“அழகான பெயர் தான். ஆரம்பத்தில் நான் தேன்மதி என்று ஓரிரு முறை அழைத்திருக்கிறேன். என்ன நினைத்தாளோ, இனி அந்த பேர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்”.
“இனி உங்கள் அம்மாவை, அதாவது இந்த பிரச்சனையை என்ன செய்யப் போகிறீர்கள் ராகேஷ்?”.
“இப்போது நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை விட, சோட்டு என்ன முடிவெடுக்கப் போகிறாள் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது”.
“ம்ம்… அதுவும் சரிதான். பேசிக்கொண்டே வெகு நேரம் உட்கார்ந்து விட்டோம் என்று நினைக்கிறேன்” என்று எழுந்து அவனது வீட்டில் ஜன்னல் வழியாக கீழே எட்டிப் பார்த்தான். “கீழே போய் லயா என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா?”.
“நீங்கள் இருங்கள் உதயன். உங்களுக்கும் வேலை இருக்கும். நான் போய் பார்க்கிறேன்”.
“என் வீட்டு விஷயத்தில் தலையிடாதே என்று மறைமுகமாக சொல்கிறீர்களா ராகேஷ்?” என்று சிரித்தபடியே கேட்டான்.
“எல்லா விஷயத்தையும் முழுமையாக நீங்கள் கேட்டுவிட்டு பிறகு இனி மறைப்பதற்கு புதிதாக என்ன இருக்கிறது?. சோட்டு எதுவும் சொல்வாளோ என்றுதான் யோசித்தேன்”.
“ஏற்கனவே அவிநாசிக்கு லயாவைக் கூட்டிச் செல்ல வேண்டாம். இனி என்னோடு இருக்கட்டும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தாள். நானும் கோமலும் தான் ஒன்றாகவே வளர்ந்த குழந்தைகள் தீடிரென்று பிரித்தால் ஏங்கிப் போவார்கள். எங்களுக்கும் கஷ்டமாக இருக்கும். உனக்கு கடை எல்லாம் கொஞ்சம் செட்டாகும் வரை லயா எங்களோடு இருக்கட்டும். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உன்னோடு இருக்க வைத்து பழகிக் கொள் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்”.
“அது கூட இப்போதைக்கு சோட்டுவை சமாதானம் செய்யத்தான். ரியாவையும், லயாவையும் ஒரே ஸ்கூலில் சேர்த்து விட்டால், அதற்கு பிறகு ஒன்றும் சொல்ல மாட்டாள் என்று கோமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது நிலைமை போகும் போக்கை பார்த்தால், லயாவும் ரியாகவும் இனி ஒன்றாக ஒரே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது”.
“சரி, நான் போய் சோட்டு எங்கிருக்கிறாள் என்று பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே , கோமல் ஃபோனில் அழைத்தாள். “வீட்டில் வேறு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை?. கோமல் வேறு கூப்பிடுகிறாள்” என்று அவசரமாக வெளியேறியவனைத் தொடர்ந்தான் பூர்ணோதயன்.
கீழே உள்ள பார்க்கில் லயா மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க, தேன் மதி அதிகம் வெளிச்சம் இல்லாத இடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அழுது ஓய்ந்திருந்ததை சிவந்திருந்த விழிகள் காட்டிக்கொடுத்தது. ராகேஷ் அவளை நெருங்கியதும் கோபக் குரலில் “நான் கேட்டேனா மாமா?. லயாவின் பெயரில் இடம் வாங்கச் சொல்லி உங்களிடம் நான் கேட்டேனா?. இதெல்லாம் எனக்கு தேவையா?. இதற்குத்தான் இந்த மம்மி, டாடி என்றெல்லாம் பழக்க வேண்டாம் என்று சொன்னேன். தீடீரென்று ஒரு விசயத்தை மாற்றிக்கொள்வது குழந்தைகளுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா?. என்னவெல்லாம் பேசி விட்டார்கள்?. லயா குழந்தை மாமா. நல்லவேளை அவளுக்கு அவர்கள் சொன்னது எதுவும் புரியவில்லை”.
“தவறு என் பக்கமும் இருக்கிறது. முதலிலேயே நான் லயாவோடு தனியாக போயிருக்க வேண்டும். ரியாவை, உங்களை எல்லாம் பிரிந்து கஷ்டப்படுவாளே என்று யோசித்து தாமதப் படுத்தியிருக்கக்கூடாது. இன்று நடந்ததில் ஒரேயொரு நல்ல விசயம் என்னவென்றால் அவர்கள் லயாவிடம்
எந்த மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது”.
சோட்டு இதெல்லாம் எனக்கு தெரிந்திருந்தால் விட்டு இருப்பேன் என்று நினைக்கிறாயா? அவர்கள் பேசியது சரி என்று நான் என் உன்னிடம் வாதாட விரும்புவதில்லை. மிகப்பெரிய தவறு தான் அதுவும் குழந்தையிடம் எனக்கே அதைப் பற்றி பேச கூச்சமாக இருக்கிறது. அவர்கள் சார்பாக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு மன்னிப்பு எல்லாம் வேண்டாம் மாமா . இனி லயா என் பொறுப்பு அந்த விஷயத்தில் என்னை என் முடிவில் உறுதியாக இருக்க விட்டால் போதும்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராகேஷுக்கு மீண்டும் கோமலிடம் இருந்து அழைப்பு வந்தது. ராகேஷ் உங்கள் அம்மா என்னென்னவோ சொல்கிறார்கள் இனி லயாவும் சோட்டுவும் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள் லயா எங்கே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ரியாவை விட்டுவிட்டு லயாவை மட்டும் எங்கே அழைத்துச் சென்று இருக்கிறீர்கள் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாங்களேன் என்று மனதில் தோன்றியது எல்லாம் பேசிக் கொண்டிருக்க, சரி என்று கட் செய்தான்
அதுவரை சற்று தள்ளி நின்றிருந்த பூர்ணோதயன் “ராகேஷ், முதலில் நீங்க வீட்டுக்கு போங்க. கோமலும் பதட்டமாக இருப்பார்கள். விஷயத்தை பேசி முடியுங்கள். முடிந்தால் ரியாவைக் கூட கீழே கொண்டுவந்து எங்களோடு விட்டு விடுங்கள். குழந்தைகள் முன்பு எந்த வாக்குவாதமும் வேண்டாம். அதற்காகத்தான் சொல்கிறேன். சோட்டுவையும் , குழந்தைகளையும் கொஞ்சம் நேரம் கழித்து நான் கூட்டி வருகிறேன்.
ராகேஷ் பதில் சொல்வதற்கு முன்பாகவே அவனது ஃபோன் மீண்டும் ஒலித்தது. கோமல் என்பதை திருப்பி உதயனிடம் காண்பித்தவன் ” பேசி விட்டு வருகிறேன்” என்று வேகமாக அப்பார்ட்மெண்ட்டை நோக்கி போனான்.
வேறு பக்கம் திரும்பிக் கொண்டு “எங்களுக்காக நீங்கள் உங்கள் வேலையை கெடுத்துக் கொண்டு இங்கு இருக்க வேண்டாம். நாங்கள் போய்க்கொள்வோம். நீங்கள் கிளம்பலாம்” என்றாள் சோட்டு.
“என் பெயர் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேனே… தெரியாது போலிருக்கிறது. உங்கள் பெயர் தேன் மதி என்று இப்போது தான் ராகேஷ் சொன்னார். என் பெயர் பூர்ணோதயன். நண்பர்கள்… வீட்டில் அம்மா, அப்பா எல்லோரும் ராகேஷ் அழைப்பது போல உதயன் என்று அழைப்பார்கள். ஆனால் நான், லயாவிற்கு மட்டும் ஸ்பெஷல் பூரி அங்கிள். உங்களுக்கு தெரிந்திருக்குமே?”.
பதில் சொல்லாமல் எழுந்தவள் “லயா வா போகலாம்” என்று சத்தம் கொடுக்க சோட்டு வை நோக்கி ஓடி வந்த லயாவை எதிர்கொண்டு கைகளில் அள்ளிக் கொண்டு ஒரு சுற்று சுற்றினான் உதயன்.
அங்கு பூர்ணோதயனை எதிர்பார்க்காதவள் “பூரி அங்கிள்” என்று மகிழ்ச்சியாக அவனது கழுத்தை கட்டிக்கொண்டாள்.
“லயா கீழே இறங்கி வா. போகலாம்” என்று சோட்டு அதட்ட, அவள் பக்கமாக திரும்பி மெல்லிய குரலில் “நான் சொல்வது உங்களுக்கு புரிந்ததா இல்லையா?. மேலே என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது. இந்த சமயத்தில் குழந்தையை அங்கே கூட்டிப் போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். வேண்டுமானால் நீங்கள் போங்கள். போய் இன்னும் இரண்டு காதுகள் வழிய வழிய வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள்” என்றவன் லயாவிடம் “நாம் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு வருவோமா?” என்று நடக்கத் தொடங்கி விட்டான்.
“என் குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் கோவிலுக்கு போகவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே அவன் பின்னால் சென்றாள்.
“கோயிலுக்கு தானே… வாங்க போகலாம். எங்கே போவதென்றாலும் லயா என்னோடு தான் ” என்றவன் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தான்.
“எங்கயாவது…..தூரமா…..உங்க கூட பைக்கில போயிட்டே இருக்கணும். ரியாவையும் நம்ம கூட கூட்டீட்டு போலாமா?”.
கண்டிப்பா. இரண்டு பேரும் தான். ரியா இல்லாமல் லயா குட்டி வருவாங்களா என்ன? என்று கேட்டு வயிற்றில் லேசாக கிச்சு கிச்சு மூட்ட சிரித்தவள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு ஆனா பாட்டி திட்டுவாங்களே. இப்பெல்லாம்… பாட்டி…. என்னைய சும்மா சும்மா திட்டுறாங்க. டாடிய டாடி சொல்லக்கூடாது. மம்மிய மம்மியனு சொல்லக்கூடாது னு. நீ உங்க சோட்டுமா கூட வேற வீட்டுக்கு போ. எனக்கு அந்த பாட்டி பிடிக்கவேயில்லை. அந்த பாட்டி எனக்கு வேண்டாம்.
ரியாவும் வேண்டாம். அவ டாடி மம்மி கூட போகட்டும் என்று சோகமாக சொன்னவள், அடுத்த நொடியே உற்சாகமாக நாம மட்டும் போவோம். அன்னைக்கு டாடி கூட ஒரு இடம் போனோமே…தூரத்துல … அங்க நிறைய தண்ணியா இருந்துச்சு. அங்க போலாம். நீங்க பைக் ஓட்டும் போது நானு முன்னாடி. சோட்டுமா பின்னாடி. ஜாலியா இருக்கும். இல்ல சோட்டும்மா?.
அதுவரை மகள் தனது ஏக்கத்தை, பூனம் சொல்லியதை எல்லா உதயனிடம் வெகு இயல்பாக பகிர்ந்து கொள்வதை, கண்களில் கண்ணீரோடு கேட்டுக்கொண்டே பக்கவாட்டில் நடந்து வந்துகொண்டிருந்தவள் தீடீரென்று லயா தன்னையும் அவர்களோடு சேர்த்துச் சொல்ல, ஒரு நொடி அதிர்ந்து திணறி நானா?…. ம்ம்கூம் என்று வேகமாக மறுத்தாள்.
” வாங்க சோட்டுமா…. பிளீஸ். பூரி அங்கிள் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இல்ல பூரி அங்கிள்? என்று அவன் கன்னம் தாங்கி கேட்க, “எனக்கு ஓகே தான் டா லயா. சோட்டுமாவையும் கூட்டீட்டே போகலாம்”.
“நான் எங்கேயும் வரலை” என்று மறுத்தவள் “லயா, இதென்ன புது பழக்கம்?. எல்லாரிடமும் இப்படி எல்லாம் கேட்கக்கூடாது என்று சோட்டுமா சொல்லியிருக்கிறேன் இல்லையா?. அங்கிளுக்கு நிறைய வேலை இருக்கும். தொந்தரவு பண்ணக்கூடாது. நான் உன்னை தண்ணீர் பார்க்க கூட்டீட்டு போறேன். முதலில் நீ கீழே இறங்கு” என்று அதட்ட,
“நா.. வரமாட்டேன்” என்று இறுக்கமாக உதயன் கழுத்தை சுற்றி வளைத்து கட்டிக்கொண்டு “எனக்கு பூரி அங்கிள் கூட பைக்கில போகணும். அன்னைக்கு நீங்க என்ன சொன்னிங்க?. ஃபோன்ல எனக்கு பூரி அங்கிள் வேணும் னு சொன்னப்போ, நீங்க ஓகே சொன்னிங்க தான. திட்ட மாட்டேன் னு சொன்னிங்க. இப்போ நீங்களும் பாட்டி மாதிரி திட்டுறிங்க. எனக்கு பூரி அங்கிள் வேணும் சோட்டிமா” என்று உதடு பிதுக்க பூர்ணோதயன் முன்பு லயா தங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தைகளை எல்லாம் போட்டு உடைக்க, எதுவும் சொல்லமுடியாமல் கைகளைப் பிசைந்த படி தலைகுனிந்து நின்றாள்.
அவள் முகத்தை பார்த்தவன் லயாவின் பின் தலையை வருடி “லயாகுட்டி, கோயில் வந்தாச்சு. முதலில் சுவாமி கும்பிடுவோம். உங்க ஆசை என்னென்னவோ அதெல்லாம் சுவாமிக்கிட்ட சொல்லுங்க. இந்த சுவாமி எல்லாத்தையும் நிறைவேற்றி வைப்பாரு.
திரும்பி தேன் மதியை பார்த்துக் கொண்டே, “அது…. அது…. நீங்க யாரை டாடினு கூப்பிணும் என்று அம்மாதான் உனக்கு சொல்லுவாங்க . சரி வாங்க சுவாமி கும்பிட போவோம் என்று லயாவை கீழே இறக்கி விட்டான்.
“அம்மா நான் சுவாமி கும்பிட போறேன்” என்று உதயன் கையைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்துக்கொண்டே போனாள். “சுவாமிக்கு மாலை வாங்கலாமா?” என்று அருகில் இருந்த பூக்கடையில் இருந்ததிலேயே பெரிய ரோஜா மாலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவர்களைப் பின்தொடர்வதைத் தவிர தேன் மதிக்கு வேறு வழியிருக்கவில்லை.
“பூரி அங்கிள் தூக்குங்க” என்று கை தூக்க “ஒரு நிமிடம் இதை பிடிங்க” என்று மாலையை தேன்மதியிடம் நீட்டினான். அவள் வாங்காமல் அவனையே இமைக்காமல் பார்க்க, “ஹாலோ…. சுவாமிக்கு போடத்தான். என்னவோ என் கழுத்தில் போடச்சொன்னது போல் இப்படி பார்த்தால்…..” என்று இழுக்க சட்டென்று மாலையை வாங்கிக் கொண்டாள்.
“ரொம்ப கஷ்டம் டா சாமி” என்று மெல்லிய குரலில் சொல்லியவன் லயாவை தூக்கிக் கொண்டான்.
ஏற்கனவே கோமலோடு பலமுறை வந்திருந்தால் லயாவை நிறைய பேருக்கு தெரிந்திருந்தது. குருக்கள் கூட, “எங்கே இன்னைக்கு இன்னோரு பாப்பாவை காணோம்? என்று லயாவிம் கேட்க, “ரியா டாடி மம்மி கூட இருக்கா. நான் பூரி அங்கிள் கூட வந்தேன்” என்று உதயனைக் காட்டினாள்.
இரவு எட்டு மணியை நெருங்கியிருந்ததால் கூட்டம் இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில் கருவறையின் முன்பு இவர்கள் மூவர் மட்டுமே. கம்பியின் வலது பக்கத்தில் பூர்ணோதயன் சென்று நிற்க, இடது பக்கமாக சென்று அவன் எதிரே நின்றாள் தேன் மதி.
லயா உதயன் முன்பாக கம்பியின் மேல் ஏறி நின்று பிள்ளையாரைப் பார்த்து கைகூப்பி வணங்கிக்கொண்டிருக்க, அவளைப் பிடித்தபடி நின்றிருந்த உதயனிடம் “இந்த பக்கமாக வந்து சேர்ந்து நில்லுங்கோ” என்றார் குருக்கள்.
லயாவைத் தூக்கிக்கொண்டு தேன் மதியின் பக்கம் உதயன் வந்து நிற்க, யார் கண்களையும் உறுத்தாதவாறு மெதுவாக இயல்பாக கடவுளைப் பார்க்க நகர்வது போல் உதயனுக்கு, தனக்கும் கொஞ்சம் அதிகமாகவே இடை வெளி விட்டு முன்னால் தள்ளி நின்றாள்.
அதை கவனித்தவன் மெல்ல சிரித்து விட்டான். லயா திரும்பி அவன் முகம் பார்த்து என்ன என்பது போல் தலையசைக்க, “சும்மா” என்று மெல்லிய குரலில் சொல்லி நெற்றி முட்டிச் சிரிக்க, ” உங்க கூட.. இப்படி….சும்மா சிரிக்க நல்லாருக்கு” என்று அவனோடு சேர்ந்து அவளும் சிரிக்க,
தேன் மதி திரும்பாமலேயே “லயா” என்று குரல் கொடுக்க, சிரிப்பை நிறுத்தி கண்களை விரித்து, தன் வலது கையை வைத்து உதயன் வாயை மூடி, இடது கையின் ஆள்காட்டி விரலை தன் இதழ்களின் மேல் வைத்து “உஸ்.. உஸ்…” என்று சொன்னவள், “சுவாமி கும்பிடலாம்” என்று ரகசியமாக உதயன் காதில் சொன்னாள்.
தீபாராதனை காட்டவும் “கும்பிடு” என்று உதயன் அவள் கைகளை கூப்பி விட உண்மையாகவே தீவிர முகபாவனையில் மெல்லிய குரலில் வேண்டுதல் வைத்தாள் லயா. அது கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ….. பூர்ணோதயன் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.
என்ன நினைத்தாளே தேன் மதியும் திரும்பி லயாவைப் பார்த்தாள். அதைக் கண்டு மெல்ல அவளை நெருங்கி குனிந்து மெல்லிய குரலில் “உண்மையில் நீங்கள் லயாவின் மேல் அக்கறை உள்ள அம்மா என்றால், இன்று உங்கள் வேண்டுதல்களை ஒத்தி வைத்து விட்டு, லயாவின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டும் என்று உண்மையாகவே வேண்டிக் கொள்ளுங்கள் தேன் மதி” என்றான்.
விழிகளில் மெல்லிய நீர்படலத்தோடு கெஞ்சலாக கேட்ட பூர்ணோதயனுக்கு பதில் சொல்லாமல் மௌனமாக தலை குனிந்தாள். மகள் வேண்டியது இவர் காதுகளில் விழுந்திருக்குமோ?. அப்படி என்ன வேண்டினாள்? என்ற யோசனையில் ஒரு வேளை.. என்று அதற்கு மேல் யோசிக்க பயந்து கண்மூடிநின்றானே தவிர வேறொன்றும் நினைக்கவில்லை.
குருக்கள் வந்து கொஞ்சம் பூவோடு, எலுமிச்சை பழம் ஒன்றையும் பூர்ணோதயன் கையில் கொடுக்க அதை வாங்கிக்கொண்டவன் கையை விரித்து, பூ பழத்தை எடுத்த லயா, “சோட்டுமா ….ம்மா இந்தாங்க” என்று தேன் மதியிடம் நீட்டினாள்.
“சீக்கிரம் வாங்கிட்டு குழந்தையை கொஞ்சம் இப்படி அனுப்புங்கோ மா. இவா ஒரு நல்ல காரியத்துக்கு சுவாமி கிட்ட உத்தரவு கேட்டு, பூ போட்டு பார்க்க வந்திருக்கா” என்று எதிரில் இருந்த குடும்பத்தை காண்பித்தது, “குழந்தையும், தெய்வமும் ஒன்னு. இவா கையால எடுத்து கொடுக்கட்டும்” என்றவர் உள்ளே சொன்னார்.
தேன் மதி வாங்கிக்கொள்ள, குருக்கள் இரண்டு சிறிய காகித பொட்டலங்களை எடுத்துக் கொண்டு வந்தார். லயாவை இறக்கி விட்டு “போ… ஒன்றை எடுத்துக் கொடுத்து விட்டு வா. நாம் ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் ” எனவும் கம்பிக்குள் புகுந்து குருக்களிடம் சென்றாள்.
தேன் மதி அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது “லயா சுவாமியிடம் என்ன வேண்டினாள் தெரியுமா?. எனக்கும், சோட்டுமாவிற்கும் டாடி போலவே இன்னொரு நல்ல டாடி வேண்டும் என்று வேண்டினாள். அவளுக்காகவாவது நீங்க இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் தேன் மதி. உங்களுக்கு கணவர் தேவையில்லாமல் இருக்கலாம். அவளுக்கு ஒரு அப்பா கண்டிப்பாகத் தேவை” என்று சொன்னதும் திரும்பி பூர்ணோதயனை பார்த்தாள்.