ஐந்துவருட காதலாகிற்றே. அவள் மட்டுமே விரும்பி அவள் மட்டுமே பார்த்து, அவள் மட்டுமே தேடி என்று தனியாய் அவளின் செயல்கள்.
இதுவரை அவனை தவிர வேறு யாருக்கும் தெரியபடுத்தியது கூட கிடையாது. அவன் முதலில் தெரிந்துகொள்ளட்டும் என்றிருக்க இருவருடங்கள் முன்புதான் அவனுக்குமே தெரிந்தது.
இப்போது அந்த தவிப்புகள் எல்லாம் அவனின் ஒற்றை பார்வையிலும், இந்த பேச்சிலும் கரைந்துவிட்டதை போலிருந்தது.
அவள் முகத்தில் அத்தனை நிறைவு. அதுவே அவளுக்கு போதுமானதாக இருக்க மறுநாள் வீட்டில் பேசிவிடலாமென்று நினைத்திருந்தாள்.
“நான் கிளம்பட்டுமா?…” என்று கேட்க,
“உன்கிட்ட பேச வந்ததை, கேட்க வந்ததை இன்னும் நான் பேசலை. கேட்கலை…” என்றான் அழகர்.
“சீக்கிரம் கேளுங்க…” என்றவள் தன்னை காணாமல் தேடுவார்களே என்று எட்டியும் பார்த்துக்கொண்டாள்.
கூடவே சந்தோஷத்தில் கள்ளமில்லா புன்னகை அவள் முகத்தில் அருவியாய் கொட்ட அவனிடம் சேர்ப்பித்தாள்.
“என்ன பார்த்துட்டே நிக்கறீங்க? கேளுங்க மாமா….” என அவசரப்படுத்தியவள்,
“ஆனா ட்ரெஸ் சூப்பரா இருக்கே. ஈவ்னிங் நீங்க ஷர்ட், ஜீன்ஸ் தானே போட்ருந்தீங்க…” என்று சொல்ல அழகரின் பார்வை இன்னும் தீவிரமானது.
“நான் தான் உங்களை கவனிச்சிட்டே இருக்கேனே? பார்த்தேன். கோவிலுக்கு நாங்க கிளம்பி வரும்போது நீங்க திரும்ப வீட்டுக்கு வந்து அம்மாச்சிட்ட பேசிட்டிருந்ததையும் பார்த்தேன்…” என்றவள் கண்சிமிட்டி துள்ளலாய் புன்னகைக்க தலையை உலுக்கிக்கொண்டான் அழகர்.
“சரி, நான் கேட்கிறதுக்கு சரியா பதில் சொல்லனும். பின்னாடி பேக்கடிக்க கூடாது. இது என் வாழ்க்கை…”
“எனக்கும் இதுதான் மாமா வாழ்க்கை. நம்மோட வாழ்க்கை. பிரிச்சு பேசாதீங்க…” மீண்டும் அவளின் புன்னகை குறைந்து முகம் கசங்க,
“லக்ஷ்மி…” என்றான் அழகர்.
“என் பேர் எல்லாம் தெரியுதா மாமா?…” மீண்டும் புன்னகை மீண்டிருந்தது அவளின் முகத்தில்.
“ப்ச்…” என்று நெற்றியை விரலால் கீறியவன்,
“உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா?…” என்றான்.
ஏன் என்ன காரணம், அதுவும் எடுத்ததுமே திருமணம் பற்றி கேட்கிறான் என ஆராய தோன்றவில்லை அவளுக்கு.
“விருப்பம் இருக்கறதால தான் விரும்பறேன் மாமா…” என்றாள் அடுத்தநொடி.
“உன் வீட்டுல மறுத்தா?…”
“கன்வின்ஸ் பண்ணுவேன். ஆனா கல்யாணம் உங்களை மட்டும் தான் செய்வேன்…”
“உறுதியா?…”
“சத்தியமா?…” என்றவள் அவனின் பார்வையில் அவன் தலையின் மேல் எக்கி நின்று கை வைத்து,
“சத்தியமா…” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம், அப்போ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நான் சொன்னாலும் உனக்கு ஓகே, சரியா?…”
“ஆமா மாமா, நம்பலையா? வேணும்னா ஒன்னு செய்யலாம். இப்பவே இங்கயே கல்யாணம் செஞ்சுக்கறீங்களா? அப்போ நம்புவீங்களா?…” என்று விளையாட்டு போல அவள் கேட்க அழகரின் கண்கள் ஒளிர்ந்தது.
“எஸ். பண்ணிக்கலாம்…” என்றான் அழுத்தமாய்.
“ஆமாமா,பண்ணிக்கலாம்…” என அவளுமே சந்தோஷத்துடனான வெட்கமும் விளையாட்டுமாய்.
“பேச்சு மாறமாட்ட தானே?…” என்றான் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி.
“நீங்க மாறாம இருந்தா சரி…” இன்னுமே கலகலவென்று சிரித்துக்கொண்டு அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் முகத்தில் ஆர்ப்பரிக்கும் புன்னகை.
“அச்சோ மாமா, எனக்கு ஓகே, ஓகே, ஓகே. நான் ரெடி மிஸஸ். அழகர் அமிழ்திறைவனா மாற இப்பவே ரெடி…” என்று சொல்லி கண் சிமிட்ட,
“என் கையை பிடிச்சுக்கோ லக்ஷ்மி…” என்றவனின் பார்வையின் மாற்றம் அவளால் உணரமுடியாது போனது.
“மாமா…” என சிரித்தவள் அழகர் நீட்டிய கரத்தின் மீது தன் கையை வைக்கவும் அவன் பிடி இரும்பாகியது.
அடுத்தநொடி யோசிக்கவில்லை. விறுவிறுவென்று உலா வந்துகொண்டிருந்த சாமியின் முன் கூட்டத்தின் நடுவில் மொத்த உறவுகளும் பார்க்க அவளை நிறுத்தியவன்,
“மீனாட்சி அம்மன் முன்னாடி கேட்கறேன். இப்ப சம்மதமா? என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு முழு சம்மதமா?…” என்றான்.
“மாமா, நான் தான்…”
“சாமியை பார்த்துட்டு என்கிட்ட சொல்லு…” என அழகர் கூற அவளுக்கு படபடவென்று அடித்துக்கொண்டது.
என்னவென்று தெரியவில்லை. மனதோரம் சிறு சஞ்சலம். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லாம் உன் காலடியில் என்பதை போல தாய் மீனாட்சியை பார்த்தவள் மீண்டும் அழகரை பார்த்தாள்.
“சம்மதம் தான் மாமா…” என்று சொல்ல,
“என்ன சம்மதம்?…” இளக்கமற்ற முகபாவனையுடன் அவன் கேட்க தன்னை நம்பவில்லையா என தோன்றியது அவளுக்கு.
“உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம் மாமா…” என்று அந்த கூட்டத்தின் ஆராவாரத்தில் சத்தமாய் அவனுக்கு கேட்பதை போல சொல்ல அழகரின் இதழ்களில் புன்னகை.
அவளுக்குமே அத்தனை சந்தோஷம். அனைவரும் இருக்கையில் மறுநாள் தங்களின் விருப்பத்தினை வீட்டினரிடம் தெரிவித்துவிடவேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் அழகரை பார்த்தாள்.
“இப்போ நம்பறீங்களா மாமா? ஓகே வா?…” என அவள் கேட்டதும்,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் தன் சட்டை பாக்கெட்டை தொட்டு பார்க்க ‘என்ன செய்கிறான் இவன்?’ என்ற விதமான பார்வை தான் அவளிடமும்.
பாக்கெட்டில் இருந்து அவன் வெளியே எடுத்த அதனை பார்த்தவள் விழிகள் விரிய என்னவென்று கேட்கும்முன் அந்த திருமாங்கல்யத்தை அவளின் கழுத்தில் கட்டி முடித்திருந்தான் அழகர்.
அவன் தன் திருமணத்தை அவளுடன் நடத்தி முடிக்கவும், இருவரின் குடும்பமும் அவர்களை நெருங்கவும் சரியாய் இருக்க, சட்டென்று அந்த இடமே அமைதியானது.
இப்படி ஒரு நிகழ்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிலும் மதுராபுரி உணவகத்தின் உரிமையாளனின் திருமணம் இப்படி வீதியில், சொந்தங்கள் யாருமற்று நடந்திருக்க ஸ்தம்பித்து வேடிக்கை பார்த்தனர் ஊர்மக்கள்.
“அழகர்…” என்ற கதிர்வேலனின் இரைச்சலோடு, தன் மகளை நோக்கி அவர் வந்த வேகத்தையும் கண்டான் அழகர்.
சட்டென தன் மனைவியை ஒற்றை கரத்தால் தன் கை வளைவிற்குள் பாதுகாப்பாய் கொண்டுவந்தவன் கதிர்வேலனின் ஓங்கிய கையை பிடித்து நிறுத்தினான்.
“ஸ்டாப் இட். இப்ப இவ உங்க பொண்ணு லக்ஷ்மி விருஷ்திகா இல்லை. அழகரோட பொண்டாட்டி…” என்றவன், அங்கே வந்துவிட்ட தன் குடும்பத்தினரையும் பார்த்தான்.
ஞானசேகரன், அம்மையப்பன், சுடர்மணி, மாணிக்கவல்லி, தில்லையம்பாள் என்று வீட்டின் பெரியவர்கள் அனைவரும் விக்கித்து பார்த்திருக்க,
“விருஷ்தி….” கதிர்வேலன் மகளை அழைக்க,
“லக்ஷ்மியோட சம்மதம் இல்லாம எங்க கல்யாணம் நடக்கலை. அவக்கிட்ட கேட்டு, அவளும் இப்பவே பண்ணிக்கலாம்ன்னு சொல்லி சம்மதிக்கவும் தான் நான் தாலியே கட்டுனேன்…” என்று சொல்லியவனை இன்னும் பேயறைந்ததை போல் பார்த்தாள் லக்ஷ்மி விருஷ்திகா.
அவள் சொல்லிய சம்மதம் அந்த வகையில் சேராதே. இப்படி இப்போதே செய்வான் என அவளுமே எதிர்பார்க்கவில்லையே.
யாரின் சம்மதமுமின்றி செய்துகொள்வதற்கா அவள் கூறியது? அதிலும் இப்படி தான் சொல்லி தான் இந்த திருமணம் என்றதில் இன்னுமே கலங்கி போனவளை முன்நிறுத்திய அழகர்,
“லக்ஷ்மி நீ சொல்லி, நீ சம்மதிக்கவும் தானே நம்ம கல்யாணம் நடந்துச்சு?…” என்றுவேறு கேட்க அவள் என்னவென்று பேச?
இத்தகைய சூழ்நிலையை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவன் தன் விருப்பம் கூறினானா என்று கூட யோசிக்காதளவிற்கு தானே அவளும் இருந்தது.
தகப்பனை திரும்பி பார்த்தாள். அவரின் ஆக்ரோஷமும் ஆத்திரமும் உயிரை நடுங்க தலையசைத்தாள் அவள்.
அவன் சொல்லியது உண்மை தானே? அவளின் சம்மதம் கிடைத்த பின்னர் தான் இந்த திருமணமே.
ஆனால் இந்தநொடி நடக்கும் என்பது அவளுமே அறியாதது. வீட்டினர் சம்மதத்துடன் நடத்திக்கொள்ள எத்தனை ஆசை. எல்லாம் முடிந்தது.
“ஆமாம் ப்பா…” என்று சொல்லிய நொடி கதிர்வேலன் ஆடிப்போனார்.
“ஆனா…” என அவள் மேலும் நடந்ததை விளக்க முன்வர, அதற்குள் அவளின் கை பிடித்து நிறுத்தியவன்,
“கேட்டாச்சா? போதுமா?…” என இறுமாப்பாய் அவரை பார்த்தான் அழகர்.
‘தன் மகளா? அவள் மனதில் இப்படி ஒரு எண்ணமா? காலையில் அவளிடம் பேசுகையில் கூட இதனை அவள் சொல்லவில்லையே’ என கதிர்வேலன் நொறுங்கி போனார்.