மதுரை மாநகரமே சித்திரை திருவிழாவினால் தங்கமாய் ஜொலித்துக்கொண்டிருந்தது.
உலகிலேயே மிக அதிகநாட்கள் நடைபெறும் திருவிழா மதுரை மண்ணின் சித்திரை திருவிழா.
ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவில் ஊரின் பெண் தெய்வமான அரசாளும் நாயகி மதுரை மீனாட்சி அம்மன் முடிசூடி திக்விஜயம் மேற்கொள்ளும் மாபெரும் பண்பாட்டு பெருவிழா.
அன்று திருவிழாவின் மூன்றாம்நாள் விழா. கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்தில் சுந்தரேஸ்வரருடன் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனும் வீதி உலா.
வெளியூரில் இருந்து சொந்தபந்தங்கள் அனைவரும் மதுரையில் திருவிழாவிற்கென விருந்தாட வந்திருந்தனர்.
மதுரையின் பெயர்பெற்ற மதுராபுரி உணவகத்தின் சார்பில் விழா நாட்கள் அனைத்திலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவுகள், தண்ணீர் பந்தலில் குடிநீர், மோர், பானகம், சர்பத் என அனைத்தும் வழங்க ஏற்பாடாகி இருந்தது.
விழா ஏற்பாட்டிலும் பெருமளவு பங்கு அவர்களுக்கு இருந்தது. மதுராபுரி உணவகத்தின் குடும்பத்தினர் கோவிலுக்கு புறப்பட தயாராகி இருந்தனர்.
சுந்தரவல்லி என்று பொறிக்கப்பட்டிருக்கும் அந்த வீட்டின் முன்னிலையில் ஆறேழு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தது.
“வல்லி எல்லாரும் புறப்பட்டாச்சா?…” என்ற குரலில் மாணிக்கவல்லி எட்டி பார்த்தார்.
“பரவாயில்ல மதினி, இம்புட்டு வருசமாகியும் கூட ஒ மருமவளுக்கு ஒம்மேல மரியாத இம்பிட்டுக்கு மட்டல…” என உறவாய் விருந்திற்கென வந்திருக்கும் பெண்மணி கேட்க,
“ஆலங்குளத்துக்காரி வாரப்ப, போறப்ப எல்லாம் ஆழம் பாக்குததுலையே இருத்தா…” என்றார் அழகுமீனாள்.
“சரியா போச்சு. சும்மாத்தேன்…” என்று அவர் சமாளிக்கவும் உள்ளிருந்து ஒவ்வொரு சொந்தங்களும் தங்களின் பெண் குழந்தைகளுக்கு மீனாட்சி வேடமிட்டு அழைத்து வரவும் சரியாய் இருந்தது.
அவர் கேட்டதுமே அழகுமீனாளின் முகம் ஒருவிதமாய் மாறி, பின் சாதாரணமானது.
“உன்னைய போலத்தேன் நானும். வந்தா, பாத்தா, போனா…” என்று பட்டுக்கொள்ளாமல் பேசியவர்,
“ஆமா நீயி போவலையா? எனக்குத்தேன் ஆவமாட்டாம வீட்டோட கெடக்கேன். உனக்கென்ன? போய் சாமிய பாத்துட்டு வா. இதுக்குத்தான ஆலங்குளத்துல இருந்து வந்தவ. போ போ…” என்று சொல்ல,
“ம்க்கும், முக்கியமான சேதி கேட்டா வெரட்டுவீயளே…” என்று அவரும் எழுந்து சென்றுவிட்டார்.
அழகுமீனாளின் முகமே மாறி வாடிவிட்டது சடுதியில். அதனை முழுமையாய் காண்பிக்காதவண்ணம் பேரனின் காலடி சத்தம்.
வீட்டில் வேலையாட்களை தவிர வேறு ஒருவரும் இல்லை. அழகர் உள்ளிருந்து வரும் சத்தத்தில் மீண்டும் மிடுக்காய் முகத்தை வைத்துக்கொண்ட அழகுமீனாள் வெளிப்பக்கம் வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.
“அப்பத்தா…” என்று அவன் அழைத்ததுமே,
“சொல்லு சாமி…” என திரும்பியவர் முகம் சட்டென புன்னகைத்தது அவனை பார்த்ததும்.
சற்றுமுன் சட்டை, பேண்டில் இருந்தவன் இப்போது பட்டுவேஷ்டி சட்டையில் கண கம்பீரமாய் நின்றான்.
பார்த்தவர் பார்த்தபடி ரசித்திருக்க அவரின் முகமும் தன்னைப்போல் புன்னகையை காண்பித்தது.
“ஆசிர்வாதம் பண்ணுங்க…” என அமர்ந்திருந்தவரின் பாதம் தொட்டு அழகர் வணங்க,
“ஆத்தீ, என்னய்யா?…” என்று எழுந்துவிட்டார் அழகுமீனாள்.
“ஏன், பண்ண முடியாதா?…” அவன் கேட்கவும் அதைவிட பதறிவிட்டார் அவர்.
“என்னய்யா? நீ எப்பவும் நூறு வருஷம் நல்லா இருக்கனும். சந்தோஷமா இருக்கனும்…” என்று சொல்லிக்கொண்டிருக்க எதிர் வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்தனர்.
கேட்டை தாண்டி எதிர் வீட்டின் வெளியே நின்றிருந்த வாகனத்தில் அவர்கள் அமர்வது வரை அழகுமீனாள் பார்த்திருக்க அழகரின் பார்வையும் அங்கே தான்.
“நல்லாயிருப்பா சாமி. நல்லா இருக்கனும். உன் மனசு மாதிரியே எல்லாம் நல்லா நடக்கனும்….” என்று அவர் சொல்லும் ஒவ்வொன்றும் அவனுக்கு சாதகமாகியது.
“ஆமா உங்கப்பன், சித்தப்பன், தாத்தா எல்லாம் எங்க சாமி? உன்னைய என்னன்னு விட்டாங்க?…” என்றார்.
“சித்தப்பா ஹோட்டல்ல இருக்காரு. அப்பாவும், தாத்தாவும் கோவில்ல இருக்காங்க…” என்றவன் அவர் அடுத்து கேட்கும்முன்பே,
“நம்ம நம்பி போய் சித்தப்பாவ மாத்தி விட்டதும் கோவிலுக்கு வந்திருவாங்க…” என்றான் அழகர்.
“சரிய்யா, பார்த்து போய்ட்டு வா சாமி…” என்று பேரனை அனுப்பி வைத்தார் அவர்.
அழகர் மனதில் அழகுமீனாள் எதிர்வீட்டினரை பார்த்த அந்த பார்வை கூட அவன் முடிவை வலுவாக்கியது.
‘எனக்கு பிடிச்சிருக்குன்னு மட்டும் தான் சொன்னேன். உங்களை நான் எதுவும் கேட்கலையே? இதை மறைச்சு என்ன பண்ண போறேன்? உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நோ இஷ்யூஸ்’ என்று கண் சிமிட்டி துள்ளல் குரலில் சொல்லியவளின் அந்த முகம்.
சற்றுமுன் புன்னகை இதழ்களில் ஒட்டி இருந்தாலும் என்னவோ யோசனையோடு தான் அவளுமே காரில் ஏறி சென்றதை போல் அவனின் உள்ளுணர்வு வலியுறுத்தியது.
இருநாட்களுக்கு முன்பு கூட அப்படி இல்லையே. எத்தனை திமிராய் தான் முறைத்தும் தன்னை பார்த்து கண் சிமிட்டினாள்.
‘சரியான சூனியபொம்மை’ என்றது அவன் மனம். அழகரின் இந்த மிகப்பெரிய முடிவுக்கு அவளும் ஒருவித காரணம் என்றும் சொல்லலாம்.
பேரன் யோசனையுடன் என்னவோ முடிவெடுத்து கிளம்புவதை போலிருக்க எதுவும் புரியவில்லை.
முதல்நாள் வீட்டில் நடந்த பேச்சுக்கள் அவனை அப்படி சிந்திக்க செய்திருக்குமோ? அந்த வருத்தமோ? என்று யோசித்தவருக்கு அவனின் முடிவு இப்படியாக இருக்கும் என்று தெரியவில்லை.
உடனே கைப்பேசி எடுத்து அமையப்பனுக்கு அழைத்தவர் மறுபக்கம் அவர் எடுத்ததும் இங்கே சொல்லும் எதுவும் அவருக்கு கேட்கவில்லை.
ரேடியோவின் சத்தமும், மக்களின் கூச்சலும், ஆர்ப்பாட்டமும், மேளதாள வாத்தியமும் அம்மையப்பன் இருக்கும் இடத்தையே ஆராவாரத்துடன் ஆர்ப்பரிக்க செய்திருந்தது.
“நா ஒரு கூறுகெட்டவ, கோவில்ல இருக்க மனுசனுக்கு போன போட்டு என்னத்த பேச?…” என்று நொடித்துக்கொள்ள வீட்டின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தது சற்றுநேரத்தில்.
எதிர்வீட்டிலும் விளக்கு போடப்பட்டிருக்க கழுத்தை வெட்டிக்கொண்டு அதனை முறைத்தார் அழகுமீனாள்.
எத்தனை ஆதுரமாய், அன்பாய் அரவணைத்திருப்பார். தாங்களா பேசியது? தாங்களா வாக்கு கொடுத்தது?
மனதில் மண்டும் குமைச்சலுடன் சாந்தாதேவி பேசிய வார்த்தைகள் இப்போதும் அவரை கொதிக்க செய்தது.