அவரை நம்பி ஒன்றும் தாங்கள் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்லிய காரணமும், மனமாற்றமும் ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உதைத்த அவரின் செயலும் ஒப்பவே இல்லை.
அம்மையப்பன், அழகுமீனாள் இருவருக்கும் இரண்டு மகன்கள். பெரியவர் ஞானசேகரன், மனைவி மாணிக்கவல்லி.
அவர்களின் பிள்ளைகள் மூத்தவள் சுடர்கொடி, இளையவள் திருமகள், ஆண்மகன் அழகர் அமிழ்திறைவன்.
மூத்தவர்களான பெண்பிள்ளைகள் இருவருக்கும் ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பிக்கு திருமணம் செய்துவைத்திருந்தனர்.
இளையவர் சுடர்மணி. மனைவி தில்லையம்பாள். அவர்களின் ஒரே பெண் பிள்ளை புகழ்மதி.
பெண்பிள்ளைகள் இல்லாத குறைக்கு அழகுமீனாளின் உடன்பிறவா சகோதரியின் மகளான சாந்தாதேவி பெற்றோரை பறிகொடுத்துவிட்டு அடைக்கலமாய் சுந்தரவல்லி இல்லத்திற்கு வந்து சேர பிரிவினை பாராது அவரையும் தங்களின் மகள் போல் சீராட்டி வளர்த்து திருமணமும் செய்துவைத்திருந்தனர்.
இப்போது அந்த மகள் போன்றவள் செய்திருக்கும் செயலில் மொத்தக்குடும்பமும், ஏமாற்றமும் வேதனையும் கொண்டிருந்தனர்.
மகள் போல் இருப்பவள் என்றைக்கும் மகளாகிவிட முடியாதென்று காண்பித்துவிட்டதில் பெருமளவும் வருத்தம் அம்மையப்பன் குடும்பத்தினருக்கு தான்.
பெரியவர்களின் இந்த மனத்தாங்கலை முதல்நாள் தான் அறிந்திருந்தான் அழகர்.
இதுவிஷயமாக இதுவரை அவனிடம் யாரும் பேசியிருக்கவில்லை. ஏன் சிறு குறிப்பும் காண்பித்திருக்கவில்லை.
அதைவிட சாந்தாதேவி சொல்லி சென்றிருக்கும் இந்த விஷயமும், அவர் மதுரை வந்திருக்கும் இந்த விஷயமும் புரிந்தவனுக்கு மனது நிலைகொள்ளாமல் ஆடியது.
“எம்புட்டு சுளுவா சொல்லிட்டு போய்ட்டா. மகளுக்கு மெட்ராஸ்க்காரன பேசி முடிக்க போறேம்ன்னு. வாரவட்டம் எல்லாம் எப்ப பாரு சத்தியம் செய்யாத கொறையா வாய் கிழிய சொன்னாளே? உரிமையா சண்டைக்கு நின்னா நான்தான் சொல்லுதேன். நீங்க கேட்கறீகளான்னு. இப்ப பார்த்தியா?…” என்று இவர் ஒருபுறம் கலங்க,
“நாம ஆசைப்பட்டு மட்டும் என்ன? விடுங்க…” என்றுவிட்டார் ஞானசேகரன்.
“உனக்கு தெரியாதுய்யா ஞானம், நானும் உன்னோட அப்பாரும் எம்புட்டு ஆசைப்பட்டோம். ஏன் நீ கூடத்தேன் விருப்பப்பட்ட. ஆனா…” என்று சொல்லிக்கொண்டிருக்க அழகரின் கவனத்திற்கு ஒட்டுமொத்தமாய் வந்துவிட்டது அந்த விஷயம்.
கேட்டவன் எந்தவித பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை. கண் சிமிட்டவும் இல்லாது மௌனமாய் கடந்துவிட்டான்.
“இங்காருங்க, நாம என்ன நினைப்போம்ன்னு ஒத்த எண்ணமில்லாம தான சொல்லிட்டு போனா. அவக்கிட்ட மறுக்கா இது விசயமா பேசவே கூடாது. என்னிக்கும்போல பாத்தா அவளாட்டம் பேசிட்டு போவோம்…” என்று அழகுமீனாள் இறுதியாய் சொல்லியதும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
மனமெல்லாம் வீட்டினரின் வருத்தமும், மனகசப்பும் தான் அவனை சுற்றிக்கொண்டது.
ஏமாற்றம். அதுவும் நம்பிக்கை தந்து ஏமாற்றுவதா? உள்ளுக்குள் வெஞ்சினம் ஏற மனதை மட்டுப்படுத்தினான்.
அழகரின் புல்லட் மிதவேகத்தில் சென்றுகொண்டிருந்தது கோவில் வாசலை நோக்கி.
வண்ணவண்ண விளக்குகள் ஒளிர கூட்டம் அலைமோதியது கோவிலின் சற்றுதூரத்தில் இருந்தே.
சின்ன சின்ன கடைகள் ஒருபுறமிருக்க, உணவு பதார்த்தங்கள் இன்னொருபுறம் என்று சுற்றிலும் வியாபார கடைகள்.
ஒவ்வொன்றிலும் மக்கள் அலைகடல் என ஆர்ப்பரிப்புடன் இங்கோங்கும் நடமாடியபடி இருந்தனர்.
கோவிலின் அருகில் சற்றுதள்ளி இருக்கும் தங்களின் ஹோட்டல் வளாகத்தில் சென்று பைக்கை நிறுத்தியவன் அதிலிருந்து இறங்க,
“அழகரண்ணே…” என்ற நம்பியின் ஆர்ப்பாட்டமான அழைப்பில் நிமிர்ந்தான் அழகர்.
“அசத்துறீங்க போங்க….” என்று சொல்ல மெல்லிய புன்னகை அழகர் முகத்தில்.
“ஹ்ம்ம், நிஜமாவே நான் மாப்பிள்ளை தான்டா தம்பி…” என்று சொல்லி நம்பியின் தோளில் தட்டியவன்,
“சித்தப்பா எங்க?…” என்றான்.
“இப்பத்தான் செத்த முன்ன நம்ம வீட்டு மாப்பிள்ளைங்களை கூட்டிட்டு கோவிலுக்கு போனாங்க….”
“சரி, நீ பார்த்துக்கோ…” என்றுவிட்டு அழகரும் கோவிலை நோக்கி சென்றான்.
அவன் நகர்ந்து செல்லும் ஒவ்வொரு நாழிகையும் அவனின் இதயத்துடிப்பை இன்னும் அதிமாக்கியது.
ஒருவேளை அவன் நினைத்தது நடக்காமல் போய்விட்டால்? சட்டென அந்த நினைப்பை உதறி எறிந்தது அவள் தன்னை பார்த்த அந்த பார்வை.
அவளை நினைத்தமாத்திரம் அவனின் கண்களின் முன் அதோ அங்கே தான் நின்றுகொண்டிருந்தாள்.
எதிர்பக்கம் தன் வீட்டினர் இருக்க, அதன் அருகில் சிறு பிள்ளைகளுடன் அங்கே கேட்கும் சப்தங்களுக்கு சிறுபிள்ளைகளுடன் லேசாய் நடனமாடுவதை போல பாசாங்கு செய்துகொண்டு முகமெல்லாம் சந்தோஷத்துடன் நின்றிருந்தாள்.
அருகில் அவளின் தந்தைவழி உறவுகளும் இருக்க அனைவரோடு நின்றிருந்தவள் அந்த கூட்டத்திலும் அவனின் வருகையை, அவன் வரும் தோரணையை, அவனின் ஆளுமையை ரசிக்கும் பாவனையை அப்பட்டமாய் காண்பித்து பார்க்க அழகரின் மனதில் பால் வார்த்தது அந்த பார்வை.
இன்னும் அவர்கள் நிற்கும் இடத்திற்கு சாமி வந்திருக்கவில்லை. ஆனால் அருகில் வந்துவிடும் என்பதற்கு சான்றாய் மேளச்சத்தம் மிக அருகில் கேட்டது.
கோவிலை தாண்டி வெளியே வரும்வழியில் தான் பந்தலின் கீழ் பாதுகாப்பாய் நின்றிருந்தனர் வீட்டினர்.
அவளை பார்த்துக்கொண்டே நேராக தன் அக்காள்கள் இருவரையும், அக்காள் பிள்ளைகளையும் பார்த்துவிட்டு அருகில் நின்ற அவனின் சித்தப்பா சுடர்மணியோடு பேசிக்கொண்டிருந்தான் அழகர்.
அவனின் பார்வை அவ்வப்போது எதிர் நிற்பவளிடம் சென்று மீண்டு வர அதுவே அவளை தலைசுற்ற செய்து, வேறு எத்திசையும் காணமுடியாமல் கட்டிவைத்தது.
இதழோரம் நெளியும் சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சுடர்மணியோடு பேசிக்கொண்டிருந்தவன் சட்டென அவளை பார்த்தும், ‘வா’ என்று இதழசைத்து தலையாட்ட இதையும் அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை.
மருண்ட பார்வையுடன் தன்னை தான் அழைக்கிறானா என்னும் யோசனையுடன், ‘நானா? என்னயா?’ என்று தன் நெஞ்சில் கைவைத்து அவளும் பாவனையெழுப்ப, இப்போது அழகரிடம் அழுத்தமான தலையசைப்பு ஆமென்று.
அவளால் நம்பவே முடியவில்லை. நிச்சயம் தன்னையா? தான் பார்த்தால் கூட தன் கவனத்தை விரும்பாதவன்.
இப்போது இது என்ன? அவளால் நிஜமென நம்பவே முடியவில்லை. திகைத்த பார்வையுடன் மஞ்சள் நிற சுடிதாரில், தலைநிறைய ஜாதிமுல்லை பூவை சூடி நின்றிருந்தவளின் தோற்றம் எல்லாம் அழகரின் கவனத்தை கவரவில்லை.
‘அவள் தன்னை கவனிக்கிறாள். கவனிக்க வைக்கிறோம். கட்டி வைத்திருக்கிறோம்’ என்னும் எண்ணமே அவனை இன்னும் முன்னேற செய்தது.
அவளிடமிருந்து விழிகள் சுழன்று அவள் குடும்பத்தினரை தேட இங்குமங்குமாய் சற்றுதள்ளி தள்ளி நிற்கவேண்டியதாக இருந்தது.
அதிலும் உறவுகள் எல்லாம் வேறு வந்திருக்க இளையபட்டாளத்தை பெரிதாய் கவனிக்கவில்லை.
தங்களின் ஊர். தன் மக்கள். தன் உறவினர்கள். நம்பிக்கை. பிள்ளைகள் தங்களின் பார்வையை தாண்டி செல்லாது என்னும் பெரும் நம்பிக்கை.
வீதியின் நடுவில் அரசாங்க நாயகி மதுரை மீனாட்சி தன் மக்களுக்கு அருள்பாலிக்க உலாவில் வலம் வர, அனைவரின் பார்வையும் அங்கே திரும்ப அழகருக்கு அது போதுமானதாக இருந்தது.
மெல்ல நகர்ந்து கூட்டம் தாண்டி அவளிடம் வந்து நின்றான் அழகர். அதுவரை அவளுமே அவனை மட்டுமே பார்த்திருந்தாள்.
காலையில் இருந்து வீட்டில் சொல்லப்பட்ட விஷயத்தில் மனதினுள் பெருமளவு சஞ்சலம்.
ஆனால் தான் மட்டுமே விருப்பம் கொண்டு, விரும்பியவனின் சிறு பார்வையும் அவள் மீது விழாதிருக்க எதை வைத்து தான், தந்தையிடம் அவளால் பேசமுடியும்?
அவளின் அத்தனை சங்கடங்களையும் தீர்ப்பதை போல அவளைநோக்கி அவன் வந்துவிட்டான்.