மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவிலில் வைத்து பெண் பார்க்க ஏற்பாடு செய்துவிட்டார் சாரதா. பெண் வீட்டாரை சந்தித்து, பெண்ணோடு தனியாக பேசிமுடித்தவன் சாரதாவிடம் வந்து “இந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை” என்றான். பெரும் நம்பிக்கையோடு இருந்த சாரதா ஏமாற்றத்தோடு “ஏன் உதயா?. பெண் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறாள். நீ கேட்டது போல் ஆர்க்கிடெக்ட் படித்திருக்கிறாள். ஒரே பெண். நல்ல குடும்பம். இனியும் என்ன உதயா?”.
“அம்மா ஆர்க்கிடெக்ட் படித்திருக்கிறாள் தான். அதில் பெரிய ஈடுபாடோ, சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ… எதுவும் இல்லை. வீட்டில் சொன்னார்கள் என்று கடனே என்று படித்து முடித்திருக்கிறாள் . நானே அவர்களிடம் வேறு இடம் பார்க்கச்சொல்லி விட்டேன்”.
“என்ன உதயா இது இந்த பெண்ணாவது கண்டிப்பாக உனக்கு பிடித்து விடும் என்று நினைத்தேனே”.
அம்மா நானும் அப்படித்தான் நினைத்தேன். அமையவில்லையே?. என்ன செய்வது?. வேறு பெண் தேட வேண்டியது தான். சரி வாங்க கிளம்புவோம்” என்றவனை இவனை என்ன செய்வது? என்பது போல் கணவரைப் பார்த்தார் சாரதா. அவரது முகத்தில் ஏமாற்றம் இல்லை. இதை எதிர்பார்த்தவர் போல மகனை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்து “சரி விடு சாரு. வேறு பெண் பார்ப்போம்” என மனைவி தோளில் ஆறுதலாக தட்டி காரில் ஏறு என்பது போல் செய்கை செய்தார்.
தாய், தந்தை பின்பக்கத்தில் அமர்ந்ததும் முன்புறம் டிரைவரின் பக்கத்து இருக்கையில் ஏறி அமர்ந்தவன் “போகலாம்” என்றான்.
டிரைவர் காரை ஸ்டார்ட் செய்து கொஞ்சம் நகர்த்தவும் அவசரமாக கொஞ்சம் நிறுத்து என்று அவசரமாக சொன்னவன் அதே வேகத்தில் காரில் இருந்து இறங்கி தலையாட்டி பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நோக்கி நடந்தான். தான் வாங்கியதை அட்டை பெட்டியில் வைத்து அழகாக பேக் செய்து வாங்கிய போது அதை எடுத்துப் போக டிரைவர் வந்தார். “பத்திரமாக பின்பக்கம் டிக்கியில் வையுங்கள்” என்று அவர் கையில் கொடுத்தவன், பொம்மைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டு பேண்டின் இரண்டு பக்க பாக்கெட்டிலும் கைவிட்டு மெதுவாக நடந்து கொண்டே கோயிலை பார்த்தபடி காரின் அருகில் வந்தான். பின்பக்கத்தில் இருந்து எட்டிப் பார்த்த சாரதா “என்னப்பா?. என்ன பார்க்கிறாய்? கிளம்பவேண்டாமா?” என்றதும் “இல்லை அம்மா. ஒரு சாதாரண மனிதனாக இதை பார்க்கும் போதே பெரும் வியப்பு ஏற்படும். அதுவே அப்படி என்றால் ஒரு கட்டிடக் கலைஞனாக இந்த தஞ்சை பெரிய கோவிலைப் பார்க்கும் போது எப்படி பட்ட திறமைசாலிகள் நம் முன்னோர்கள் என்று கொஞ்சம் கர்வம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை” என்று ரசனையாக, பெருமையாக சிரிக்க கோயில் கோபுர பின்னணியில் புன்னகையில் மலர்ந்திருந்த பூர்ணோதயன் பக்கவாட்டு தோற்றத்தை அந்த தாய் ரசித்தார்.
“அது சரி. நிறைய பொம்மைகள் வாங்கியிருக்கிறாயே ?.இத்தனை பொம்மைகள் உனக்கு எதற்கு உதயா?” என்றதும், “அம்மா இந்த பொம்மை எனக்கு மிகவும் பிடிக்கும் . கோவை அலுவலகத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்காகத்தான் வாங்கினேன்” என்றவன் புன்னகை முகமாக காரில் ஏறி அமர்ந்தான்.
வீட்டிற்கு வந்து கொஞ்சம் சோர்வாக அமர்ந்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்த சாரங்கபாணி “என்ன சாரதா?. என்ன யோசனை?. முகம் சோகமாக வேறு இருக்கிறது?. என்ன விசயம் ?”என்று கேட்டார்.
“வேறு எதைப் பற்றி யோசிக்கப் போகிறேன். எல்லாம் நம் உதயாவின் கல்யாண விசயம் தான். காலையில் எவ்வளவு நம்பிக்கையோடு கிளம்பிப் போனேன் என்று உங்களுக்கு தெரியுமா?. கடைசியில் போனதற்கு தஞ்சாவூர் பொம்மை வாங்கினது தான் மிச்சம்”.
“வரவர இவன் கல்யாணம் செய்து கொள்வதற்காக என்னைப் பெண் பார்க்கச் சொல்கிறானா?. இல்லை, கல்யாணம் வேண்டாம். இல்லை இப்போது வேண்டாம் என்று சொன்னால் நான் ஏதாவது பிடிவாதம் பிடிப்பேன் என்று என் வாயை அடைப்பதற்காக இப்படி என்னை பெண் பார்க்கச் சொல்லி ஏமாற்றி நாட்களைத் தள்ளுகிறானா?. இல்லை மனதிற்குள் எதையாவது வைத்துக் கொண்டு வேண்டும் என்றே பார்க்கும் பெண்களை பிடிக்கவில்லை என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறானா?. எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லி கணவனை பார்த்த சாரதாவின் முகபாவனையும், வெளிப்படையாக கேட்காமல் விட்ட கேள்விகள் கூட மனைவியின் தொண்டைக்குள் சிக்கித் தவிப்பதை அவர் நன்றாகவே புரிந்து கொண்டாலும், அது புரியாது போல் சில நொடிகள் நின்றார்,
இந்த ஏமாற்றம் சாரதாவிற்கு புதிதில்லை தான் என்றாலும் இன்று சற்று அதிகமாகவே வெறுப்பாக உணர்வதைப் புரிந்து “ஏன் சாரு?. உனக்கு திடீரென இப்படி ஒரு சந்தேகம்?”என்று கேட்டார் சாரங்கபாணி.
“நேற்று நீங்கள் சாதரணமாகத்தானே புது கம்பெனிக்கு டி ஹெச் என்றே பெயர் வைத்திருக்கலாமே? என்று அவனிடம் நீங்கள் கேட்டீர்கள். அப்போது அதற்கு அவன் பதில் சொல்லிய விதம். குரலில் முகத்தில் அவனை அறியாமல் வெளிப்படுத்திய கோபம். எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவன் எப்போதும் உங்களிடம் இப்படி கோபமாக எல்லாம் பேசமாட்டானே. சரி நாளை பெண் பார்க்க இருக்கும் நேரத்தில் எதையாவது பேசி அவன் மனநிலையை சங்கடப்படுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டேன்”.
“இப்போது யோசித்தால் அதில் ஏதாவது உள் அர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. அப்படி இருந்தால் அதையாவது இவன் வெளிப்படையாக சொன்னால் தான் என்ன? நீங்களும், நானும் மாட்டோம் என்றா சொல்லப் போகிறோம்? . எனக்காவது என் அண்ணன் மகளை எனக்கு மருமகள் ஆகவேண்டும் என்று ஆசையிருந்தது. அது நடக்கவில்லை. உங்களுக்கு அப்படியா?. எப்போதும் அவன் ஆசை தானே பிரதானம். அதற்காக என்னைக் கூட மணிக்கணக்கில் பேசி சமாதானம் செய்பவர் ஆயிற்றே. அவன் ஆசைக்கு குறுக்கே நின்று, மாட்டேன் என்றா சொல்லப் போகிறீர்கள்?”என்று சலித்த குரலில் சொன்னார்.
மனைவியின் முகத்தில் இருந்து வேறு பக்கம் பார்வையைத் திருப்பி வெறித்தவர் வெறுமையான குரலில் “இதோ பார் சாரதா. நீ பச்சை நிறக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு எதைப் பார்த்தாலும் பார்க்கும் அத்தனையும் பச்சையாக மட்டும் தான் தெரியும். அது போல் தான் உதயா விசயமும்”.
“அவன் திருமணம் செய்ய தாமதிப்பதால் அவனிடம் வெளிப்படைய கேட்காத கேட்க முடியாத கேள்விகளுக்கெல்லா இதுதான் காரணம் என்று நீயாக யூகம் செய்கிறாய். உன்னுடைய இந்த மனப்போக்கு தான் அவன் சாதரணமாக என்னிடம் பேசியதில் கூட ஏதோ விசயம் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறது”.
“இன்று நீ ஆவலாக எதிர்பார்த்த, உனக்கும் மிகவும் பிடித்த பெண்ணை அவன் பிடிக்கவில்லை என்று சொன்னதும் மிகவும் சோர்ந்து விட்டாய். உன் ஏமாந்த மனது அதற்கு ஏதோ ஒரு காரணத்தை தேடுகிறது. அவன் தான் நேற்றே நம் இருவரின் சம்மதத்துடன், அதுவும் நான் என் கையால் தாலி எடுத்து கொடுத்தால் தான் அவன் திருமணம் என்று உறுதியாகச் சொன்னானே. அது உனக்கு நினைவில் இல்லை பார்த்தாயா?. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வான். என்னை நம்பாவிட்டால் பரவாயில்லை. அவனையாவது நீ நம்பு சாரு. கொஞ்சம் பொறுமையா இரு. நமக்கு வேறு வழியில்லை. திருமணம் அவன் மனதிற்கு பிடித்து செய்யட்டும்” என்றார்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி பொறுமையா இருப்பது என எண்ணினார் சாரதா. என்ன பதில் சொல்வது என்பது போல் மௌனமாகப் பார்த்த மனையின் குழம்பிய முகம் கண்டு சிரித்தவர் “நான் சொல்லியது உனக்கு புரிந்தது தானே சாரு?”என்றதும்,
“ம்ம் நன்றாக புரிந்தது. உதயா கல்யாண விசயத்தில் பச்சைக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக்கூடாது அதுதானே?” என்று சாரதா கேட்டதும் வெடித்துச் சிரித்து ஓய்ந்தவர் புன்னகை முகமாகவே “ஆமாம். அதே போல் பூதக்கண்ணாடி வைத்தும் ஆராய்ச்சி செய்யாதே. இயல்பாக விடு சாரதா. சரி நானும் கொஞ்சம் படுத்து எழுந்து வருகிறேன்” என்றவர் மனைவியை விட்டு நகர்ந்தார்.
மதியம் சாரதா அவனுக்காக தயாரித்திருந்த உணவை ஒரு பிடி பிடித்து விட்டு அவர்களது தோட்டம், தென்னந்தோப்பு, தோப்பின் இடையில் தந்தை புதிதாக தொடங்கியிருக்கும் மீன் பண்ணை, சற்று தள்ளி இருந்த தாய் மாமன் வீடு என ஒரு முறை சுற்றி வந்தவன் திட்டமிட்டது போலவே மறுநாள் அதிகாலை கோவைக்கு கிளம்பிவிட்டான்.
பூர்ணோதயன் கோவையில் ஒரு உயர்தர சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கிக்கொண்டே வேலை பார்த்தபடி, தனக்கு தெரிந்தவர்கள் மூலம் நல்ல வீடு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் கோவையில் வசிக்கும் தன்னோடு பிஇ படித்த நண்பன் ஒருவன் தனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக வாட்சப்பில் தகவல் அனுப்பியிருந்தான். உள்ளூரில் இருந்து கொண்டு நேரில் சென்று பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று எந்த மருத்துவமனை என்று விசாரித்து மாலை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துவிடுவது என்று திட்டமிட்டான்.
நேரம் மதியம் மூன்று மணி. மதியம் சாப்பிடாததால் பசித்தது. உணவையும் முடித்துக்கொண்டு குழந்தைக்கும் ஏதாவது வாங்கி விடலாம் என்று புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள பிரபல மாலுக்குள் நுழைந்தான். அங்கிருந்த புட் கோர்ட்டில் உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அங்கு போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து வாட்ஸ் அப்பை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக சொல்லியிருந்த நண்பன் தனது முதல் பெண் குழந்தையின் கையில் புதிதாக பிறந்திருக்கும் தனது இரண்டாவது ஆண் குழந்தையை வைத்து புகைப்படம் எடுத்து அதை பூர்ணோதயனுக்கு அனுப்பியிருந்தான்.
ஏனோ அந்த குழந்தைகளின் ஃபோட்டோக்களை பார்த்த பின்பு தனக்கும் இப்படி குழந்தைகள் வேண்டும் என்று ஆசை வந்தது. குறிப்பாக பெண் குழந்தை. அதற்கு அவன் திருமணம் செய்ய வேண்டுமே… கொஞ்சம் சலிப்பாக ஃபோனை ஆப் செய்து விட்டு தனக்கு பெண் குழந்தை பிறந்தால் உருவத்தில் நிறத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசையோடு கற்பனையும் செய்து சிறிது நேரம் பொழுதை கழித்தவன் தன் எண்ணத்தின் ஓட்டத்தை கண்டு தானே அதை தடை செய்து மெல்ல சிரித்து விட்டு சுற்றிலும் விளையாடிக் கொண்டிருந்த, உணவருந்திக் கொண்டிருந்த பெண் குழந்தைகளை எல்லாம் பார்வையிட்டான்.
அவன் அமர்ந்திருந்த டேபிளின் எதிர் புறத்தில் ஒரு இளவயது பெற்றோர் அமர்ந்திருக்க அவர்களின் இரண்டு பக்கமும் சமவயதுடைய இரு பெண் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள். இருவரின் உயரம், உடல் வாகு ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தது. இரட்டை குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். அவர்களுக்கு இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கலாம் என்று யூகித்தான்.
தனக்கான உணவை வாங்கி வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கியவன் அந்த குழந்தைகளின் மேலிருந்து பார்வையை அகற்றவில்லை. இருவருக்குமே ஒரே அளவில் கழுத்து வரை முடியிருந்தது. அதில் ஒரு குழந்தை மிக்கி மவுஸ் ஹெட் பேண்ட் அணிந்திருக்க, மற்றவளோ தனது முடியை இரண்டாக பிரித்து இரு பக்கமும் வெள்ளையில் சிவப்பு புள்ளிகளிட்ட சிறு பட்டாம்பூச்சி கிளிப்பினால் அடக்கி இருந்தாள்.
தொடக்கத்தில் இரண்டு குழந்தைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவன் சில நொடிகள் கழித்து பட்டாம்பூச்சி கிளிப் அணிந்திருந்த குழந்தையின் மேலிருந்து பார்வையை அகற்ற வெகு சிரமப்பட்டான். சற்று முன்பு தனது பெண் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தானோ…அந்த கற்பனைகள் எல்லாம் முழு உருவம் பெற்று தன் கண்ணெதிரே அமர்ந்திருப்பது போல் அவனுக்கு தோன்றியது. கைகள் அசைத்து, கண்களைச் சுருக்கி… விரித்து… கழுத்தை வளைத்து மென் இதழ்களை சுழித்து பிதுக்கி பேசும் அழகை பார்க்கும் போது கதை சொல்லும் கமலம் போல் சிந்தையை மயக்கியது. கொஞ்சம் ஏக்கம் கூட உண்டானது. ஏதோ ஒரு சொல்ல முடியாத பாரம் மனதை அழுத்தியது. இப்போதே எழுந்து போய் அந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி விரைந்து விட வேண்டும் என்று தோன்றியது. விரல்கள் உணவுத்தட்டின் வட்டத்திற்குள் சிக்கி அலைய அவன் ஏக்க விழிகள் அந்த ஒரு குழந்தையை மட்டும் வட்டமிட்டு சுற்றி அலைந்தது.
அப்போது அந்த குழந்தைகளின் தந்தை எழுந்து சென்று திரும்பி வரும்போது ஒரு தட்டில் பாணி பூரியும், மறுதட்டில் ரோஸ்டும் எடுத்துக்கொண்டு வந்தார். பூர்ணோதயனைக் கடக்கும் போது கைதவறி பாணி பூரி இருந்த தட்டை தவற விட்டுவிட , கப்பில் இருந்த பாணி பூர்ணோதயன் பாதி உண்டு வைத்திருந்த தட்டில் விழுந்து கொஞ்சம் தெறித்து, மீண்டும் நழுவி அவன் ஒரு பக்கத் தொடை மேல் விழுந்து மீதம் சிந்தி அவன் பேண்ட்டை நனைத்து கறை செய்து விட்டு கீழே விழுந்தது . அதனோடு போட்டி போட்டுக் கொண்டு உருண்டு கீழே விழுந்த பூரிகளும் உடைந்து நொறுங்கியது.
பதறிய குழந்தைகளின் தந்தை “சாரி.. சார் சாரி… தெரியாமல் நடந்து விட்டது. சாரி சார். உங்கள் உடைகளிலும் பட்டுவிட்டது. சாரி சார்”என்று வருந்திய குரலுக்கு “பரவாயில்லை விடுங்கள்” என்று பூர்ணோதயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஆ…. டாடி என்னோட பூரி” என்று பட்டாம்பூச்சி கிளிப் அணிந்திருந்த குழந்தை சத்தமிட்டு அழத்தொடங்கிவிட இட்ஸ் ஓகே டா பேபி. டாடி வேறு வாங்கித் தருகிறேன்” என்று பூர்ணோதயன் அருகில் நின்ற படியே குரல் கொடுக்க “பூரீ…. ஆ..ஆ.,”என்று அழுகை நீண்டது.
சமாளிக்க முடியாமல் தன் மனைவி தவிப்பதை கண்டு குழந்தையையும் அவளையே விழி அகற்றாமல் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த பூர்ணோதயனையும் மாறி மாறி பார்த்தவர் “சார் ஓரே நிமிடம்…. பிளீஸ்” என்று பூர்ணோதயன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கு விரைந்தான். மற்றொரு குழந்தையின் முன் ரோஸ்ட் இருந்த தட்டை வைத்தவன் அழுது கொண்டிருந்த குழந்தையை கையில் அள்ளிக் கொண்டு “ஓகே டா. நாம் வேறு வாங்கிக்கொள்ளலாம். முதலில் நீ அழுகையை நிறுத்தினால் தான் டாடி உனக்கு வேறு பாணி பூரி வாங்கித் தருவேன்” என்று சமாதானம் செய்யத்தொடங்கினார். இன்னொரு குழந்தையோ தன் பக்கம் வைக்கப்பட்ட மொறுமொறு தோசையை பிய்த்து அழும் குழந்தைக்கு நீட்டி சமாதானம் செய்ய முயன்றாள்.
முட்டாள் அழுகையை நிறுத்தினால் தான் பாணி பூரி வாங்கித்தருவானா?. குழந்தை கண் முன் பூரியை கொண்டு வந்து காட்டினால் தானாக அழுகை நின்று விடப்போகிறது. அது கூடத் தெரியாமல்… இவனுக்கு இரண்டு குழந்தைகள் வேறு என்று கோபமாக நினைத்தான் பூர்ணோதயன். சட்டென்று கையை உதறி அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாக பின்னால் தள்ளி எழுந்து சென்றவன் “எனக்கு ஒரு பிளேட் பாணி பூரி. சீக்கிரம் வேண்டும்” என்று ஆர்டர் செய்துவிட்டு கை கழுவி வந்தான்.
அவன் கையில் பாணி பூரி தட்டை வாங்கிக் கொண்டு திரும்பும் போது அந்த இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அந்த தந்தையும் ஃபுட் கோர்ட்டின் அருகில் வந்து நின்றார். அழுது ஓய்ந்திருந்த குழந்தை பூர்ணோதயனை பார்த்து விட்டு அவன் கையில் இருந்த பூரியைக் கண்டதும் மெல்ல சிரித்தாள்.
‘சாரி சார். உங்கள் உணவை வேறு வீணடித்து விட்டேன்” என்றவர் திரும்பி “ஒரு பிளேட் பாணி பூரி. சார் உங்களுக்கும் ஏதாவது சொல்லட்டுமா?”என்று கேட்க, பூர்ணோதயனோ “எனக்கு எதுவும் வேண்டாம். அந்த ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள். இது குழந்தைக்கு தான் வாங்கினேன். அழுகை நின்று விட்டதா?” என்றவன் “இது உங்களுக்கு தான்” என்று காட்டிவிட்டு கை நீட்டி குழந்தையின் கன்னம் தொட்டு, மெல்லத் தட்டி அந்த ஸ்பரிசம் உணர்ந்தவன் “சோ…. சாஃப்ட் “என்று வியந்து ரசித்து உதடுகளுக்குள் சொல்லிக்கொண்டான்
“தேங்கியூ சார். உங்களுக்கு எதற்கு சிரமம் சார்?” என்று அதை கைநீட்டி வாங்க முயற்சி செய்ய “இருவரையும் வைத்துக் கொண்டு எப்படி வாங்குவீர்கள்? . வாங்க நானே கொண்டு வருகிறேன்” என்று அவர்கள் டேபிளை நெருங்கி, மெல்லிய புன்னகையுடன் அவர் மனைவியிடம் தலையசைத்து விட்டு தட்டை அதன் மேல் வைத்துவிட்டு “இவங்க பெயர் என்ன?”என்று கேட்டுக்கொண்டே அவனே பாணி பூரி கேட்டு அழுத குழந்தையை வாங்குவதற்காக கைநீட்ட, அவரும் “இது லயா. இது ரியா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு குழந்தைகளுமே அவனிடம் தாவ, அதை கண்டு சந்தோஷமாகவே முதலில் பட்டாம்பூச்சி கிளிப் அணிந்த குழந்தையை வாங்கி இடது பக்கம் வைத்துக்கொண்டு மற்றவளை வாங்கி வலது பக்கம் வைத்துக்கொண்டவன் விழிகளில் மெல்லிய கண்ணீர் கோடு போல் உற்பத்தியாக அதை சமாளிக்க , யாருக்கும் தெரியாமல் மறைக்க இடது பக்கம் திரும்பி குழந்தையின் உச்சியில் கொஞ்சம் அழுத்தமாக இதழ் பதித்து குழந்தை முகம் பார்க்க அவளும் தலையை உயர்த்தி அவன் முகத்தையே பார்த்தாள். வலது கையில் இருந்த குழந்தையோ இருவரையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு ஏதோ போலானது. தனக்குள் என்ன நடக்கிறது என்று அவனுக்கே விளங்காத போது குழந்தை இந்த உணர்வை எப்படி புரிந்து கொள்ளும் என நினைத்தவன் தன்னைத் தானே சமாளிக்க வேகமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் “நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. இப்படி செல்வங்கள் குழந்தைகளாகக் கிடைக்க. எனக்கு உங்கள் மேல் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது தெரியுமா?” என்று சிரித்து விட்டு தன்னை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்து,
“நான் பூர்ணோதயன். சென்னையில் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வைத்திருக்கிறேன். கோவைக்கு புதிது. இப்போது இங்கும் புதிதாக கம்பெனி ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன்”.
“ஓ… நான் ராக்கேஷ். அவினாசிக்கு அருகில் கார்மெண்ட்ஸ் வைத்திருக்கிறேன். இது என் மனைவி கோமல்” என்று அறிமுகப்படுத்தி வைக்க கோமலைப் பார்த்து சிரித்தவன் “இவர்கள் இருவரும் இரட்டையர்களா?.வேறு வேறு சாயல். இல்லையா?. இதில் யார் லயா?. யார் ரியா?” என்று ஆர்வமாக கேட்க பெரியவர்கள் பதில் சொல்லும் முன்பே தன் இடது கை பிஞ்சு விரல்களை பூர்ணோதயன் இடதுகன்னத்தில் அழுத்தி பதித்து, அவன் முகத்தை தன் முகம் நோக்கித் திரும்பி, தனது வலது கையால் தன் நெஞ்சில் மெல்லத் தடவி “லயா..நானு. இது ரியா… “என்று சிந்தை கொள்ளை கொள்ளும் கொஞ்சும் மழலையில் பதில் தந்தாள் பட்டாம்பூச்சி கிளிப் அணிந்திருந்த குழந்தை. அதாவது “லயா”.
பூர்ணோதயன் இதயத்துடிப்பு கொஞ்சம் லயம் மாறி, வேகம் கூடித் துடித்து இயல்புக்கு திரும்பியது.