ஹாலில் நியூஸ் பேப்பரை கையில் வைத்துக் கொண்டு, அதை வாசிக்காமல் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்து மூழ்கியிருந்த ராகேஷின் அருகில் அமர்ந்து, சட்டென்று அவனது தொடையில் அடித்தவள் அவன் திரும்பி கோமலைப் பார்த்ததும் என்ன? என்பது போல் கைஜாடை காட்ட, பேப்பரை மடக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு “இல்லை…. லயாவிடம் சோட்டுவின் சாயல் உண்டு. உதயன் முதல் முறையாக லயாவைப் பார்த்து நெகழ்ந்ததில் இருந்து எனக்குள் ஒரு எண்ணம். ஒரு வேளை பூர்ணோதயனுக்கும், சோட்டுவிற்கும் ஏற்கனவே ஏதோவொரு வகையில் அறிமுகமோ.. பழக்கமோ இருந்திருக்குமோ?. அதனால் சோட்டுவின் சாயலை லயாவிடம் பார்த்ததும் ஒட்டிக்கொண்டாரோ என்று ஒரு சந்தேகம் எனக்கு உண்டு”.
“உன் தங்கை எதையும் மனம் விட்டு சொல்லக்கூடியவள் இல்லை. அவள் உன்னோடு நெருக்கமாக இருந்தாலும், அவளைப்பற்றி உன்னைவிட உன் அண்ணனுக்கு தான் இன்னும் அதிக விவரங்கள் தெரியும். அவனும் அவள் விசயத்தில் அழுத்தக்காரன் தான். எதுவும் தெரிந்தாலும் நம்மிடம் சொல்வதில்லை. அவளை வற்புறுத்த வேண்டாம் என்று அவளுக்காக பேசுவதும் அவன் தான். பிடிவாதமாக அவளும் திருமணம் வேண்டாம் என்று மறுத்துக்கொண்டே இருக்கிறாள். பிடித்த வேலைதான். அதற்காக வெறும் வேலை மட்டுமே பார்த்துக் கொண்டு முழு வாழ்க்கையையும் கழித்து விடமுடியுமா?. அப்படி தவம் போல் வாழவேண்டிய வயதா நம் சோட்டிக்கு?. அப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன?. ஒரு வலுவான காரணம் வேண்டாமா?. அவளைப் பொருத்தவரையில் உடலளவில் ஒரு மணவாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியத்தில் எந்த வித குறையும் இல்லை. அப்போது பிரச்சினை மனதில் தானே. அதற்கு நேசித்தவரின் விலகல். மறக்க முடியாத நேசம். இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?”.
“ஒரு வேளை நான் நினைப்பது போல் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஏதோவொரு வகையில் உறவு இருந்து, பிரச்சினை வந்து பிரிந்திருந்தால், பிரிந்த இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பாக இருக்கட்டுமே என்று தான் நீ அவ்வளவு மறுத்தும், பூர்ணோதயன் இங்கு குடிவர விவரங்கள் சொன்னேன். இல்லை என்றால் ஓனரிடம் வந்து வீடு கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று ஒரு வார்த்தை மறுத்து சொல்லி வைத்திருந்ததால் அவரும் வீட்டை கொடுத்திருக்கமாட்டார்”.
“அதனால் தான் இருவரும் சந்தித்துக் கொள்ளப் போகும் நாளுக்கா, அந்த நேரத்திற்காக வெகு ஆவலாய் காத்திருந்தேன். இன்று இருவரும் லிஃப்டில் வைத்து, நெருக்கத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டபோது இருவரது முகத்திலும் சிறு திகைப்போ, சுவாரசியமோ எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒரு வகையில் கோபமாகவாவது வெளிப்பட்டிருக்கும் இல்லையா?. எதுவுமே இல்லை. வெகு இயல்பான ஒரு முதல் முறையான அறிமுகப்படலமாக மட்டுமே அது இருந்தது. அப்படி எதுவும் இருந்தால் நான் கண்டுபிடித்ததை உன்னிடம் சொல்லலாம் என்று ஆவலாக காத்திருந்த எனக்குத் தான் மிகப் பெரிய ஏமாற்றம்” என்று முடித்தான்.
“ச்சே அப்படி எதுவும் இருக்காது ராகேஷ்”.
“ம்ம்……..அதுதான் நான் எதிர் பார்த்தது போல் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டேனே. அதையே நீ எனக்கு மீண்டும் சொல்கிறாயா?”.
“அதில்லை ராகேஷ். ஆரம்பத்தில் எனக்கு பூர்ணோதயன் மேலிருந்த பயம் கூட இப்போது இல்லை. என்னவோ பூர்ணோதயனை பக்கத்தில் இருந்து பார்க்கப் பார்க்க மிகவும் நல்ல மாதிரியாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. நீங்கள் அன்று மாலில் சொன்னது போலவே நாம் அவினாசி சென்ற பிறகு, சோட்டுவிற்கும், அவருக்கும், காதல், கத்திரிக்காய் என்று முளைத்தால் கூட நன்றாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது”.
“உன் தங்கைக்கு இருக்கும் அழுத்தத்தில் காதல் முளைக்குமோ என்னவோ?. புதிதாக பிரச்சினை முளைக்காமல் இருந்தால் சரி. ம்ம் அதையும் பார்ப்போம் கோமல். காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ?”.
இன்னும் இரண்டு வாரங்களில் ராகேஷ் குடும்பம் அவினாசி குடிபெயர்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. சோட்டு, வடவள்ளியில் ஹீராவோடு சேர்ந்து சின்னதாக ஒரு ரெடிமேட் ஷோரூம், அதற்கு பின்புறமே இருபது தையல் மிஷின் போட்டு வேலை பார்க்கக்கூடிய அளவில் ஒரு பெரிய அளவு ஹாலும் சேர்ந்து வாடகைக்கு எடுத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது. முன் பக்க கடை ஹீராவும், பின்புறம் உள்ள ஸ்டிச்சிங் பிரிவு சோட்டுவும் பார்த்துக் கொள்வது. தங்களது கடைக்கு அல்லாமல் வெளியில் இருந்து வரும் ஆர்டர்களையும் தைத்து கொடுப்பது என்று ஏற்பாடு. ஹீரா மட்டும் கொஞ்ச நாட்கள் கடையில் தங்கிக்கொள்வது என்று முடிசெய்திருந்தார்கள்.
சோட்டு, உதயனை அன்று லிஃப்டில் வைத்து பார்த்ததோடு சரி. அதற்கு பிறகு பூர்ணோதயனை அதிகம் சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் வரவில்லை. ராகேஷ் வீட்டிற்கும் அவன் வருவதில்லை. அவனுடைய பேச்சு ராகேஷ், மற்றும் குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும். அவளது கவனத்தை ஈர்க்கும் விதமாகவோ , அவளிடம் தேவையில்லாமல் பேசி தொந்தரவு செய்யவோ இல்லை.
ராகேஷ் , கோமலிடம் ‘இவ்வளவு பெரிய வீடு தான் ஒருத்திக்கு வேண்டாம். நானும் ஹீரா அண்ணனோடு தங்கிக் கொள்கிறேன். அல்லது கடைக்கு பக்கமாக பிஜி போலவோ அல்லது உமன் ஹாஸ்டல் ஏதாவது பார்த்துக் கொள்கிறேன்” என்று மறுத்தாள் சோட்டு.
“அது சரிவராது சோட்டி. எப்படியும் நினைத்தால் வந்து போகும் தூரத்தில் இருக்கப் போகிறோம். நாங்களோ, குழந்தைகளோ உன்னோடு வந்து தங்குவது என்றால் இந்த வீடு தான் வசதி. ஹீரா அண்ணாவும் தொடர்ந்து அங்கேயே தங்க முடியாது. எப்படியும் அவருக்கும் தங்குவதற்கு ஒரு வீடு பார்த்து தான் ஆகவேண்டும். ஆளுக்கு ஒரு பக்கம் தனித்தனியாக இருந்து கொண்டு தனித்தனி வாடகை கொடுப்பதற்கு இருவரும் சேர்ந்து இருப்பது தான் நல்லது. அதுமட்டுமில்லாமல் வேறு இடம் மாறிவிட்டால் இது போன்று நகரத்தின் நடுவில் இப்படி அமைப்பாக அமைவது ரொம்ப கஷ்டம். அதனால் இதை மாற்ற வேண்டாம். வாடகை கூட நீ கொடுக்க வேண்டாம். இங்கு நீ மட்டும் இப்போதைக்கு இரு. மற்றதை பிறகு பார்ப்போம்” என்று முடித்து விட்டாள் கோமல் .
சோட்டுவிற்கும் ஒரேடியாக மறுக்க முடியவில்லை. கோமல் சொன்னது நியாயமான காரணம் என்பது ஒரு பக்கம் இருக்க. கடை வேலைகளை வைத்துக்கொண்டு புது ஊரில் அவளுக்காக ஒரு இருப்பிடத்தை தேடி கண்டுபிடிப்பது இப்போது கஷ்டமாக இருந்தது. சரி கொஞ்சம் வேலைகள் ஓய்ந்ததும் பார்க்கலாம் என்று அவளும் அந்த விஷயத்தை அப்போது தள்ளிப் போட்டாள். ஆனால் தன்னால் முழு வாடகையும் கொடுக்க முடியாது என்பதால் அந்த வீட்டின் பாதி வாடகையாவது வாங்கிக் கொண்டால்தான் இதற்கு ஒத்துக்கொள்வேன் என்று கோமலிடம் கராராக சொல்லி விட்டாள்.
அன்று வீட்டில் சோட்டு இல்லை. ராகேஷூம், உதயனும் லயா, ரியாவை கீழே பார்க்கில் விளையாட வைத்து அவர்கள் களைத்து ஓய்ந்ததும் ஆளுக்கு ஒருவரை தூக்கிக் கொண்டு மேலே வந்தார்கள்.
வீட்டின் முன்பாக லயாவை இறக்கி விட்டு விட்டு திரும்ப “பூரி அங்கிள், நீங்க எங்க வீட்டுக்கு வாங்க” என்று கையை பிடித்து லயா ரியா இழுக்க, “இல்லடா. அங்கிள் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது’ என்று மறுத்துக் கொண்டிருக்கும் போதே, “அட வாங்க உதயன். ஒரு டீ சாப்பிட்டு விட்டு போய் உங்கள் வேலையை பாருங்கள்” என்று ராகேஷூம் அழைக்க அவர்கள் வீட்டினுள் நுழைந்தான்.
அவர்களுக்கு டீயை கொடுத்த கோமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குளிப்பாட்டி விடுவதற்காக சென்று விட ராகேஹூம், உதயனும் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஹாலில் இன்னொரு ஷோபாவில் பூனம் அமர்ந்திருந்தார்.
ராகேஷ் டீயை பருகியப்படியே “உதயன் சூலூர் பக்கத்தில் புதிதாக சைட் பிடித்து போட்டு இருக்கிறார்கள் ஒவ்வொரு சைட்டும் ஐந்து சென்ட் என பிரித்து இருக்கிறார்கள். விலையை விசாரித்தேன். எனது பட்ஜெட்டிற்குள் வருவது போல் இருக்கிறது. தேவைப்பட்டால் பேங்க் லோன் வாங்கிக் கொள்ளலாம். அதனால் நான் கார்டியனாக கோமல் பெயரைப் போட்டு, லயா, ரியா இருவரது பெயரிலும் ஆளுக்கு ஒன்று என்று இரண்டு சைட்டுகள் வாங்கிப் போடலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு நிலம் வாங்கும் திட்டம் ஏதாவது இருக்கிறதா?”.
ராகேஷ் கேட்டதற்கு உதயன் பதில் சொல்வதற்கு முன்பாகவே அருகில் அமர்ந்திருந்த பூனம் எழுந்து என்ன ராகேஷ் சொல்கிறாய் லயா பெயரிலும் இடம் வாங்க போகிறாயா? உனக்கு எங்காவது கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?. என் பேத்திக்கு நிகராக அப்பன் பெயர் தெரியாமல் பிறந்த குழந்தையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய். சரி அதுதான் தொலையட்டும். அனாதைக்கு சாப்பாடு போட்டுவது போல் புண்ணியம் மாதிரி இருக்கும் என்று பார்த்தால், அவள் பெயரில் இடம் வாங்குகிறாயா? யார் வீட்டு பணம், காசை யார் அனுபவிப்பது?. இதற்கெல்லாம் காரணம் உன் மனைவிதான். அவள் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு ஆடுவது பத்தாது என்று அவளோடு சேர்ந்து நீயும் ஆடுகிறாய்”என்று ஹிந்தியில் கத்தினார்.
அவர் பேசியது உதயனுக்கு நன்றாகவே புரிந்தது.
“அம்மா இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று உங்களுக்கு எத்தனை முறை சொல்வது. கோமல் காதில் கேட்டால் மிகவும் சங்கடப்படுவாள் அம்மா. தெரிந்தும் இப்படி பேசுகிறீர்களே. ரியா போல லயாவும் எங்கள் குழந்தை தான். சிறு குழந்தை அவள். சொத்து பற்றி எல்லாம் அவளுக்கு என்ன தெரியும்?. சோட்டுவும் தான் அப்படி என்ன செய்து விடுவாள். அதுவும் அல்லாமல் கோமலைத் தான் கார்டியனாக போட்டு வாங்க போகிறேன்”.
“அதுதான் பிரச்சனையே. சோட்டு சோட்டு என்று அவளுக்கு என்றால் தூக்கிக் கொடுத்துவிட்டு தான் உன் மனைவி நிற்பாள் தெரியுமா?. போனால் போகிறது என்று நான் வாயை மூடி சும்மா இருந்தால் நீ என்ன வேண்டுமானாலும் செய்வாயா?”. அனாதைத் தெரு நாயைக் கொண்டு வந்து குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததும் அல்லாமல்….. “என்று அவர் முடிப்பதற்கு முன்பே,
“அம்மா” என்று ராகேஷ் அதட்டலோடு எழுந்து நிற்க, அவனோடு சேர்ந்து உதயனும் எழுந்து நின்றான். “என்னடா அம்மா?. நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ?. லயாவின் அப்பா பெயர் தெரியுமா உனக்கு?. யாருக்கும் தெரியாது தானே. அப்படி என்றால் அது அப்பன் பெயர் தெரியாத பிள்ளை தானே. அப்படி அப்பன் பெயர் தெரியும் என்றால் அவனிடமே அனுப்பி வைக்க வேண்டியது தானே. நீ ஏன் தேவையில்லாத பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாய்”.
“கோமலுக்கும், அவள் அண்ணனுக்கும் தான் அறிவில்லை என்றால் உன் மாமனார், மாமியாருக்கும் கூடவா அறிவில்லை?. யாருக்கோ பிறந்த குழந்தையை பேத்தி என்று அவர்கள் கொண்டாடிக் கொள்வார்கள். நானும் அதையே செய்வேன். ஒத்துக்கொள்வேன் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?”.
வெளியில் நடக்கும் கலவரம் தெரியாமல் முதலில் குளித்து உடைமாற்றி கதவை திறந்து அடைத்து விட்டு வந்த லயா, “டாடி..” என்று அழைத்தபடி ஏதோ சொல்வதற்கு ராகேஷை நோக்கி ஓடி வர “ஏய்..” என்று அவளது கை வேகமாக பிடித்து இழுத்து நிறுத்திய பூனம், “என் மகனை நீ டாடி என்று சொல்லக்கூடாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். அவன் உனக்கு டாடி இல்லை . நீ அவன் மகளும் அல்ல. ரியா மட்டும்தான் அவனை டாடி என்று அழைக்கமுடியும். ரியா மட்டும்தான் இந்த வீட்டு குழந்தை. அவளை மட்டும் தான் கோமல் பெற்றாள். உன்னை உன் அம்மா யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை. அண்ட வந்தவள் பேரில் சொத்து வாங்குகிறானாம் சொத்து”.
” இதோ பார் ராகேஷ் இதுவரை எப்படியோ. நீ அவிநாசி போகும் போது ரியாவை மட்டும் தான் அழைத்துக் கொண்டு போக வேண்டும். அதுதான் இவள் அம்மா தனியாக தொழில் தொடங்கி இருக்கிறாளே. அவளே படாடு பட்டு பெற்ற மகளுக்கு சம்பாதித்து கொட்டட்டும். தனியாக பார்த்துக் கொள்ளட்டும்”.
“ரியா மட்டும்தான் சர்மா குடும்பத்து வாரிசு. நீ எந்த சொத்து வாங்குவதாக இருந்தாலும் அதற்கு ரியா மட்டும் தான் வாரிசு. இதற்கு நீயோ, உன் மனைவியோ ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எங்களை தலைமுழுகிவிடு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக நகர்ந்த உதயன், நடப்பது எதுவும் புரியாமல் உதடு பிதுக்கியபடி ராகேஷையும் பூனத்தின் முகத்தையும் , பூரணோதையனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த லயாவை “குழந்தை கையை முதலில் விடுங்க” என்று அவளை கையில் அள்ளிக் கொண்டான்.
தனது தாயார் நடந்து கொண்ட விதமே பிடிக்காமல் இருந்த ராகேஷுக்கு, இத்தனையும் உதயன் முன்பாக நடந்தது இன்னும் அவமானமாக இருக்க மௌனமாக நின்றிருந்தான். சூழ்நிலையை புரிந்து கொண்ட உதயன் “லயா கொஞ்ச நேரம் என்னிடம் இருக்கட்டும் ராகேஷ்” என்று குழந்தையை தூக்கியபடி அவன் தன் வீட்டுக்கு செல்ல வெளியில் வந்த போது, தனது ஹேண்ட்பேக்கை நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்து பிடித்தபடி மூடியிருந்த கண்களின் ஓரம் கண்ணீர் வடிய சுவற்றில் தலைசாய்த்து. நின்றிருந்தாள் சோட்டு.
உள்ளே பூனம் பேசியது அனைத்தையும் சோட்டு கேட்டு விட்டாள் என்று உதயன் அமைதியாக நிற்க, லயா “சோட்டுமா..” என்று அழைத்து விடவும் சட்டென்று என்று விழித்தவள் தன் எதிரில் லயாவோடு உதயன் நிற்பதை பார்த்து குனிந்து வேகமாக விழிகளைத் துடைத்துக் கொண்டாள். .
நொடியில் தன்னை சமாளித்தவள் குழந்தைக்காக கைகளை நீட்டினாள்.
“அவர்கள் பேசியதை நீங்கள் கேட்டு விட்டீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. இந்த நேரத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றால் தேவையில்லாத வாக்குவாதம் வரும். அந்த வெறுப்பும், கோபமும் லயாவின் மேல் தான் திரும்பும். அதனால் லயா என்னிடமே கொஞ்ச நேரம் இருக்கட்டும்”.
” ராகேஷூக்கு கூட கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். நீங்கள் வேண்டுமானால் உள்ளே போங்கள் சோட்டு. என்னை கேட்டால் நீங்கள் கூட வெளியில் எங்காவது சென்று விட்டு கொஞ்ச நேரம் கழித்து வரலாம் என்று தான் சொல்வேன்” என உதயம் சொல்ல மறுப்பாக தலையசைத்தவள், “இல்லை. இப்போது லயா எனக்கு வேண்டும். நானே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்லலாம் என்று இருந்தேன்” என்றவள் அவனது கைகளில் இருந்து லயாவை பிடுங்கிக் கொண்டு வேகமாக லிஃப்டிற்குள் நுழைந்தாள்.
சோட்டு நகர்ந்துவிட யோசனையோடு அங்கேயே நின்றிருந்த உதயன் காதுகளில் “அம்மா உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?. லயா, அப்பா பெயர் தெரியாத குழந்தை அல்ல. திருமணத்திற்கு பிறகு சோட்டுவிற்கும், அவள் கணவனுக்கும் முறையாக பிறந்த குழந்தை தான்”.
“சரிடா, அந்த கணவர் யார் என்று இத்தனை நாளில் ஒரு முறையாவது சொல்லி இருக்கிறாளா?. அவளது கடந்த காலத்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே. திருமணம் முடிந்து விட்டது. கணவரும் அவளும் சூழ்நிலையால் பிரிந்து விட்டார்கள் என்ற கதை எல்லாம் அவளும் , ஹீராவும் சொன்னதுதான். அது மட்டும் தான் நமக்கு தெரியும். அது எல்லாம் உண்மையோ? பொய்யோ? யாருக்குத் தெரியும்?. சரி, திருமணம் முடிந்து விட்டது என்றால் அவள் கழுத்தில் தாலி எங்கே?. தாலியை கழட்டி கொடுத்து விட்டாள் என்று வைத்துக் கொள்வோம். ஒற்றை பைசா இல்லாமல் தானே வந்து நின்றாள். அப்படியா ஒரு கணவன் மனைவியை துரத்தி விடுவான்?. அப்படி துரத்தி விட்டிருக்கிறான் என்றால் தப்பு இவள் மேல் என்று தானே அர்த்தம்”.
” யாருக்குத் தெரியும் இந்த குழந்தைக்கு அவன் அப்பன் இல்லை என்று இவள் நடத்தை மேல் சந்தேகப்பட்டுத்தான் துரத்தி விட்டானோ என்னமோ?”.
“போதும் அம்மா. எவ்வளவு மோசமான எண்ணத்தை மனதில் வைத்திருக்கிறீர்கள்?. நல்லவேளை நீங்கள் பேசியதை கோமல் கேட்கவில்லை. இவ்வளவு வெறுப்பை வைத்துக் கொண்டுதான் அந்த குழந்தையிடம் இல்லாததும், பொல்லாததும் சொல்லி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் வந்ததும் லயாவிடம் தெரிந்த மாற்றம் இதனால் தான் இல்லையா ?.
“ஆமாம் சொன்னேன். இனி உன்னை ,கோமலை டாடி மம்மி என்று கூப்பிடக்கூடாது என்று போன முறை வந்தபோதே சொன்னேன். அப்போது அவளுக்கு புரியவில்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரியத் தொடங்கி இருக்கிறது. இப்போது கூட முழுதாக புரியவில்லை என்றாலும் நான் சொல்வதை அவள் அம்மாவிடம் சொல்வாள் அவள் புரிந்து கொண்டு தானாகவே எங்கயாவது செல்வாள் என்று நினைத்தேன்”.
“லயா இருப்பதினால் தானே எங்களுக்கு இனி குழந்தைகள் வேண்டாம். இவர்கள் இருவரும் போதும் என்று உன் மனைவி சொல்லிக் கொண்டிருக்கிறாள். உனக்கென்று ஒரு ஆண் வாரிசு வேண்டாமா?. அட ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லை . உன் இரத்தத்தில் இன்னொரு பிள்ளை வந்துவிட்டு போகட்டும். ஊர் பேர் தெரியாத பிள்ளையை நீ ஏன் ஊட்டி வளர்க்க வேண்டும்?”.
பூனம் இப்படி சொன்னதும் தான் உதயனைப் பற்றி மறந்திருந்த லயா, தன் அன்னை வந்தபிறகு தான் பூரி அங்கிளை தேடியது ஞாபகம் வந்தது. ஒரு வேளை இதையெல்லாம் மனதில் வைத்து தான் தன் இடத்தில் அதாவது தந்தை என்ற ஸ்தானத்தில், குழந்தை உதயனை வைத்து யோசித்து இருப்பாளோ என்று நினைத்ததும் உதயன் ஞாபகம் வந்தது.