அழகர் கிண்டலாக சொல்லி முடித்த நொடி ஆவென்ற அவனின் அலறல் அவ்வறையை நிறைத்தது.
அவன் கத்தியதோடு விழிகளும் சிவந்து போக பல்லை கடித்து வலி பொறுத்தான்.
நிச்சயம் தானுமே இதனை செய்வோம் என்று விருஷ்திகாவுமே எதிர்பார்க்கவே இல்லை.
அவனின் அலறலில் தான் சுதாரித்தாள் அவள். சட்டென்று நிதானத்திற்கு வந்ததோடு அவன் முகம் பார்த்து திரும்பியவள் முகமும் கலங்கியிருந்தது.
கோபமும், பதட்டமும் ஒருபுறம், கூடவே அவனின் கையின் காயம். அதனை தான் அவசரமாய் பார்க்க முயல, முடியவில்லை.
“கையை விடுங்க…” என இப்போதும் தீரா எரிச்சலில் அவள் விடுபட முயல,
“சூனியபொம்மை, இப்படியா கடிப்ப?…” என்றான் இன்னும் அவள் கழுத்தின் இறுக்கத்தை கூட்டி.
“ஆமா, இன்னுமே செய்வேன். திரும்ப இதை சொன்னா கையை இல்லை, கழுத்தை கடிப்பேன்…” என்றவள் விழிகள் சிவப்பேறியது.
மூச்சுவாங்க சொல்லிவிட்டு அவனின் கையை எடுக்க முயல அவன் விலகவில்லை அப்போதும்.
“ப்ச், ஸ்ஸ்…” என்றானே தவிர வலித்தாலும் கையை இன்னுமே இறுக்கினான் அழகர்.
கோபம் அவனுக்குமே. என்ன சொல்லிவிட்டோம்? உண்மையை தானே கூறினோம் என்று கடுமை ஏறியது.
“கழுத்தையா? ஏன் செய்யமாட்ட?…”
“ஆமா, ஏன் செய்யமாட்டேன்? அதுவும் சூனியபொம்மை கண்டிப்பா செய்யும்…” என்றவளின் குரலில் கோபத்தை தாண்டிய ஆதங்கம் அப்பட்டமாய்.
“ப்ச், லக்ஷ்மி…”
“ம்ஹூம். சூனியபொம்மை…” என்றாள் அவளே.
“அது…” என்றவனால் சமாளிக்கவும் முடியவில்லை.
அவளுக்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்தாலும் சமாளித்து கரையேறும் கலை இன்னும் அவனின் கை வந்து சேரவில்லை.
“உங்களுக்கு என்னை பிடிக்காது. அப்போ இப்படியான பேரை தானே வைக்க முடியும். இது ஒன்னும் என்னை பாதிக்காது….” என்றாள் பாதிப்பினை தாங்கியபடி கடினமாக.
“லக்ஷ்மி…”
“இந்த பேருக்கு அந்த பேர் எவ்வளவோ பரவாயில்லை. தயவுசெஞ்சு பேரை சொல்லி கூப்பிடவேண்டாம். அதுவும் காதலே பிடிக்காத உங்க பார்வைக்கு நான் செஞ்சது மிகப்பெரிய பாதகம் வேற. செய்யக்கூடாத செயலும்..” என்று கூற,
“நீங்க தானே ஆரம்பிச்சீங்க? கொஞ்சம்முன்ன நீங்க சொல்லும்போது நான் இப்போ எதுக்குன்னு கேட்டேனா?…”
“கடிச்சு வச்சியே…”
“ஆமா, செய்வேன். திரும்ப திரும்ப செய்வேன்…” என்றவள் விலக விலக அவளை நெருக்கி பிடித்தான் அழகர்.
“என்னை ரொம்பவே பொறுமை இழக்க வைக்கிற லக்ஷ்மி…” என்றவனின் கோபம் கொஞ்சமும் அவளை பாதிக்கவில்லை.
“வலிக்குது…” என்றாள் மெல்லிய குரலில்.
“எனக்கும் தான் வலிச்சது….” என்றவன் கரம் வலிமையை கூட்டவும் அதுவரை அவனுடன் போராடியவள் இப்போது அசைவின்றி நின்றாள்.
“என்னடி, சத்தத்தை காணும்? இப்ப பேசேன். என்ன பயந்துட்டியா?…”
“ம்ஹூம். இந்த கை இன்னும் கொஞ்சம் நெருக்கினா என்னன்னு இருக்கு. இப்டியே என் மூச்சு நின்னுட்டா என்னன்னு இருக்கு…” என்று சொல்ல அழகரின் கைகள் சட்டென்று தளர்ந்தது.
அதனை உணர்ந்தவள் அவசரமின்றி மெல்லவே விடுபட்டாள். முகத்தில் எத்தனை தீர்க்கம் என்றுதான் அழகருக்கு தோன்றியது.
எப்போதும் பார்க்கும் நேரமெல்லாம் ஆசையில் நனையும் அந்த விழிகள் இப்போது கண்ணீரை கூட காண்பிக்கவில்லை.
“ஒருதடவை நடந்த கல்யாணத்துக்கே எனக்கு இந்த நிலைமை. நாளைக்கு திரும்பவும். அதுலையும் நீங்க என்னவெல்லாம் பேசுவீங்களோன்னு நினைக்கும்போது…”
“லக்ஷ்மி…” அழகரின் குரலே இப்போது மாறிவிட்டிருந்தது.
“உங்களை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணுனேன். ஆனா இப்போ பிடிக்கவே இல்லை. இந்த வாழ்க்கையே வேண்டாம்ன்னு தோணுது….” என்று சொல்ல, முன்பெல்லாம் கோபத்தில் ஆர்ப்பரிப்பவன் உணர்வற்ற இந்த பேச்சில் மௌனமாய் பார்த்தான் அவளை.
“நிஜமாவே இந்த விசேஷம் வேண்டாமேன்னு மனசு அடிச்சுக்குது. ஆனா யார்க்கிட்ட வேண்டாம்ன்னு சொல்ல? எப்படி சொல்ல? கல்யாணமும் என்னை கேட்காம நடந்தது. இப்போ அடுத்தடுத்த விஷயங்களும். என் அம்மாவுமே இதை விரும்பறாங்க….” என்றவள்,
“பைத்தியம் மாதிரி பேசாத லக்ஷ்மி…” அழகர் அவளை அமைதியாக்க முயல இன்னும் பின்நகர்ந்தாள்.
“ஹ்ம்ம், நிச்சயம் பைத்தியம் தான். கூடிய சீக்கிரம் அதுவுமே பிடிச்சிடும் போல. அப்படித்தான் இருக்கு. இருக்கேன். வேற எப்படி, என்ன செய்யறதுன்னு தெரியலை…” என கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து நின்றாள் விருஷ்திகா.
“திரும்ப நமக்கு எல்லார் ஆசிர்வாதத்தோட நடக்கபோற இந்த விசேஷம் உனக்கு அவ்வளோ கஷ்டமா?…”
“ஆமா, இல்லைன்னு சொல்லமாட்டேன். எப்படி சொல்லுவேன், சொல்லுங்க?…” என்றவள்,
“என்ன நம்பிக்கைல நான் உங்களோட வாழன்னு கூட தெரியலை. நான் எதுக்கு இவ்வளோ யோசிக்கறேன், இவ்வளோ வேதனைப்படறேன் இது எதையுமே புரிஞ்சுக்காத ஒருத்தர் மேல ஆசைப்பட்டதுக்கு எனக்கு எவ்வளோ பெரிய தண்டனை? அதுவும் வாழ்நாள் முழுக்க….”
“விருப்பப்படற வாழ்க்கை அமையலைன்னாலும் தன்னை புரிஞ்சு, தன் காதலுக்கு மதிப்பு கிடைக்கும்போது உள்ள சந்தோஷம் என்னன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை நான் சொன்னாலும் அதுக்கு எனக்கு வலிக்க வலிக்க ஒரு பதில் தருவீங்க…”
“போதும். ஏற்கனவே உங்க வார்த்தைகள் பாதி கொன்னுடுச்சு. மீதியும் நீங்க அப்பப்ப எடுக்கறதுக்கு மிச்சசொச்சம் இருந்துட்டு போகட்டும்….” என்றாள் விருஷ்திகா கொஞ்சமும் பற்றில்லா பார்வையுடன்.
“என்னோட வாழற இந்த வாழ்க்கை உனக்கு அவ்வளோ கஷ்டமா?…” இறுக்கத்துடன் அழகர் கேட்க,
“ஆமா, பொண்டாட்டி மேல புருஷனுக்கு இப்படி ஒரு உயர்ந்த அபிப்ராயம் இருக்கும்போது அதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். வாய்வார்த்தைல கூட இந்த வீட்டு பொண்ணுங்களை சொல்லவிடாதப்போ, எனக்கு இந்த தாலியை மட்டும் கட்டிட்டு என்னவேணாலும் பேசலாம்ன்ற உங்களோட நான் வாழ்ற வாழ்க்கை எனக்கு சந்தோஷத்தை தருமா?…”
“ஒரு அண்ணனா இந்த குடும்பத்துக்கு நீங்க ரொம்ப நல்லவிதமா இருக்கலாம். புருஷனா உங்க பொண்டாட்டியோட மரியாதையை நீங்களே பொசுக்கிட்டீங்க. அடுத்தவங்க எதுவும் ஒருவார்த்தை சொல்லிட்டா என் புருஷன் இருக்கார், குடும்பம் இருக்குன்னு நினைக்கலாம். ஆனா நீங்களே பேசும்போது….”
“நீங்க வேற என்ன செஞ்சிருந்தாலும் தாங்கிருந்திருப்பேன். உங்களுக்கு என்னை புடிக்கும்ன்ற அந்த ஒரு எண்ணமே என்னை எல்லாத்தையும் கடந்து வர வச்சிரும். ஆனா எனக்கு நீங்க குடுத்த சில கிரெடிட்ஸ். அது எந்தகாலத்துலையும் மறக்காது. என் உயிர் போற வரைக்கும் கூட…”
“என் பொண்ணை உன்னை மாதிரி வளர்க்கமாட்டேன்னு சொல்லியாச்சு. என்னை பேசின வார்த்தையை நான் உங்க அக்கா, தங்கச்சியை பேசினா கொந்தளிக்கறீங்க. அப்போ உங்கமேல நான் எந்த நம்பிக்கைல என்னோட உணர்வுகளை பகிர்ந்துக்க முடியும்? காதல்ன்றதுக்கே முகத்தை சுளிச்சு என்னென்னவோ பேசியாச்சு. அதையும் தாண்டிய இந்த பந்தம்…”
“அறிவில்லாம பேசாதடி…” என்று இரைந்தான் அழகர் அவளை மேலும் பேசவிடாமல்.
“ஆமா, இருந்திருந்தா உங்களை ஏன் இன்னும் காட்டிக்கொடுக்காம இருக்கேன்?…”
“நான் என்ன அக்யூஸ்ட்டா? என்னவோ உன்னை கட்டிவச்சு மிரட்டி கல்யாணம் பண்ணினமாதிரி பேசற. இதையே திரும்ப திரும்ப பேச எனக்கே அலுப்பா இருக்கு லக்ஷ்மி…” என்றான் ஆயாசத்துடன்.
“ஆமா கட்டிவச்சு மிரட்டி கல்யாணம் செய்யலை தான். ஆனா…” என்றவள்,
“ப்ச், பேசவேண்டாம். நான் ஒதுங்கி தானே போறேன்…” என்றவள் அதற்குமேல் அங்கிருந்தால் இன்னும் பேசுவான் என்று கதவின் அருகில் வந்து நின்றாள்.
வெகுநேரம் இருவருக்குமே இடையில் பெரும் அமைதி. எதற்காக வந்தானோ அதனையே மறந்து நிற்க வைத்தது அவளின் வலி மிகுந்த வார்த்தைகள்.
“வழி விடுங்க. வெளில போறேன்…” என்றாள் மெல்லிய குரலில்.
பதிலில்லை அழகரிடம். அவன் நகர்ந்து கதவை திறக்க வழி செய்வான் என்று பார்த்தவளுக்கு நேரம் கூட கூட சங்கடம் வேறு.
வீட்டில் வயது பெண் வேறு இருக்க, போதாததிற்கு வீடு நிரம்பிய உறவுகளின் கூட்டம்.