“பாவமேன்னு உன்னை தூக்கி வளத்ததுக்கு வகையா இந்த குடும்பத்துக்குள்ள மகளையும் கொண்டுவந்துட்டியே. சாமர்த்தியக்காரி தான்…” என்று சில்லாகிப்பதை போல பேசிவைக்க அவருக்கா தெரியாது அதன் மறைபொருள்.
இருக்கும் சூழ்நிலையில் எதிர்த்தும், ஆதரித்தும் என்று அவர் எவ்வித உணர்வையும் காண்பிக்கவில்லை.
பொதுவாய் சிறு சிரிப்பு. அவ்வளவே. அதற்கும் கூட புன்னகை பூச்சுடன் குத்தல் மொழிகள்.
அதையெல்லாம் கேட்டு சண்டையிட்டோ, விவாதித்தோ பயனில்லை. அதுவும் கதிர்வேலன் இப்போதிருக்கும் நிலையில்.
என்னவோ ஆண்டவன் புண்ணியத்தில் இந்தமட்டும் கோபம் மறைந்து குடும்பம் ஒட்டி வருகின்றதே என்று நிம்மதியானார் சாந்தாதேவி.
ஆனாலும் மனதினுள் விழுந்த விரிசலின் வலியை அவரின் முகம் பிரதிபலிக்கத்தான் செய்தது.
உரிமையாய் வந்துபோன வீட்டினுள் தயங்கி வந்து செல்லும் விதமாய் ஒருவித திரை விழுந்ததை போலிருந்தது.
அதுவும் மகளை காண்கையில் அவளின் சோர்ந்தமுகமும், பூரிப்பில்லா புன்னகையும் உள்ளுக்கு தைக்கத்தான் செய்தது. கூடவே அழகரின் மீதும் ஒரு கவனம்.
மகள் விரும்பி மணமுடித்து ஏன் என்று தோன்றினாலும் ஒருவேளை தகப்பனின் உடல்நிலை குறித்து என தானாகவே ஒரு சமாதானம் எழுந்துவிடும்.
அதனை விருஷ்திகாவும் உணராமல் இல்லை. எதற்கு பேசி அப்படி இல்லை என்று எதையாவது கூறி தானாக வாய்தவறி உளறிவிடுவதற்கு மௌனமே மேல் என்று இருந்துகொண்டாள்.
ஒன்றுவிட்ட சொந்தம் என்று வந்தாலும் கூட எத்தனை எத்தனை பரிகாச பார்வைகளும், வார்த்தைகளும்.
அந்த கும்பலையே அவள் வெறுக்கும்படி அத்தனை பொய்யான அனுசரணைகள்.
இதில் கூடுதலாய் அவளுக்கு பற்றிக்கொண்டுவந்தது அழகருக்கு பெண் கொடுக்க காத்திருந்தவர்களின் அங்கலாய்ப்புகள் தான்.
“துபாய்ல குடி போனவ எங்க இங்க எல்லாம் பொண்ணை குடுக்க போறான்னு நெனச்சா கச்சிதமா முடிச்சிட்டாளே?…” என்று சிலர் கூற,
“அதான, அங்க சிட்டில வளந்தவ, இங்க எப்படி இருக்க போறான்னு பாக்கத்தான போறோம். இதென்ன லீவுக்கு பத்துநாள் வந்து இருந்துட்டு போற சங்கதியா?…” என்றும் சிலர் பேசி வைத்திருக்க திருமகள் தான் வல்லியிடம் ஆடிவிட்டாள்.
“ஒங்கிட்ட தானத்தா அம்புட்டுபேரும் துக்கம் வெசாரிக்கிறதாட்டம் பேசுதாளுங்க. நறுக்குன்னு கேக்கத்தான நீயும். கல்யாணமானவன நெனச்சு பொண்ணு குடுக்க முடியலன்னு விசும்புத இதுங்கல்லாம் என்ன செம்மங்களோ?…” என்று கத்தியிருந்தாள்.
கூடுதலாக அவளிடமே வேறு கிண்டலும், நக்க்களுமாய் வந்து தங்கள் வாய்ச்சொல்லை சாமர்த்தியமாய் கடைபரப்ப பார்க்க,
சுடர்கொடிக்கு இவை எல்லாம் வரவில்லை. யாரும் எதுவும் பேசினால் கூட,
“அவனுக்கு அவளைத்தான் புடிச்சிருக்கு. அதுக்கு யாரு என்ன செய்யமுடியும்?…” என்று முடித்துக்கொண்டாள்.
அழகுமீனாளிடம் ஒருவார்த்தை யாரும் இப்படி பேசிவிடவில்லை. யோசிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்.
“கெழவி, ஒம்பேத்திய பாத்து அம்புட்டுபேத்துக்கும் அடிவவுறு பத்திக்கிச்சு. கெடந்து காந்துதாளுங்க…” என திருமகள் லேசாய் திரியை தூண்டிவிட விளக்கெண்ணையை கண்ணில் ஊற்றிக்கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
“அந்த துபாய் வவுசுக்காரிய நா என்னவும் பேசுவேன். எம்பேரன் பொண்டாட்டிய எவ பேசுவா?…” என்று குச்சியை வைத்துக்கொண்டு விரட்டவே ஆரம்பித்துவிட்டார்.
அதிலேயே வீடு திருமண களை பூண்டுவிட்டது. இரவு உணவை முடித்துவிட்டு வெகுசிலரை தவிர்த்து, அனைவரும் உறங்க சென்றுவிட அழகர் வருவதற்கு நள்ளிரவானது.
அத்தனை தாமதமாக வந்ததும் அவன் கண்கள் அவளை தேடியது. அப்போதுவரை கீழே தான் இருந்தாள் விருஷ்திகா.
மறுநாள் கோவிலுக்கு வைப்பதற்கு தனியாக வரிசை தட்டுக்கள் எல்லாம் எடுத்து வைத்து எல்லாவற்றையும் சரிபார்த்தபடி இருந்தனர்.
மாணிக்கவல்லி அவ்வப்போது விருஷ்திகாவை உறங்க செல்லும்படி கூறியும் செல்லவில்லை அவள்.
மனதோரம் பெரும் போராட்டம். கோபமெல்லாம் கட்டுடைந்து வார்த்தைகளாக கொட்டிக்கொண்டே இருப்பினும் இன்னும் நெஞ்சத்தில் எரியும் கனல் குறையவில்லை.
இப்படி நடந்திருக்கவே கூடாதென்று ஒவ்வொரு நிகழ்வையுமே யோசித்து யோசித்து மண்டை சூடாக வாழ்நாள் முழுவதும் இப்படியே சண்டையில் தான் கழியுமோ என்னும் பயம் வேறு.
அழகரின் முகத்தில் கொஞ்சமேனும் தன் பக்கமிருக்கும் உணர்வுகளை புரிந்துகொண்ட தாக்கத்தினை இப்போதும் காணமுடியாமல் உள்ளுக்குள் துவண்டுதான் போனாள்.
படுத்தாலும் உறக்கம் என்பதும் கிடையாது. அவனின் வார்த்தைகள் அவளை உருகுலைத்துக்கொண்டிருக்க எங்கே உறங்குவது?
அறைக்கு சென்றால் இன்னுமே ஜன்னலின் ஓரம் சென்றமர்ந்து தன் வீட்டினை பார்த்து பார்த்து தானே தன் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கிக்கொள்வோம் என்று அங்கே செல்வதை குறைத்து கீழே இவர்களுடன் அளவளாவியபடி இருந்தாள்.
சிலநேரங்களில் பேச்சுக்கள், சிலநேரங்களில் வேடிக்கை பார்ப்பதும் என்று பொழுது கழிய வாசலில் புல்லட் வந்துவிட்ட சப்தம் காதை நிறைத்தது.
வண்டி வந்த வேகத்தில் அவனுமே வீட்டினுள் வந்துவிட அவனின் விழிகளில் வந்து நின்றாள் விருஷ்திகா.
“இன்னுமா நீ தூங்கலை?…” அழகர் வெகுசாதாரணமாய் கேட்க தன் மீது எந்த கோபமும் இல்லையா என்பதை போல் பார்த்தாள் அவனை.
“உன்னை தான் லக்ஷ்மி?…” என்றவன்,
“ஏன் இன்னும் முழிச்சிருக்கீங்க?…” என தன் கை கடிகாரத்தை பார்த்தான்.
“இன்னும் நாலுமணி நேரம் தான் தூங்கமுடியும். போய் படுங்க. காலையில பார்த்துக்கலாம்…” என்றவன் விருஷ்திகாவை ஒரு பார்வை பார்க்க, சத்தமின்றி மாடியேறிவிட்டாள்.
‘ஆளுங்க இருக்கவும் என்ன ஒரு பவ்யம்? ரூம்ல ஆட்டமா ஆடறது சூனிய’ என அவள் செல்வதை பார்த்தபடியே நினைத்தவன் சட்டென்று இதழ்மடித்து கடித்ததோடு, வலதுகையினால் தனது இதயப்பகுதியை தட்டி ஒரு அடி வைத்து நிமிர, அவனை அதிசயமாய் பார்த்தனர் அனைவரும்.
“ஹ்ம்ம்…” என்றுதான் தலையை அசைத்தான்.
“இதோ போய்ட்டோம்…” என்று அனைவரும் கலைந்து செல்ல, இதழ்மடித்து புன்னகையை அடக்கியபடி தன் அறைநோக்கி சென்றான் அழகர்.
அவன் வரும் முன்பே கட்டிலில் விருஷ்திகா கண்மூடி ஓரத்தை நிறைத்திருக்க, அவளை பார்த்துக்கொண்டே முகம் கழுவி, உடை மாற்றிவிட்டு வந்து அவளருகில் விழுந்தவனின் கரம் ஒன்று அவளை வளைத்து பிடித்தது.
“ம்மா…” என்ற சத்தத்தோடு எதிர்பாராததில் பட்டென்று எழுந்துவிட்டாள் விருஷ்திகா.
“ஏன் நான் தான கை போட்டேன்?…” என்றான் அவளை உல்லாசப்பார்வை பார்த்தபடி.
அவனை உறுத்து விழித்தவள் அவள் மீது விழுந்த அவன் கரத்தையும், அழகரையும் மாறி மாறி பார்த்ததோடு எச்சரிக்கை பார்வை கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக்கொண்டாள்.
“அடிங்…” என்றவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்து அவளின் கழுத்தில் முகம் பதித்தவன்,
“திமிறாம இரு லக்ஷ்மி. சும்மா உன் சண்டைக்கெல்லாம் என்னால ஆடமுடியாது. உனக்கென்ன, என்னோட உனக்கு வேற எதுவும் வேண்டாம். அதுதானே? இருந்துட்டு போ. ஆனா என்னால முடியாது. இத்தனை நாள் உனக்காக தான் விலகி இருந்தேன்…”
“இப்பவும் உனக்காக தான் உன்னால தான் நெருங்கி வர்றேன். சும்மா சும்மா வாழ்க்கை முழுக்க சண்டையிலையே போக நான் விடமுடியாது. சண்டையா போட்டுக்கோ. ஆனா நான் இப்படி தான். என் கைக்குள்ள நீ இருக்கனும். இப்ப வேற பேச எனக்கு சுத்தமா முடியலை. நாளைக்கு மிச்சத்தை பேசலாம். இப்போ தூங்கு…”
“ஆனா என்னை விலகி நீ தள்ளி நிக்க நினைக்காத. இந்த கேப்புமே இன்னும் நாம பிரியாம, புரிஞ்சுக்கறதுக்கு தான். எஸ், என் மேலையும் தப்பு இருக்கலாம். தப்பு பண்ணாதவங்க மனுஷங்களா என்ன? பண்ணியாச்சுன்னு அதையே பிடிச்சு தொங்கிட்டிருக்க முடியாது. புரிஞ்சதா?…” என்று முழுமூச்சாய் பேசி முடிக்க அவனின் முகம் பார்த்தாள் விருஷ்திகா.
அவளின் மூக்கின் நுனி சிவந்து போய் பேச்சின்றி அவனை பார்த்திருக்க மெல்ல அதில் இதழ் பதித்தவன்,
“கடிச்சு முழுங்கிடமாட்டேன். அப்படி முழுங்கவும் வேண்டாம். அன்னைக்கு நீயா எனக்குள்ள இருந்தியே….” என்றவன் மேலும் பேசும்முன் கோபத்தில் கூசி சிவந்தவள் அவனின் அதரங்களை கை கொண்டு மறைக்க,
“ப்ச், இதுக்குத்தான் தூங்குன்னு சொன்னேன்…” என்று அவளின் கைகளுக்குள் பேச, எதுவும் செய்யமுடியாமல் தானாக அசையாமல் அப்படியே சுருண்டுகொண்டாள் விருஷ்திகா.
அவள் மௌனத்தில் இதழோரம் அரும்பிய மெல்லிய புன்னகையுடன் அழகரும் உறங்க ஆரம்பித்தான்.
அவனின் ஆழ்ந்த உறக்கத்தில் கணவனின் புறம் திரும்பியவள் கண்கள் தான் கடித்த அவனின் கரத்தினை தான் ஆராய்ந்தது.
பற்கள் அழுத்தமாய் ஆழமாய் பதிந்திருக்க பார்த்ததுமே கண்ணில் நீர் உடைப்பெடுத்தது.