அழகரின் அணைப்பினுள் கட்டுண்டு நின்றவளின் காதில் அறைக்கு வெளியே ஒலித்த சிரிப்பு சத்தம் வந்து சேர்ந்தது.
அறைக்கு வந்து வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவள் அவனின் கைகளிலிருந்து விலகி நிற்க, புன்னகையுடன் விடுவித்தான் அழகர்.
எதுவும் பேசுவானோ என்னும் விதமான பார்வையுடன் அவன் முகம் பார்த்தவள், அழகரின் அமைதியில்,
“சரி, நான் வெளில இருக்கேன்…” என்றாள்.
“ஹ்ம்ம், போகலாம். வெய்ட்….” என்ற அழகர்,
“இன்னைக்கு நீ இப்படி பேசுவன்னு நான் நினைக்கவே இல்லை லக்ஷ்மி…” தான் நினைத்ததை அவளிடம் வெளிப்படையாக கூறவும் விருஷ்திகாவின் முகத்திலும் புன்னகை கோடுகள்.
“வேற எப்படி பேசியிருக்கனும்? யார் என்னவேணா பேசுங்க. எனக்கெதுவும் இல்லைன்னா?…” என்றாள் அவனிடம்.
“மேபி. ஆனா எனக்காக…”
“ம்ஹூம், இது எனக்காக. உங்களுக்கு ஒரு மரியாதை குறைவுன்னா அது எனக்கும்ன்னு தான் நான் நினைக்கறேன். நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம். இப்பவும் இருக்கு. அதுல எந்த மாற்றமும் இல்லை…” என்றவள்,
“நான் இங்க இப்படி பேசினதால நீங்க என்கிட்ட சொன்னதெல்லாம் நான் மறந்துட்டேன்னு இல்லை. இந்த நாள்,,,, இந்த நாளாவது எனக்குள்ள சந்தோஷத்தை மட்டுமே தரக்கூடியதா இருக்கனும்ன்னு நினைக்கறேன். அதுக்காகன்னு கூட வச்சுக்கலாம்…” என்று சொல்ல,
“ஓஹ்…” என்றான் தாடையை தடவியபடி.
அவனின் பார்வைகள் சட்டென அறை முழுவதும் மென்னகையுடன் சுழல, விருஷ்திகாவிற்கு தான் அடிவயிறு கலங்கியது.
இதற்கு என்னவெல்லாம் பேசுவானோ என்று நினைத்தபடி கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
அவனின் மகிழ்ந்த புன்னகை கூட, அவளின் கண்களுக்கு தன்னை கேலியாய் பார்ப்பதை போல் காட்சியளித்தது.
விரும்பியதற்கே அத்தனை பேசியவன். இப்போது இதை போன்ற தன் உணர்வுகளுக்கு எந்தவிதமான பைத்தியக்கார பட்டத்தை சூட்டுவானோ என்று இப்போதே பதற ஆரம்பித்துவிட்டாள்.
என்னதான் அவன் பேசி, அதற்கு தான் பதிலடி கொடுத்தாலும் அவன் பேசிவிட்டானே என்பதற்கு தானே தன் மனம் இத்தனை துடிக்கிறது.
கொட்டிய வார்த்தைகள் கொட்டியது தானே? மீண்டும் எடுத்துக்கொள்ள கூடியதா?
அது தரும் காயம் அளவில்லாதது. ஆறிவிட்டாலும் வடுவாய் இருந்து இம்சிக்கும் நசை.
அதனை தவிர்ப்பதே மேல் என்று நினைத்தவளுக்கு வாழ்க்கையில் இப்படி பயந்து பயந்தே எவ்வளவு நாள் தள்ளமுடியும் எனும் பெரும் ஆயாசம்.
“இருக்கட்டும் ம்மா. நான் பேசி எனக்கு பதில் சொல்லமுடியலைன்னு அப்பாவுக்கும் கஷ்டமா இருக்கும். எனக்கும் வருத்தம் தான். பரவாயில்லை. உங்ககிட்ட சொன்னா அப்பாக்கிட்ட சொன்ன மாதிரி தானே? அப்பாவுக்கும் புரியும்…” என்றாள் கதிர்வேலனை பார்த்துக்கொண்டே.
“விருஷ்திமா…”
“கோவமா எல்லாம் சொல்லலைம்மா. என்னைக்கு என்னோட பேசனும்ன்னு தோணுதோ. அப்போ பேசட்டும். நீங்களும் கட்டாயப்படுத்த வேண்டாம்….” என்றவள் அவரை பார்த்து புன்னகைத்துவிட்டு அரவிந்தன் பக்கம் திரும்பியவள்,
“பார்த்துக்கோங்க ண்ணா…” என்றாள்.
“நீ சொல்லனுமா விருஷ்தி. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ சந்தோஷமா போய்ட்டு வா….” என்றவன்,
“நேரம் கிடைக்கும் போது வாங்க மாப்பிள்ளை….” என்றான் அழகரிடம்.
“நேரம் வரட்டும். வருவோம்..” அழகரும் அமர்த்தலாக பதில் சொல்லிவிட்டு அரவிந்த் பிடித்திருந்த கையை தானும் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு மனைவியை பார்த்தான்.
பெற்றவர்களிடம் தலையசைத்து விடைபெற்றவள் அங்கிருந்து கிளம்ப அவளுக்கான உடைகள் அடங்கிய பெட்டிகளும் அங்கே ஏற்றப்பட்டது.
“உனக்கான சேரீஸ் எல்லாம் இருக்கு விருஷ்தி. எல்லாமே லேட்டஸ்ட் மாடல் தான்…” என்ற சாந்தா அழகரை பார்க்க அமைதியாய் நின்றான் அவன்.
மறுக்கவோ, இல்லை சரி என்றோ எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. சாந்தாவை போல் விருஷ்திகா அவனின் அனுமதி வேண்டி எல்லாம் அழகரை பார்க்கவில்லை.
“ஓகே ம்மா…” அவ்வளவே.
அது அவள் உரிமை. அவளுக்கான உரிமை. இதனை யார் மறுப்பது? அவள் மனநிலை தான் அவனுக்குமே.
மறுப்பதும், ஏற்பதும் அவள் உரிமை. அவள் விருப்பம். தன் வாழ்வில் அவள் வந்தவரை போதும் என்ற எண்ணம் தான் அழகரிடம்.
எண்ணங்கள் சரியாக இருப்பினும் அதனை வெளிப்படுத்தும் விதம் இன்னும் சரிவர பிடிபடாததில் இருக்கும் சிக்கலை இன்னுமே அவன் உணரவில்லை.
“நாளைக்கு தேரோட்டம். கொஞ்சம் நேரமே வந்திருங்க ம்மா…” என்று சொல்லி விருஷ்திகா கிளம்ப,