“அதுக்கு பெரிப்பாவை அப்படி பேசுவியா? உங்க விசேஷத்துக்காக தானே வந்திருக்கார்….” என்றார் சாந்தா.
“அவர் பேசினதுக்கு வேற எப்படி பேச?…” எனும்பொழுதே அரவிந்த் வந்துவிட்டான்.
“ப்ச், இப்ப என்ன சொல்லிட்டான்னு நீங்க சத்தம் போடறீங்க சித்தி?…” என்றான் அவரிடம்.
“அண்ணா…” என விருஷ்திகா அவனை பார்க்க,
“அவருக்கு நல்லா வேணும். வாயை வச்சிட்டு இல்லாம பேசி பேசி வாங்கி கட்டிக்கிறார்….” என்றவன்,
“நீ போய் முதல்ல மாப்பிள்ளையை பாரு. நான் அப்பா பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்…”
“ப்ச், நீங்க ஏன் மன்னிப்பு கேட்கறீங்க?…” என அதற்கும் விருஷ்திகா கோபம் கொள்ள,
“புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும் இதுல ஒன்னு. மாப்பிள்ளையும் அதைத்தான் சொன்னார். சிலருக்கு எடுத்து சொன்னாலும் புரியாது. நீங்க மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க. நான் பார்த்துக்கறேன்னு. பரவாயில்லை. பெருந்தன்மையான மனசு…” என்று சொல்லிக்கொண்டிருந்தான் அரவிந்த்.
அங்கே அழகர் கண்ணால் மயில்வாகனனை தனியே வரும்படி மிரட்டிக்கொண்டிருக்க, வேண்டுமென்றே அவனின் பார்வையை தவிர்த்தார் அவர்.
‘இவன் கூப்பிட்டா தெரிஞ்சே நான் போவேனா?’ என கதிர்வேலனை ஒட்டி அமர்ந்தபடி அம்மையப்பன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தார்.
அது தெரியாமல் இங்கே தனியே சாந்தாவின் கவலைக்கு அரவிந்தும், விருஷ்திகாவும் பேச,
“சரிடா. தப்பு பண்ணிட்டோம். என்ன பன்றது? யோசிக்காம இருந்துட்டோம்…” என்று மீண்டும் மகளை குளிரவைக்க பார்க்க,
“ஏன் உங்களுக்கு தெரியாதா உங்க அண்ணன் மகனை? இத்தனை வருஷம் ஆச்சு, உங்கண்ணன் மகன் இந்த வீட்டுக்கு உங்க கல்யாணத்தப்போ வந்ததுன்னு நீங்க தானே ஒவ்வொருதடவையும் கவலைப்படுவீங்க. இப்போ வந்ததுக்கு நல்ல மரியாதை செஞ்சிட்டீங்க…” என்று அவள் அதனை விடவே இல்லை.
“அரவிந்த்…” என சாந்தா பாவமாய் பார்க்க,
“தப்பு தானே சித்தி. நானுமே நீங்களும், சித்தப்பாவும் கூப்பிடாம இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை. ரொம்ப தப்பு. அங்க நான் பேசினா சரிவராதுன்னு தான் அமைதியா இருந்தேன். விருஷ்தி ரொம்ப கரெக்ட்டா பேசினா….” என்றான் தன் தங்கையை தோளோடு அணைத்து.
“ம்மா, நான் வேணா பேசாம கிளம்பிடவா? ஏன் திரும்ப திரும்ப இப்படி செய்யறீங்க?…” என்று விருஷ்திகா சாந்தாவிடம் பொரியவுமே,
“லக்ஷ்மி…” என்று அழைத்துவிட்டான் அழகர்.
அத்தனை கூட்டத்தில் அவனின் அழைப்பும், குரலும் ஓங்கி ஒலிக்க என்னவோ என்று அனைவருக்குமே தூக்கிவாரிப்போட்டது.
“என்னாச்சோ…” என அடித்துபிடித்து வெளியே வந்து ஹாலில் நிற்க, அவள் வந்த வேகத்திலும் அரண்ட முகத்திலும் அழகரின் முகம் திகைப்பை காண்பித்து, பின் சிறு புன்சிரிப்பை ஏந்திக்கொண்டது.
சண்டைக்கோழி அத்தனை சுலபத்தில் சமாதானக்கொடியை ‘பறக்கவிடமாட்டாளே’ என்று கண்கள் சிரிக்க பார்த்தவன் அதனை பருக, விருஷ்திகா விழிகளை திருப்பினாள்.
தன் அறையை காண்பித்து அவனிடம் எத்தனை கதை பேச நினைத்திருந்தாள். எதுவுமற்ற மௌனமான பாஷை தான் இப்போது.
அவள் விழிகளை சுழற்றியதும் தான் அழகருமே அந்த அறையை கவனித்து பார்த்தான்.
பார்த்தவன் விழிகள் பெரிதாய் அகன்று விரிந்தது. தடித்த இமைகள் சிமிட்டாமல் அந்த படங்களை எல்லாம் பார்த்தது.
அறையில் பெரிய புகைப்படத்தில் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நின்றிருந்தனர்.
அழகரின் அருகில் குட்டிப்பெண்ணாய் கால்முட்டிவரையிலான கவுனில் பன்னிரெண்டு வயதில் லக்ஷ்மி விருஷ்திகா.
அதன்பின் குடும்பத்துடன் புகைப்படங்கள் இருந்தாலும் பெரும்பாலும் யாராவது ஒருவர் விடுபட்டு போவதுண்டு. அது அதிகம் அழகராகவே இருக்க கூடும்.
அந்த புகைப்படத்தினை பார்த்தவன் கண்கள் சற்றே விலகி அடுத்த படங்களை பார்க்க அத்தனையும் கள்ளழகர் புகைப்படம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய். அத்தனை புகைப்படங்களை சேகரித்து அறையில் ஒட்டி வைத்திருந்தாள் விருஷ்திகா.
பார்த்தவனுக்கு நெஞ்சை அடைத்தது. பூர்வீக வீட்டிற்கு எப்போதாவது தான் அவள் வருவதுண்டு.
அதற்கே இத்தனை என்றால் நினைக்கவே மலைப்பாக உணர்ந்தான் அழகர்.
தன்னை இத்தனை நேசித்திருப்பவளின் மீதான பிரமிப்பு அகலாமல் மனைவியை திரும்பி பார்க்க, அவன் பார்க்க கண்டவள் மனம் பதறியது.
“எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ். அதுவும் இன்னைக்கு…” கண்களில் பயம் அப்பிக்கிடக்க, எதுவும் வார்த்தைகளை விட்டு தன் மிஞ்சிய உயிரினையும் எடுத்துவிடுவானோ என முகம் வெளிற பார்த்தவள்,
“நான்,,, நான்,,, வெளில இருக்கேன்…” என்று திக்கி திணறி சொல்லிவிட்டு வெளியேற பார்க்க, சட்டென அவளின் கை பிடித்தவன் அணைப்பிற்குள் வந்துவிட்டாள் விருஷ்திகா.
ஆராவாரமில்லாமல் புதிதாய் ஒரு உணர்வு அழகரின் மனதினுள். அதுவும் இறுதியாய் அவள் கெஞ்சிய பார்வையும், வார்த்தையும், அந்த பயமும்.
“லக்ஷ்மி, ஏன்டி…” என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
எங்கே எதுவும் கேட்டுவிடுவானோ, கேட்டு தன்னை பதிலுக்கு கேலியாகவேணும் காயம் செய்துவிடுவானோ என்றஞ்சியவள் தன் கரம் கொண்டு அவன் இதழ்களை மூட, அழகரின் கண்கள் கலங்கியது அவன் உணர்ந்ததில்.