மறுநாள் நடக்கவிருக்கும் விசேஷம் ஒருபுறம் இருந்தாலும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கென்று எப்போதும் வருபவர்கள் இப்போது குடும்பம் சகிதமாக வருகை தந்திருந்தனர்.
அனைவரும் கீழே இருக்க இப்படி செய்கிறானே என்று எரிச்சலானாள் விருதிக்ஷா.
“யாராச்சும் கவனிச்சா தேவையில்லாமல் பேசுவாங்க…” என்று சொல்ல கடுப்பாகிவிட்டான் அழகர்.
“என்னடி நினைப்பாங்க? நான் உன் புருஷன் தானே? நீ என் பொண்டாட்டி தானே? நினைப்பாங்களாம். நீ நினைச்சதெல்லாம் பேசறதை முதல்ல நிறுத்து. நம்ம வாழ்க்கை உருப்படும்…” என்றவன் மனதினுள் அவள் பேசிய ஒவ்வொன்றும் ஓங்காரமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அதிலும் அவள் கூறிய வார்த்தைகளான வாழ விருப்பமின்மை, மரியாதை, வளர்ப்பு இவை எல்லாமே அவனை சுரீரென்று குத்தி கிழிக்க ஆரம்பித்தது.
“சரி பேசலை…” சட்டென முகத்தை திருப்ப, அழகருக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
எத்தனை பேசிவிட்டாள்? அதுவும் தான் சொல்லிய ஒரு கேலி பேச்சிற்கு இத்தனை பேச்சுக்களா என்று தோன்ற, பட்டென்று கதவை திறந்தவன் அறையில் இருந்து வெளியேறிவிட்டான்.
தன் பேச்சுக்கள் அவனிடத்தில் அதிகப்படி என்றாலும் அவளால் அவன் சொல்லிய சொற்களின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை.
ஒருபுறம் உயிராய் நேசித்தவன் மீதான காதல். இன்னொருபுறம் அவன் மீது அவனே வளர்த்துவிட்ட வெறுப்பு.
இரண்டிற்கும் இடையில் அவள் தான் சுயமரியாதையை பிடித்துக்கொண்டு ஊசலாடிக்கொண்டிருந்தாள்.
அங்கேயே நின்றவளின் கைப்பேசி சப்தம் எழுப்ப குனிந்து பார்த்தாள் விருஷ்திகா.
அழகரின் கை நழுவி எப்போதோ கீழே விழுந்திருந்தது அவள் கைப்பேசி. அது அவளுடையதே தான்.
அழகர் வாங்கி வந்திருந்ததை இப்போது வரை உபயோகிக்கவில்லை விருஷ்திகா.
அரவிந்த் அவளுக்கு எடுத்து வந்து தந்திருந்தான் அவளின் கைப்பேசியை. அதுவும் அவள் மறுத்தும் விடாமல்.
“உன் மொபைல் தான். உன்னோட உரிமை இது. நாங்க சண்டை போட்டா நீ வேணாம்ன்னு சொல்லிடுவியா? சண்டை போட்டு கேட்டு வாங்க வேண்டாமா?…” என்று தான் தந்திருந்தான்.
“இப்போலாம் என்னை நிறையவே கன்வின்ஸ் பன்றீங்கண்ணா. ஆனாலும் அப்படி ஒரு சூழ்நிலையில தான் நானும் இருக்கேன்…” என்று கழிவிரக்கத்தில் அவள் அல்லாடினாள்.
இப்போது மாணிக்கவல்லி சொல்லி புகழ்மதி விருஷ்திகாவிற்கு அழைப்பு விடுத்திருக்க எடுத்தவள் பேசிவிட்டு வைத்தாள்.
பூச்சரம் கொண்டு வந்திருந்தனராம். மறுநாளைக்கு அவளுக்கென்று தனியாய் தயாரித்து வந்திருக்க அதற்காக கீழே வர கூறியிருக்க அலுப்புடன் தலையை பிடித்தவள் வெளியேற முற்பட அப்போதுதான் அழகர் ஏன் வந்தான் என்றுமே ஞாபகத்தில் வந்து நின்றது.
“ப்ச், சொல்லும்போதே பேசாம ஒரு ரிங் விட்டு மொபைலை எடுத்துக்க சொல்லிட்டு போயிருந்திருக்கலாம். தேவையா உனக்கு? மூச்சுவாங்க பேசி இப்போ திரும்ப திரும்ப வேதனை. நிஜமாவே அறிவில்லை உனக்கு…” என்று தன்னை தானே கடிந்துகொண்டவளுக்கு நிதானத்திற்கு வரவே சிலநொடிகளானது.
இனி யோசித்து என்ன? அவனாகவே சண்டை என்று வந்தாலும் அமைதியாக போய்விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே அவனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
அங்கே தான் இருந்தது அழகரின் கைப்பேசி. உடை எடுத்தவன் அதன் கப்போர்டில் வைத்து சாற்றியிருக்க, லேசாய் திறந்திருந்த இடுக்கில் அதன் சப்தம்.
அழகரின் கைப்பேசியை கையில் எடுத்துக்கொண்டவள் அதனை பார்க்கும் ஆர்வம் கூட இன்றி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
வீடு நிறைந்து சலசலவென ஆள்களின் சத்தங்கள் இரைந்துகொண்டிருந்தது. அவளை பார்த்ததுமே பரிகாசமான சில சிரிப்புக்களும், கேலி பார்வைகளும் சட்டென்று உருமாற்றம் பெற்றது.
முணுமுணுவென்று அனைவரும் கிசுகிசுப்பாய் பேசியதை கவனித்த அழகர் சட்டென்று திரும்பி பார்க்க விருஷ்திகா தான் வந்து நின்றாள் கையில் அவனின் கைப்பேசியுடன்.
“நாங்கூட துபாயிக்கே போய்ட்டன்னுல நெனச்சேன்…” என்று இன்னும் ஒருவர் கூற சிறு சிரிப்பு மட்டுமே அவளிடத்தில்.
“ஆமா புதுசா கலியாணம் முடிச்ச புதுப்பொண்ணு சீல கட்டாம என்னத்த இந்த உடுப்பு? சுடிதார போட்டுக்கிட்டு நிக்கிதவ?…” என்று இன்னொருவர் கேட்க விருஷ்திகாவிற்கு சங்டமாகி போனது.
இப்படி தன் திருமணம் நடக்கும் என்று கனவா கண்டால்? ஊரில் இருந்து கொண்டுவந்தது எல்லாம் அவள் தினசரி உடுத்தும் சல்வார், மற்ற உடுப்புகள் தான்.
புடவை என்று பார்த்தால் அவளின் பூப்பெய்த விசேஷத்தில் அணிந்தது மட்டுமே.
“அப்பப்ப வர்ற டிஸைன்ல எடுத்து வைப்போமே விருஷ்தி…” என்று சாந்தா சொல்லும் பொழுதெல்லாம் அவள் கூறுவது ஒன்றுதான்.
“நீங்க எடுத்து வச்சு அது ஓல்ட் மாடலாகி நான் கட்டவா? அதெல்லாம் வேண்டாம். என் கல்யாணத்தப்போ எல்லாமே புதுசா எடுத்துக்கலாம். அப்போ உள்ள லேட்டஸ்ட் சேரீஸ் தான் நானே பார்த்து பார்த்து எடுப்பேன். அதுவரை அந்த அமௌன்ட் எல்லாம் சேவிங்க்ஸ்ல இருக்கட்டும்…” என்றிருந்தாள்.
இப்போதுமே இங்கே மதுரையில் இருந்தவை எல்லாம் சாந்தாவின் புடவைகள். திருமணம் நடந்தவிதம் ஒருபுறம், அதன்பின்னரான பிரச்சனை, கதிர்வேலன் உடல்நிலை என்று இதனை யாரும் யோசிக்கவில்லை.
இப்போது வந்தவர்கள் கேட்கும்படி இருக்க மாணிக்கவல்லி, தில்லையம்பாள் இருவரும் சமாளிக்கமுடியாமல் பார்த்தனர்.
“ப்ச், செத்த கம்மின்னிருங்க…” என்ற அம்மையப்பன்,
“என்னம்மா?…” என்றார் பேத்தியிடம்.
“அவங்க போன்….” என்றவள் அதனை அழகரிடம் நீட்டினாள்.
“மொபைலை ரூம்ல வச்சிட்டு வந்திட்டீங்க…” என்று சொல்லி நீட்டவும், தலையசைத்து வாங்கிக்கொண்டான் அவன்.
“சரி,, நீ உள்ள போ…” என்ற அழகர்,
“புகழ்…” என்றழைக்கவும் அவளும் வர,
“மதினிய கூட்டிட்டு போ….” என்றான் அழுத்தமாக.
அவனின் முகத்தில் இருந்த பாவனையிலேயே தங்களின் பேச்சில் அவன் கோபம் கொண்டுவிட்டான் என்று பார்த்தவர்களுக்கு புரியும்படி இருந்தது.
“அழகரு…” என அம்மையப்பன் கையில் கை வைக்க,
“ஹோட்டலுக்கு கெளம்பறேன்….” என்று எழுந்துகொண்டவன் அங்கே ஜமுக்காளத்தில் அமர்ந்திருந்தவர்களை ஒருபார்வை பார்த்துவிட்டு திரும்ப அழகுமீனாள் உள்ளே வந்துகொண்டிருந்தார்.
“என்னய்யா ராசா, வெளிலயா?…” என்று அவர் கேட்க,
“ஆமா…” என சொல்லியவன் பின் சட்டென்று அவரின் பாதம் வணங்கி எழ அழகுமீனாளுக்கு ஜெர்க்கானது.
“ஆத்தே…” என்று நெஞ்சை பிடிக்க அழகர் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான்.
“என்னத்தா, என்ன சங்கதி ஆசிர்வாதமெல்லாம் பண்ணுத?…” என சுடர்கொடி கேட்க, மொத்த உறுப்பினர்களும் அவரை தான் பார்த்தனர்.