லயாவின் பேச்சில் திகைத்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் “பூரி அங்கிளா?. அது யாரு?. எந்த கடையில் கிடைப்பார்?. பூரி அங்கிள் என்றால் அவர் பூரி போல் உப்பி இப்படி இருப்பாரா?” என்று தன் கன்னத்தில் காற்றை அடக்கி, உப்பலாக சோட்டு செய்து காட்ட, லயா “ஹாஹா..” என்று வாய் விட்டு சிரித்து “சோட்டிமா… நீங்கள்..உங்க முகம் பலூன் மாதிரி இருக்கு”.
“ஆனா பூரி அங்கிள் கன்னம் குட்டியா பாணி பூரி மாதிரி இருக்கும்”.
“ஓ….இது வேறா?”.
“சோட்டிமா, எனக்கு பூரி அங்கிள் வேணும். நீங்க அவர வீட்டுக்கு கூட்டீட்டு வாங்க”.
” லயாக்கு எதுக்கு பூரி அங்கிள் வேண்டும்?”,
“எங்கூட விளையாட ,கார்ல ரவுண்டு போக. எல்லாத்துக்கும்”.
“உன் கூட விளையாடத் தான் ரியா குட்டி இருக்கா. மம்மி இருக்காங்க. கார் ரவுண்டு கூட்டிட்டு போக டாடி இருக்காங்களே?’.
” இருக்காங்க சோட்டிமா. ஆனா, எனக்கு பூரி அங்கிளும் வேணும். அப்போ இன்னும் ரொம்ப.. ரொம்ப ஜாலியா இருக்கும். அவரு டாடிய விட உயரம் தெரியுமா?. இவ்வளவு உயரம்” என்று எழுந்து நின்று கைகளை உயர்த்தி காட்டினாள். லயா கையில் ஃபோன் இருந்ததால் அவள் உருவம் தெரியவில்லை.
அப்போது ரியாவும் கோமலும் அங்கு வந்தார்கள். “மம்மி…. சோட்டிமா என்னை திட்டவேயில்லை தெரியுமா?. பொம்மையை பூரி அங்கிள் கிட்ட திரும்ப கொடுக்கவேண்டாம். நீயே வெச்சுக்கோன்னு சோட்டிமாவே சொல்லிட்டாங்க ரியா. ஜாலி… ஜாலி…” என்று கட்டிலில் குதித்தாள். “ஏ… ஜாலி” என்று ரியாவும் கட்டிலில் ஏறி அவளோடு சேர்ந்து கொள்ள,
கோமலோ லயா தன்னிடம் பேசிவிட்டாள் என்று சந்தோசத்தோடு அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“லயா, பார்த்து இரண்டு பேரும் விழுந்து விடாதீர்கள். பார்த்து கவனம் ஃபோனை கீழே போட்டு விடாதே. அக்கா, அவர்களைப் பிடித்து ஒரு இடத்தில் உட்கார வையுங்களேன்”.
” பாரு, இப்போ மட்டும் மம்மி யாம். இந்தனை நேரம் வீட்டுக்குள் இருந்த இந்த மம்மி கண்ணுக்கே தெரியவில்லை” என்று சிரித்த கோமல் கட்டிலில் வசதியாக அமர்ந்து, லயாவிடமிருந்து ஃபோனை வாங்கி, தன் எதிரில் தலையணையில் சாய்த்து வைத்து விட்டு “இங்க வாங்க” என்று லயா, ரியாவை தன் மடியில் அமர்த்திக்கொண்டாள்.
“அக்கா, இந்த லயாவாலு பெரிய ஆளாகி விட்டார்கள் தெரியுமா?. அவள் சொன்னதைக் கேட்டீர்கள் தானே….எங்கே உங்களோடு பேசினால் பொம்மையை திருப்பி கொடுக்கச்சொல்லி விடுவீர்கள் என்ற பயத்தில் தான் இத்தனை நேரம் உங்களிடம் பேசாமல் இருந்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளுக்கு அந்த பொம்மையை அவ்வளவு பிடித்திருக்கிறது அவ்வளவுதான்”.
“ஆமா சோட்டிமா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பூரி அங்கிள், நான் கேட்டதுமே வாங்கித் தந்தது”.
அந்த பதிலில் கோமல், சோட்டி இருவருக்குமே மனதிற்குள் தோன்றியது ஒன்றே ஒன்று தான். அந்த பொம்மையை மிகவும் பிடித்திருக்கிறதா?. இல்லை..அது பூரி அங்கிள் வாங்கித் தந்த பொம்மை என்பதால் மிகவும் பிடித்திருக்கிறாதா?. இப்படி நினைத்தாலும் இருவரும் அதை வெளிப்படையாக கேட்க்கவில்லை.
“மம்மி, நானும் சோட்டிமாவும் இதுக்கு பேர் வெச்சுட்டோம். என்ன பேர் தெரியுமா ரியா?. “நந்தா….” குட்டியா , கியூட்டா இருக்கில்ல ரியா?. நந்தா சோட்டிமாக்கு ரொம்ப பிடிச்ச பெயராம். லயா குட்டி, ரியா குட்டி, நந்தா குட்டி”.
“பூரி அங்கிள் கிட்ட இதுக்கு நாங்க நந்தான்னு பேர் வெச்சாச்சுன்னு சொல்லனும். என் டாய் எல்லாம் காட்டனும். ஐஸ்கிரீம் சாப்பிடனும். பாணி பூரி சாப்பிடனும். பூரி அங்கிளுக்கு நானு பூரி ஊட்டி விடனும். அப்புறம் கீழ பார்க்குக்கு பூரி அங்கிள கூட்டிட்டுப் போய் ஊஞ்சல் ஆட்டிவிடச்சொல்லி மேலவரைக்கும் உயரமா போய் ஆடனும். நானும் ரியாவும் தொட்டில நட்டுவெச்சோமே அந்த ரோஸ் செடிய காட்டணும். அப்புறம் ஸ்விம்மிங்பூலுக்கு போய் தண்ணில விளையாடனும். பூரி அங்கிளுக்கு நாம பார்த்தோமே அந்த பேருர் யானைய காட்டனும்” என இடது கன்னத்தில் ஒற்றை விரலால் தட்டியபடி யோசித்து யோசித்து விழிகளில் அபிநயத்தோடு ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போக சோட்டுவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போலாகிவிட்டது.
அதை மறைத்து “போதும்.. போதும்.. லிஸ்ட் ரொம்ப லென்தா….. போயிட்டிருக்கு” என்று வைகைப்புயல் பாணியில் சோட்டு சொல்ல , ரியாவும் லயாவும் அவரது காமெடி பார்ப்பதனால் புரிந்து கொண்டு “சோட்டிமா , வடிவேலு மாதிரி சொல்றீங்க. லென்தா போயிட்டிருக்கு” என்று இருவரும் சேர்ந்து சொல்லி சிரித்தார்கள்.
இருவரும் சிரித்து ஓய்ந்ததும், தலையை மேலே தூக்கி “பூரி அங்கிள் நம்ம வீட்டுக்கு வருவாங்கன்னு டாடி சொன்னாங்களே. எப்போ வருவாங்க மம்மி”? என்று லயா மீண்டும் அங்கேயே வந்து நிற்க, பார் என்பது போல் சோட்டுவிற்கு கோமல் சைகை செய்து , “அப்பா… இந்த பூரி அங்கிள் புராணம் கேட்க முடியலை ” என்று தலையில் கைவைக்க அப்போது ராகேஷ் வீட்டிற்குள் நுழைந்து “லயா”, “ரியா” என்று குரல் கொடுக்க, “டாடி வந்தாச்சு. போங்க, ஓடுங்க ஓடுங்க…என்று இருவரையும் கட்டிலில் இருந்து கீழே இறக்கி விட்டாள்.
அவர்கள் நகர்ந்ததும் “ஒரு நாளைக்கே இந்தப்பாடு. இதில் அந்த பூரி அங்கிள் எதிர் வீட்டுக்கு குடி வந்திருந்தால் நானும் , என் காதும் அவ்வளவுதான்”.
“எதிர் வீட்டுக்கா?. என்னக்கா சொல்கிறீர்கள்?. புரியவில்லை. எதிர் வீட்டிற்கு அவர் குடிவரப்போகிறாரா என்ன?”.
“இல்லை சோட்டி. எல்லாம் மாமா செய்த வேலைதான். என்று நடந்ததை சொல்லி “அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் திருமணமாம். அம்மா, அப்பா வந்து போக வசதியாக பெரிய வீடு தேடிக் கொண்டிருக்கிறார். நல்லவேளையாக அவரே வீடு வேண்டாம் என்று உன் மாமாவிடம் சொல்லிவிட்டார்”.
“ஒகோ…. கோமல் அக்கா அவரே லயாவை பார்த்து விட்டு உங்களிடம் வந்து அவளைப் பற்றி விசாரித்தாரா என்ன?”.
“இல்லை சோட்டி. அவர் தனியாக அமர்ந்து தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களை கவனித்தது போதெல்லாம் தெரியவில்லை. ஏன் கேட்கிறாய்?. ஒருவேளை உனக்கு வேண்டியவர்கள் யாராவது..? இல்லை உனக்கு தெரிந்தவர்களாக இருக்குமோ என்று நினைக்கிறாயோ?”.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவரது வேலை என்னவென்று சொன்னாரா?”.
“ம்ம்….ஏதோ கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி என்று சொன்னார். இங்கே கோவையில் தான் வேலை என்று சொன்னார்”.
“ஓ… கம்பெனியில் வேலை செய்கிறாரா?. அவர் பெயர் என்ன ?”.
“அச்சோ சோட்டி, ஏதோ பெயர் சொன்னார். இப்போது கொஞ்சம் கூட நினைவு வரவில்லையே. நான் கொஞ்சம் அதிகம் கேட்டிராத பெயர் தான். இந்த லயாவால் பூரி அங்கிள் தான் மனதில் பதிந்திருக்கிறது. உன் மாமாவிடம் கேட்டு சொல்லட்டுமா?”.
“வேண்டாம் அக்கா. அவ்வளவு அவசரம் ஒன்றும் இல்லை. மெதுவாகத் தேவைப்பட்டால் நானா கேட்டுக் கொள்கிறேன். லயா இவ்வளவு தூரம் அவரது புகழ் பாடும் போது யார் ?என்ன? என்று நாமும் நன்றாக விசாரித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டுமே என்று தான் கேட்டேன். ஒரு வேளை அவரை மீண்டும் சந்திக்க வேண்டிய சூழல் வந்தால் பார்ப்போம். அப்படி ஒரு நிலை வராது என்று தோன்றுகிறது அக்கா”.
” நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். எனக்கு தெரிந்து புது பொம்மை மேல் உள்ள மோகம் குறைந்ததும் லயாவே அவரை மறந்துவிடுவாள் என்று நினைக்கிறேன்”.
“ம்ம் பார்ப்போம்.அது சரி அது என்ன அந்த பொம்மைக்கு நீ நந்தா என்று பெயர் வைத்திருக்கிறாய்?. உனக்கு மிகவும் பிடித்த பெயராம்.யாரும் முக்கியமான, நெருக்கமான நபருடைய பெயரா?”.
“அச்சோ…அக்கா,நெருக்கமான , முக்கியமான நபரா?. உங்களோடு முடியவில்லை. உங்கள் கற்பனைக்கும் அளவில்லை. ஆமாம். எனக்கு மிகவும் பிடித்த, நான் மிகவும் நேசித்த உயிர் தான் நந்தா. போதுமா?. சரி எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் வைக்கட்டுமா?”.
“ஏய் …ஏய்…. சோட்டி இரு வைத்து விடாதே.,…எங்கே ஓடுகிறாய். இந்தனை நாட்கள் இல்லாமல் உன் வாயிலிருந்து ஒரு பெயர் வந்திருக்கிறது. அதுவும் ஒரு ஆணின் பெயர். நீ வேறு அவரை நேசித்திருக்கிறாய். அதனால் தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாயா?. யார் அது?. எங்கிருக்கிறார்?. பார்ப்பதற்கு அவர் எப்படி இருப்பார்?. சொல்லு சொல்லு சீக்கிரம் சொல்லு. எனக்கு எல்லாம் இன்றைக்கே தெரியனும்” என்று கோமல் அவசரப்படுத்த ,
சிரித்து விட்டு “ஆமாம் நந்தா நான் மிகவும் நேசித்த ஜீவன் தான். இப்போது எங்கிருக்கிறார் என்றெல்லாம் எனக்கு தெரியாது?. தொடர்பு விட்டு போயிற்று. இனிமேல் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் ஒரு தலை, நாலு கால், ஒரு வாலோடு இருப்பர்” என்று சொல்லிய அடுத்த நொடி ஃபோனை கட் செய்துவிட்டாள் சோட்டு.
அப்போது சட்டை பட்டன்களை கழட்டியபடி ராகேஷ் அந்த அறைக்குள் வந்தான். “என்ன கோமல் ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?. லயாதான் உன்னிடம் பேசிவிட்டாளே.. பிறகென்ன? இவ்வளவு ஆழ்ந்த யோசனை?”.
“சோட்டு பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் ராகேஷ். குழந்தைகள் எங்கே?”.
“ஹாலில் விளையாடுகிறார்கள். ஏன் சோட்டுவிற்கு என்ன?”.
“பெரிதாக ஒன்றும் இல்லை. பொம்மைக்கு நந்தா என்று பெயர் வைத்திருக்கிறாயே.. யார் அது? எப்படி இருப்பார்? என்று கேட்டதற்கு ஒரு தலை, நாலு கால், ஒரு வால் இருக்கும் என்று சிரித்து சமாளித்து வைத்து விட்டாள்”.
“ஹாஹா…. சோட்டு சின்ன கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோட்டை போட்டு உன் மூளையை திசைதிருப்பிவிட்டாள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இத்தனை நேரம் லயா பற்றி தேவையில்லாமல் யோசித்து குழம்பிக்கொண்டிருந்தவள் இப்போது சோட்டு பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறாய் பார்த்தாயா?”.
“அப்படியும் இருக்குமோ ராகேஷ்?”.
“இல்லைபா பின்னே…?.அந்த நந்தா படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவள் பிஸ்கட் போட்டு வளர்த்த தெரு நாய் பெயராக இருந்தாலும் இருக்கும். நீ ஆறடி உயரத்தில், அழகாய், அறிவாய், ஆணழகன் இப்படி சொல்லுவாள் என்று எதிர்பார்திருப்பாய். இத்தனை நாளில் உன் மனதில் யாரையாவது நினைத்து கொண்டிருந்தால் சொல்லு, உங்களுக்குள் என்ன பிரச்சினை என்றாலும் பேசித் தீர்த்து அவரையே திருமணம் செய்து வைக்கிறோம் என்று நீயும், நானும் அவளிடம் எத்தனை முறை கேட்டிருப்போம். அப்போதெல்லாம் அப்படி யாரும் இல்லை என்பதை தாண்டி வாயே திறக்காதவள், இப்போது அவளே இப்படி ஒரு பெயரைச் சொல்லும் போது கொஞ்சமாவது யோசிக்கமாட்டாயா?. மகா அழுத்தக் காரி. உன் தங்கை விஸ்வாமித்திரி என்பதை மறந்து விடாதே”.
“இருக்கட்டும் ராகேஷ். அவளை மயக்கவும் ஒரு ஆளை கடவுள் படைத்திருப்பார் தானே” .
“படைத்திருப்பார்…படைத்திருப்பார். அந்த மேனகன் எங்கிருக்கிறாரோ தெரியவில்லை. அது சரி நான் அவளையும், பூர்ணோதயனையும் சேர்த்து வைத்து காதல், கல்யாணம் என்றெல்லாம் பேசினேன் என்று அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பாயே…?”.
“அச்சச்சோ… அதை மறந்து விட்டேன் பார்த்தீர்களா?. ச்சே…உங்களை நன்றாக அவளிடம் மாட்டி விட்டிருக்கலாம். நான் இந்த பூர்ணோதயன் என்ற பெயரையே மறந்து விட்டேன். சோட்டு கேட்ட போது கொஞ்சம் கூட நினைவு இல்லை. பூரி அங்கிள் தான் நினைவில் இருந்தது”.
“சோட்டு அவரைப் பற்றி விசாரித்தாளா?. என்னவென்று?”.
“சும்மா பொதுவாகத் தான் ராகேஷ் . என்ன பெயர்?. எந்த ஊர்?. என்னவேலை?. இப்படித்தான் வேறொன்றும் இல்லை. ஆனால் லயாவைப் பார்த்தபின் அவரே உங்களிடம் வந்து முதலில் பேசினாரா? என்று தான் விசாரித்தாள்”.
“ஓ..கோ..சரி சாப்பிட எடுத்தது வை கோமல். வருகிறேன்” என்றவன் யோசனையோடு குளியலறைக்குள் நுழைந்தான்.
வெளியில் வந்தபோது கோமல் இல்லை…. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து அதில் தான் பதிவு செய்து வைத்திருந்த பூர்ணோதயன் நம்பரைப் பார்த்துக்கொண்டிருந்த போது இதழ்கள் “நந்தா” என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தான்.
அப்போது லயா அறைக்குள் ஓடிவந்து “டாடி, மம்மி உங்கள சாப்பிட கூட்பிட்டாங்க” என்றவளை அப்படியே தூக்கி “என்னடா லயாகுட்டி?. உங்க பொம்மைக்கு நந்தா என்று பெயர் வைத்திருக்கிறாயாமே. டாடியிடம் சொல்லவேயில்லை பார்த்தாயா? என்று சோகமாக முகத்தை வைத்து, உதடு பிதுக்க, இரண்டு கன்னத்தையும் தன் மென் கரங்களால் தட்டி, உதட்டையும் பிடித்து இழுத்து நேராக்கி “அப்போ நீங்க வீட்டில் இல்லையே டாடி. உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லாம்னு நினைச்சேன் டாடி . அப்போ நாங்க ஃபோன்ல சோட்டிமா கிட்ட வீடியோ கால் பேசிட்டிருந்தோமே. இப்போ உங்களுக்கு யாரு சொன்னாங்க?.மம்மியா?”.
“ம்ம்..மம்மி தான் சொன்னாங்க. “நந்தா” பெயர் நல்லா இருக்கு” .
ராகேஷ் போட்டிருந்த சட்டை காலர் நுனியைப் பிடித்து திருகியபடி “டாடி நாம… இப்போ… பூரி அங்கிளுக்கு ஃபோன் பண்ணி இந்த பொம்மைக்கு நந்தான்னு பேர் வெச்சிருக்கோம்னு சொல்லலாமா?”.
அதைக் கேட்ட ராகேஷ் முகம் கொஞ்சம் வாடியது ஆனாலும் உடனே “சொல்லலாமே. ஆனா இப்போது வேண்டாம் லயாகுட்டி. வெளியேபாருங்க எவ்வளவு இருட்டு. இந்த நேரத்தில் எல்லாரும் தூங்க போயிருப்பாங்க. பூரி அங்கிளும் தூங்கிருப்பாங்க. தொந்தரவு செய்யக்கூடாது இல்லையா?. அதனால் இன்னொரு நாள் ஃபோன் செய்து பேசலாம். ஓகேவா?”.
” ஒகே டாடி. நாளைக்கு காலைல சீக்க்க்கிரமா… இரண்டு மணிக்கு பூரி அங்கிள் கிட்ட பேசலாம்?” என்று மூன்று நான்கு விரல்களை இரண்டு கைகளிலும் நீட்டிக் காட்டியவளை “ஓகே டா” என்று சிரித்தபடியே அணைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றான்.
மாறு நாள் காலை வேளையில் உறங்கிக்கொண்டிருந்த ராகேஷ் காதிற்குள் “டாடி”, “டாடி” என்று லயாவின் மெல்லிய குரல் கேட்டது.
அவள் தன் மார்பின் அருகில் அமந்திருப்பது உணர்ந்து ஒரு கையால் அவள் முதுகோடு அணைத்தபடி “என்ன லயா” என்றான் தூக்கக்கலக்கத்தோடு கண்களைத் திறக்காமல்.
லயா, “டாடி….பூரி அங்கிள் கிட்ட இப்போ பேசலாமா?” என்றதும் பட்டென்று அவன் விழிகள் திறந்தது. எழுந்து லேசாக சாய்ந்து படுத்தபடியே பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த ரியாவை பார்த்தான். கோமலைக் காணவில்லை. குளியலறைக்குள் சத்தம் கேட்டது. லயாவை தூக்கி தன் நெஞ்சில் அமரவைத்து, லயாகுட்டிக்கு தூக்கம் வரவில்லையா? என்று கேட்க,
” ம்ம் கூம். மம்மி வர்ரதுக்குள்ள பேசலாமா?” என்று ரகசியமாய் விழிகள் மின்ன கேட்க, மறுக்க முடியவில்லை.
கைநீட்டி ஃபோனை எடுத்தவன் “நாம சோட்டிமாக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவோமே.. அதுபோல பூரி அங்கிளுக்கும் அனுப்புவோமா?” எனவும் “ம்ம்” என்று வேகமாக தலையாட்டினாள்.
“சரி முதலில் லயாகுட்டி என்ன சொல்லப்போறிங்க?. எனக்கு சொல்லிக்காட்டுங்க பார்ப்போம்”.
“முதல்ல.. பூரி அங்கிள் எங்கா வீட்டுக்கு எப்போ வருவீங்க?. சீக்கிரம் வாங்க. அப்புறம்…. நீங்க குடுத்த பொம்மைக்கு நந்தான்னு பேர் வெச்சிருக்கோம்” என்று லயா சொன்னதை கேட்டு, மறுமுறையும் அதையே சொல்லவைத்து இரண்டு தனித்தனி மெசேஜாக பதிவு செய்தவன் முதலில் அதில் ஒன்றை மட்டும் பூர்ணோதயனுக்கு அனுப்பி வைத்தான்.