“ஆத்தே எங்க வந்து என்ன செய்யுதுக?…” என பார்த்தவர்,
“அழகரு…” என்றழைத்து கண்ணை காண்பித்தார், ‘என்ன செய்கிறாய்?’ என்பதை போல.
“வா மொத அப்பத்தா கால்ல விழுவோம்…” என்று விருஷ்திகா எதிர்பாராத நேரம் அவளை இழுத்துக்கொண்டு அழகுமீனாள் கால்களில் விழுந்துவிட்டான் அவர் கவனித்துவிட்டதை கண்டு.
“இன்னும் சாமியே கும்பிட்டு ஆவல. அதுக்குள்ள என்னய்யா?…” என்ற அம்மையப்பன்,
“நாந்தேன் பாத்தேனே? அவேன இப்படி கால்ல விழ வச்சே அம்புட்டையும் செய்ய வைக்கிதது. பொறவு எனக்கும் இதுக்கு சங்காத்தமே இல்லன்னு அரம்பாட்டம் ஆடறது…” என்றார் அவர்.
“ப்ச், விடு மணி…” என்ற ஞானசேகரன்,
“வல்லி என்னாத்தா?…” என்றார் மனைவியிடம்.
இதற்குள் மாணிக்கவல்லி விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபமேற்ற தயார் செய்துவிட்டார்.
“ஆச்சுங்க…” என்றவர்,
“லச்சுமி…” என்று அவளின் கையில் தீப்பெட்டியை தந்தார்.
அதனை வாங்கியவள் விளக்கேற்றிவிட்டு படத்திற்கு தீபாராதனை காண்பிக்க அம்மையப்பன் தன் கைகளை உயர்த்தி கும்பிட்டு தன் தாயிடம் வேண்டிக்கொண்டார்.
அன்றைக்கு விசேஷம் நல்லவிதமாக நடக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
கற்பூர ஆரத்தியை எடுத்து அனைவருக்கும் காண்பித்துவிட்டு அழகரும், விருஷ்திகாவும் விழுந்து வணங்கி எழுந்து நிற்க யாரும் கூறாமல் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து மனைவியின் வகிட்டில் வைத்தான் அழகர்.
“ஹ்ம்ம், எல்லாம் தெரிஞ்சிருக்கு…” கேலியாய் திருமகள் கூற,
“எல்லா ஒ அப்பத்தா சொல்லித்தேன். அம்புட்டு பாடமும் அங்கதேன்….” என்ற சுடர்மணி,
“நீயி தனியா சிக்குத்தா. இருக்கு ஒனக்கு…” என்று எச்சரித்துவிட்டு கிளம்பினார் அவர்.
“இவேன் வேற, நா என்னத்த சொன்னேம்?…” என புலம்பியபடி அழகரை பார்க்க,
‘சரியான வில்லன். எப்படி மாட்டிவிடறான்?’ என்று அழகரையும் ஒரு முறைப்பு முறைத்துக்கொண்டாள்.
அவளின் முறைப்பெல்லாம் எங்கே அவனின் மதிப்பில் விழுந்தது. தற்சமயம் வெகுமதிகள் பக்கம் தள்ளியிருந்தானே!
“சேரி கெளம்புங்க. நேரமாவுது…” என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாகனத்தில் ஏறி அமர, அழகுமீனாள் குடுகுடுவென்று ஓடி சென்று மூத்தமகனோடு இணைந்துகொள்ள பார்த்தார்.
“அப்பத்தா, வா என்கூட…” என்று அலேக்காக தூக்கிசென்று தன்னுடைய வாகனத்தில் ஏற்றிவிட்டான் அழகர்.
“யாத்தே, விட்டுடு சாமி. நா அவக கூட வாரேம்ய்யா…” என கோவில் வரை விடாது புலம்பல்.
“அவங்களுக்கு தான் தாத்தாவோட போகனும்ன்னு தோணுதே. எதுக்கு இவ்வளோ அராஜகம் பன்றீங்க?…” என விருஷ்திகா கேட்க,
“எம்முன்னாடியே எம்பேரன பேசுவியா நீயி?…” என அழகுமீனாள் பேச,
“அவ இப்ப என்ன சொல்லிட்டான்னு நீ மல்லுக்கு நிக்கிற? இப்ப என்ன? உன் வீட்டுக்காரரோட போவனும். அதான? போ…” என்று எகிறினான் அழகர்.
“யாத்தே எனக்கு கண்ண கட்டுதுய்யா சாமி…” என தலைசுற்றி போனார் அழகுமீனாள்.
நடுவில் அவரை வைத்துக்கொண்டு இருவரும் கட்டி உருளாத குறையாக வாய்ப்போர் புரிய, பேரனை பேசுவதை தாளாமல் அழகுமீனாள் பொங்க, பதிலுக்கு பொங்கியதென்னவோ அழகர் மட்டுமே.
“என்னிய இங்கிட்டு ஓரமா எறக்கி விட்டா தேவல சாமி…” என நொந்துவிட்டார் அவர்.
“அவங்களுக்குத்தான் நம்மளோட வர புடிக்கலையே…” விருஷ்திகா அழகரிடம் பாயவும்,
“பெருமாத்தான் சித்தப்பா போன் போட்டாரே…” என அழகர் பேச,
“இப்பத்தேன் அவர வடக்கு ராஜகோபுரம் வழியா வர சொல்லிருக்குதேன். வந்திருவார். நீ வாய்யா…” என்று சொல்லவும் அவர்கள் கூட்டத்தினுள் உள்ளே நுழைந்தனர்.
மொட்டை முனீஸ்வரன் சன்னிதி அருகிலும், வடக்கு, கிழக்கு சித்திரை வீதிகளிலும் கட்டண சீட்டினை பெற்றுக்கொண்டு உள்ளே நுழைவதற்கு மூச்சு முட்டிக்கொண்டு மக்கள் திரண்டிருந்தனர்.
எப்போதும் போல இன்றுமே விருஷ்திகாவின் கண்கள் அவர்களை ஆர்வத்துடனும், உள்ளத்தில் தானாகவே புகுந்துவிட்ட சந்தோஷ துள்ளலுடனும் கவனித்தது.
திருக்கல்யாண மண்டபத்தினுள் நுழைய அங்கே பக்தர்கள் அமருவதற்கு ஏதுவாக பிரித்து மரக்கட்டைகளை கட்டி வைத்திருந்தனர்.
ஒவ்வொன்றையும் கடந்து உள்ளே வர பெரும்பாலான மக்களும் உள்ளே வந்து பக்தியுடன் அமர்ந்திருந்தார்கள்.
மீனாட்சி சுந்தரேஸ்வரன் திருக்கல்யாணமாகிற்றே. ராஜ அலங்காரம் தான் திருமண மேடையை நிறைத்திருந்தது.
பலவகை வண்ணமலர்கள் நாடு கடந்தும் அங்கே வந்திருக்க, அழகாய் அலங்கரித்திருந்தனர்.
அலங்காரம் மேடையை மட்டுமா? மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கோலம். காண கண் கோடி போதாத பரவசம் பார்த்ததுமே ரத்தத்தில் ஊறிவிட அழகோ அழகு.
உள்ளூர் மலர்களான மல்லிகை, கனகாம்பரத்திற்கு இணையாக வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஆர்க்கிட் வகை மலர்களும் அதனோடு கைகோர்த்திருக்க கொள்ளையாய் கவர்ந்தது.
ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்தபடி வந்தவள் கைகளை சாந்தா வந்து பிடித்துக்கொள்ள அதுவரை இருந்த உணர்வுகள் கடந்து, தாயை கண்டதுமே நெகிழ்ந்துவிட்டாள் விருஷ்திகா.
“அழகா இருக்கடா…” என்றார் மகளை உச்சிமுகர்ந்து.
“மீனாட்சியை விடவா?…” என கண் சிமிட்டி விருஷ்திகா புன்னகைக்க, அழகரின் விழிகள் அந்த புன்னகையை திருடி மனதினுள் பத்திரம் செய்துகொண்டது.
தங்களின் திருமணத்தன்று பார்த்தது இந்த புன்னகையை சந்தோஷத்தை. அதன்பின் இன்றுதான் அனைத்தும் மறந்து உள்ளார்ந்து அவள் சிரிக்க காண்கிறான்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் இந்தநிமிடத்தினை இழக்க முடியாதே.
இன்னும் சற்றுநேரத்தில் பூஜை சம்பிரதாயங்கள் துவங்கிவிடும். விழிகள் சுழல அவன் நம்பியை கண்டுகொண்டான்.
சட்டென்று தனது கைப்பேசியில் இருந்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவைக்க அதனை எடுத்து பார்த்த நம்பி, அழகுமீனாளை பார்த்தான்.
“அப்பத்தா சோடிப்பொருத்தம் அள்ளுதுல….” என்று அவரிடம் அழகர், விருஷ்திகாவை காண்பித்து கேட்க,
“உருப்படியா வீடு போய் சேர விடமாட்ட, அதான?…” என்றான் நம்பி அவரிடம்.
“ஆமா, என்னிய செலாத்தலா ஒக்கார வச்சிட்டு எடு…” என்று சொல்லவும் அவரை அவருக்கென்று ஏற்பாடு செய்திருந்த இடத்தில் அமர்த்தியவன் அவரின் அருகில் நின்றே ஒவ்வொரு புகைப்படமாக எடுத்தான்.
எடுத்ததோடு இல்லாமல் அதனை அழகுமீனாளிடம் வேறு காண்பிக்க அவர் ஒவ்வொன்றிக்கும் கருத்து கூறியபடி சில்லாகித்துக்கொண்டிருந்தார்.
கூடவே இப்படி எடு, இங்கே நின்று இப்படி திரும்பி எடு என்று அவனுக்கு அறிவுரை வேறு.
நம்பி கையை காண்பித்து இப்படியா என்று கேட்க, இவர் ஒருவிதமாய் சொல்ல என்று நேரம் செல்ல,
“இந்த நம்பிப்பய எங்க போனான்?…” என்று தேடி வந்துவிட்டார் சுடர்மணி.
“இப்பத்தான அப்பத்தாவ கூட்டி வந்தான்…” என்ற அழகர் சுடர்மணியிடம் சொல்லி திரும்ப, அங்கே அழகுமீனாள் அருகில் நம்பி நின்றுகொண்டிருந்தான்.
கையில் போனுடன் அமர்ந்திருந்த அழகுமீனாள் நம்பியை குனிந்து பார்க்க சொல்லி, கேமராவில் தான் படம் பிடிக்க அதில் விழுந்ததென்னவோ ஒன்றுமறியாத பார்வையுடன் அழகரும், கோபச்சூட்டுடன் சுடர்மணியும் தான்.
“இவேன் ஏன் வெந்தவியிறான்?…” என பார்த்துக்கொண்டே அப்பத்தா போனை இறக்க, எதிரே அத்தனை வேகத்தில் வந்திருந்தார் சுடர்மணி.
“அப்பத்தாதேன் போட்டோ புடிக்க சொல்லுச்சு. சொல்லித்தரவும் சொல்லுச்சு…” என நம்பி அப்ரூவர் ஆகிவிட, அழகுமீனாள் அதிர்ச்சியில் வாயடைத்துவிட்டார்.