தனக்கு பின்னால் பூர்ணோதயனைக் காணாமல் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, அவனுக்கு ஃபோன் செய்தான் ராகேஷ். ராகேஷ் நின்றிருக்கும் இடத்தை கேட்டுவிட்டு அங்கே வந்து நின்ற உதயனின் பின்னால் அமர்ந்திருந்த சோட்டுவைப் பார்த்து ராகேஷ் தம்பதியர் கொஞ்சமல்ல, நிறையவே ஆச்சரியமாக பார்த்தார்கள். அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
“என்ன சோட்டு?. நீ வருவதாக என்னிடம் கூட சொல்லவேயில்லையே…!” என்று அதே ஆச்சரிய குரலில் கேட்டாள் கோமல்.
சோட்டு மௌனமாக இருக்க, “கிளம்பலாம் ராகேஷ்” என்ற உதயனோடு லயா, ரியாவும் “போலாம்… டாடி போலாம்” என்று கூச்சல் போட இரு பைக்குகளும் கிளம்பியது.
சத்தியமங்களம் செல்லும் வழியில் இருபுறமும் அடர்ந்த மரங்கள் கொண்ட நீண்ட சாலையில் முகத்தில் காற்று மோதச் செல்லதை குழந்தைகள் வெகுவாகவே ரசித்தார்கள்.
அதிலும் “டாடி பூரி அங்கிள் முன்னாடி போறாங்க. நீங்க ஸ்பீடா முன்னாடி போங்க டாடி “என்று ரியா சொல்ல, ராகேஷ், உதயன் வண்டியை தாண்டியதும், “பூரி அங்கிள் நம முன்னாடி போகலாம்” என்று லயா சொல்ல, குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு போக்குவரத்து குறைந்த இடங்களில் உதயனும், ராகேஷூம் போட்டி போடுவது போல், சில சமயம் முன்னும், பின்னும் சென்று, சில சமயம் இரு வண்டிகளும் சமமாக சீரான வேகத்தில் ஓட்டிச்செல்ல குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கு கூட அது பிடித்தது.
ஒரு முறை வெகுநேரமாக பின் தங்கியிருந்த உதயன் தீடீரென்று வேகம் எடுத்து ராகேஷ் வண்டியை தாண்டி செல்ல, “அம்மா… மம்மிக்கு டாட்டா சொல்லுங்க. ரியா… டாட்டா. இப்போ நாங்க தான் முதல்ல” என்று கூச்சலிட, லயாவோடு, தேன் மதியும் கூட கோமலைப் பார்த்து கையாட்டி சிரிக்க, கோமலுக்கு நெஞ்சு வலி வராத குறைதான்.
மரங்கள் குறைந்த பகுதி வந்ததும் ஒரு உயர்தர உணவகத்தில் உதயன் நிறுத்த, என்ன உதயன் அதற்குள் பசிக்கிறதா?.
இல்லை ராகேஷ். பெண்கள் பாத்ரூம் சென்று வரட்டும். இதற்கு மேல் கொஞ்ச தூரம் மரங்கள் இல்லை வெயில் கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. இன்னும் முப்பது நிமிடங்களாவது ஆகும். குழந்தைகளும் பெண்களும் வேண்டுமானால் காரிலோ, ஜீப்பிலோ வரட்டும். நாமும் அவர்களோடு அதில் போவது என்றாலும் போகலாம். ஜீப்பில் இருக்கும் இருவர் நமது பைக்கை ஓட்டி வந்து விடுவார்கள்.
ஜீப்பும் உங்களுடையதா உதயன்?.
ஆமாம் ராகேஷ்.
எதற்கு இரண்டு உதயன்?. ஏதோ ஒன்றை மட்டும் ஓட்டி வரச் சொல்லி இருக்கலாமே?.
இருக்கட்டும் ராகேஷ். அதுவும் புதிதுதான். கொஞ்சம் கிலோமீட்டர் ஓடட்டுமே என்று தான். குழந்தைகள் எதில் வர ஆசைப்படுகிறார்களோ அதில் போகலாம்.
குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு, ” நம் நால்வருக்கும் ஏதாவது ஜூஸ் சொல்லட்டுமா?” என்று உதயன் கேட்க, ராகேஷூம், கோமலும் அவரவர் விருப்பத்தை சொன்னார்கள். தேன் மதி மட்டும் அமைதியாக இருக்க “உங்களுக்கு முலாம்பழம் ஜூஸ் சொல்லட்டுமா தேன் மதி?” என்று கேட்டான்.
“அது எனக்கு பிடிக்காது. ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி போதும்”.
“இரண்டு வேண்டாம் ஒன்று மட்டும் போதும்” என்றவளைப் பார்த்து மெல்லச் சிரித்து “ஒன்று எனக்கு தேன் மதி”, என்றவன் திரும்பி குழந்தைகளோடு இயல்பாக பேசத் தொடங்கிவிட்டான்.
அவர்கள் வெளியில் வந்த போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது “லயா, ரியா பைக்கில் போகலாமா?. இல்லை காரில் , ஜீப்பில் போகலாமா?” என்றதும் குழந்தைகள் பைக்கில் என்று கோரஸாக கத்த, “எனக்கும் பைக் ஓகேதான்” என்றாள் கோமல்.
“ஓகே.. அப்போ நீங்கள் வேண்டுமானால் காரில் வாங்க தேன் மதி” என்று சொன்னவன் திரும்பிப் பார்க்காமல் பைக்கை உதைக்க காரின் பக்கம் செல்லாமல் பைக்கின் அருகில் வந்து நின்றாள் தேன் மதி.
கோமல் ராகேஷை பார்க்க, அவனும் மௌனமாக மனைவியை பார்த்தானே அன்றி வேறு எதுவும் சொல்லவில்லை. ஒரு நொடி தனக்குப் பின்னால் வந்து நிற்கும் தேன்மதியை திரும்பிப் பார்த்த பூர்ணோதயன், ஏன் காரில் போகவில்லையா? என்றும் கேட்கவில்லை. வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அவள் ஏறுவதற்கு வசதியான இடத்திற்கு நகர்த்தி நிறுத்த, மௌனமாக அவன் தோள் பிடித்து ஏறி அமர்ந்தாள்.
கொடிவேரியை சென்று அடைந்து தண்ணீர் வழிந்து வரும் இடத்தை ஒட்டிய மணல் பரப்பில் பெரியவர்கள் நால்வரும் குழந்தைகளோடு சென்ற அடுத்த நொடி, ஜீப்பில் வந்த இருவரும் வந்து இரண்டு பெரிய குடையைவிரித்து அங்கிருந்து மணல், கற்களையே எடுத்து குவித்தணைத்து, நட்டு குழந்தைகள் அமரும் வண்ணம் கெட்டியான பெட்ஷீட், பிளாஸ்டிக் பாய் இரண்டு என சுற்றிலும் விரித்து அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க, டிரைவர் காரில் இருந்து குழந்தைகளுக்கு தேவை என்று ராகேஷ் வைத்திருந்த பைகளைக் கொண்டு வந்து அங்கே வைத்தார். நடுத்தர வயது ஒத்த மனிதர் ஒருவர் வந்து பூர்ணோதயனுக்கு வணக்கம் வைத்து” சார், இது என் மனைவி” என்று அறிமுகப்படுத்த, “ம்ம் எண்ணெய் எல்லாம் புதிது தானே” என்றான்.
“ஆமாம் சார். எல்லா சமையல் பொருட்களும் புதிதாக வாங்கியது தான்”.
” ம்ம்….குழந்தைகள் சாப்பிடுவது போல் அதிக காரம் இல்லாமல் கொஞ்சமும், அதைவிட கொஞ்சம் அதிக காரம் சேர்த்து, நாங்கள் பெரியவர்கள் சாப்பிடுவதற்கும் செய்து விடுங்கள்” என்றதும் தலையசைத்து நகர்ந்தார்கள்.
“என்ன உதயன்?” என்று விவரம் கேட்ட ராகேஷிடம், “இவர் நம் கம்பனியில் தான் வேலை செய்கிறார். நல்ல மீன் வறுவல் செய்து தர ஆள் கேட்டேன். இவரது மனைவியே இங்கு வியாபாரம் செய்பவர் தானாம். அதுதான் குழந்தைகளுக்கும், நமக்கும் செய்யச்சொல்லியிருக்கிறேன். இங்கேயே பிடித்த மீன்களை உடனடியாக சுத்தம் செய்து சமைத்து தருவார்களாம். அபார சுவையாக இருக்கும் என்று சொன்னார்கள். பார்ப்போம்” என்றான்.
“லயா, ரியாவுக்கு முள் இல்லாத மீன் கிடைக்குமா?. வஜ்ரம் மாதிரி. குழந்தைகளுக்கு அதுதான் சாப்பிடத்தெரியும். கோமல் அதைத்தான் சாப்பிட வைத்து பழக்கியிருக்கிறாள்”.
“அப்படி இருக்காது ராகேஷ். ஆனால் பெரியமீனாக இருப்பதால் முள்ளும் பெரிதாக இருக்கும். எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். அவர்களுக்கு நாம் முள் பார்த்து எடுத்துக்கொடுத்தால் போகிறது. முள் இருக்கும் மீன் தான் சுவை அதிகமாக இருக்கும்”.
“சோட்டுவிற்கு மீன் என்றால் சுத்தமாக பிடிக்காது உதயன்”.
“பிடிக்காவிட்டால் போகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே திட்டமிட்டது. அவர்கள் விருப்பம் வெறுப்பு இதெல்லாம் இங்கு யாரும் பார்க்கப் போவதில்லை”.
” ம்ம்.. அதுசரி அவள் எப்படி உங்களோடு வந்தாள்?. நான் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவளை எப்படி வரவைத்தீர்கள்?. அதுவும் உங்களோடு பைக்கில்?. இதற்காகத்தான் என்னை முதலில் கிளம்பச்சொன்னீர்களா?”.
” இதென்ன கேள்வி ராகேஷ். இன்னும் என்மேல் சந்தேகப்படுவதை நீங்கள் நிறுத்தவில்லையா?. லயாவிற்காக கேட்டேன். அவர்களும் அவளுக்காகத்தான் வந்தார்கள்”.
” லயாவிற்காக என்றாலும் காரில் கூட வந்திருக்கலாமே…!” என்று கேட்டுக்கொண்டு நின்றவனின் தோள் தொட்டு திருப்பி, அங்கு இருந்த இரண்டு குடைகளில் ஒன்றில் கோமல் குழந்தைகளோடு பேசியபடி எதையோ எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்க, மற்றொரு குடையில் தனியாக அமர்ந்து நீரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தேன் மதியைக் காட்டி,” இதை அங்கே போய்.. உங்கள் சோட்டுவிடம் கேளுங்கள்” என்றவன் குனிந்து போட்டிருந்த டிரேக் சூட்டை மடித்து விட்டு “லயா, ரியா” என்றழைத்து வாங்க என்பது போல் கையசைத்தபடி அவர்களை நெருங்கினான்.
குழந்தைகளின் அருகில் வந்து மண்டியிட்டவன் “தண்ணீர் பார்க்க போகலாமா?. தண்ணீரில் மீன் குஞ்சுகள் கூட இருக்கும் பார்க்கலாமா?” என்று ஆசைகாட்ட, “ஏஏ….போலாம்”என்று இருவரும் உற்சாகமாக குதித்தார்கள்.
இருவரையும் கைபிடித்து தண்ணீரின் அருகில் அழைத்துச் சென்றான். அவர்களின் பின்னால் ராகேஷூம் கோமலும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
வழிந்து ஓடும் நீரில் லயா, ரியா இருவரும் தங்கள் பிஞ்சு கால்களை பதித்து நிற்க வைத்ததும், குஞ்சு மீன்கள் கூட்டமாக வந்து கடித்து வைத்ததும், அதன் குறுகுறுப்பு தாங்காமல் சிரித்தனர்.
கணுக்கால் அளவுக்கு மட்டுமே ஓடும் தண்ணீரின் மட்டம் இருந்தாலும் பாசி படிந்த தரை வழுக்க நடக்க முதலில் தள்ளாடிய சிறுமிகள் இரும்பு கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்க பழகிவிட்டார்கள்.
கோமலுக்கு கொட்டும் நீரில் நின்று குளிக்க ஆசை. “ராகேஷ், இதுவரை இதுபோன்ற இடங்களில் எல்லாம் நான் குளித்ததே இல்லை. போகலாமா?” என்று அழைத்தாள்.
” சோட்டுவை அழைத்துக்கொண்டு போ கோமல்” எனவும் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து இவர்களை பார்த்துக்கொண்டிருந்த தேன் மதியை வரச்சொல்லி கையாட்டினாள். அவள் தான் வரவில்லை என்று மறுப்பாக தலையசைத்தாள்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த உதயன், “லயா ரியா என்னோடு இருக்கட்டும். கோமலை நீங்க கூட்டீட்டு போங்க ராகேஷ். கொஞ்சம் வழுக்கும். பார்த்து கவனமாக, மெதுவாக போங்க” என்று சொல்ல, ராகேஷ் மனைவியோடு சென்றான்.
கோமலும், ராகேஷூம் தலைவழிய தண்ணீரில் நனைவதைக் கண்டு லயா, ரியா விற்கும் அந்த ஆசை வந்தது. “பூரி அங்கிள் நாமும் அங்க போகலாம்” என்றனர்.
அணிந்திருந்த உடையோடு குளித்து வந்த கோமல் குளிரில் லேசாக நடுங்கியபடி ஆடையை பிழிந்து உதறி வெயில் அடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு சென்றாள். குழந்தைகளை ஒரு நிமிடம் ராகேஷின் பொறுப்பில் விட்ட உதயன் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி , பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் பர்ஸ் முதலியவற்றோடு எடுத்துக் கொண்டு போய் அமர்ந்திருந்த தேன்மதியின் பக்கத்தில் வைத்து விட்டு வந்து லயாவை தூக்கிக் கொண்டு தண்ணீர் சற்று வேகம் குறைந்து விழுந்த இடத்தில் நின்று நீரில் விளையாடத்தொடங்கினான்.
ரியாவிற்கு ஆசை இருந்தாலும் பழக்கமில்லாத குளிர்ந்த நீரில் குளித்தது குளிரெடுக்க ராகேஷோடு சில நிமிடங்களில் வெளியேறி விட்டாள்.
முதல் இரண்டு முறை நீரின் வேகத்திற்கு மூச்சு திணறிய லயாவை பார்த்த உதயன் முகத்தை குனிந்து கொண்டு மூக்கிற்கு நீர் வராமல் மறைத்து மூச்சு வாங்குவது எப்படி என்று உதயன் லயாவிற்கு கற்றுக் கொடுக்க, அதை சட்டென்று கற்றுக் கொண்டவள் உதயன் “போதும் லயா. போலாம்” என்று சொன்னால் கூட “பூரி அங்கிள் இன்னும் ஒரு தடவை. இன்னும் ஒரு தடவை. இன்னும் கொஞ்ச நேரம். ப்ளீஸ்..” என்று கெஞ்சி கெஞ்சி அவனது கழுத்தை கட்டிக்கொண்டு ஆனந்த குளியல் போட்டாள்.
அவளது பேச்சிற்கு ஒத்துழைப்பது போல் தலையாட்டினாலும் தண்ணீரில் அவள் நனையாதவண்ணம் தள்ளி பிடித்துக்கொண்டு அவன் மட்டும் நனைய சில நொடிகளில் அதை கண்டு கொண்டவள் “பூரி அங்கிள் இது சீட்டிங். நீங்க சீட் பண்றிங்க” என்று தண்ணீரை பிடித்து அவன் முகத்தில் அடித்து” நானும்… நானும்” என்று அவன் கழுத்தை இறுக்கி கட்டுக்கொள்ள உதயனுக்கு கட்டுக்கடங்காத சிரிப்பு.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கே கொஞ்சம் அதிகப்படி என்று தோன்றுவிட “போதும் லயா .இதற்கு மேல் தண்ணீரில் விளையாண்டால், சோட்டுமா உனக்கு மட்டுமில்ல, எனக்கும் சேர்த்து நான்கு அடி போடுவார்கள்” என்றவன் லயாவிடம் ஏதேதோ சமாதானம் சொல்லி “இன்னொரு முறை வரலாம். இப்போ போய் மீன் சாப்பிடலாம்”என்று ஆசை காட்டி வெளியே அழைத்து வந்தான்.
கோமல், ராகேஷ், ரியா மூவரும் சற்று தள்ளி வெயில் அடித்துக் கொண்டிருந்த பக்கம் இருக்க, அமர்ந்திருந்து தேன்மதியின் அருகில் நெருங்கியவன் குடைக்கு கீழாக வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பேக்கை காட்டி, “அதில் ஒரு டர்க்கிடவல் இருக்கிறது. அதை கொஞ்சம் எடுத்து கொடுங்கள் தேன்மதி” என்றதும் எடுத்துக் கொடுத்தாள்.
லயா பற்கள் உராய்ந்து குளிருக்கு உடல் நடுங்கினாலும் “பூரி அங்கிள் இன்னும் ஒரே ஒரு தடவை. ப்ளீஸ் இதுதான் லாஸ்ட். இனி உங்க கிட்ட கேட்கவே மாட்டேன். ப்ளீஸ்… பிளீஸ்… “என்று கெஞ்ச, என்ன செய்வது என்பது? போல் தேன் மதியை பார்த்தான்.
” லயா போதும் இறங்கு முதல்ல. சளி பிடிக்கும். காய்ச்சல் வரும். ரியா பாரு டாடி சொன்னது கேட்டாள் தானே. நீயும் நல்ல பொண்ணு தானே. இறங்கு சோட்டுமா சொன்னா கேட்கணும்”.
“தேன் மதி முதலில் நீங்க சோட்டுமான்னு சொல்றத மாத்துங்க. அம்மான்னு சொல்லி பழகுங்க”.
“ஒரே நாளில் எல்லாம் உடனே மாறாது” என்று மெல்லிய குரலில் அவனுக்கு பதில் சொன்னவள், அவன் சொன்னதை செயல் படுத்துவது போல் “அவளைக் குடுங்க. வா லயா. அம்மா உனக்கு தலை துவட்டி காயவைத்து, தலை சீவி விடுறேன்” என்று கைநீட்ட ,” நான் மாட்டேன். எனக்கு தண்ணி பாக்கணும். மீன் பாக்கணும். பூரி அங்கிள், அங்க போகலாம்” என்று செல்லமாக அழத்தொடங்கிவிட அவளது பிடிவாதம் கண்டு “இப்படி செல்லப் பிடிவாதம் பிடித்தது பழகாதே லயா. இறங்கு” என்று உதயன் கைகளுக்கு கீழே தொங்கிக் கொண்டிருந்த லயா கால்களில் சுளீர் என்று ஒரு அடி அடித்தாள்.
அதுவரை செல்லம் செய்து அழுது கொண்டிருந்தவள் உண்மையாகவே வாய்விட்டு அழத்தொடங்கிவிட “இல்லடா.. இல்லடா லயாகுட்டி. வேண்டாம் டா” என்று சமாதானம் செய்து கொண்டிருக்கும் போதே அங்கு ராகேஷ் குடும்பம் வந்துவிட “சின்ன குழந்தையை சமாளிக்க கூட உங்க சோட்டுவிற்கு தெரியவில்லை. இப்படியா அடிப்பது?. ரொம்ப ஸ்ரிக்ட் ஆனா ஹெட் மாஸ்டர் மாதிரி நடந்துக்குறாங்க. மாதிரி என்ன முரட்டு ஹெச் எம் தான்” என்று ராகேஷிடம் சொன்னபோது நிமிர்ந்து உதயன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். தொடர்ந்து பார்க்க அவன் அனுமதித்தால் தானே லயாவின் மாற்று உடைகளை அவள் கையிலிருந்து கோபத்தோடு இழுத்து பிடுங்கிக் கொண்டு முகம் திருப்பியவன் லயாவோடு மீண்டும் தண்ணீரின் அருகில் சென்று விட்டான்.
இதுவரை குழந்தைகளை அடிக்காதவள் லயாவை கைநீட்டி அடித்திருப்பதை கண்ட ராகேஷம் சற்று கண்டிப்புடன் சோட்டுவைப் பார்க்க, எல்லோரும் என்னையே குற்றம் சொல்லுங்கள் எனும் விதமாக தொப்பு என்று கீழே அமர்ந்து மௌனமாக வேறு பக்கம் பார்க்கத் தொடங்கினாள்.
ரியாவிற்கு குளித்த சுகத்திற்கோ என்னவோ உறக்கத்திற்கு கொட்டாவியாக விட கோமலும் மற்றொரு குடையின் அடியில் அமர்ந்து குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொண்டிருந்தாள். கோமலின் அருகில் போய் அமர்ந்து கொண்ட ராகேஷ் உதயனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன ராகேஷ் லயா உதயனோடு இப்படி ஒட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு பொறாமையாக இருக்கிறதா?”.
“அது இல்லை கோமல். நான் வேறு விசயங்களை யோசித்துக் கொண்டிருக்கிறேன்”. “அது என்ன?” என்றாள் அவன் மனைவியும் ஆர்வமாக.
“உதயன் வண்டியை கவனித்தாயா? புத்தம் புது பைக். நேற்று அல்லது இன்று காலையில் தான் வந்திருக்கவேண்டும். எப்படி பார்த்தாலும் ஒரே நாளில் வந்திருக்கிறது என்றால் அதிக பணம் செலவு செய்து வாங்கியிருக்க வேண்டும். அப்படி வாங்க வேண்டிய அவசியம் என்ன?”.
“லயாவின் மேல் உள்ள பிரியம் கூடவே அவருக்கும் பைக்கின் தேவை இருந்திருக்கலாம். அதற்காகக் கூட வாங்கியிருக்கலாம்”.
“இந்த லயாவின் மேல் உள்ள பிரியம். இதுதான் எனக்கு இடிக்கிறது. சோட்டுவை கண்டால் சுத்தமாக பிடிப்பதில்லை. ஆடு பகை குட்டி உறவா?. ம்ம் ஒரேயடியாக அப்படியும் நினைக்க முடியவில்லை. யாராவது ஒருவன் எதிர் வீட்டில் தன்னிடம் அன்பாக பழகும் ஒரு குழந்தைக்காக மட்டும் அவள் ஆசையை நிறைவேற்ற வெளியில் அழைத்துவரும் போது அதற்காகவே புது பைக் ஒரு கார், ஒரு ஜீப் நிழலுக்காக குடை எக்செட்ரா எக்செட்ரா இத்தனை வசதிகள் செய்வானா?”.
“அதோடு சோட்டுவின் நடத்தை. என்னோடு கூட பைக்கில் வராதவள் உதயனோடு பைக்கில். அதுவும் உதயனே நீங்க காரில் வாங்க தேன் மதி என்று சொன்னது காதில் விழாது போல் நடந்துகொண்டாள். கொஞ்சம் திரும்பிப் பார். சோட்டுவின் பார்வை அவர்கள் மேல் தான் இருக்கிறது”.
கோமலும் திரும்பி பார்க்க, தேன் மதியும் இமைக்காமல் அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். “பார்க்கத் தானே செய்வாள் ராகேஷ். உதயன் கைகளில் இருப்பது அவள் சுமந்து பெற்ற மகள். லயாவை நாம் கையில் வைத்திருக்கும் போதும் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருப்பாள். நாம் அவளை கவனிப்பது போல் தெரிந்து விட்டால் பார்வையை வேறு பக்கம் திரும்பிக் கொள்வாள். இது வழக்கமாக நடப்பது போல் தான் எனக்கு தெரிகிறது”.
“எனக்கென்னவோ இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ இருக்கிறது. அல்லது புதிதாக உருவாகப் போகிறது என்று தோன்றுகிறது”.
“இல்லை ராகேஷ் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள் என்று தோன்றுகிறது. இருவருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தால் யாரோ ஒருவரிடமாவது ஒரு சில சலனம், சறுக்கல், அதிர்ச்சி என்று ஏதாவது முகத்தில் தெரிந்திருக்கும். இருவரிடமும் அது இல்லை எனும் போது அப்படி எல்லாம் நினைக்கத் தோன்றவில்லை”.
“ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் புதிதாக ஏதாவது உருவாகலாம். அப்படி உருவானால் நல்லது தானே சோட்டுவிக்கும் லயாவிற்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும். நீங்கள் என்னிடம் சொன்னதைத்தான் நான் இன்று உங்களிடம் திருப்பிச் சொல்கிறேன்” என்ற போது மௌனமாக அமர்ந்திருந்தவன் நான் தப்பு கணக்கு போடுகிறேனோ? இல்லையோ? அது எனக்கு தெரியவில்லை. ஆனால் உதயன் கணக்கு பண்ணுகிறான் என்று மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது. அது தெரிந்து செய்கிறானா? இல்லை தெரியாமல் செய்கிறானா? என்று மட்டும் தான் புரியவில்லை என்று நினைத்துக் கொண்டான் ராகேஷ்.
அப்போது வேகமாக காற்று அடிக்க, தேன் மதியின் அருகில் வைத்திருந்த உதயன் பொருட்களில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டு பறந்து வந்து இவள் மடியில் விழுந்தது. அதை எடுத்து பார்க்க டி என் கன்ஸ்ட்ரக்ஷன் என்று இருந்தது. மனதுக்குள் ஒருமுறை வாசித்தவள் உதயன் செல்ஃபோனுக்கு அடியில் அதை அமைதியாக வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தபோது உதயன் இவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன நான் எதையும் எடுத்து விடுவேன் என்று சந்தேகமாக பார்க்கிறீர்களா?. உங்களது எதுவும் எனக்குத் தேவையில்லை என்பது போல் அவள் அருகில் இருந்த அவனது சட்டையையும், அவனது பொருட்களையும் தன்னிடமிருந்து சற்று நகர்த்தி வைத்தாள்.
தேன் மதிக்கு அதைக் கண்டு அவன் சிரித்தது போல் இருந்தது. சிரிக்கிறாரா என்ன? என்று தேன்மதி உற்றுப் பார்க்கும்போதே முகத்தை திருப்பிக் கொண்டான் உதயன். லயாவின் காதுகளில் ஏதோ சொல்ல அவள் தேன்மதியை பார்த்து இரண்டு கைகளையும் நீட்டி டூ என்பது போல் செய்கை செய்தாள்.
மகளின் செய்கையை ரசித்து சிரித்தவளின் கண்களில் சந்தோச மின்னல்கள். லயாவை அருகில் இருந்த சிறு பாறை மேல் நிறுத்தி மடிந்து அமர்ந்து அவள் ஈர உடை களைந்து துடைத்து மாற்று உடையை அணிவித்தவன் அவள் பட்டு கேசம் துவட்டி அதில் விரல் நுழைத்து கோதி உலர்த்தி விட வீசிய காற்றில் காயத்தொடங்கியது.
அவளிடம் பேசியபடியே தான் அணிந்திருந்த வெள்ளை பனியனை கழற்றி பாறை மேல் வைத்துவிட்டு தன் மேல் உடலை ஈரமின்றி துடைத்து விட்டு லயாவைத் தூக்கியபடி எழுந்தவன் பாசிபடர்ந்த பாறையில் கால் வைத்து விட வழுக்கியது.
ராகேஷ் , “உதயன் பார்த்து.. லயா பத்திரம்” என்று எழுந்து ஓடத்தொடங்கும் போதே “யா….பார்த்து..” என்ற கதறலோடு ராகேஷிற்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தாள் தேன் மதி.