என்று வயோதிகத்தால் தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே மணி அடித்து டைனிங் ரூமின் சுவற்றில் மாட்டியிருந்த அவரது இஷ்ட தெய்வமான கற்பகவிநாயகரை வணங்கிக் கொண்டிருந்தார் பாலண்ணா. தன் வழக்கமான உடற்பயிற்சியை முடித்து முகம் முழுவதும் வழிந்த வியர்வையை சிறிய துண்டினால் அழுந்த துடைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தவன், அவரை இடைஞ்சல் செய்யாமல் அமைதியாக வந்து தண்ணீர் எடுத்து குடித்து விட்டு டைனிங் டேபிளில் மேல் இரு கைகளைக் கட்டியபடி வைத்து சேரில் அமர்ந்தான் பூர்ணோதயன்.
பூர்ணோதயன் இருபத்தியொன்பது வயது இளைஞன். மாநிறம். நல்ல உயரம். அளவான உடல் கட்டு. சதுர வடிவ முக அமைப்பு. சற்றே மேல் ஏறியிருந்த அகன்ற நெற்றி. அதை மறைத்து அழகு சேர்த்த வகிடு இல்லாத லேசான சுருள் சிகை அலங்காரம். அவன் வடிந்த, வடித்த தேகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட லேசாக உப்பிய புட்டுக் கன்னங்கள். கன்னங்களை வருடும் கருந்தடர்ந்த கற்றை மீசை. சற்று பெரிய சிரிக்கும் விழிகள். அதற்கு அமைப்பானது போல புருவங்கள். எம் இ சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு தந்தையின் தொழிலான எஸ் எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை நடத்தி வருகிறான். பூர்ணோதயன் தந்தை சாரங்கபாணி. தாயார் சாரதா. மகன் தொழிலை ஏற்றுக் கொண்ட பிறகு சாரதாவின் பிறந்த ஊரான திருச்சியில் உள்ள அவர்களது விவசாயபூமியை நிர்வாகம் செய்து அங்கேயே தற்சமயம் வசித்து வருகிறார்கள்.
பாலண்ணா சாரதாவிற்கு தூரத்து சகோதர உறவு முறை. ஒரு சூழலில் மகனை சென்னையில் தனியாக விடுவதற்கு தயங்கி யோசித்த போது திருமணங்களுக்கு சமைத்து அனுபவம் பெற்று, வயது காரணமாக முன்பு போல் பெரிய விசேஷங்களுக்கு செல்லாமல், சிறு சிறு ஆர்டர்களுக்கு சமைத்துக் கொண்டிருந்த பாலண்ணாவின் நினைவு சாரதாவிற்கு வந்தது. தன்னுடைய ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மனைவியை இழந்து வயலூரில் தன் சிறு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தவரிடம் கைநிறைய சம்பளத்துடன் “மகனுக்கு துணையாக சென்னை வந்து இருக்க முடியுமா? °” என்று சாரதா கேட்டதும் மகிழ்ச்சியாகவே ஒத்துக்கொண்டார்.
அறுபது வயதை நெருங்கி விட்டவருக்கு முன்பு போல் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாத காரணத்தாலும், தெரிந்த ஆட்களை உதவிக்கு வைத்துக் கொண்டு ஆர்டர்களை சிரத்தை எடுத்துச் சிறப்பாக செய்து கொடுத்தாலும், தொடர்ச்சியாக ஆர்டர்கள் கிடைப்பது சிரமமாக இருக்க பொருளாதார ரீதியான சிக்கல்கள் பாலண்ணாவிற்கு இருந்து வந்தது. மகள் தங்களோடு வந்து இருக்கும் படி அழைத்த போதும் ஏனோ அது அவரது மனதுக்கு ஒப்பவில்லை. “ஆடிய காலும், பாடிய வாயும், கரண்டி பிடித்த கையும் சும்மா இருக்க விரும்பாதுமா. இன்னும் கொஞ்ச நாள் நான் விரும்பும் என்னுடைய தொழிலை செய்யத்தான் விரும்புகிறேன்” என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஒரே ஒரு ஆளுக்கு சமைத்து போட்டு தங்க இடம், கூடவே கை நிறைய சம்பளமும் தருவதாக சாரதா சொன்னபோது அது அவருக்கு அரிய வாய்ப்பாகத்தான் இருந்தது. மகளும் “இனி இதுதான்பா சரி. நம்பகமான குடும்பம். நிரந்தர வருமானம். உங்களுக்கு முடியும் வரை உங்கள் விருப்பம் போலவே சமையல் வேலை. போதாதற்கு உங்கள் உதவிக்கும் ஒரு ஆள். இதற்கு மேல் என்ன வேண்டும்?. வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வீட்டோடு ஓய்வாக இருங்கள்” என்று சம்மதம் சொல்லிவிட சாரதாவோடு சென்னை கிளம்பி வந்து விட்டார்.
பாலண்ணா கவியரசர் கண்ணதாசனின் விசிறி. சமைக்கும் போதெல்லாம் கண்ணதாசன் பாடல் கேட்ட படி கூடவே சேர்ந்து பாடிக்கொண்டுடிருப்பது அவரது வழக்கம். அவர் சென்னை வந்து தன்னோடு வசிக்க தொடங்கிய இந்த மூன்று வருட காலத்தில் பழைய பாடல்களை அதிகம் கேட்டிறாத பூர்ணோதயன் கூட சில பாடல்களை ரசித்து விரும்பிக் கேட்கத் தொடங்கி இருந்தான். சில சமயம் பாலண்ணாவை வம்பு இழுப்பதற்காக கண்ணதாசனைப் பற்றி பேசி அவரை சீண்டி விளையாடுவதும் உண்டு.
தீபாராதனையை முடித்த பாலண்ணா கைகூப்பி வணங்கிய பின் இரு கைகளையும் கடவுளின் முன்பாக ஏந்தியபடி சத்தம் இல்லாமல் விழிகளால் ஏதோ யாசித்தார். பின்னர் தட்டில் இருந்து விபூதியை எடுத்து நெற்றியில் பட்டை இட்டுக் கொண்டு திரும்பியவர் பூர்ணோதயனைப் பார்த்ததும் “வந்து விட்டீர்களா தம்பி?. நீங்கள் வருவதற்குள் முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஒரு நிமிடம் இருங்க. பால் அடுப்பில் தான் இருக்கிறது. சீக்கிரம் காபி போட்டு கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவசரகதியில் நகர்நந்தவரிடம் “மெதுவாகவே கொண்டு வாங்க பாலண்ணா” என்று சொல்லியவனிடம் சிரித்தபடி தலையசைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவர் “கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா… கிருஷ்ணா…. என்று பாடியபடி காப்பியைத் தயாரிக்க தொடங்கியவரிடம் “என்ன பாலண்ணா?. இன்று ஏதாவது விஷேசமா?. என்னைக்கும் இல்லாமல் இன்று பூஜை எல்லாம் பலமாக இருக்கிறது?. அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில்?” என்று கேட்டான்.
“ஆமாம் தம்பி. அந்த கற்பக விநாயகரிடம் நாற்பத்தி எட்டு நாள்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல் நெய் விளக்கு போடுகிறேன் என்று வேண்டுதல் வைத்திருக்கிறேன். அது இன்றிலிருந்து தொடக்கம் அதுதான்”.
“ஓ..நெய் விளக்கு…அப்படி என்றால் வேண்டுதல் பலம் தான் போலிருக்கிறது வேண்டுவதை வெளியில் சொல்ல கூடாது என்பார்கள். ஆனால் நான் யூகித்து விட்டேன். உங்கள் மகளுக்காகத் தானே?” என்று சிரித்துக் கொண்டே பூர்ணோதயன் கேட்க தலையசைத்தவர் காபியை கொண்டு வந்து அவன் முன்பாக வைத்து “கூடவே உங்களுக்காகவும் தான் தம்பி” என்று சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான். “என்ன குறை உங்களுக்கு?. வயது , வசதி, வாலிபம் எல்லாம் இருக்கிறது. திருமணம் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது”.
“அம்மாவும் வலை போட்டு உங்களுக்கு பெண் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு பிடித்த மாதிரி பெண் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. சீக்கிரம் உங்கள் மனதுக்கு பிடித்த மனைவி, குழந்தை, குட்டி என்று அமைந்து இதே வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உங்களுக்காகவும் வேண்டுதல் வைத்திருக்கிறேன். அதனால் தான் முதல் நாள் இந்த வீட்டில் இருந்தே தொடங்கி இருக்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள் தம்பி வெகு சீக்கிரத்தில் என் அப்பன் அந்த பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் இந்த நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் உங்கள் மனதுக்கு பிடித்த பெண்ணை உங்கள் கண்களில் காட்டிக்கொடுக்கப்போகிறார்” என்றதும் “ம்ம் உங்கள் வேண்டுதல் பலித்து அவளை சீக்கிரம் காட்டி கொடுக்கட்டும். நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். எங்கே இருக்கிறாளோ? தெரியவில்லை. கண்ணில் பட்டதும் உங்களுக்காகவாவது மூட்டை கட்டித் தூக்கி வந்து விட மாட்டேன்” என்று சிரித்தபடி காபியை எடுத்து அருந்தத் தொடங்கினான்.
ஒரு மிடறு விழுங்கியவவன் “பாலண்ணா எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் வேண்டுதல் வைப்பது விநாயகரிடம். வேண்டி முடித்ததும் கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா… கிருஷ்ணா…என்று உங்கள் கண்ணதாசன் பாடலைப் பாடினால் பிள்ளையார் கோவித்துக்கொண்டு என்னை அவருக்கு துணையாக அரசமரத்தடியில் உட்காரவைத்து விடப்போகிறார்” என்று பாவம் போல் முகத்தை வைக்க முயற்சி செய்தான்.
அவனது குறும்பை ரசித்தவர் “கொஞ்சம் முன்பு நான் பாடிய கற்பக விநாயகர் துதி கூட கண்ணதாசன் எழுதியது தான். அதனால் கோவித்துக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன் தம்பி” என்று சிரித்தார்.
“ஓ.. உங்கள் கவியரசர் இதெல்லாம் கூட எழுதி இருக்கிறாரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்க,
“அந்த கவிஞன் என்ன எழுதவில்லை என்று கேளுங்கள் தம்பி. நவரசத்தோடு…சமரசத்தையும் கூட பாட்டில் எழுதியிருக்கிறாரே!” என்றார் ஒரு பிரம்மிப்பான ரசிகனாக.
சிரித்துவிட்டு காபியை அருந்தி முடித்தவன் “ஒரு எட்டு மணிக்கு கிளம்பலாம் பாலண்ணா. அதற்குள் நான் ஒரு முறை அலுவலகம் வரை போய் வருகிறேன் . ஒரு சின்ன வேலை பாக்கி இருக்கிறது. முடித்து விட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன். எதுவும் சமைக்க வேண்டாம். காலை மதியம் இரண்டு வேளையும் வழியில் ஏதாவது ஹோட்டலில் பார்த்துக் கொள்வோம். உங்கள் பெண்ணுக்கு சென்னையில் இருந்து ஏதாவது வேண்டுமா என்று கேட்டு வையுங்கள். போகும் போது வாங்கிப் போகலாம்” என்று சொல்லி நகர்ந்தவனை கனிவாகப் பார்த்தது பாலண்ணா விழிகள்.
சென்னையில் உள்ள அலுவலகத்தையும் இந்த வீட்டையும் நண்பனது மேற்பார்வையில் விட்டுவிட்டு கோவையில் தன்னுடைய தனி முயற்சியில் பார்ட்னர்ஸ் யாரும் இன்றி தானே ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை தொடங்கி ஒரு கேட்டேட் கம்யூனிட்டி ஒன்றை உருவாக்கித் தரும் வேலையையும் எடுத்து விட்டான். அதனால் வெகு விரைவில் கோவை வாசியாக மாறப்போகும் பூர்ணோதயன் பாலண்ணாவை அவரது சொந்த ஊரான வயலூரில் விட்டு விட்டு தாய், தந்தையை ஒரு முறை பார்த்து ஆசிபெற்று விட்டு கோவை செல்லும் முடிவில் இருந்தான்.
பாலண்ணாவின் மகள் ஏழுமாத கர்பவதியாக இருப்பதால் மகளுக்கு வளைகாப்பு , பிரசவம் எல்லாம் முடிந்து குழந்தையை எடுத்துக் கொண்டு மகள் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு பூர்ணோதயனுக்கு உதவியாக கோவை வந்து விடுவது என்று திட்டம்.
வழியில் உணவை முடித்துக் கொண்டு திருச்சியை நெருங்கிய சமயம் “தம்பி, என்னை ஏதாவது பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டால் போதும். நானே போய்க் கொள்வேன்”.
“அட சும்மா இருங்க பாலண்ணா. உங்களை உங்கள் வீட்டில் விட்டுவிட்டு தான் நான் என் வீட்டுக்குப் போகப் போகிறேன்”.
“அது இல்லை தம்பி. உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல். அதற்காகத் தான் சொல்கிறேன். சரி முதலில் உங்கள் வீட்டிற்கே போவோம் . நானும் அம்மாவையும், அப்பாவையும் ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு அங்கிருந்து என் வீட்டுக்கு போய்க் கொள்கிறேன். நேராக உங்கள் வீட்டிற்கே போகலாம்” என்று பாலண்ணா சொல்ல சிரித்துவிட்டு சம்மதம் போல தலையசைத்தாலும் முதலில் நேராக சென்று காரை நிறுத்தியது பாலண்ணாவின் சிறிய வீட்டிற்கு முன்பாகத்தான்.
“அட என்ன தம்பி நீங்க சொல்ல சொல்ல கேட்காமல் அம்மாவையும், அப்பாவையும் ஒரு முறை நானும் பார்த்திருப்பேனே” என்று சலித்தபடி அவர் இறங்கி அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டின் பூட்டை திறந்து கொண்டிருக்கும் போது டிக்கியில் இருந்து பல வகையான இனிப்பு வகைகளும், பலவிதமான பழங்களும் அடைந்திருந்த பைகளை கைநிறைய சுமந்தபடி வந்து அந்த பழைய வீட்டின் திண்ணையில் வைத்தான். “இதையெல்லாம் தூக்கிக்கொண்டு உங்கள் ஒருவரால் பஸ் ஏறி இறங்க முடியாது. மனது வந்து ஆட்டோவும் வைக்க மாட்டீர்கள். அதற்காகத்தான் இங்கேயே அழைத்து வந்தேன். நீங்கள் இன்னொரு நாள் வீட்டிற்கு வந்து அம்மாவையும் , அப்பாவையும் பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது எப்படியும் வளைகாப்பிற்கு அழைக்க அங்கு போவீர்கள் தானே?. அப்போது பார்த்துக்கொள்ளுங்கள்” என்றவன் காரின் பின்பக்கத்தில் இருந்து ஒரு பிரபலமான பட்டு துணிக்கடையின் பெயர் அச்சடிக்கப்பட்ட பையை எடுத்து, அதன் மேல் பணமும் எடுத்துவைத்து அவரிடம் கொடுத்து “வளைகாப்பிற்கு என்னால் வர முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது என் சார்பாக உங்கள் மகளுக்கு”என்று நீட்டியபோது “புடவை மட்டும் போதும். இதெல்லாம் வேண்டாம் தம்பி” என்று பணத்தை மறுத்தார்.
“வைத்துக் கொள்ளுங்கள் பாலண்ணா. மகளைப் பார்க்கப் போகும்போது, வீட்டிற்கு அழைத்து வரும்போதும் டாக்ஸி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கெல்லாம் தேவைப்படும். பிரசவத்திற்கு ஏதாவது உதவி தேவை என்றாலோ அம்மா, அப்பாவிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தாலோ, எந்த நேரம் என்றாலும் என்னை நீங்கள் அழைக்கலாம்”என்று பூர்ணோதயன் சொன்ன எப்போது கண்கள் கண்ணீரால் நிறைந்தது பாலண்ணாவிற்கு.
புடவை பெட்டி அடங்கிய பையை நெஞ்சோடு அணைத்தபடி இரு கையையும் கூப்பி உங்கள் நல்ல மனதிற்கு சீக்கிரமாகவே நல்ல குணவதியாக அமையட்டும்” என்று சொல்ல, “எனக்காக விளக்கு போடுகிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். மகளைப் பார்த்ததும் என்னை மறந்து விடாதீர்கள். உங்களையும்.. உங்கள் பிளையாரையும் நம்பித்தான் கார் டிக்கியில் ஒரு சாக்குப்பையை வேறு தயாராக எடுத்து வைத்திருக்கிறேன். நம்பியிருக்கும் என்னை இருவரும் சேர்ந்து ஏமாற்றி விடாதீர்கள்” என்று சொல்லிச் சிரித்தபடி காரில் ஏறி கையசைத்து விடை பெற்றான்.
பூர்ணோதயன் தன் வீட்டை நெருங்கிய போது மாலையாகியிருந்தது. வீட்டின் முன் பக்கம் இருந்த பெரிய மர ஊஞ்சலில் ஒரு காலை மடித்து மறுகாலை தொங்க விட்டு ஏதோ வாசித்துக்கொண்டிருந்த சாரங்கபாணி. மகன் வரவிற்காக அந்த பெரிய வீட்டின் கேட் திறந்து வைத்து தயாராக இருந்தது. கார் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தார். அதே நேரம் மகனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த சாரதாவும் வேகமாக முன் பக்கம் வந்தார்.
“வா உதயா..” என்று வரவேற்ற சாரதாவை பார்த்து புன்னகைத்தவன் காரில் இருந்த தனது பொருட்களை தன் அறையில் வைக்கச்சொல்லிவிட்டு தந்தை அமர்ந்திருந்த ஊஞ்சலின் அருகில் கிடந்த குஷன் இல்லாத மர ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து பயணத்தில் அலுத்திருந்த உடலை வளைத்து நெறித்ததைப் பார்த்த சாரதா, “டிரைவர் வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்போது பார்” என்று செல்லமாக மகனது தோளில் அடித்து, தலையை கொஞ்சம் முரட்டுத்தனமாக கலைத்து விட்டுவிட்டு மகனின் அருகே அமர்ந்தார்.
“ஒரு வாரமாவது இங்கு இருப்பது போல் வரச்சொன்னேனே உதயா. அது இந்த முறையாவது நடக்குமா?. இல்லை இப்போதும் ஏதாவது காரணம் சொல்லிக் கிளம்பப்போகிறாயா?” என்று வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி பக்கத்தில் ஊஞ்சலின் மேல் வைத்தபடியே மகனைப் பார்த்து கேட்டார் சாரங்கபாணி.
“ஒரு வாரமா?. வாய்ப்பே இல்லை அப்பா. நாளை ஒரு நாள் மட்டும் தான் இங்கு இருப்பேன் . நாளை மறுநாள் அதிகாலையில் கிளம்பி விடுவேன்”.
“ம்ம் நான் எதிர்பார்த்த பதில் தான். எனக்கு ஒன்றும் பெரிய ஏமாற்றமில்லை. உன் அம்மா தான் பாவம் அவள் ஃபோன் கேலரி நிறைய உனக்காகப் பார்த்திருக்கும் பெண்கள் ஃபோட்டோக்களை வைத்துக் கொண்டு உன்னிடம் காட்டி கேட்டு விட்டு உனக்கு பிடிக்கும் பெண்ணை அவர்கள் வீட்டிலோ , கோவிலிலோ வைத்துப் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்”.
“இந்த வேலை பற்றி அம்மாவிற்கு நான் விளக்கம் தரவேண்டிய அவசியமே இல்லை. இப்போது என்ன நாளை ஒரு நாள் இருக்கிறதே. ஒரு பெண்ணை பார்த்துவிடலாம். மற்ற பெண்களையும் இடையில் வந்து பார்த்து விட்டு சொல்கிறேன். ஓகேவா அம்மா?” என்று அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தாயின் ஃபோனை வாங்கி அவனுக்காக சாரதா பார்த்து வைத்திருந்த பெண்கள் போட்டோவையும் விவரங்களையும் பார்த்து கேட்டு அதிலிருந்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து “இந்த பெண் தஞ்சாவூர் தானே. நாளை இந்த பெண்ணைப் பார்க்கலாம். வீட்டிற்கு எல்லாம் சென்று பார்க்க வேண்டாம் அம்மா. கோயிலில் வைத்து பார்ப்போம். எனக்கு பிடித்திருந்தால், திருப்தியாக இருந்தால் சொல்கிறேன். இல்லை என்றால் வேறு பெண் பார்க்கலாம்” என்று மகன் சொன்னதும். சாரதாவிற்கு சந்தோஷமாகி விட்டது. அதன் பிறகு கோவையில் எடுத்து செய்யப்போகும் வேலை பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து “இருப்பா டீ போட்டு எடுத்து வருகிறேன்” என்று சாரதா எழுந்து சென்றார். அவர் அங்கிருந்து நகர்ந்ததும் பூர்ணோதயன் தன் ஃபோனை எடுத்து பார்க்கத்தொடங்க சாரங்கபாணி எதுவும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
வீட்டு வேலையாள் சூடான வாழைக்காய் பஜ்ஜியும் , கெட்டி தேங்காய் சட்டினியும் வைத்த தட்டுகளை தந்தை, மகனுக்கு கொடுத்து விட்டு போக சில நொடிகளில் ஆவி பறக்கும் டீ யோடு சாரதா வந்தார்.
அந்த சமயத்தில் “உன் கம்பெனிக்கு டி என் (DN) கன்ஸ்டிரக்ஷன் என்று பெயர் வைத்திருக்கிறாயே அதற்கு ஏதாவது அர்த்தம் அல்லது முக்கியமான காரணம் இருக்கிறதா உதயா?” என்று கேட்டார் சாரங்கபாணி.
அவர் கேட்டதை வலது கையில் பஜ்ஜியை பிடித்து கடித்து சுவைத்தபடி இடது கையில் ஃபோனை வைத்து பார்த்துக்கொண்டிருந்த பூர்ணோதயன் பதிலளிக்கவில்லை. அவனது கவனம் முழுவதும் ஃபோனிலேயே இருந்து.
அதைப் பார்த்த சாரதா “உதயா அப்பா ஏதோ கேட்கிறார் பார். அவர் கேட்பது உன் காதில் விழவில்லையா?” என்று அவனுக்கு முன்பு டீ பாயின் மேல் டீ கப்புகள் அடங்கிய டிரேவை வைத்தார்.
நிமிர்ந்து தந்தையைப் பார்த்தவன் “சாரி அப்பா. கவனிக்கவில்லை. இப்போது சொல்லுங்கள் என்ன கேட்டீர்கள்?” என்று மரியாதை கலந்த குரலில் கேட்டான்.
மகனையும், மனைவியையும் ஒரு முறை பார்த்தவர் “ஒன்றுமில்லை உதயா. நான் கம்பெனியை தொடங்கும் போது என் பெயரான சாரங்கபாணியின் முதல் எழுத்தையும், உன் அம்மாவின் பெயரான சாரதாவின் முதல் எழுத்தையும் எடுத்து எஸ் எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பெயர் வைத்தேன். நீ உன்னுடைய சொந்த முயற்சியில் தொடங்கி இருக்கும் இந்த நிறுவனத்திற்கு டி என் கன்ஸ்ட்ரக்சன் என்று பெயர் வைத்திருக்கிறாயே அதற்கு என்ன காரணம்?. ஏதாவது உள் அர்த்தம் இருக்கிறதா? என்று கேட்டேன்” எனச் சிரித்தார்.
கணவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாரதா இப்பொழுது திரும்பி மகன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று ஆர்வத்தோடு திரும்பி மகனது முகத்தை பார்த்தார். கையில் வைத்திருந்த டீ கப்பை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு பின்னால் தலையை சாய்த்து “ஹாஹாஹா” என்று வாய் விட்டு சிரித்தவன் பின் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையும், தாயையும் மாறி மாறி பார்த்தவன் “நான் யாரையும் காதலிக்கிறேனோ என்று அப்பாவிக்கு சந்தேகம் போலிருக்கிறது. அதை என்னிடம் நேரடியாக கேட்காமல் இப்படி சுற்றி வளைத்துக் கேட்கிறார் என்று நினைக்கிறேன் சரிதானே அப்பா?” என்று சிரித்தவனை அப்படி இருந்தால் கூட பரவாயில்லை என்ற ஆர்வம் கலந்த மகிழ்ச்சியோடு சாரதா காத்திருக்க “அப்படி யாராவது இருந்தால் அம்மாவை எனக்கு பெண் பார்க்கச் சொல்லுவேனா?”.
“எனக்கானவளைக் கண்டு பிடித்ததும் உங்கள் இருவரின் சம்மதத்துடன், அதுவும் அப்பா அவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால் தான் என் திருமணம் நடக்கும் போதுமா?”என்று சொல்லி சாரங்கபாணியைப் பார்த்து சிரித்தான்.
அவன் பதிலில் சற்றே முகம் வாடிய சாரதாவை இடது கையால் அவரது தோளோடு அணைத்தபடி “நீங்கள் எனக்காகப் பெண் பார்த்துக்கொண்டே இருங்கள். என் மனதிற்கு பிடித்தவளைப் பார்த்ததும் திருமணம் தான்” என்று அன்னையை சமாதானம் செய்தான்.
அவன் கையை தள்ளி விட்டு சலித்த குரலில் போ உதயா. இப்படி தான் எதையாவது சொல்லி என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாய். நீயாகத்தான் உனக்கு பெண் பார்க்கத் தொடங்கச் சொல்லிச் சொன்னாய். உன் பேச்சை நம்பி நானும் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் கேட்டபோது சிவில் இன்ஜினியரிங் படித்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றாய். நான் அந்த படிப்பு படித்த பெண்களின் ஜாதகத்தை தேடி கொண்டு வந்தால் அம்மா இதை விட இன்டீரியர் டிசைன் படித்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மறுத்தாய் . சரி என்று அதைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தால் ஆர்க்கிடெக்ட் படித்த பெண்ணாக இருந்தால் எனக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்று சொல்லி இப்போது தஞ்சாவூர் பெண் வரை வந்து நிற்கிறது. இதுவாவது உனக்கு சரியாக வருமா?. இல்லை புதிதாக ஏதாவது சொல்லப் போகிறாயோ தெரியவில்லை”.
“அம்மா எனக்கும் பிடிக்க வேண்டாமா?. எனக்காக பாலன் அண்ணா கூட வேண்டுதல் வைத்து விளக்கு போடத் தொடங்கி இருக்கிறார்” என்று சொல்ல பேச்சு பாலண்ணா பற்றி திரும்பியது.
அந்த பேச்சு முடிந்ததும் சாரங்கபாணி “நான் கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லையே உதயா” என்றார்.
காலி கப்பை டீபாயின் மேல் வைத்தவன் உடலை கொஞ்சம் தந்தை பக்கமாக திருப்பி, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அப்பா என்னை பொறுத்தவரை வீடு என்பது பாதுகாப்பான உறைவிடம் மட்டும் இல்லை. பறவைகளுக்கு கூடு போல மனிதனுக்கு வீடு. அனுதினமும் வாழ்வியல் போராட்டங்களுக்காக ஓடி, அலுத்து கலைத்து திரும்பும் போது வீட்டிற்குள் நுழைந்ததும் மகிழ்ச்சியாக , நிம்மதியாக உணரவேண்டும். உறங்கவேண்டும். அதை வெறும் செங்கல்கள் சிமெண்ட் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிடம் மட்டுமே தராதுதான். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைத் துணை, வாரிசுகளுக்காக அவர்கள் பாதுகாப்பிற்காக நாம் கட்டும் வீடு … வெறும் வீடு மட்டும் கிடையாது. அதாவது இல்லம் தெய்வீகம். அந்த கான்செப்டை சொல்லுவது போல் டிவைன் நெஸ்ட். அதோட சுருக்கம் தான் டி என்” என்று விளக்கம் கொடுத்து முடித்தவனை பார்த்த சாரங்கபாணி “அதற்கு டிவைன் ஹோம் என்ற அர்த்தத்தில் டி ஹெச் என்றே வைத்திருக்கலாமே உதயா” என்று கேட்டதும், “இது எனக்காக நான் விருப்பப்பட்டு தொடங்கியிருக்கும் தொழில். எனக்கு பிடித்ததால் டி என் என்று பெயர் வைத்தேன். மாற்ற விருப்பம் இல்லை. மாற்றப்போவதும் இல்லை. அம்மா நான் கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துவிட்டு, ஒரு குளியலையும் போட்டு விட்டு வருகிறேன்” என்று எழுந்தான்.
மகனிடம் வம்பு வளர்ப்பது போல் பேசிக்கொண்டிருந்த கணவனை கண்டிப்பது போல் பார்த்து விட்டு “உதயா, நாளை எத்தனை மணிக்கு பெண் பார்க்கப் போகலாம்?” என்று சாரதா கேட்க, நடந்து கொண்டிருந்தவன் ஒரு நொடி நின்று “காலையிலேயே கோவிலுக்கு வர சொல்லி விடுங்கள் அம்மா. பார்த்துப் பேசி என் முடிவையும் சொல்லிவிடுகிறேன்” என்று வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.
மகிழ்ச்சியோடு கணவனை திரும்பிப் பார்த்து “கண்டிப்பாக இந்த பெண்ணை உதயாவிற்கு பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்” என்று சொன்ன சாரதாவை நீ மிகவும் பாவம் சாரு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மனைவியை பரிதாபமாகப் பார்த்தார் சாரங்கபாணி.