லயாவின் வாய்ஸ் மெசேஜ் கேட்டபின்பும் பூர்ணோதயனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. அன்றைய தினம் லயாதான் பூரி அங்கிளைப் பற்றி இரண்டு முறை பேச்சை எடுத்தாள். பேச்சை கொஞ்சம் திசை திருப்பி விட மறுநாள் அதுவும் குறைந்து போயிற்று. அடுத்து வந்த நாட்களில் குழந்தைகளோடு வழக்கத்திற்கு அதிகமான நேரத்தை செலவிட்டான் ராகேஷ். மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுகள். புது புது இடங்கள். வனவிலங்குகள் பூங்கா , தீம் பார்க் என்று இது வரை பார்த்திராத பல விசயங்களை அறிமுகம் செய்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தான். பத்து நாட்களுக்கு மேல் கடந்திருக்கும். லயாவும் அவ்வப்போது நந்தா.. நந்தா… என்று பொம்மையை வைத்து விளையாடினாலும் பூர்ணோதயனை பற்றி எதுவும் கேட்கவில்லை. சுத்தமாக மறந்து விட்டாள் என்று தான் எல்லோரும் நினைத்தனர்.
டெல்லியில் இருந்து ராகேஷின் தந்தை சர்மாவும், தாய் பூனமும் கோவை வந்தனர். முதலிரண்டு நாட்கள் அவர்களோடு சகஜமாக பேசி விளையாடிய லயா மூன்றாவது நாள் கொஞ்சம் வாட்டத்தோடு இருந்தாள். சுறுசுறுப்பான குழந்தை கட்டிலில் ஓய்ந்தே கிடப்பதோடல்லாமல் ரியாவிடமிருந்தும் விலகியிருக்கத்தொடங்கினாள். அதிக நேரம் தனிமையை நாடினாள் மாமனார், மாமியாரின் விருந்தோம்பலில் கவனமாக இருந்த கோமல் இதை கவனிக்கவில்லை.
ராகேஷ் கூட வேலைகளுக்கு மத்தியில் இதை கவனிக்கவில்லை தான். மாலை வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல் “லயா, ரியா..” என்று குரல் கொடுக்க ரியா மட்டும் ஓடிவந்து “டாடி, லயாக்கு காய்ச்சல். படுத்துட்டே இருக்கா. விளையாட கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்லிட்டா. நேத்தும் இப்படித்தான் சொல்லிட்டா. இன்னைக்கு அவளுக்கு சோட்டிமா கிட்ட போகணுமாம்” என்று எப்போதும் தன்னுடனே விளையாட வரும் தன் சகோதரி வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தந்தையிடம் சொன்னாள்.
” சரி, நீங்க அம்மா கிட்ட போய், டாடிக்கு டீ போடச் சொல்லுங்க பார்ப்போம்” என்று ரியாவை அனுப்பி வைத்தவன் படுக்கை அறையில் படுத்திருந்த லயாவிடம் சென்று, பக்கத்தில் அமர்ந்து, ” லயா குட்டிக்கு காய்ச்சலா?. இல்லையே…அப்போ உடம்புக்கு என்ன பண்ணுது?. ஐஸ்கிரீம் சாப்பிட்டது சேரவில்லையா?. இல்லை தண்ணீரில் விளையாடியது சேரவில்லையா?” என்று நெற்றி வருடி “ஏன் ரியா கூட விளையாடவில்லை?. கால் வலிக்கிறாதா? ” என்று கால்களை எடுத்து தன் மடியில் வைத்து மென்மையாக அழுத்தி பின் உள்ளங்கால்களில் குறுகுறுப்பூட்ட, அடக்க முடியாமல் சத்தமாக சிரித்து எழுந்து உட்கார்ந்தாள்.
அந்த சத்தம் கேட்டு பூனம் அந்த அறைக்குள் எட்டிப்பார்க்க, லயாவின் மலர்ந்த முகம் இருளப்பிக்கொண்டது.
திரும்பி தன் தாய் நிற்பதைப் பார்த்தவன் “என்னம்மா?” என்று கேட்டதும், “ஒன்றுமில்லையே” என்று நகர்ந்து விட்டார்.
பூனம் அவனுக்கு ஒரு அற்புதமான தாயார் தான். ஆனால் மிகமோசமான மாமியார் என்பதை அவனே அறிவான். நிறைய விசயத்தை கோமல் தன்னிடம் சொன்னதில்லை என்றாலும், தங்களுக்கு குழந்தை பேறு தாமதமான காலத்தில் கோமலை தான் இல்லாத சமயத்தில் எவ்வாறு வார்த்தைகளால் வாட்டி எடுத்தார் என்று அவனது தந்தையே அவனிடம் சொல்லியிருக்கிறார்.
இப்போதும் மகனுக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆதங்கத்தோடு கோமலை ஏதாவது சொல்லிவிடுவார்.
கோமல் இவர் இப்படித்தான். இனி இவர்களை மாற்ற முடியாது. எங்களுக்கு லயா, ரியா இரண்டு பேரே போதும் என்று அதை கடந்து வர பழகிக் கொண்டாள். ஆனால் குழந்தைகள்?. பூனம் ஏதாவது சொன்னால் ரியா துடுக்காக பதில் சொல்லிவிட்டு மறந்து விடுவாள். லயா அப்படி இல்லை. உதாரணத்திற்கு விளையாட்டிற்கு பூனம் உன்னை உங்க அப்பா சந்தையில் இருந்து தான் வாங்கிட்டு வந்தாங்க என்று சொன்னால் ரியா , “ஓ…..அப்போ உங்க அம்மா, அப்பா உங்கள எந்த சந்தையில வாங்கிட்டு வந்தாங்க பாட்டி “என்று கேட்டுவிட்டு ஓடிவிடுவாள். ராகேஷ் வந்ததும் “பாட்டி இப்படி சொன்னாங்க டாடி. அவங்களை திட்டுங்க. இங்கிருந்து போகச்சொல்லுங்க. இந்த பாட்டி எனக்கும், லயாக்கும் வேண்டாம்” என்று சொல்லுவாள். ஆனால் லயா அப்படி இல்லை. எதுவும் சொல்லாமல் ஏதாவது ஒரு மூலையில் சத்தம் இல்லாமல் மௌனமாக அமர்ந்து விடுவாள். இன்றும் அதுபோல் தான் தாயார் ஏதோ சொல்லியிருக்க வேண்டும்.
பிரச்சினையின் நூலை ஒருவாறு பிடித்து விட்டவன் லயாவிடம் திரும்பி அவளை அள்ளி எடுத்து மடியில் கிடத்தி “பாட்டி, லயா குட்டியை ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டான்.
எழுந்து நின்று அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தவள் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் “டாடி எனக்கு பூரி அங்கிள் வேணும். எனக்கு சோட்டிமா கிட்ட பேசணும்” என்று மட்டும் சொல்லியவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள்.
லயா , ரியா இருவருமே கோமலிடமோ தன்னிடமோ ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் தங்களோடு சோட்டுவையும் சேர்த்துக் கொண்டு அவளது சிபாரிசில் காரியம் சாதிப்பார்கள். சில நேரம் உடல் சோர்வாகவோ, லயா, ரியா இருவருக்கும் இடையே சண்டை வந்து மனச்சோர்வாகவோ இருக்கும்போது சோட்டுவிடம் ஃபோனில் பேசுவது அவர்களது வழக்கம் தான். சோட்டு இருவருக்கும் சமாதானம் செய்து பேச வைப்பதும் நடக்கும். இப்போது புதிதாக சோட்டுவோடு, பூரி அங்கிளும் வேண்டும் என்று லயா சொன்னபோது, குழந்தையின் மனநிலையை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
நீண்ட பெருமூச்சை விட்டு தன் ஃபோனை எடுத்தவன் “ஓகே, நாம் முதலில் சோட்டுமாவிடம் பேசுவோமா?” என்றதும் கழுத்தை சுற்றி வளைத்து சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து, அமைதியாக அவன் முகம் பார்த்தாள். அவள் தலையோடு முட்டி விளையாடியபடியே சோட்டுவிற்கு அழைப்பு விடுத்தான்.
“ஹலோ மாமா. என்ன இந்த நேரத்தில் அழைத்து இருக்கிறீர்கள் ?. அதுவும் நீங்கள். அக்கா எப்படி இருக்கிறார்கள்? உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?”.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை சோட்டு. நன்றாகத்தான் இருக்கிறாள். அம்மா, அப்பா வந்திருப்பதால் விதவிதமாக சமையல் செய்து அசத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறாள். லயா தான் உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னாள். அதற்காகத்தான் ஃபோன் செய்தேன். இரு அவளிடம் கொடுக்கிறேன்” என்று சொல்லி செல்ஃபோனில் ஸ்பீக்கரை ஆன் செய்து லயாவிடம் கொடுத்தான்.
அதை வாங்கி காதில் வைத்தவள் “சோட்டுமா நீங்க இங்க எப்ப வருவீங்க?” என்ற குரலில் ஏக்கம் தெரிந்தது.
“நானும் , மாமாவும் சீக்கிரம் லயாவையும் , ரியாவையும் பார்ப்பதற்காக கோவை வந்து விடுவோம். வரும்போது லயாவுக்கு என்ன வாங்கி வர வேண்டும்” என்று இயல்பாக கேட்டுவிட “நானு உங்ககிட்ட அன்னைக்கே கேட்டேனே. எனக்கு பூரி அங்கிள் வேணும். நீங்க சரி சொன்னிங்க. நீங்க சீக்கிரம் இங்க வாங்க” .
“ஆ….. மறுபடியும் பூரி அங்கிள் புராணமா?. சோட்டுமா அன்னைக்கு உன்னிடம் என்ன சொன்னேன்?. நீ வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய பிறகும் பூரி அங்கிள் பதில் சொல்லவில்லை என்றால் அவரை சும்மா சும்மா தொந்தரவு செய்யக்கூடாது. அவருக்கு அதிக வேலை இருக்கும் அவரே கூப்பிட்டால் அப்போது பேசலாம் என்று சொன்னேன் இல்லையா?. இது என்ன மீண்டும் பூரி அங்கிள் என்று ஆரம்பிக்கிறாய்?” என்று கொஞ்சம் கடுப்பாக சோட்டு சொல்ல,
ஃபோனை ராகேஷ் கையில் கொடுத்து விட்டு, கட்டிலில் கவிழ்ந்து படுத்து கொண்டாள். மறுபக்கம் அமைதியாக இருப்பதை பார்த்து “லயா.. லயா.. லயா… இருக்கிறாயா?” என்று சோட்டு கேட்க, “ஹலோ சோட்டு, அவள் ஃபோனை என்னிடம் கொடுத்துவிட்டு போய்விட்டாள். நீ எப்போதும் அவளிடம் இப்படி கோபமாக பேச மாட்டாயே?. இன்று உனக்கு என்ன ஆயிற்று?.°”.
“அது இல்லை மாமா. ஏதோ ஒரு முறை தற்செயலாக பார்த்த ஒருவரைப் பற்றி இப்படி கேட்டுக் கொண்டே இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. எரிச்சலாக இருக்கிறது. அவரும் இவளது மெசேஜ் க்கு பதில் சொல்லவில்லை. இவளிடம் பேசவும் இல்லை. இத்தனை நாட்களில் அவரது பேச்சை எடுக்காததால் அவரை இவள் மறந்துவிட்டாள் என்று நினைத்து நிம்மதியாக இருந்தேன். இப்போது திடீரென்று மீண்டும் ஆரம்பிக்கிறாள். லயாவை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. இந்த விசயத்தில் வழக்கத்திற்கு அதிகமாக பிடிவாதம் பிடிப்பது போலிருக்கிறது”.
” ம்ம் …எனக்கும் அதே யோசனைதான். தற்செயலான சந்திப்பு தான். ஆனால் குழந்தை இவ்வளவு தூரம் கேட்கும் போது… “
“என்னை என்ன மாமா செய்யச் சொல்கிறீர்கள்?. அவள் பூரி அங்கிள் வேண்டும் என்கிறாள். இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இத்தனை நாட்களில் உங்களது ஃபோன் நம்பர் இருந்தும் ஒரு முறை கூட பேசாத நபரிடம் இவளை மீண்டும் பேசவைப்பதா?. இல்லை நேரில் தான் அழைத்துச் செல்லமுடியுமா?. அவர் நமக்கு உறவு கூட இல்லை. எந்த உரிமையில் அதெல்லாம் செய்வது?. சரி, நேரில் வந்து பேசிக் கொள்வோம் என்று விட்டு வைத்திருக்கின்றேன்”.
” அதுவும் சரிதான். குழந்தைகள் தானே. தங்கள் மனதில் இருப்பதை தெளிவாகச் சொல்லக் கூட தெரியாது நேரில் வந்து மெதுவாக நீ கேட்டால் உனக்கும் புரியும். முடிந்த அளவு இங்கு சீக்கிரம் வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய். ஒன்று கவலைப்படாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஆறுதல் கூறி வைத்து விட்டான்.
சோட்டு சொல்வது போல் லயா பூர்ணோதயனை மறந்து கூட இருந்திருக்கலாம் . ஒருவேளை மீண்டும் பூரி அங்கிள் என்று பேச்சை எடுப்பதற்கு தன் தாயார் தான் காரணமோ?. அப்படி என்ன சொல்லி இருப்பார் என்ற யோசனை ஓடும் போது டீயோடு கோமல் உள்ளே நுழைந்தாள்.
அதை வாங்கி பருகியபடி யோசனையோடு ராகேஷ் அமர்ந்திருக்க, மெல்ல அவன் தொடை மீது கை வைத்து லயாவை காட்டி என்ன என்பது போல் கேட்டாள்.
” ஒன்றும் இல்லை”என்று தலையசைத்தவன் “ரியா..” என்று குரல் கொடுத்தான். “என்ன டாடி?”என்று ஓடி வந்த குழந்தையை அருகில் அமர்த்தி கொண்டு “இரண்டு பேரும் பாட்டி, தாத்தா கூட விளையாடினீர்களா?”.
“ஓ….விளையாடினோமே டாடி. கிச்சன் செட் வச்சு சமைச்சு பாட்டிக்கு கொடுத்தோம். தாத்தா ஒரு கதை சொன்னாங்க. அப்புறம் எங்களுக்கு பாட்டி ஒரு கதை சொன்னாங்க. எனக்கு அந்த கதை பிடிக்கல. லயாவும் பிடிக்கலைனு சொன்னா. அவளை மட்டும் பிடிச்சு வெச்சு பாட்டி வேற என்னமோ கதைய சொல்லிட்டு இருந்தாங்க. நான் கார்ட்டூன் பார்க்க போயிட்டேன். வந்து விளையாட கூப்பிட்டால் லயா வரலைன்னு சொல்லிட்டா. லயாக்கு காய்சலா டாடி?. ஏ…லயா எழுந்து வா. நாம நந்தினி கூடப் போய் கீழ பார்க்கில் விளையாடலாம்” என்று லயாவின் அருகில் படுத்து
இதைக் கேட்ட ராகேஷ் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். குழந்தைகள் கவனம் அவர்கள் மேல் இல்லை என்பதை கவனித்து விட்டு “இதோ பாருங்கள். உங்கள் அம்மா என்னை எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். உங்களுக்காக பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் குழந்தைகளைப் பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று கோமல் கோபத்தோடு கூற, குடித்து முடித்த டீ கப்பை கோமலிடம் கொடுத்து” குழந்தைகளை கிளப்பி, நீயும் கிளம்பு. எங்காவது வெளியில் போய் வருவோம்” என்றவன் லயாவை சகஜ நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இருந்த ரியாவுடன் சேர்ந்து கொண்டான்.
குழந்தைகளை வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாமல் வேறு வழி இன்றி கோமல் எழுந்து சென்று சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த போது லயாவும், ரியாவும் ஆளுக்கு ஒரு தலையணைகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, கட்டிலைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த ராகேஷை ஆளுக்கொரு ஒரு பக்கமாக துரத்திப் பிடித்து அடிக்க முயன்று கொண்டு இருந்தார்கள்.
இருவரிடமும் சிக்காமல் ஓடியவன், திடீரென்று கட்டிலில் ஏறி அதன் நடுவே படுத்துக்கொள்ள குழந்தைகள் இரண்டும் தலையணையை அவன் மீது வீசி விட்டு, அவர்களும் கட்டலின் மீது ஏறி ஆளுக்கொரு புறப்புறமாக அவன் மீது சாய்ந்து அவனை அடிக்க, ராகேஷ் அவர்களது பிஞ்சு கைகளில் சுகமாக அடி வாங்கி” நோ…நோ…டாடி பாவ், டாடி பாவ்” என்று சிரித்துக் கொண்டிருந்த காட்சி கோமலுக்கு மனநிறைவைத் தந்தது. கடவுளே இதே சந்தோஷத்தை இந்த வீட்டில் இப்படியே வை என்று வேண்டிக் கொண்டாள்.
கோமலும் அவர்களோடு சேர்ந்து விளையாட்டிற்கு ராகேஷை அடிக்க குழந்தைகளுக்கு இன்னும் உற்சாகமும், மகிழ்ச்சியும் தொற்றிக் கொண்டது. அந்த அழகான குடும்பம் சிரித்து ஓய்ந்த பின்பு “சரி வெளியே போவோமா?” என்று குழந்தைகளை பார்த்து கேட்க ,அவர்கள் தலையசைத்ததும் கோமலிடம் “சீக்கிரம் இவர்களை கிளப்பி, நீயும் கிளம்பு” என்றவன் எழுந்து தன்னுடைய ஃபோனை எடுத்தான். “நான் இந்த டிரஸ்.. நான் இந்த டிரஸ்.. மம்மி நீங்க எந்த கலர்?” என்று அவர்களது உடைகள் இருந்த செல்ஃபை திறந்து தேடுதலில் ஈடுபட்டிருக்க , ஒரு முறை திரும்பி லயாவை பார்த்தவன் இத்தனை நாட்கள் அனுப்பாமல் வைத்திருந்த மற்றொரு மெசேஜை பூர்ணோதயனுக்கு அனுப்பி வைத்தான்.
சில நொடிகளில் அவன் அதைக் கேட்டு விட்டதன் அடையாளமாக இரண்டு நீல நிற குறியீடுகள் தெரிந்தது. ஆனாலும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
ஒரு வாரம் கடந்திருக்கும். இந்த வாரத்தில் சோட்டுவும் அவளது அண்ணனும் கோவை வருவதாக இருந்தது. ஒரு நாள் காலை வேளை எட்டு முப்பது மணிக்கு ராகேஷ் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்த கோமல் பூர்ணோதயனை கண்டு திகைத்து நிற்க, “யாரு கோமல்?” என்று அங்கு வந்த ராகேஷ் “ஓ… பூர்ணோதயன்..! வாங்க”, என்று விட கோமலைத் தாண்டி உள்ளே வந்தவன் “லயா.., ரியா இன்னும் எழுந்திருக்கவில்லையா?” என்று பார்வையை அலைய விட்டான்.
“தாத்தா பாட்டியோடு வாக்கிங் போயிருக்கிறார்கள் . வரும் நேரம் தான். வாங்க உட்காருங்க”என்று உபரித்து, “கோமல் டீ கொண்டு வா..” என்றதுதான் கோமல் என்ற சிலைக்கு உயிர் வந்தது.
“ஆங்… “என்று நகர்தவள் முகத்தில் லேசான பதட்டம். “சொல்லுங்கள் பூர்ணோதயன். என்ன இந்த பக்கம்?. வீடு பார்க்கலாம் என்று வந்தீர்களா? முதலிலேயே சொல்லிருந்தால் நான் ஓனரிடம் பேசி, சாவி வாங்கி வைத்திருப்பேன்”.
“ராகேஷ் நான் அவரிடம் பேசி, அட்வான்ஸ் கொடுத்து, சாவி வாங்கி விட்டேன். நீங்கள் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் உங்கள் பெயர் சொன்னதுமே புரிந்து கொண்டார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக எல்லா ஃபார்மாலிட்டிசையும் முடித்து விட்டேன். இன்று பால் காய்ச்சலாம் என்று தான் வந்தேன். நல்ல நேரம் ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரை சொல்லியிருக்கிறார்கள். இதற்காக வீட்டில் இருந்து அம்மாவையோ, அப்பாவையோ அலையவைக்க வேண்டாமே. பால் தானே நாமே காய்ச்சி விடலாம் என்று விட்டுவிட்டேன். எதிரே நீங்கள் இருக்கும் தைரியமும் தான்”.
“ஓ.. தாராளமாக. ஆனால் பாருங்கள்… உங்களுக்காவது பால் காய்ச்சுவது எப்படி என்று தெரியும். எனக்கு அதுவும் தெரியாது. எந்த விதத்தில் உங்களுக்கு நான் உதவ முடியும் என்று தெரியவில்லை”.
“ஹா ஹா ஹா” என்று சிரித்து “பெரிய உதவி எல்லாம் வேண்டாம் ராகேஷ். நான் ஒருவனாக பால் காய்ச்சுவதற்கு பதிலாக நீங்கள் குடும்பத்தோடு என்னோடு வந்தால் போதும். மிகவும் சந்தோஷப்படுவேன்”.
“கண்டிப்பாக..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது லயாவும், ரியாவும வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
குனிந்து ஒரு செருப்பின் வாரை பிரித்து கழட்டிக்கொண்டிருந்த லயா அது கொஞ்சம் இறுக்கமாக இருக்க குனிந்த வாக்கில் தன் இரண்டு கால்களுக்கு இடையில் தந்தையை பார்த்து “டாடி கழட்ட முடியலை” என்றவளுக்கு தந்தையின் அருகில் சிரித்தபடி அமர்ந்திருந்த பூர்ணோதயன் தலைகீழாக தெரிய குழம்பி, நிமிர்ந்து திரும்பி நின்று ஒரு நொடி பார்த்தாள்.
அடுத்த நொடி செருப்பைக் கூட கழட்டாமல் “ஐ… பூரி அங்கிள்” என்று ஓடிவர அவளை எதிர் கொண்டு லயாகுட்டி என்று அள்ளிக் கொண்டான்.
ரியா மெதுவாக வந்து ராகேஷ் மடியில் அமர்ந்து கொண்டாள்.
அவன் கழுத்தை கட்டி கன்னத்தில் முத்தமிட்டு “டாடி பூரி அங்கிள் நீங்க தான் வர சொன்னீங்களா?” என்ற போது ராகேஷ் அமைதியாக இருக்க, “ஆமா டாடி தான் உன்னுடைய வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வச்சிருந்தாங்க. அங்கிளுக்கு கொஞ்சம் வேலை. அதனால் தான் உடனே வர முடியவில்லை. சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்று மன்னிப்பது போல் கேட்க ,
“சோட்டிமா சொன்னாங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். தொந்தரவு பண்ணக்கூடாது. முடிஞ்சதும் நீங்க வருவீங்கன்னு. அதே மாதிரி வந்துட்டிங்க. நீங்க சோ ஸீவிட்” என்று அன்று மாலில் செய்தது போலவே அவன் இரண்டு கன்னங்களை பிடித்து கிள்ளி இழுத்து தன் உதட்டில் வைத்து உம்மா என்றவள் “பாட்டி பாத்தீங்களா?. இதுதான் என்னோட பூரி அங்கிள்” என்று பூனமிற்கு அறிமுகம் செய்தாள்.
“இது என்னுடைய அம்மா பூனம் , அப்பா சர்மா” என்று பூர்ணோதயனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அமைதியாக உள்ளே வந்த பூனம் கோமலிடம் “யார் இது?” என்று விசாரித்தார். கோமலுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்க, விருப்பமும் இல்லை. நேரமும் இல்லை. அதனால் “ராகேஷ் ஃபிரண்டு தான்” என்று முடித்து விட்டாள்.
கோமல் இன்னும் டீ கொண்டு வராமல் இருக்க “ஒரு நிமிடம்” என்ற ராகேஷ் ரியாவை தூக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தபோது மேடை மேல் கொட்டி இருந்த டீயை கோமல் அவசர அவசரமாக துடைத்துக் கொண்டிருக்க, இரண்டாவது முறை டீ போடுவதற்கு தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.
அவள் முகத்தில் பதட்டத்தையும் , சஞ்சலத்தையும் கண்டவன் “கோமல்” என்று ஆறுதலாக தோளில் கை வைத்து அழுத்த “நான் அவர் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்டேன். அன்று எனக்கு வீடு வேண்டாம் என்று அவ்வளவு உறுதியாக மறுத்து விட்டு இப்போது திடீரென்று வந்து நம்மிடம் கூட சொல்லாமல் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு பால்காய்ச்ச வேண்டும் என்று வந்துநிற்கிறார். எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது ராகேஷ். எனக்கு சொல்லத் தெரியவில்லை. எல்லாம் உங்களால் தான். உங்களை யார் இங்கு வீடு இருக்கிறது என்று அவரிடம் சொல்லச்சொன்னது” என்றதும்,
” சரி, மற்றதை பிறகு பார்ப்போம். நீ சீக்கிரம் டீ போட்டு எடுத்து வா. அவரை அங்கு தனியாக உட்கார வைத்து விட்டு நான் இங்கு நின்று உன்னோடு பேசிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது” என்றவன் ரியாவை தூக்கிக் கொண்டு வெளியேறினான்.
“இரண்டு பேரும் சீக்கிரம் குளித்து விட்டு வாங்க. சாமி கும்பிடுவோம்” என்று லயா, ரியா வை அனுப்பி வைத்தவன் “ராகேஷ் டிபன் எதுவும் செய்ய வேண்டாம் என்று கோமலிடம் சொல்லிவிடுங்கள். எல்லோருக்கும் சேர்த்து நான் ஆர்டர் செய்து விட்டேன்” என பூர்ணோதயன் சொன்னதும்,
“அதெல்லாம் எதற்கு பூர்ணோதயன்?”.
“இருக்கட்டும் ராகேஷ் இதில் என்ன சிரமம். அப்புறம், இனி பக்கத்தில் இருக்கப் போகிறோம். பூர்ணோதயன் வேண்டாமே. உதயா என்று சொல்லுங்கள் ” என்று சொல்ல ராகேஷூக்கு மறுக்க முடியவில்லை.
பால் காய்ச்ச தேவையானது எல்லாம் ஒரு ஆள் கொண்டுவந்து புது வீட்டில் வைத்துவிட்டு போயிருக்க நல்ல நேரத்தில் பால் காய்ச்சி சாமி கும்பிட்டு முடித்தனர். ராகேஷ் வீட்டில் இருந்து லயா எதிர் வீட்டில் நுழைந்த கணம் முதல் உதயன் கையில் தான். இவ்வளவு ஏன்?. சாமிக்கு படைத்த பின் கோமலை அனைவருக்கும் கொடுக்கச் சொல்லிவிட்டு, அவனே தனியாக கொஞ்சம் பால் எடுத்து ஆற்றி லயாவுக்கு புகட்ட எப்போதும் வெறும் பால் வேண்டாம் என்று சொல்லும் லயா மறுக்காமல் குடித்தது இன்னும் ஆச்சரியம். .
அன்றே சாமான்கள் எல்லாம் வந்து இறங்கியது. லயாவும், ரியாவும் உதயன் வீட்டிற்கும், அவர்கள் வீட்டிற்கும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். லயா உதயன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவனோடு அதிக நேரம் செலவழிக்க வேறு வழியில்லாமல் ரியாவும் அவளோடு சேர்ந்து கொண்டாள்.
ராகேஷ் குழந்தைகளை ஏதும் சொல்லவேண்டாம். அவர்கள் போக்கில் விடு என்று சொல்லி வைத்திருந்ததால் கோமலுக்கு கையை கட்டி வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. உதயனும் அவன் வேலை நேரம் போக குழந்தைகளிடம் விளையாடினான். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தான். சில நாடுகளில் ராகேஷிட்கும் உதயனுக்கு இடையே மெல்லி நட்பு இழையோடியது. குறை சொல்ல ஏதும் இல்லாததும் கோமல் அமைதியாக இருக்க ஒரு காரணம்.
அன்று சோட்டு கோவை வரும் நாள். அவள் வருகைக்காக காலையிலேயே ராகேஷ், லயா, ரியாவோடு கீழே பார்க்குக்கு சென்று விளையாடியபடியே காத்திருந்தனர்.
கால் டாக்சியில் வந்திறங்கிய சோட்டுவைப்பார்த்ததும் “சோட்டுமா…” என்று லாயா ஓட அவள் அருகில் வரும் சமயம் மண்டியிட்டு அவளை அணைத்துக் கொள்ள, இரண்டாவதாக ரியாவும வந்து சேர்ந்து கொண்டாள்.
இருவரையும் விலக்கி நிறுத்தி அழகு பார்த்தவள் “இரண்டு பேரும் கொஞ்சம் வளர்ந்து விட்டீர்கள்” என்று இரண்டு பேரின் கன்னத்தை கிள்ளி தன் உதட்டில் வைத்து “உம்மா….” என்று சொல்ல லயாவும் சோட்டுவின் கன்னம் கிள்ளி அதே போல் செய்தாள்.
ராகேஷ் “போதும் மேலே போகலாம்” என்றதும் சோட்டுவின் ஆளுக்கொரு கையைப்பிடித்து கதை பேசிக்கொண்டே நடக்க லக்கேஜ்களை இழுத்து கொண்டு வருவது ராகேஷின் வேலையாகிவிட்டது.
லிஃப்டில் அவர்களது தளம் வந்து திறந்தபோது லிஃப்டிற்காக உதயன் காத்திருந்தான். குனிந்து குழந்தைகளிடம் பேசியபடி இருந்தவள் லயாவின் “பூரி அங்கிள்” என்ற அழைப்பில் நிமிர்ந்து ஃபோனை கையில் வைத்து அதில் ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்த உதயனைப்பார்தாள்.
அதே நேரம் “லயா குட்டி.. என்ன இன்றைக்கு காலையிலேயே பார்க் போயாச்சு?” என்றவன் அப்போதும் சோட்டுவை கவனிக்கவில்லை.
“ஆமா பூரி அங்கிள். சோட்டிமா வந்தாச்சு. இதுதான் சோட்டிமா. சோட்டிமா இதுதான் பூரி அங்கிள்” என்று அறிமுகம் செய்ய ஒரு நொடி அவள் மேல் பார்வை பதித்தவன் “ஹாய்..” என்றவன் அருகில் நின்றிருந்த ராகேஷின் காதோரம் குனிந்து கொஞ்சம் மெல்லிய குரலில் “இதுதான் அந்த விஷ்வாமித்திரியா?” என்று கேட்டது சோட்டுவிற்கு தெளிவாக கேட்டது.
இப்படி மாட்டி வைத்து விட்டாயே என்பது போல் உதயனைப் பார்த்தவன் சோட்டுவின் முன் எதையும் சொல்ல முடியாமல் பேச்சை மாற்றும் விதமாக “இது உதயன். பூர்ணோதயன். எதிர் பிளாட்டிற்கு குடிவந்திருக்கிறார்” என்றபடி லிஃப்டை விட்டு வெளியேற,
“ஓகே ராகேஷ். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. லயா குட்டி, ரியா குட்டி சாயங்காலம் பார்க்கலாம்” என்று ஃபோனில் கண் வைத்தபடியே சொல்லி லிஃப்டை இயக்கி கீழே சென்றான்.
“நாங்க போய் சோட்டுமா வந்தாச்சு என்று மம்மியிடம் சொல்லப் போறோம் வா லயா” என்று ரியா ஓட லயாவும் அவள் பின்னால் ஓடினாள்.
சோட்டு எதுவும் பேசாமல் உள்ளே செல்ல “சாரி சோட்டு ஏதோ ஒரு முறை உன்னைப் பற்றி பேசும் போது விஷ்வாமித்திரி என்று சொன்னேன். அதை நினைவு வைத்திருந்து உன்னிடம் மாட்டி வைப்பார் என்று தெரியவில்லை”.
“பரவாயில்லை மாமா. ஆமாம் இவர் மட்டும் தானா?. இவர் குடும்பம் எல்லாம்?.
“அம்மா, அப்பா திருச்சியில். இவர் ஒரே மகன். இன்னும் திருமணம் ஆகவில்லை. பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். நேற்று கூட விரைவில் எதிர் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்”.
“ஓகோ… எனக்குத் தலை கொஞ்சம் வலிக்கிறது மாமா. நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வருகிறேன்” என்று உள்ளே நுழைந்தவள் கோமல், சர்மா, பூனமிடம் நலம் விசாரித்து விட்டு சொன்னது போல் படுத்து விட்டாள்.