“லயா…..வெகு அழகான பெயர் உங்களைப் போலவே. என் பெயர் என்ன தெரியுமா பூர்ணோதயன். எங்கே நீங்க சொல்லுங்க பார்ப்போம்” என லயாவிடம் சொல்ல “பூ…பூர்.. பூரி…” எனச் சொல்லிச் சிரித்தாள் லயா.
“ஹாஹா…..உங்களுக்கு பாணி பூரி பிடிப்பதால் நானும் பூரி ஆகிவிட்டேனா?” என்று ரசித்து சிரித்தான். “அங்கிள் நீங்க பூரி..ஹாஹா..” என்று ரியாவும் சிரித்தாள். அவர்களோடு சேர்ந்து சிரித்தவன் “சரி இரண்டு பேரும் முதலில் சாப்பிடுங்க” என்று ரியாவை டேபிளின் மேல் ஒற்றை கையில் அமர வைக்க முயற்சி செய்ய, அவளின் அன்னை எழுந்து ரியாவை வாங்கி தன் அருகிலுள்ள சேரில் அமரவைத்துக்கொள்ள, லயாவை தன் எதிரே டேபிளின் மேல் அமரவைத்து தட்டை எடுத்து அவள் மடிமீது வைத்து “ம்ம் சாப்பிடுங்க” என்றவனைப்பார்த்து “அங்கிள் எனக்கு நீங்க ஊட்டி விடுங்க ஆ…”என்று செப்பு இதழ் திறந்தாள்.
லயா தன்னிடம் அப்படி கேட்பாள் என்று சற்றும் எதிர்பார்க்காத பூரணோதயன் குழந்தையின் ஆவலை பார்த்து சந்தோஷம் அடைந்தாலும், அதை பூர்த்தி செய்ய முடியாமல், பழக்கமில்லாமல் மெல்ல தடுமாறிய விழிகளுடன் “நானா?”என்று ராகேஷைப் பார்த்தான். இரண்டு உள்ளங்கைகளையும் தனது இரு தொடைகளில் நீவி “சார் எனக்கு பழக்கம் இல்லை. அதுவும் இல்லாமல் இவ்வளவு பெரிய பூரியை குழந்தையின் இந்த குட்டி இதழ்களுக்குள் எப்படி முழுவதுமாக ஊட்டுவது என்று தெரியவில்லை” என்று அப்பாவியாக தோள்பட்டையை குலுக்கி விட்டு மன்னித்துவிடு என்பது போல் லயாவை பார்க்க, ராகேஷோ “சார் பெரியவர்கள் சாப்பிடுவது போல் எல்லாம் குழந்தைக்கு ஊட்ட முடியாது. அதுவுமில்லாமல் அவள் பாணி பூரி என்று கத்தி அடம் பிடித்து வாங்குவாளே தவிர, முழுதாகவெல்லாம் சாப்பிடமாட்டாள். உள்ளிருக்கும் உருளைக்கிழங்கை தட்டில் கொட்டி தனியாகவும், டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது போல் அந்த பூரியை உடைத்து பாணியில் லேசாக நனைத்து தான் சாப்பிடுவாள். அவ்வளவுதான். அதனால் நீங்களே ஊட்டுங்கள்” என்று சிரித்தபடி தலையசைத்தார்.
அவர் சொன்னது போலவே பூரிக்குள் வைத்திருந்த கிழங்கை தட்டில் கொட்டி விட்டு சிறிய துண்டு பூரியை எடுத்து லேசாக பாணியில் தொட்டு லயாவிற்கு ஊட்ட வாயில் வைத்ததும் அதன் சுவையில் கண்களை விரித்து புருவத்தை உயர்த்தி சூப்பர் என்பது போல் தலையசைக்க, ஏதோ பெரிய சாதனையை புரிந்து விட்டது போல ராகேஷ் பார்த்து சிரித்தான். அடுத்த நொடி அவள் மடியிலிருந்த தட்டிலிருந்து ஒரு முழு பூரி எடுத்து கொஞ்சமாக பாணியில் முக்கி எடுத்து “அங்கிள் ஆ ஆஆ…”என்று பூர்ணோதயன் இதழ்களுக்கு முன்னால் லயா நீட்டி விட அவன் கண்கள் குளம் கட்ட தொடங்கி விட்டது. ஏதோ மந்திரத்தில் ஆட்டுவிக்கும் தேவதையின் சொல்லுக்கு கட்டுப்பட்டது போல வட்டமாக இதழ்களை விரித்திருந்த லயாவின் தோற்றத்தில் மயங்கி °, கண்ணன் வாய் திறந்த போது யசோதைக்கும் இப்படிதான் இத்தனை கொள்ளை அழகாய் இருந்திருக்குமோ! உலகம் மறந்து இருக்குமோ? என்று எண்ணியபடி அவன் இதழ்கள் திறக்க, மெல்ல அவளின் பிஞ்சு விரல்கள் இதழ்களில் உரச “அ ஆ,,” என்று சொல்லியபடி லயா பூர்ணதயன் வாய்க்குள் அந்த பூரியை வைத்தாள். இதழ்களை மடித்து அழுத்தி மூடிக்கொண்டவனுக்கு விழிகளில் குளம் கட்டி நின்ற கண்ணீரை வழிமறிக்க வழி தெரியவில்லை.
அது மடை திறந்த வெள்ளமாய் வழிந்து அவன் தாடையிலிருந்து லயாவின் ஆடையில் விழுக “அச்சச்சோ..” என்று அவள் இடது கையால் அவனது வலக்கன்னத்தை தாங்கி “ரொம்ப காரமா அங்கிள்?” என்று அக்கறையாக கேட்க, அந்த குரலிலும், அதில் தெரிந்த கனிவிலும் தன் இதழ்களில் கன்னத்தில் அவளது விரல்களின் ஸ்பரிசத்தாலும் இன்னும் கண்ணீர் சுரந்ததே தவிர குறையவில்லை. தன் பதிலுக்காக குழந்தை காத்திருப்பதை கண்டு மெல்ல பூரியை ஒரு பக்கமாக கன்னத்தில் அதக்கி மென்றபடி “இல்லடா.. இனிக்கிறது” என்றவன் மெல்ல குனிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
நிமிர்ந்த போது சற்று ஆச்சரியமாகதன்னைப் பார்த்துக் கொண்டிருந்த ராகேஷிடம் “அது… வீட்டில் நான் ஒரே பையன் இப்படி குழந்தைகளோடு பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னவோ உங்கள் குழந்தைகளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. எனக்கு குழந்தைகளை இவ்வளவு பிடிக்கும் என்று எனக்கே இப்போது.. இன்று தான் தெரிகிறது” என்று தன் நெகிழ்வுக்கான காரணத்தை சொல்லிக் கொண்டிருக்க, புரிந்தது என்பது போல் லேசாக அவனது இடது தொடையின் மேல் கை வைத்து தட்டிக் கொடுக்க,
“இவர்கள் இருவரில் யார் பெரியவள்?”என்றான். “லாயாதான் பெரியவள். அதற்கு பிறகு தான் ரியா பிறந்தாள்” என்ற ராகேஷ் , “கோவைக்கு புதிது என்று சொன்னீர்களே?. எங்கு தங்கிருக்கிறீர்கள்?”. என்று விசாரிக்க , “ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருக்கிறேன். தனி வீடோ, அப்பார்ட்மெண்டோ வாடகைக்கோ, விலைக்கோ கிடைத்துவிட்டால் பரவாயில்லை என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் சில புரோக்கர்களிடமும் சொல்லி வைத்திருக்கிறேன்” என்றவுடன், ராகேஷ் “எங்கள் அப்பார்ட்மெண்டில் எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு கூட காலியாக தான் இருக்கிறது. விலைக்குத் தருவார்களோ என்னவோ தெரியவில்லை ஆனால் வாடகைக்கு கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்களேன்” என்று சொல்ல “அப்படியா?” என்று கேட்டு, எந்த இடம்? எங்கே?என்று விவரங்களை அறிந்து கொண்டு, பரஸ்பரம் அலைபேசி எண்ணையும் பரிமாறிக்கொண்டார்கள்.
ராகேஷிடம் “இப்படி கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் பெயரையும், உங்கள் மனைவி பெயரையும் பார்க்கும்போது வடக்கு பக்கத்தின் சாயல் தெரிகிறதே?” என்று கேட்டபோது, “எங்கள் இருவரது பூர்வீகமும் குஜராத் பக்கம் தான். இரண்டு குடும்பங்களும் வேலை நிமித்தமாக டெல்லியில் வசிக்க வேண்டிய சூழல் வந்தது. எதிர் எதிர் வீடு என்பதால் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குஜராத் தாய்மொழி என்றாலும் ஹிந்தியும் நன்றாக பேசத் தெரியும். நான் படித்தது எல்லாம் இங்கே பிஎஸ்ஜி இன்ஜினியரிங் காலேஜில் டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்டில் தான். பி இ, எம் இ என்று கோவையில் தான் ஆறு வருட படிப்பு. எனவே தமிழும் நன்றாக கற்றுக் கொண்டேன். தொழில் தொடங்கி இனி இங்கேதான் என்றான பிறகு என்னோடு சேர்ந்து கோமலும் கொஞ்சம் கற்றுக்கொண்டாள். பெரியவர்களோடு பேசும்போது மட்டும் குஜராத்திலோ, ஹிந்திலோ பேசுவோம் மற்றபடி நாங்கள் நால்வரும் வீட்டில் தமிழில் தான் பேசுவோம். குழந்தைகள் பிறந்த பிறகு கோவையில் இருப்பதால் அவர்களும் நன்றாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று விளக்கம் கொடுத்ததும் “ஓ…. அதுதானா” என்ற பூர்ணோதயன் செல்போன் அழைத்தது.
அழைத்திருப்பது தன் அன்னை என்று பார்த்தவன் எடுத்து “அம்மா நான் முக்கியமான வேலையில் இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து நானே கூப்பிடுகிறேன்” என்று சட்டு என்று வைத்து விட்டான்.
இதைக் கேட்டு சிரித்த ராகேஷ் “அம்மா மட்டும் வீடியோ கால் செய்திருக்க வேண்டும். நீங்கள் செய்து கொண்டிருக்கும் முக்கியமான வேலையை பார்த்து அவர்கள் அதிர்ந்து போய் இருப்பார்கள்” என்றதும் தன் கையில் இருந்த பாணி பூரியை பூர்ணோதயன் பார்க்க, பெரியவர்கள் மூவரும் சிரிக்க அவர்களைப் பார்த்து சிறியவர்கள் கூட புரியாவிட்டாலும் அவர்களோடு சேர்ந்து சிரித்தார்கள்.
“ஒரே பையன் என்றீர்கள். உங்களுக்கு வேறு குழந்தைகளை இவ்வளவு பிடிக்கிறது. உங்களைப் பற்றி சொல்லுங்கள். திருமணம் ஆகிவிட்டதா?” என்று ராகேஷ் கேட்டார்.
“இல்லை சார் வீட்டில் அம்மாவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அது பற்றி பேசக்கூட போன் செய்திருக்கலாம்” என்றான்.
“ஓ.. நீங்கள் ஒருவர் தான் என்றால் அந்த வீடு உங்களுக்கு கொஞ்சம் பெரியது தான் பூர்ணோதயன். மூன்று படுக்கையறை கொண்ட அப்பார்ட்மெண்ட். அவ்வளவு பெரிது திருமணம் ஆகாத உங்கள் ஒருவருக்குத் தேவைப்படாது என்று நினைக்கிறேன்” என்று ராகேஷ் கூற , வேகமாக “இல்லை இல்லை சார்” என்று மறுத்தவன் ” எனக்கு ஓகே தான். அம்மா, அப்பா ஊரிலிருந்து வந்தால் தங்குவதற்கு வசதியாக இருக்கும். எனக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா எப்படியும் இந்த வருடத்திற்குள் என் திருமணத்தை செய்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார்கள். சீக்கிரம் நடந்து விடும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. திருமணம் முடிந்த உடன் நானும், என் மனைவியோடு வசிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூடவே லயா குட்டியை தினமும் பார்க்கலாம் பழகலாம்…ரியாவுடனும் தான். எதற்கும் நீங்களும் ஒரு வார்த்தை ஹவுஸ் ஓனரிடம் எனக்காக சொல்லி வையுங்கள்” என்று சொல்லவும் சம்மதமாக தலையசைத்தான் ராகேஷ்.
ராகேஷ் , பூர்ணோதயனுடன் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட லயா “இந்த அங்கிள் நம்ம வீட்டுக்கு வரப்போகிறாரா டாடி?” என்று லயா கேட்க,
“இல்லடா. நம்ம வீட்டுக்கு எதிரில் ஒரு வீடு இருக்கிறதல்லவா? அது கிடைத்தால் வருவாங்க”.
“ஐ… ஜாலி டாடி. அங்கிள் நாம மூனு பேரும் ஜாலியா நிறைய கேம்ஸ் விளையாடலாம். பாணி பூரி சாப்பிடலாம்” என்று கைதட்டி சிரித்து விட்டு இரு கைநீட்டி பூர்ணோதயன் கன்னத்தை மெல்ல கிள்ளி எடுத்து உதடு குவித்து பத்துவிரல்களையும் இதழ்களில் வைத்து “உம்மா..” என்று சொல்லி சிரிக்க, ரொம்ப சந்தோசம் வந்துவிட்டால் லயாவோட அம்மா கூட இப்படித்தான் மகளைக் கொஞ்சு” என்று சிரித்தபடி தன் மனைவியை திரும்பி பார்க்க அவரும் புன்னகையோடு கணவனை பார்த்தார்.
“ஆனா அந்த வீடு எனக்கு கிடைக்கவேண்டுமே” என்று ஏக்கமாக பூர்ணோதயன் சொல்ல , “கிடைக்கும் அங்கிள். எங்க டாடி வாங்கி தருவாங்க என்று அவனுக்கு உறுதி தந்து விட்டு. “இல்ல டாடி °?”என்று தந்தையிடம் கேட்டதும், “லயா குட்டி சொன்னதற்காக செய்துவிட்டால் போகிறது. ஆமாம் இந்த புது அங்கிளை லயா குட்டிக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேட்க “ஆமாடாடி ரொம்ப…” என்று இரண்டு கைகளையும் விரித்தவள், முன்பக்கம் சாய்ந்து பூர்ணோதயனை கழுத்தை வளைத்து தன் முகத்தோடு சேர்த்து வைத்தவள் “ஆ…ஆ…” என்று விலகி “உங்க முகம் டாடிது மாதிரி இல்லை. குத்துது” என்று மெல்ல விலக்கி விட திரும்பி ராகேஷை பார்த்தான். வழுவழுப்பான கன்னம். கொஞ்சம் பூர்ணோதயன் பக்கம் சரிந்து “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும் இந்த விசயம் புரியும் என்று நினைக்கிறேன். இது உண்மையில் கோமலுக்காக” என்று நமட்டு சிரிப்பு சிரித்தார். அவனும் குனிந்து ரகசியமாக சிரித்து விட்டு மெல்ல நிமிர்ந்து இடது கையால் மெல்ல தன் இருபக்க கன்னத்தையும் தாடையையும் தடவி “இனிமேல் இந்த அங்கிள் மூன்று முறை குளிக்கிறேன். மூன்று முறை சேவிங் பண்றேன்” என்று முகத்தை அஷ்டகோணல் ஆக்க அதைப் பார்த்தும் லயா சிரித்தாள்.
அதுவரை இவர்களின் உரையாடலில் அதிகம் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்த கோமல் “ராகேஷ் நேரம் ஆகிறது. வீட்டிற்கு கிளம்பலாமா?” என்றாள்.
“ஓ..”என்ற பூர்ணோதயன் முகம் வாடிவிட்டது. அதை ராகேஷ் கவனித்தாலும் “ஓகே பூர்ணோதயன் வீடு பார்க்க வரும் போது கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு வாங்க” என்றபடி எழுந்தான்.
வேகமாக அங்கிருந்த டிஷ்யூ எடுத்து கையைத் துடைத்து விட்டு டேபிளின் மேல் அமர்ந்திருந்த லயாவை அள்ளியபடி எழுந்தான்.”டாடி நான் கை கழுவ வேண்டும் “என்ற ரியாவை கோமல் தூக்கிக் கொள்ள “ஓகே டா. கை கழுவி விட்டு அப்படியே கிளம்புவோம்” என்று சொல்லியபடி லயாவை வாங்க கைநீட்ட தன் கையில் இருந்த லயாவை மெல்ல அணைத்து விடுவித்து ராகேஷிடம் கொடுத்தான்.
ராகேஷ் “இரண்டு பேரும் அங்கிளுக்கு டாடா பை சொல்லுங்க” என்றதும் இருவரும் “பை அங்கிள்” என்றார்கள் கோரஸாக. ரியாவோடு கோமல் வேகமாக முன்னால் நடக்கத்தொடங்கிவிட ராகேஷ் கைகுலுக்கி மனைவியின் பின்னால் நகரத்தொடங்க அவர் கழுத்தை ஒரு கையால் அணைத்திருந்த லயா “பூரி அங்கிள்” என்று அழைத்து மறுகையால் ஒரு பறக்கும் முத்தத்தை சிரித்தபடியே வீசிவிட்டு போக அதை தாவி பிடிப்பது போல் செய்கை செய்து நின்றவனை பார்த்த லயா வாய்விட்டு சிரித்தபடி ராகேஷிடம் பேசிக்கொண்டே செல்வதை அவர்கள் உருவங்கள் மறையும் வரை பார்த்தபடி நின்றான்.
நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்து குழந்தைகளுக்கான பொருட்கள் இருக்கும் கடைக்குள் நுழைந்தான். நியூபான் பிரிவில் ஆண் குழந்தைக்காக ஆடைகளை வாங்கியவன், நண்பனின் மூத்த மகளுக்காக ஏதாவது வாங்க எண்ணி பொம்மைகள் இருந்த பகுதிக்கு சென்றான்.
ஒரு செல்ஃபில் வரிசையாக இருந்த டெடி பியர் பொம்மைகளை கையில எடுத்துப் பார்த்தபடியே பூர்ணோதயன் வந்துகொண்டிருந்த போது செல்ஃபின் மறுபக்கத்தில் இருந்து “எனக்கென்னவோ நீங்கள் செய்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை ராகேஷ். என்னதான் அவர் உங்கள் குழந்தைகளை எனக்குப் பிடித்திருக்கிறது என்று பன்மையில் சொன்னாலும், அவர் கண்கள் லயாவின் மேல் மட்டும் தான். அதிகம் அறிமுகம் இல்லாத முதல் முறை பார்க்கும் ஒருவரிடத்தில் வீட்டு முகவரி வரை கொடுக்க வேண்டுமா?. உங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. போதாததற்கு ஏதோ பேச்சுக்குத்தான் சொல்கிறீர்கள் என்று பார்த்தால், உண்மையாகவே அவருக்காக ஹவுஸ் ஓனரிடம், எதிர் வீடு என் நண்பருக்கு வேண்டும் என்று கேட்கிறீர்கள். ஒரு இருபது நிமிடங்கள் பேசிய மனிதர் உங்களுக்கு நண்பரா?. அவரைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?. உங்களிடம் தன்னைப்பற்றி அவர் சொல்லிய விபரங்கள் பொய்யாகக் கூட இருக்கலாம். காலம் இருக்கும் நிலையில் இவ்வளவு சீக்கிரம் ஒருவரை நம்பக்கூடாது” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தது கோமல்தான்.
மறுபக்கம் பூர்ணோதயன் நின்றிருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேச்சு. தன்னைப் பற்றி தான் என்று பூர்ணோதயனுக்கு தெளிவாக புரிந்தது.
“கோமல் அவரைப் பார்த்தால் அப்படி மோசமான மனிதராகவெல்லாம் தெரியவில்லை. ஆனால் நீ சொல்வது உண்மைதான். அவருக்கு லயாவிடம் ஏதோ ஒரு பிடிப்பு. முதல் முறையிலேயே ஒரு இனம் புரியாத பிணைப்பு. அது இருவரிடமும் இருந்தது. அதை நானும் கவனித்தேன். தொழில் நடத்தும் எனக்கு ஆட்களின் உடல் மொழியை வைத்து அவர்களைக் கொஞ்சமாவது எடைபோடத்தெரியும் என்று நம்புகிறேன். அந்த வகையில் அவரது கண்களில் தெரிந்தது ஏக்கமும் , கண்ணியமான, கனிவான பாசம் மட்டுமே. அதனால் தான் அவரிடம் எதிர் வீடு காலியாக இருக்கும் விவரம் சொன்னேன்”.
“நீ லயாலின் மேல் மட்டும் அவர் பார்வை பதிந்ததைத் தான் கவனித்தாய். நான் அதோடு லயாவையும் கவனித்தேன். ரியா எல்லோரிடத்திலும் சீக்கிரம் ஒட்டிக்கொள்வாள். லயா அப்படிக் கிடையாது. வெகு சிலரை மட்டும் தான் தன்னை நெருங்க விடுவாள். நீ, உன் தங்கை. அதைத்தாண்டி நான் உன் அண்ணன். இவர்களைத் தவிர வேறு யாரிடமும் லயா இந்தளவுக்கு அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டிக்கொண்டது கிடையாது. அதுவும் அவளாகவே அவரின் கன்னம் கிள்ளி முத்தமிட்டது!. அந்த கணம் அந்த காட்சி வெகு அழகு தெரியுமா கோமல். அதுபோலெல்லாம் அவள் என்னிடம் கூட செய்தது கிடையாது. எனக்கு கொஞ்சம் பொறாமையாக்கூட இருந்தது”.
“நம் வாழ்க்கையில் புதிதாக ஒருவர் அறிமுகம் ஆகும் போது எதற்காக அந்த அறிமுகம் என்று நமக்கு தெரியாது. அது காலத்திற்கு மட்டுமே தெரியும். காரண காரியம் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது. சிலரது அறிமுகம் ஒரு முறையோடு முடிந்தது விடும். சிலரது அறிமுகம் தொடரும். நெருக்கமான உறவாக மாறும். பூர்ணோதயன் அறிமுகமும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது”.
தான் சொல்லுவதை கேட்டபடி அசையாமல் யோசனையை செய்தபடி நின்றிருந்த மனைவியை “கோமல்..” என்று லேசாக தோள் தட்டி அசைத்து, “அதுமட்டும் காரணம் இல்லை. எனக்கு அவரைப் பார்த்ததும் நம் சோட்டு தான் நினைவிற்கு வந்தாள்”.
“எப்படியும் இன்னும் ஓரிரண்டு மாதங்களில் நாம் அவினாசிக்கே குடி போகப் போகிறோம். இங்கே இந்த வீட்டில் சோட்டு மட்டும் தான் இருக்கப்போகிறாள். தனியாக இருக்கப் போகும் அவளுக்கு எதிர் வீட்டில் இப்படி ஒரு நல்ல மனிதரும், அவரது குடும்பமும் துணையாகக் கிடைத்தால் நல்லது தானே”.
“யாருக்கு தெரியும்?. எதிர் எதிர் வீட்டில் இருந்து கொண்டு நாம் இருவரும் காதலில் விழுந்து கணவன், மனைவி ஆனது போல இவர்களுக்கும் காதல் வரலாம். கணவன் மனைவி ஆகலாம்”.
அதற்கு மேல் பூர்ணோதயன் அங்கு நிற்கவில்லை. கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பில் போடும் இடத்திற்கு சென்று வரிசையில் நின்றான். சே ராகேஷ் நல்ல மனிதர் என்று நினைத்தேனே… அவரும் சுயநலவாதி தான் என்று கோவம் வந்தது. அவர் சொன்ன அந்த சோட்டு என்ற பெயரை நினைத்ததும் மனதில் வெறுப்பு வழிந்தது. அவள் எத்தனை பெரிய அழகியாக இருந்தாலும் எனக்கு வேண்டாம். ஏன் அந்த வீடே எனக்கு வேண்டாம். ஓனரே வீடு பார்க்க கூப்பிட்டால் கூட போகக்கூடாது. எனக்கு வேண்டாம். வேறு வீடு பார்த்துவிட்டேன் என்று சொல்லிவிட வேண்டும் என்று உறுதியாக நினைத்தபடி நின்றிருந்தான் பூர்ணோதயன்.
எங்கிருந்தோ ஓடி வந்த லயா இவனைக் கண்டதும் “பூரி அங்கிள்” என்று அவன் கால்களைக் கட்டிக் கொள்ள, சற்றுமுன் நினைத்திருந்த அத்தனையும் மறந்து “லயாகுட்டி” என்று அவளைக் கையில் அள்ளிக்கொண்டான்.