அம்மாவை திருத்த முடியாது. இதற்கு மேலும் தான் இங்கு நின்றிருந்தால் கோமல் வரும்போது இந்த பேச்சு தொடரும். இதை எல்லாம் காதில் கேட்டால் கோமல்தான் வருத்தப்படுவாள். தேவையில்லாத பிரச்சினை தான் வளரும் என நினைத்தவன் வீட்டிற்கு வெளியே வந்தான்.
அங்கு பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு தீவிரமான யோசனையோடு நின்றிருந்தான் உதயன்.
தன் அன்னை பேசியது அனைத்தையும் உதயன் கேட்டிருப்பான் என்பதை எண்ணி சங்கடமாக உணர்ந்து, மௌனமாக தலை குனிந்தான்.
உதயன் அவன் சங்கடத்தை உணர்ந்தாலும் வேறுவழியின்றி “நான் வெளியில் வரும்போது சோட்டு இங்கு நின்றிருந்தார்கள். லயா என்னிடம் இருக்கட்டும் என்று சொல்லியும், பிடுங்காத குறையாக அவளை வாங்கிக் கொண்டு கீழே சென்று விட்டார்கள்” என்று உள்ளே நடந்த பேச்சுவார்த்தைகளை சோட்டுவும் கேட்டுவிட்டாள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் ராகேஷ் க்கு உணர்த்தினான்.
“உங்கள் அம்மா பேசியதை வைத்து பார்க்கும் போது லயா உங்களது குழந்தை இல்லை. சோட்டுவின் குழந்தை என்று தெரிகிறது. அன்று மாலில் வைத்து இவர்கள் இருவரும் இரட்டை குழந்தைகளா? என்று நான் கேட்டபோது கேட்டபோது, ஆமாம் என்று சொன்னீர்களே!” என்று கேட்டுக் கொண்டே அவன் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான் உதயன்.
“இல்லை உதயன். நீங்கள் இரட்டை குழந்தைகளா? என்று கேட்டதற்கு நான் பதில் சொல்லவே இல்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது”.
கொஞ்சம் யோசித்தவன் “ம்ம்… ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இருவரில் யார் பெரியவள் என்று நான் கேட்டபோது, நீங்கள் லயா என்று சொல்லவும், முதலில் பிறந்தது லயா. அடுத்து பிறந்தது ரியா என்று நானாகவே இவர்கள் இரட்டையர்கள் என்று நினைத்துக் கொண்டேன்”.
“அது எனக்கு புரிந்தது. பொதுவாக இங்கு கோவையில் லயா எங்கள் குழந்தை இல்லை என்பதை வெளியில் யாருக்கும் சொல்வதில்லை. ஏனென்றால் அவளை எங்களது சொந்த பிள்ளையாகத்தான் பார்க்கிறோம். முதல்முறையாக பார்க்கும் உங்களிடம் அதைப்பற்றி விவரமாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?. கோவையில் தொழில் என்று நான் அமைத்தது கூட, அங்கு வடக்கில் சொந்த பந்தத்தோடு இருந்தால் இந்த பேச்சு வந்து கொண்டே இருக்கும் என்பதனால் தான் குழந்தைகளை எடுத்துக் கொண்டு கோவை வந்தோம். இப்போது பார்த்தால் அம்மாவே பெரிய பிரச்சனையாக இருக்கிறார்கள்”.
“பார்ப்பதற்கு லயாவும்,ரியாவும் ஒரே வயது , சமஉயரம் போல இருந்தாலும் , ரியா, லயாவை விட மூன்று மாதத்திற்கு சிறியவள்”.
“அப்படி என்றால் சோட்டுவின் கணவரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?. கோமலின் தங்கை எனும் போது , எப்படியும் நீங்கள் எல்லோரும் குடும்பத்தோடு பார்த்து பேசித் தானே திருமண ஏற்பாடு செய்திருப்பீர்கள்?. எதிர்வீடு வேறு. இல்லை உங்களுக்கு தெரியாமல் காதல், வேறு ஊரில் திருமணம் இதுபோலவா?”.
நீண்ட பெருமூச்சு வைத்தவன் “முதலில் சோட்டு, கோமலின் சொந்த தங்கையோ… இல்லை உறவோ கிடையாது”.
“என்ன சொல்கிறீர்கள் ராகேஷ்?”.
“ஆமாம் உதயன் நான் சொல்வது உண்மைதான்.கோமலின் அண்ணன் லால் சென்னையில் பாணி பூரி கடை வைத்திருந்தான்”.
“லால்?” என்று புருவம் உயர்த்திய உதயன் “அவர் பெயர் ஹீராதானே?. இல்லை… இது வேறு அண்ணனா?”.
“வேறு அண்ணன் எல்லாம் கிடையாது. ஒரே அண்ணன் தான். அவன் முழு பெயர் ஹீராலால்”.
“ஓகோ…..”
“என் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது, அங்கிருந்த கடையை மூடிவிட்டு டெல்லி வந்தான். அப்படி அவன் வரும்போது அவனோடு அழைத்து வந்தவள் தான் சோட்டு”.
“சோட்டு என்றுதான் அவன் எங்களுக்கு அறிமுகப்படுத்தினான். சென்னையில் இருந்த போது பழக்கம். நல்ல பெண். இவளும் தனக்கு கோமல் போல ஒரு தங்கை தான். அம்மா ,அப்பா சொந்தம், பந்தம் என்று யாரும் கிடையாது. கணவனை விட்டு பிரிந்து வந்துவிட்ட சோகத்தில் இருப்பதால் தனக்கென்று ஒரு வேலை தேடிக்கொள்ளும் வரை கொஞ்ச நாள்கள் நம்மோடு இருக்கட்டும் என்று அழைத்து வந்ததாக சொன்னான்”.
“ஹீராவை பொருத்தவரை அவன் ஒன்று சொல்லிவிட்டால் அதை அவனது அம்மாவோ,அப்பாவோ தட்டிப் பேச மாட்டார்கள். மகன் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று அபார நம்பிக்கை அவன் மீது. அதைப் பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கும். அந்த சமயத்தில் எனக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்தது. திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் எனது இரண்டாவது திருமணத்தைப் பற்றி என் அம்மா பேச்சு எடுத்து பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள்”.
“ஒரு கட்டத்தில் கோமலும் வெறுத்துப் போய் , அவர்கள் சொல்வதுதான் சரி. நீங்கள் இனி வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவளது அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டாள்”.
“எதிர் வீட்டில் காதல் மனைவியை வைத்துக்கொண்டு, அவளைப் பார்க்காமல், அவளோடு பேசாமல், உறவாடாமல் நாற்பது நாள்கள் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா உதயன்?. அந்த நரகம் எப்படி இருக்கும் என்று கோமல் எனக்கு காட்டினாள்”.
“அந்த சமயத்தில் தான் சோட்டுவும் வந்து சேர்ந்தாள். இருவருக்குமே பொதுவான துன்பம் தான். கணவரிடமிருந்து பிரிந்து இருந்தது . எனவே வெகு சீக்கிரமே ஒருவரது சோகத்திற்கு மற்றவர்கள் ஆறுதலாகப் போனார்கள்”.
“தனது பிரச்சனைகளை தாய், தந்தையரிடமும், அண்ணனிடமும் மனம் விட்டு பேசாத கோமலுக்கு, தன் வயதை ஒட்டிய சோட்டுவோடு அனைத்தையும் பகிர்ந்து கொள்வது சுலபமாகவும் , ஒரு வகையில் ஆறுதலாகவும் இருந்தது”.
“என் மாமனார் உடல் நிலை சரியில்லாத போது கோமல் ஒரு பக்கம் சுருண்டு கொள்ள, அவளையும் என் மாமியாருக்கு உதவியாகவும் இருந்த சோட்டுவை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. எப்போதும் கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த மகள், சோட்டுவின் வரவிற்கு பிறகு பெரிதாக ஆடி, பாடி என்று கலகலப்பாக இல்லாவிட்டாலும் அழுகை குறைந்து சோட்டுவோடு பேசி, சிரித்து வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள சோட்டுவை எல்லோருக்கும் இன்னும் பிடித்து விட்டது. அப்போது கூட என்னிடம் மட்டும் பாராமுகமாக தான்”.
“ஒரு நாள் ஹீரா, என் மாமனார், மாமியார் மூவரும் மருத்துவமனைக்கு வழக்கமான செக்கப்பிற்கு சென்றிருந்த போது சோட்டு மயங்கி விழுந்து விட்டாள். வேறு வழியில்லாமல் அத்தனை நாள்களுக்கு பிறகு என் செல்ஃபோனில் அழைத்தாள்”.
” நானும் போய், அவளோடு சேர்ந்து, சோட்டுவை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் காட்ட, அவள் தாய்மை அடைந்திருப்பது தெரிந்தது. வீட்டிற்கு வந்தபோது சோட்டுவின் முகம் மசக்கையின் களைப்பையும் தாண்டி புது பொலிவுடன் இருந்தது. அவள் தனிமையில் இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி தனியறைக்கு சென்று விட , நாங்கள் இருவர் மட்டும்”.
“என்னைப் பிரிந்த ஏக்கத்தோடு, தனக்கு இப்படி ஒரு அதிஷ்டம் இல்லையே என்று அழுகையோடு என் தோள் சாய்ந்தாள்”.
“நீண்ட நாள்களுக்கு பிறகு மனைவியின் நெருக்கம். இருவரின் விருப்பத்தோடும், தேடலோடும் ஒரு தாம்பத்தியம். சிறிது நேரம் கழித்து நான் வெளியில் வரும்போது எதிர் வீட்டில் இருந்து என் அம்மா பார்த்துவிட்டார்”.
“அவ்வளவு தான். என் பின்னால் வந்த கோமலை பிடித்துகொண்டு, என் மகனை மயக்கி, வளைத்துப் போட பார்க்கிறாயா?. என்னிடம் இருந்து ஒரே மகனை பிரிக்கப்பார்க்கிறாய், என்று சண்டை”.
” இனி எல்லாம் சுமூகமாக போய்விடும் என்று நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. கோமல் மீண்டும் பாராமுகம், மௌனம் இரண்டையும் பிடித்துக்கொண்டாள் “.
” ஒரு மாதமாக மருத்துவமனையில் இருந்த என் மாமனார் குணமாகி வீட்டுக்கு வந்தார். என் மாமியார் சோட்டு குழந்தையின் ராசியால் தான் தன் கணவர் குணமாகிவிட்டதாக நம்பினார் . சந்தோஷப்பட்டார். அதனால் குழந்தை பிறக்கும் வரை எந்த வேலையும் தேட வேண்டாம். எங்கும் போகவேண்டாம் என்று சோட்டுவை பிரியமாகவே வைத்துக்கொண்டார்”.
“தன் மகளுக்கு செய்து பார்க்க ஆசைப்பட்டு, செய்யமுடியாமல் போன ஏக்கங்களை, ஆசைகளை எல்லாம் சோட்டுவிற்கு செய்து தீர்த்துக்கொண்டார்கள் “.
“சோட்டுவிற்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் கோமலின் நடத்தையில் வித்தியாசத்தை உணர்ந்த சோட்டு , அவளை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் சோதனை செய்து பார்த்தபோது கோமல் தாய்மை அடைந்திருந்தது உறுதியானது”.
“எனக்கே பயங்கர ஆச்சரியம் தான். நான்கு வருடங்கள் உதயன். குழந்தைக்காக நாங்கள் போகாத கோவில் இல்லை. எத்தனை வைத்தியம்?. எத்தனை மாத்திரைகள்?. எத்தனையோ இரவுகளின் ஏக்கங்கள். அப்போதெல்லாம் கிடைக்காத குழந்தைப்பேறு அந்த ஒரே நாளில்…..”.
” என்னால் நம்பவே முடியவில்லை. சோட்டு குழந்தையின் ராசிதான் என்று எனக்குக் கூடத் தோன்றியது”.
“கோமல் தாய்மை அடைந்ததும் மொத்த குடும்பத்தின் பிரியமும் சோட்டுவின் மேல் இன்னும் கூடியது”.
“நாங்கள் என்னதான் அன்பும் ,அக்கறையும் காட்டினாலும் சிலநேரங்களில் சோட்டு சோகத்தில் இருப்பது கண்டு கணவரைப் பார்க்கவேண்டுமா என்று விசாரித்தேன்”.
“கணவரைப் பற்றி விசாரிக்கதொடங்கினால் அழுகையும் ,வாட்டமும் அதிகம் தான் ஆனது. அது அவர் மேல் சோட்டு வைத்திருக்கும் அளவில்லா நேரத்தைக் காட்டியது. அவர் யார்?. என்ன பெயர் ?. எதுவும் எங்களுக்கு தெரியாது. ஹீரா மட்டும் அவரைப் பார்திருக்கிறான். அதுவும் அவன் கடைக்கு முன்பு. அவனுக்கு கூட அவர் பெயர் , முகவரி எதுவும் தெரியவில்லை. என் மாமியார் ஒரு முறை சோட்டுவைக் கொஞ்சம் அதட்டி விசாரிக்க, அமைதியாகவே இருந்தவள் அன்று இரவு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டாள் “.
“நல்ல வேளை என் மாமனார் பார்த்ததால் அன்று அவளைத் தடுக்க முடிந்தது. இல்லையென்றால் இன்று எங்களுக்கு லயா, சோட்டு எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமலேயே போயிருக்கும்”.
“ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டபோது, நாங்கள் பிரிந்தது பிரிந்தது தான். இனி நானும், அவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை. அவரைப் பற்றி உங்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்றால் என்னால் எதுவும் சொல்ல முடியாது. என்னை விட்டு விடுங்கள். எங்காவது போய், ஏதாவது ஒரு வேலை செய்து என் மகளை நான் வளர்த்துக்கொள்வேன் என்று அழத்தொடங்கிவிட, ஹீரா, இனி அவளது கணவரைப் பற்றி யாரும் அவளிடம் பேசக்கூட என்று சொல்லிவிட்டான் “.
“குழந்தையும் பிறந்தது. நட்சத்திரப்படி பெயர் வைக்கலாம் என்று சொன்னபோது, ஒரே பிடிவாதமாக என் மகளுக்கு பெயர் லயாதான் என்று பிடிவாதமாக சொல்லி விட்டாள்”.
“ஏற்கனவே பிஎஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் படித்திருந்தாள். தையல் கலையில் இயல்பாகவே அவளுக்கு ஆர்வம் இருந்ததால் பக்கத்தில் முறையாக கட்டிங், ஆரிவேலைப்பாடு, எம்ப்ராய்டரி. சிக்கன் காரி இதெல்லாம் கற்றுக்கொண்டாள்”.
“ரியாவும் பிறந்த பிறகு தன்னை ஆதரிப்பவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று வீட்டில் இருந்த தையல் மிஷனுக்கு மோட்டர் பொருத்தி அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு தைத்துக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள். வேலை அற்புதமாக இருக்க வாடிக்கையாளர்கள் கூடினார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கும் இடைஞ்சல் வேண்டாம் என்று சிறுகடையை வாடகைக்கு எடுத்து அங்கு வேலை செய்தாள். லயாவை பெரும்பாலும் கோமலும், அவளது அம்மாவுமே பார்த்துக் கொண்டார்கள்”.
” ஒரு வருடங்களுக்கு மேலானது. பெரும் பகுதி நேரம் கோமலுடனே லயா இருந்ததனால் ரியாவை போலவே அவளும் எங்களை மம்மி, டாடி என்றும் சோட்டுவை சோட்டுமா என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள். ஆரம்பத்தில் சோட்டு என்னை அப்படி அழைக்கக் கூடாது அம்மா என்று தான் சொல்லவேண்டும் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் குழந்தைக்கு அது இயல்பாக வந்தது. எங்களுக்குமே சோட்டு ஏன் அதை மாற்றி கூப்பிடச் சொல்கிறாள் என்றுதான் இருந்தது”,
“ஏனென்றால் லயாதான் முதன் முதலில் என்னை அப்பா என்றும் கோமலை அம்மா என்றும் அழைத்தது”.
“அது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. சொந்தத்திலும் இப்படி பழக்கப்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வரத் தொடங்க, நானும் தொழிலை வேறு பக்கம் தொடங்குவது என்று திட்டமிட்டு கொண்டிருந்தேன். நான் படித்த கோவையிலேயே இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் போது ஏன் வேறு இடம் தேட வேண்டும் என்று இங்கேயே தொடங்கி விட்டேன். கொஞ்சம் தள்ளி இருந்தால் எல்லா உறவுகளும் சுமூகமாக இருக்கும் என்று கோவை வந்தது . ஆரம்பத்தில் எங்களோடு லயாவை அனுப்புவதற்கு சோட்டு ஒத்துக் கொள்ளவில்லை. பகல் முழுவதும் அவளுக்கு வெளியே வேலை இருக்கும் என்பதாலும் , சிறு குழந்தையை முழுநேரமும் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பார்த்துக் கொள்வது கஷ்டம் என்பதாலும் மட்டுமே எங்களோடு கோவைக்கு அனுப்பி வைத்தாள். இங்கு வந்து ஆறு மாதம் ஆகிறது”.
” என் அம்மா,எங்களுக்கு முன்னால் லயாவை எதுவும் சொன்னால் நானும், கோமலும் விடமாட்டோம் என்று எங்களுக்கு தெரியாமல் குழந்தையிடம் தனியாக இருக்கும்போது பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்”.
“பேசிக்கொண்டு என்று சொல்லாதீர்கள் ராகேஷ். சிறு குழந்தையை மிரட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள்”.
” ம்ம்…. உண்மை தான். லயா வெளியில் சொல்ல முடியாமல் எப்படி திணறி இருப்பாள் என்று இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயம் என் அப்பாவுக்கும் கூட தெரியாது என்று நினைக்கிறேன். கொஞ்சம் தெரிந்திருந்தால் கூட என்னிடம் சொல்லி எச்சரித்திருப்பார் உதயன்”.
” குழந்தை ஏதோ வாட்டமாக இருக்கிறாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சோட்டுவையும் தேடினால் தான். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா உதயன்?. லயா அந்த நேரத்தில் சோட்டுவை மட்டும் தேடவில்லை. பத்து நாட்களுக்கு மேல் உங்களைப் பற்றி பேசாமல் இருந்தவள் அந்த சமயத்தில் உங்களையும் தேடினாள். உங்களோடு பேச வேண்டும் என்று சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை உங்களுக்கு அழைத்தேன் நீங்கள் எடுக்கவில்லை”.
“அதற்குப் பிறகுதான் லயாவையே பேச வைத்து உங்களுக்கு வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன்”.
“கேட்டேன் ராகேஷ். ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன்.வேலை மும்மரத்தில் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் மறந்து விட்டேன்”.
“ஓகோ ….இரண்டாவதாக பொம்மைக்கு நந்தா என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று லயா பேசிய வாய்ஸ் மெசேஜை பார்த்த பிறகு தான் உங்களுக்கு அவளது ஞாபகம் வந்ததோ?”.
“ஏன் அப்படி கேட்கிறீர்கள் ராகேஷ்? குழந்தையை காக்க வைத்து விட்டேன் என்று என்மேல் கோபமா? மாலை வேளையில் நீங்கள் மீண்டும் ஒரு முறை அழைத்திருந்தால் நானே பேசியிருப்பேன்.
“குழந்தையோடு அன்று அவ்வளவு ஒட்டிக்கொண்டவர், அவள் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்தும் அந்த நினைவே இல்லாமல் இருக்கும் போது வீணாக தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் நானும் விட்டுவிட்டேன் என்று சளைக்காமல் பதில் தந்தான் ராகேஷ்”.
“உண்மையாகவே வேலை தான் ராகேஷ். காக்கா உட்கார பணம் விழுந்தது போல் அன்று நானே லயாவைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். அதற்குள் அன்று லயாவின் இரண்டாவது வாய்ஸ் மெசேஜ் வந்தது அவ்வளவுதான்”.
“உங்களுக்கு நந்தா என்று யாரையாவது தெரியுமா உதயன்?. இப்போது இல்லை. முன்பு அப்படி யாராவது அறிமுகமான நபர் உங்களுக்கு தெரிந்தவர் இருக்கிறார்களா?”.
“நந்தா… அப்படி யாரும் இல்லையே . ஏன் கேட்கிறீர்கள் ராகேஷ்?”.
” இல்லை நீங்கள் வாங்கித் தந்த பொம்மைக்கு லயா பெயர் வைக்க வேண்டும் என்றதும் சோட்டு தான் நந்தா என்று வைத்தாள். முதல் முதலில் அவள் வாயில் இருந்து ஒரு பெயர் வந்தது. நான் மிகவும் நேசித்த உயிர் என்று வேற சொன்னாள். யார் அந்த நந்தா? அவளது கணவனின் பெயரோ என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்’.
“வாட்ஸ் அப்பில் டி பி யாக உங்களது கம்பெனி பெயரை பார்த்தேன். டி என் கன்ஸ்ட்ரக்ஷன் என்று இருக்கிறது. ஒருவேளை அந்த நந்தா நீங்களாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை உறுதியாக்குவது போல் இருந்தது லயாவின் இரண்டாவது மெசேஜை பார்த்த பின், நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து நின்றது.
” ஒருவேளை உங்களுக்கும், சோட்டுவிற்க்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்குமோ?. லயா உங்களுடைய குழந்தையோ?. அதனால் தான் பார்த்ததும் இருவரும் சீக்கிரம் ஒட்டிக் கொண்டீர்களோ! என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்”.
இதைக் கேட்ட பூர்ணோதயன் “ஹாஹா… “என வாய் விட்டு சிரித்தான். சிரித்தபடியே,” நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. பேசாமல் நீங்கள் கதை எழுதலாம் ராகேஷ். உண்மையாகவே எனக்கும் நந்தா என்ற பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி எந்த மனிதரையும் எனக்கு தெரியாது. என் கம்பெனி பெயரில் இருக்கும் டி என் என்ற ஆங்கில எழுத்துக்களின் அர்த்தம் வேறு. அது டிவைன் நெஸ்ட்”.
“ஆமாம் ,லயாவின் அம்மாவின் பெயர் சோட்டு தானா?. இல்லை வேறு பெயர் ஏதாவதா?.
“சோட்டுவின் உண்மையான பெயர் தேன் மதி”.
“தேன் மதி” என்று ஒரு முறை மெல்லிய குரலில் சொல்லிப் பார்த்த பூர்ணோதயன், ராகேஷின் முகம் பார்த்து “வெகு அழகான பெயர் இல்லையா?” என்றான்