அவன் சென்றுவிட்ட அரவம் தெரிந்ததும் தான் விருஷ்திகாவிடம் பரபரப்பே தொற்றிக்கொண்டது.
“அவர் எப்படி இருந்தா என்ன? நான் எனக்காக கிளம்பறேன். என் வீட்டுக்காக…” என்று இங்குமங்குமாய் பறந்து பறந்து கிளம்பிவிட்டாள்.
மீண்டும் நான்குமணிபோல அழகர் வீடு வர அறையில் விருஷ்திகா இல்லை. அவனுக்கான உடை மட்டும் கட்டிலின் அருகிலிருந்த மேஜையில் இருந்தது.
“உங்க ட்ரெஸ் சுத்தமா நல்லாவே இல்லை…” என அவள் கைப்பட எழுதியிருந்த கடிதம் வேறு.
அதனை எடுத்து படித்தவன் விழிகள் சுருங்க புன்னகைத்த நொடி கீழே போட்டிருந்ததை பார்த்ததுமே சத்தமாகவே சிரித்துவிட்டான் அழகர்.
எழுதியதன் கீழே பொம்மை ஒன்று வரைந்து அதன் அருகில் மிஸஸ் சூனியபொம்மை, வொய்ப் ஆஃப் சீனியர் சூனியபொம்மை என்று எழுதியிருந்தாள் விருஷ்திகா.
கூடவே வீட்டு முகவரியில் இருந்து அத்தனையும் வரிசைகட்டி இருந்ததோடு மதுராபுரி உணவகம், அதன் கிளைகள் முதற்கொண்டு எழுதியிருந்தாள்.
அவள் வார்த்தைகளின் ஒட்டுப்புல்லாக முற்றுப்புள்ளி வைக்கும் இடமெல்லாம் பயங்கர உருவமாய் சூனிய பொம்மைகள்.
சத்தியமாய் அழகருக்கு அந்த காலையும், அந்த புன்னகையும் வாழ்க்கைக்கும் மறக்கமுடியாது.
அப்படி ஒரு மகிழ்ச்சியான காலையும், சந்தோஷமான தருணமுமாய் இருந்தாலும், தான் சொல்லிய வார்த்தையை தனக்கே அவள் திருப்பி படித்திருக்க லேசாய் மனம் கசங்கியது.
“தைரியம் தான். நான் உனக்கு சீனியர் சூனியபொம்மையா? வாடி வச்சிக்கறேன்…” என்று சொல்லி அந்த காகிதத்தை மடிக்க போனவன் விழிகள் மீண்டும் அந்த எழுத்துக்களில் ஊர்ந்தது.
கைகள் மெல்ல முகத்தினருகே செல்ல, அதற்குள் கதவு தட்டப்படும் ஓசை. சட்டென்று திரும்பியவன் அந்த காகிதத்தினை பத்திரப்படுத்திவிட்டு வந்து கதவை திறந்தான்.
“அழகரு இன்னும் உடுப்பை மாத்தலையா?…” என்றாள் சுடர்கொடி தன் தம்பியிடம்.
“இப்பத்தான மேல வந்தேன். அதுக்குள்ள என்ன? வாரேன். நீ போ…” என்றனுப்பிவிட்டு வந்து பட்டுவேஷ்டி சட்டையை மாற்றிக்கொண்டான்.
இதழோரம் புன்னகை. தன் திருமணத்தன்றும் கூட அவன் பட்டுவேஷ்டி தானே உடுத்தியிருந்தோம் என்று.
கூடவே விருஷ்திகாவின் உடையை ஞாபகப்படுத்தி பார்க்க சல்வார் என்பது நினைவு வந்தது.
அதுவும் அவர்களின் வீடியோ வைரலாகிய காரணத்தினால் அத்தனைமுறை அவன் பார்த்திருக்க, அதன் நிறத்தில் இருந்து அன்று அவள் என்னவெல்லாம் அணிந்திருந்தாள் என்பது வரை.
இல்லை என்றால் திருமணம் முடிந்தும் கூட அவன் கவனத்தில் அது பதிந்திருக்காது.
இப்போதும் இதற்குமுன் புடவை எதுவும் அணிந்து அவளை பார்த்திருக்கிறோமா என்ற யோசனைகளுடன் தான் அவன் கிளம்பியதுமே.
எத்தனை தான் மண்டையை கசக்கி பிழிந்து தேடியும் சத்தியமாய் எதுவுமே ஞாபகத்தில் இல்லை.
அவளின் பார்வைகள், புன்னகை தவிர்த்து வேறு ஒன்றுமே அவனை பாதித்திருக்காதபடியால் நினைவில் பதியவில்லை.
“அன்னைக்கு கோவிலுக்கு வர்றவ புடவையை கட்டிட்டு வந்திருக்கலாம்….” என தலை வாரியபடி நினைத்தவன் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு வெளியே வந்தான்.
வீட்டில் நிறைந்திருந்த உறவுகள் மொத்தமும் ஒவ்வொரு காரிலும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.
ஆறு வண்டிகள் மாற்றி மாற்றி இருப்பவர்களை எல்லாம் ஏற்றிசென்று கோவிலில் இறக்கிவிட்டு வந்துகொண்டிருந்தது அடுத்து இருப்பவர்களை ஏற்றிச்செல்ல.
அதன்பொருட்டு கூட்டங்கள் குறைந்திருக்க கீழே வந்தவன் கண்களில் அவன் மனைவி தென்படவே இல்லை.
புகழ்மதி அப்போதுதான் கையில் விளக்கு திரியும், தீப்பெட்டியுமாய் அவனை கடந்து சென்றாள்.
அவளிடம் தலையசைத்துவிட்டு புகழ்மதி முன்னே செல்லவும் தானும் அங்கே செல்ல அந்த அறையில் அனைவரும் இருந்தனர்.
நடுநாயகமாக அம்மையப்பன் நிற்க, அருகில் அவரின் தாயார் சுந்தரவல்லியின் புகைப்படத்தின் முன்பு நின்றவளை பார்த்தவன் மனம் ஒருநொடி ஸ்தம்பித்தது.
புகழ்மதி என்று தான் விருஷ்திகாவுமே திரும்பி பார்க்க, அவளின் பின் அழகரின் வருகையில் அவளின் பார்வையும் அவனிடத்தில் ஒட்டிக்கொண்டது.
“வாய்யா அழகரு, வந்து லச்சுமி பக்கத்துல நில்லு…” என்றார் அம்மையப்பன்.
“ஹ்ம்ம்…” என்றவன் மெல்ல நகர்ந்துவந்து அவளருகில் நின்றதோடு இல்லாமல் பார்வையும் அவளின் மீதுதான்.
மணப்பெண்ணே தான். நெற்றிச்சுட்டியில் இருந்து கைக்கு வங்கி, இடுப்பில் ஒட்டியாணம், தலைக்கு மல்லிகையுடன் அவளின் பிடித்தமான ஜாதிமுல்லையை புதுவிதமாய் கோர்த்து வைத்திருக்க என ஆடம்பரமாக இல்லாவிடிலும் அளவாக அழகாக நின்றிருந்தாள் விருஷ்திகா.