்ள அதற்கு பின் இருந்த இருக்கையில் ஒன்றை மடித்து அதில் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்க இன்னொரு இருக்கையில் ஜகா அமர்ந்துகொண்டான்.