அடுத்த நொடி அவர்களை நெருங்கியிருந்த கோமல், “மம்மி கூப்பிடக் கூப்பிட காது கேட்காதது போல் நிற்காமல் ஓடி வருகிறாயா?. இது என்ன புது பழக்கம் லயா? என்று குழந்தையின் முதுகில் பட்டென்று ஒரு அடி அடித்து விட்டாள். இதை எதிர்பார்க்காத பூர்ணோதயன் “ம்ம்” என்ற அதட்டலோடு லயாவை அணைத்து கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு, கோமல் அடித்த இடத்தில் தன் வலது கையை வைத்து தேய்த்துக்கொண்டே “அவள் சின்ன குழந்தை கோமல். உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நன்றாகவே புரிகிறது. அதற்காக என்மேல் உள்ள கோவத்தை தேவையில்லாமல் அவள் மேல் காட்ட வேண்டாம்” என்று சொன்னவன் விழிகளும் சில நொடிகள் கோபத்தை காட்டியது. ரியாவோடு வந்த ராகேஷின் விழிகளும் நீ செய்தது சரியில்லை என்பது போல் குற்றம் சாட்டியது.
பூர்ணோதயனும் காட்டமாக பேசிவிட, கணவனும் மௌனமாக இருக்க, கோமல் லயாவிம், “சாரிடா லயா. மம்மி அடித்தது தவறுதான். இனி அடிக்க மாட்டேன். லயா கீழே விழுந்து விடுவாளோ.. அடிபட்டு விடுமோ என்று மம்மி பயந்து விட்டேன். சாரிடா.. மம்மி கிட்ட வாங்க” என்று கை நீட்ட, “ம்கூம்… மம்மி கூட லயா டூ….” என்று இரண்டு விரல்களை இணைத்துக் காட்டி விட்டு கொஞ்சம் சோகமான முகத்தோடு உதயன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
இந்த பெண் குழந்தைகளுக்கு எப்படித்தான் நொடியில் அம்மாக்களின் மேல் வெறுப்பு தோன்றுமோ தெரியாது. லயாவை தன் அம்மா அடித்ததைப் பார்த்த ரியாவும் “லயா பாவம். வலிக்கும். நானும் மம்மி கூட டூ. டாடி நீங்களும் மம்மி கூட டூ விடுங்க” என்று சொல்லிவிட கோமலுக்கு அழுகை வரத்தொடங்கி விட்டது.
அதைக் கண்ட உதயனுக்கு ஏதோ போலாகிவிட்டது ” சாரி கோமல் குழந்தையை நீங்கள் அடித்ததும் நான் ஒரு வேகத்தில்….பிளீஸ்…அழாதீர்கள் கோமல். ஒரு தாயாக உங்கள் பயம் எனக்கு புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் மேல் நீங்கள் காட்டும் அக்கறை உங்கள் மீது மரியாதையைத் தான் கூட்டுகிறது. அதே சமயம் இந்த அதீத அக்கறை குழந்தைகளின் சின்ன சின்ன சந்தோசங்களை, விளையாட்டுகளை, சுதந்திரங்களை முடக்கினால் அது ஆபத்தானது”.
லயாவிடம் திரும்பி “லயாகுட்டி நீங்க செய்ததும் தவறுதானே. அங்கிளிடம் போகிறேன் என்று மம்மியிடம் சொல்லி விட்டுத் தானே வரவேண்டும். மம்மியிடம் சாரி சொல்லுங்க” என்றதும், அவன் சட்டை காலரை பிடித்து திருகி கொண்டே மறுக்காமல் மெல்லிய குரலில்”சாரி மம்மி. இனிமே… மம்மி கிட்ட சொல்லிட்டு, அங்கிள் கிட்ட ஓடிவரேன். ஓகே வா?” என்று தலையை தலையை ஆட்டியபடி சொல்ல அந்த அழகில் சொக்கிப்போன கோமல் “வாயாடி, பேசியே மயக்கு. ஓகே, உன்னை மன்னித்து விட்டேன். மம்மியிடம் வா” என்று கைநீட்ட திரும்பி உதயனைப் பார்த்தாள் லயா.
அதற்குள் வரிசை நகர்ந்து உதயன் பணம் செலுத்த வேண்டியிருந்தது. “ஒரு நிமிடம்” என்றவன் லயாவை கையில் வைத்தபடியே தான் வாங்கிய பொருட்களுக்கான தொகையை செலுத்தி விட்டு வந்தான்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு “ராகேஷ் நான் இதை வேண்டுமென்று செய்யவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன் நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தைக் கேட்டேன். செல்ஃபின் மறுபக்கம் நான் நின்றிருந்தேன். நான் நின்றிருந்தது உங்களுக்கு தெரியவில்லை”.
“நீங்கள் சொன்னது போல் லயாவின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். அதற்காகத் தான் உங்கள் வீட்டின் அருகிலேயே வீடு இருக்கிறது என்றதும் மகிழ்ச்சியாக விவரங்கள் கேட்டேன். உங்களுடைய தோழமையான பேச்சும் எனக்கு பிடிந்திருந்ததும் ஒரு காரணம். ஆனால் இப்போது அது வேண்டாம் என்று தோன்றுகிறது”.
“உங்கள் பேச்சில் சோட்டு என்று யார் பெயரையோ சொன்னீர்களே?. அது யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா?. இல்லை… எனக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் பரவாயில்லை”.
பூர்ணோதயன் தாங்கள் பேசியதை கேட்டு விட்டான் என்று தெரிந்ததுமே கணவன், மனைவி இருவரும் சங்கடமாக உணர்ந்தாலும் நொடியில் நிகழ்வுக்கு வந்த ராகேஷ் “லயா, உனக்கும், ரியா விற்கும் டாடி டாய் வாங்கித் தரப் போகிறேன். ஆனால் ஆளுக்கு ஒவ்வொன்று தான் எடுக்கணும். மம்மி கூடப் போய் எடுத்துக்கொண்டு வருகிறீர்களா?. டாடி இங்கேயே அங்கிள் உடன் இருக்கிறேன்” என்று கோமலை அர்த்தத்தோடு பார்க்க, புரிந்து கொண்டு தலையசைத்தாள்.
” சூப்பர் டாடி. பூரி அங்கிள், சீக்கிரம் இறக்கிவிடுங்க”என்று இறங்கி ரியாவுடன் சேர்ந்து உற்சாகமாக ஓடினாள்.
அவர்கள் நகர்ந்ததும் “பூர்ணோதயன், முதலில் கோமல் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னது போல் தான். காலம் இருக்கும் நிலையில் அதீத அக்கறையும் கண்டிப்பும் காட்டுகிறாள். அதோடு இனம் தெரியாத ஒரு பயம் அவளுக்குள் உருவாகியிருக்கிறது. அதற்கு காரணம் நீங்கள் இல்லை.லயா தான்”.
“பிறந்ததில் இருந்து செய்யாத நிறைய விஷயங்களை இன்று ஒரே நாளில், அதுவும் உங்களை பார்த்த வெகு சில நேரத்தில் செய்து அவள் பயத்தை கூட்டி விட்டாள். பயம் மட்டும் காரணம் கிடையாது. லயா உங்களிடம் காட்டும் நெருக்கம் எனக்குள்ளேயே பொறாமையை தூண்கிறதென்றால் தாயான அவளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் தான் உங்களைப் பற்றி என்னிடம் அப்படி பேசிக்கொண்டிருந்தாள்”.
“லயா அவள் தங்கையோடு அதிகம் ஒட்டினால் கூட கோமல் முகம் வாடிவிடும். அது புரிந்ததாலோ என்னவோ கோமல் தங்கையும் லயாவிடம் தான் வைத்திருக்கும் நேசத்தை வெளிப்படையாக காட்டமாட்டாள். குறைந்த பட்சம் கோமல் முன்பாக லயாவை தன்னோடு அதிகமக இழைய விடமாட்டாள்”.
“கோமலைப் பற்றி புரிந்தவன் என்பதால் சொல்கிறேன். அவளுக்கு உங்கள் மேல் வெறுப்பு எல்லாம் இல்லை. ஒரு வித பாதுகாப்பு இன்மையின் வெளிப்பாடு. அவ்வளவு தான். கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் புரிந்து கொள்வாள். நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது உங்களைப் பற்றி நான் சொல்லியதையும் நீங்கள் கேட்டிருப்பீர்தானே?”.
” கேட்டேன் ராகேஷ். என்னைப்பற்றிய உங்கள் அபிப்ராயம் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் அந்த வீடு எனக்கு வேண்டாம் என்று தோன்றுகிறது. உங்கள் இருவருக்கும் இடையில் என்னால் தேவையில்லாமல் பிரச்சினைகள் வருவதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான்…. “என்று இழுக்க,
“ம்ம்….குழந்தைகளிடம் நீங்கள் ஒட்டிக்கொண்ட விதமும், நெகிழ்வும் உங்கள் மென்மையான குணத்தையும் , மனதையும் சொல்லாமல் சொன்னது. எனக்கும் உங்கள் தன்மையாக பழகும் விதம் பிடித்தது. என்னவோ ஏற்கெனவே நன்கு பழகிய ஒரு நல்ல தோழன் போல, ஒரு வித சகோதர பாசம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதனால் தானோ என்னவோ சட்டென்று எங்கள் வீட்டு பெண்ணான சோட்டுவோடு சேர்த்து உங்கள் பேச்சுவந்துவிட்டது என்று நினைக்கிறேன்”.
“நீங்கள் என்னோடு சேர்த்து சோட்டு பற்றி பேசியதும் ஏனோ கொஞ்சம் கோபம் வந்தது உண்மைதான். அதனால் தான் அது யார் என்று தெரிந்துகொள்ள கேட்டேன்”.
“என் மனைவி கோமலின் தங்கை தான். கோமலின் அண்ணன் ஹீராவும், அவளும் சேர்ந்து கோவையில் தனி பிஸினஸ் தொடங்க இருக்கிறார்கள். அதற்காக விரைவில் இங்கு வரயிருக்கிறார்கள். அவளும் சாதாரண ஆள் கிடையாது. உங்களைப் போலத்தான். குழந்தைகள் என்றால் உருகுவாள். வேலை என்று இறங்கி விட்டால் ஒரு தவம் போல அதில் மட்டுமே கவனமாக செய்து முடிப்பாள். ஏனோ கல்யாணம் மட்டும் வேண்டாம் என்கிறாள். நான் இப்படி உங்களோடு அவளைச் சேர்த்து பேசிவிட்டேன் என்று தெரிந்தால் கூட என்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள்*.
“ஹாஹா… “என்று சிரித்து “அந்த காட்சியை கற்பனை செய்து பார்க்கவே எனக்கு பயமாக இருக்கிறது. நான் கூட சமயத்தில் கோமலிடம், போன ஜென்மத்தில் உன் தங்கை விஸ்வாமித்திரராக பிறந்திருப்பாளோ அதன் தாக்கம் இந்த ஜென்மத்திலும் இருக்கிறதோ என்று கிண்டல் செய்வேன். சிலசமயம் அவளை விஸ்வாமித்ரி என்றும் அழைப்பதுண்டு. நல்ல பெண். அதை விடுங்கள்”.
“எதையோ பேசத்தொடங்கி… எங்கேயோ போய் விட்டோம். நான் சொல்ல வந்தது, கோமல் பேச்சை மனதில் வைத்துக் வீட்டை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். உங்களோடு பழகிவிட்டால் அண்ணா…அண்ணா… என்று உயிரை விடுவாள். என்மனைவி என்பதற்காக சொல்லவில்லை. உண்மையில் அருமையான பெண். நான் ஓனரிடம் உங்களுக்காக பேசிவிட்டேன். வந்து பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்”.
ராகேஷ் இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகு மறுக்க முடியவில்லை. “ஓகே ராகேஷ். எனக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே லயாவும், ரியாவும் கையில் ஆளுக்கொரு டெடி பியர் பொம்மையை தூக்கிக் க் கொண்டு ஓடி வந்தார்கள்.
முதலில் வந்த லயா பூர்ணோதயன் காலை கட்டுக்கொண்டு “பூரி அங்கிள், எனக்கு இது வாங்கிக்கொடுங்க” என்று சொல்ல பொம்மையோடு சேர்ந்து அவளையும் அள்ளிக்கொண்டு “வாங்கிவிட்டால் போகிறது” என்று பில் போடும் இடம் நோக்கி நடந்தான்.
“லயா, இதென்ன புதிது புதிதாக பழகுகிறாய். டாடி தான் வாங்கி தருகிறேன் என்றாரே. மற்றவர்களிடம் இப்படி கேட்கக்கூடாது என்று மம்மி சொல்லியிருக்கிறேன் தானே. மறந்து விட்டதா?”என்று மெல்லிய குரலில் பல்லைக் கடித்தபடி கண்டிக்க, “பூரி அங்கிள் கிட்ட தானே மம்மி… கேட்கலாம். இல்ல அங்கிள்?” என்று உதயனையும் தன் பேச்சில் இழுத்தாள்.
“கண்டிப்பாடா. லயா குட்டிக்கு என்ன வேண்டுமோ… தாராளமாக இந்த அங்கிளிடம் தயங்காமல் கேட்கலாம்”என்று கன்னத்தில் முத்தமிட, மகிழ்ந்து சிரித்து “அப்போ ரியாவிற்கும் வாங்கி கொடுங்க”என்று சொல்லவும்தான் தங்களுக்கு பின்னால் ஒரு கையால் பொம்மையை அணைத்தபடி மறுகையால் ராகேஷின் ஒற்றை விரலை விரலை பிடித்து அண்ணாந்து விழிகளில் ஆச்சரியத்துடன் இவர்களை பார்த்துக்கொண்டிருந்த ரியாவை குனிந்து பார்த்தான்.
“ரியாவுக்கும் தான். ரியா கொடுங்க. அதற்கும் பில் போடுவோம்” என கைநீட்ட, ” ம்ம்கூம்… மம்மி திட்டுவாங்க. லயா, சோட்டிமாக்கு பிடிக்காது. அப்புறம் நம்ம கிட்ட பேச மாட்டாங்க” என்று கோமலைப்பார்த்தாள்.
“வேண்டாம் சார். உங்களுக்கு எதற்கு வேண்டாத செலவு. ராகேஷ் கொடுப்பார்.லயா இறங்கு. மம்மியிடம் வா. இரண்டு பேருக்கும் டாடி வாங்கித் தருவார்” என்று சொல்ல “ம்ம்கூம். மம்மி, எனக்கு பூரி அங்கிள் தான் வாங்கித்தரணும்” என்று அவன் கழுத்தை கட்டிக்கொள்ள சந்தோசமாக சிரித்த பூர்ணோதயன்,” இந்த ஒரு முறை விட்டுவிடுங்கள் கோமல். சின்னக் குழந்தை ஏதோ ஆசைப்பட்டுவிட்டாள். இது எனக்கொன்றும் பெரிய செலவில்லை. மீண்டும் ஒருமுறை சந்திப்போமா என்று தெரியவில்லை. எனக்கு கூட குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று ஆசைதான்.பிளீஸ்..” என்று விட, மறுத்து எதுவும் பேசாமல் கணவன் முகம் பார்த்தாள்.
ராகேஷ் இந்த ஒரு முறை அனுமதிமா என்பது போல் விழிகளால் கெஞ்ச, அதைக் கண்டு கொண்ட உதயன் லேசாக சிரித்து ‘அப்பா… இரண்டு பேரும் கண்களால் எப்படி பேசிக்கொள்கிறீர்கள்?. என் கண் படாமல் இருக்கட்டும்”.
“கோமல், உங்கள் ராகேஷ் தான் அனுமதி கொடுத்துவிட்டாரே.. இப்போதாவது ரியா விடம் சொல்லுங்கள். நீங்கள் சொல்லாமல் அவள் கொடுக்கமாட்டாள்” எனவும்,
ஒரு பெருமூச்சுடன் அவளே ரியா கையில் இருந்த பொம்மையை வாங்கி, லயா பொம்மையோடு பில் போட வைத்தாள்.
பில் போட்டு பொம்மையை கொடுத்து மனமே இல்லாமல் லயாவை இறக்கி விட ராகேஷ் மறுகை விரலை பிடித்து கொண்டு “அங்கிள் நீங்க எப்போ நம்ம வீட்டுக்கு வருவிங்க?. வரும் போது எனக்கு கிச்சன் செட் வாங்கிட்டு வாங்க. பிங்க் கலர்” என்று லயா சொல்ல கோமல் ராகேஷிடம் இருந்து இரு பிள்ளைகளின் கைகளையும் உறுவி இருவரது மணிக்கட்டுகளையும் கைக்கு ஒன்றாய் பிடித்துக்கொண்டு “நான் கீழே காருக்கு போகிறேன். கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்று சொல்லி விட்டுஏதோ பேசவந்த லயாவை அதட்டியபடி இழுத்துக் கொண்டு திரும்பி பார்க்காமல் போய்விட்டாள்.
ஓடுவதைப் போல் செல்லும் மனைவியை இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் கைவிட்டபடி பார்த்து சிரித்தபடியே திரும்ப அவனை அதே போல் இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் கைவிட்டபடி பார்த்து சிரித்த பூர்ணோதயன் “இன்று குழந்தைகளோடு, உங்களுக்கும் பாடம் உண்டு என்று நினைக்கிறேன்” என்று சிரிக்க, கண்டிப்பாக என்பதாய் தலையசைத்தபடி ராகேஷூம் சிரிக்க அந்த நேரம் இரண்டு ஆண்மகன்களின் வசீகரிக்கும் தோற்றமும், ஹாஹாஹா… என்று சேர்த்து ஒலித்த சிரிப்பொலியும், பக்கத்தில் நகர்ந்தவர்களை ஒரு நொடி திரும்பிப் பார்க்க வைத்தது.
“கோமலும் பாவம் தான். லயா அவள் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறாள். பொம்மையை நீங்கள் தான் வாங்கித்தரவேண்டும் என்று சொன்னதெல்லாம் எனக்கே அதிகப்படியாகத் தான் தோன்றியது. அதுவும் கிச்சன் செட்!. இத்தனை நாட்களில் என்னிடம் கூட இப்படி கேட்டது கிடையாது. அம்மா திட்டுவாங்க என்று பயப்படுவாள். உங்களிடம் வெகு உரியமையாக கேட்ட விதம், நீங்கள் தான் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது…”என நிறுத்தி எனக்கு விளங்கவில்லை என்பது போல் கைகள் விரித்து, லேசாக உதடு வளைத்து, தோள்களை உயர்த்திவிட்டு, சில நொடிகள் கழித்து,
“ஒரே வயது என்பதால் இருவருக்கும் ஒரே மாதிரியாக வேறுவேறு நிறம். இப்படித்தான் வாங்குவதுண்டு. அதுவும் லயா.. அவளாக கேட்கவே மாட்டாள். ரியாவிற்கு வாங்கும் போது அவளுக்கு பிடித்த நிறம் எடுக்கச்சொன்னால், மம்மி எனக்கு நீங்க எடுத்து கொடுங்க என்று தான் சொல்வாள். அவளுக்கு கோமல் தான் தேர்ந்தெடுத்து கொடுப்பாள். இன்று எல்லாம் தலைகீழ்”.
“லயாவின் இந்த தீடீர் மாற்றங்கள் அவளை மொத்தமாய் சுயமிழக்க வைத்துவிட்டது என்று நினைக்கிறேன். சரி நானும் கிளம்புகிறேன். இல்லையென்றால் என் வீட்டு மகாலட்சுமியை அவ்வளவு சீக்கிரத்தில் மலையிறங்க வைக்க முடியாது” என்று சிரித்து கைகுலுக்கி, போகின்ற அவசரத்திலும் “வீடு பார்க்க வருவது பற்றி கொஞ்சம் யோசியுங்கள் பூர்ணோதயன். கட்டாயப்படுத்தாத குறையாக மீண்டும் மீண்டும் இவ்வளவு சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். அந்த அப்பார்ட்மெண்ட் அமைந்திருக்கும் இடமும், சர்வீஸ், மெயின்டனன்ஸ் என்று எல்லாமே நன்றாக இருக்கும்” என்றபடி வேகமாக கையத்து திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே கூட்டத்தில் மறைந்தான்.
யோசனையுடன் நண்பனின் குழந்தையைப் பார்க்கப்போன இடத்திலும் லயாவின் நினைவே அதிகம் வந்தது. அந்த சிறு குழந்தையை கையில் ஏந்திய போது, லயா பிறந்தபோது எப்படி இருந்திருப்பாள்? தவழும் போது எப்படி இருந்திருக்கும்? என்று அவள் தொடர்பாகவே எண்ணங்கள் ஓடியது.தலைவலிப்பது போல் இருக்க சீக்கிரம் சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு வந்து உணவை மறுத்து விட்டு படுத்துவிட்டான்.
இரவு ஏழு மணிக்கு வழக்கம் போல ஹாலில் இருந்த கோமலின் செல்ஃபோன் ஒலிக்க, “மம்மி சோட்டிமா,,,” என்று கிச்சனுக்கு குரல் கொடுத்தாள் ரியா. பூர்ணோதயன் வாங்கி கொடுத்த டெட்டி பியர் பொம்மையை மடியில் படுக்க வைத்து பவுடர் அடித்து விளையாடிக் கொண்டிருந்த லயா அதைக் கேட்டதும் , அதை எடுத்து அணைத்துக் கொண்டு வேகமாக எழுந்து படுக்கையறைக்குள் ஓடினாள்.
கோமல் அவள் போவதைப் பார்த்தபடியே அந்த வீடியோ காலை எடுத்து பேசத்தொடங்கினாள்.
“எப்படி இருக்கிறாய் சோட்டி?”என்று தொடங்கி வழக்கமான விசாரிப்புகள் முடித்ததும் , “ஃபோனை லயா , ரியாவிடம் கொடுங்க அக்கா ” என்றதும் “ரியா மட்டும் தான் ஹாலில் இருக்கிறாள். லயா உன் ஃபோன் அடித்ததுமே பெட் ரூமுக்குள் ஓடிவிட்டாள்”.
“ஏன்?. என்ன விசயம்?.லயா ஏதாவது குறும்பு செய்துவிட்டாளா?” என்று கேட்டதும் , இந்த கேள்விக்காக காத்திருந்தது போல் அடுத்த நொடியே “அதை ஏன் கேட்கிறாய்?. இன்று என்ன நடந்ததுது தெரியுமா?. லயாவிற்கு பாணி பூரி பேய் பிடித்துவிட்டது” என்று மாலில் நடந்ததை, தான் அவளை அடித்தது என்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்து ,
“பார்க்கப்போனால் இன்று அவள் நடந்து கொண்ட விதத்திற்கு நான் தான் அவளோடு பேசாமல் இருக்க வேண்டும். இங்கே தலைகீழ். முதல் முறையா வீட்டிற்கு வந்தும், இவ்வளவு நேரமாகியும் லயா மேடம் மம்மியிடம் இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த பொம்மையோடு தனி உலகத்தில் இருக்காங்க”.
“ராகேஷ் என்னடான்னா கொஞ்ச நேரம் நீ எதுவும் சொல்லாதே. அவளைத் திட்டாதே கோமல். அவள் போக்கில் விடு . அவளே வந்து உன்னிடம் பேசுவாள் என்று வெளியில் போய் விட்டார்”.
“கொஞ்சநேரத்திற்கு முன் கீழ் பிளாட் குழந்தை நந்தினி இவர்களோடு விளையாடவந்தாள். அவளிடமும் இந்த லயா பூரி அங்கிள் புராணம் தான். இன்று பூரி அங்கிள் பூரி அங்கிள் என்று கேட்டு கேட்டு என் காது தான் வலிக்கிறது” என்று லயாவைப் பற்றி குற்றம் சொல்லிக்கொண்டே இருந்த குரல் கொஞ்சம் உடைந்து “இது எங்கே போய் முடியுமோ? என்று எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை சோட்டி. நீ லயாவிடம் சொல்லி என்னிடம் பேசச்சொல்லேன். நீ சொன்னால் தான் கேட்பாள்”.
” ஐயோ…அக்கா நீங்கள் தேவையில்லாமல் பயப்படுகிறீர்கள். உங்களிடம் பேசாமல் அவளுக்கும் இருக்க முடியாது . நான் அடித்தால் கூட என்னை கண்டிக்கும் நீங்கள் அவளை அடித்ததில் அவளும் கொஞ்சம் வீம்பாக இருக்கிறாள் என்று தோன்றுகிறது. குழந்தைகள் கோபமும், சண்டையும் எத்தனை நேரம் இருக்கப்போகிறது?. அவள் சின்ன குழந்தை. குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள். புதிதாக ஓருவர் வந்து அவளுக்கு பாணி பூரி வாங்கித்தந்து, கொஞ்சம் அக்கறையாக, அனுசரணையாக பேசியதும் அவரைப் பிடித்துப் போயிருக்கும். அவ்வளவுதான். தூங்கி எழுந்தால் பூரி அங்கிளாவது, ஆன்டியாவது எல்லாம் சுத்தமாக மறந்து விடுவாள். இதற்குப்போய் இப்படி பயமா?” என்ற போது உள்ளிருந்து குக்கர் விசில் சத்தம் வர “ஒரு நிமிடம் சோட்டி”என்று புடவையால் கண்களைத் துடைத்து ஃபோனை டீபாயின் மேலிருந்த பிளவர்வாஷில் சாய்த்து வைத்து விட்டு,” ரியா சோட்டிமாவிடம் பேசிக்கொண்டிரு” என்று எழுந்து சென்றாள். ரியா வந்து “சோட்டிமா இது பூரி அங்கிள் எனக்கு வாங்கித்தந்தது” என்று தன் பொம்மையை காண்பிக்க,” அது என்ன பூரி அங்கிள்?. அவருக்கு பெயர் இல்லையா?”.
“அதுவா …லயாதான் அந்த பேர் வைத்தாள். அவரு பேரு என்னவோ பெருசா சொன்னாங்க. எங்களுக்கு முழுசா சொல்லத்தெரியலையா… அதான் லயா… அந்த அங்கிள் அவளுக்கு… பாணி பூரி வாங்கி கொடுத்தார் தானே. அதனால் பூரி அங்கிள் னு சொன்னோமா அவரும் ஓகே சொல்லிவிட்டார்”.
“ஓகோ…அவ்வளவு தானா. லயா எங்கே?. அவளிடம் ஃபோன் கொடு ரியா” என்றதும், ஃபோனை எடுத்து சென்று லயாவிடம் நீட்டி “இந்தா லயா. சோட்டிமா உங்கிட்ட பேசணுமாம்” என்க, பயத்தோடு மறுப்பாக தலையசைத்து வாங்க மறுத்தாள்.
“இந்தா லயா… பேசு..” என்றவள் கட்டிலின் மீது லயாவின் அருகில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
சோட்டுவிற்கு லயாவின் உருவம் தெரியவில்லை. சீலிங்கில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த ஃபேன் மட்டும் தெரிந்தது. மெல்லிய கொலுசொலியும். மூக்கை உறிஞ்சும் சத்தமும் லயா அங்கு இருப்பதை சோட்டுவிற்கு உணர்த்தியது.
அதனால் “லாயா….. லயாகுட்டி.. சோட்டிமா கிட்ட பேசமாட்டிங்களா?. சோட்டிமா மேல கோபமா?” என்று கேட்க பதிலே இல்லை. “உன்னுடைய புது பொம்மையை சோட்டிமாவிற்கு காட்டுவாய் என்று நினைத்தேனே…. அதுஎன்ன கலர்? சோட்டிமாக்கு அதை காட்டவேயில்லை.. எனக்கு அதைப் பார்க்க வேண்டுமே… காட்டமாட்டாயா? ” என்று பொம்மையைப் பற்றி பேச்சை எடுத்து அவளின் ஆர்வத்தை தூண்டினாள். அது நன்றாகவே வேலை செய்தது. “காட்டமாட்டேன்” என்று லயாவின் குரல் மட்டும் வந்தது.
அந்த குரலை ரசித்து சத்தமில்லாமல் சிரித்தவள் “ஏன்டா லயா குட்டி?. எனக்கும் காட்டினால், நானும் ஒரு ஹலோ சொல்லி, அதுகூட ஃபிரண்ட் ஆகிடுவேன் இல்லையா?”.
“காட்டமாட்டேன். காட்டினா நீங்க திட்டுவிங்க. அந்த அங்கிள்கிட்ட திருப்பி கொடுக்க சொல்லுவிங்க. எனக்கு இந்த பொம்மை ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த பொம்மை எனக்கு வேணும் சோட்டிமா” என்று சொன்னவள் குரலில் கொஞ்சம் ஏக்கம் எட்டிப்பார்த்ததோ.
அது தாங்காமல் “ஓகே… ஓகே… சோட்டிமா உன்னை திட்ட மாட்டேன். பொம்மையை திருப்பித்தரச் சொல்லமாட்டேன். ஓகே வா”.
“இப்போது கூட லயாகுட்டி சோட்டிமாக்கு பொம்மையை காட்டமாட்டிங்களா?”.
“இருங்க….”என்ற லயா குரலைத் தொடர்ந்து ஃபோன் ஸ்கிரீனில் ஒரு டெடி பியர் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து முழுதாகத் தெரிந்து. அப்போது சோட்டு “ஹலோ டெடி” என்றதும் உடனே மறைந்து மீண்டும் ஓடிக்கொண்டிருந்த ஃபேன் தெரிந்து லயா சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.
“ஹாஹா..” என்று அவளும் சிரித்து “லயா குட்டி என்ன விளையாட்டு இது?. சரி, சோட்டிமா டெடி பியர் பார்த்தாச்சு. அழகாயிருக்கு. எனக்கு லயா குட்டிய பார்க்கணுமே….”
“சோட்டிமா இந்த டெடி உங்களுக்கு பிடிச்சிருக்கா?”.
“ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட லயா குட்டி மாதிரி ரொம்ப அழகாயிருக்கு”.
“இதுக்கு ஒரு பேர் வைப்போமா சோட்டிமா?”.
“தாராளமாக வைக்கலாமே. என்ன பேர் வைக்கலாம்?. லயா குட்டியே சொல்லுங்க”.
“நீங்க சொல்லுங்க சோட்டிமா. உங்களுக்கு பிடிச்ச பேரா சொல்லுங்க. வைக்கலாம்”.
“சோட்டிமாக்கு ரொம்ப பிடிச்ச பெயர்னா…நந்தானு வைக்கலாமா?. குட்டியா..கியூட்டா இருக்கும்”.
“ஐ … சூப்பர் சோட்டிமா. நந்தா கியூட்டா இருக்கு. இனி உனக்கு பேரு நந்தா. பிடிச்சிருக்கா” என்று பொம்மையிடம் பேசிக்கொண்டிருந்தாளே தவிர ஃபோன் ஸ்கிரீனில் அவள் உருவம் தெரியவில்லை.
சோட்டுவிற்கு அவள் முகத்தை பார்க்கும் ஆவல் நொடிக் நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னதான் கோமலுக்கு ஆறுதல் சொன்னாலும் உள்ளுக்குள் உருவமில்லா பயம் ஒன்று உடலெங்கும் மெல்ல ஊடுருவித்தான் இருந்தது.
“ஓகே நந்தாவ பாத்தாச்சு. ஹலோ சொல்லியாச்சு. என்ன இன்னும் லயாகுட்டியை காணோமே…?. லயா எங்கே காணோம்?” என்றதும், கட்டிலில் முட்டியிட்டு இரண்டு கைகளையும் ஊன்றி மெல்ல நகர்ந்து வந்து, சற்று முன் டெடி பியரை காண்பித்தது போலவே முதலில் நெற்றி மட்டும் காண்பித்தது, மறுமுறை மூக்கு வரை காண்பித்தது . அடுத்த முறை முகம் முழுவதையும் ஒரு நொடி காட்டிவிட்டு அடுத்த நொடியே மறைந்து லயா சிரிக்க,
“லயா…. போதும் விளையாண்டது. சோட்டிமாக்கு உன்னைப் பார்க்கணும்”.
“சோட்டிமா நிஜமா என்னைத் திட்டமாட்டிங்களா?”.
அவள் தன்னிடம் பயப்படுவது புரிந்து “ஓகே இந்த முறை சோட்டிமா திட்ட மாட்டேன். ஆனால் இனிமேல் இது போல் செய்யக்கூடாது. உனக்கு ஏதாவது தேவையென்றால் டாடி,மம்மியிடம் தான் முதலில் கேட்கவேண்டும் இல்லாவிட்டால் சோட்டிமா கிட்ட கேளு. வாங்கித்தருகிறேன்”.
அதுவரை தன் முகம் காட்டாமல் மறைத்திருந்தவள் ஃபோனை கையில் எடுத்து அதன் திரையில் தெரிந்த சோட்டுவை பார்த்து “நிஜமா சோட்டுமா?. உங்க கிட்ட கேட்டா வாங்கித்தருவிங்களா?” என்று உற்சாகமாக கேட்க,
” லயா குட்டிக்கு கண்டிப்பாக வாங்கித்தருவேன்” என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்க,
“எனக்கு பூரி அங்கிள் வேணும் சோட்டுமா … பிளீஸ்….” என்ற லயா குரலில் கெஞ்சல் இருக்க, ஒரு விதமான பிடிவாதம் முகத்தில் தெரிந்தது.