உண்மைக்கும் அரண்டுவிட்டாள் புகழ்மதி. இதனை சொல்லவும் விரும்பவில்லை.
‘யார் மொபைல் கேட்டாலும் குடுத்திடுவியா நீ? அறிவில்ல. இவனை நான் பார்த்துப்பேன். அந்த நம்பரை ப்ளாக் பண்ணு. இதை யார்க்கிட்டயும் சொல்லக்கூடாது. புரியுதா?’ என்ற அவனின் கோபமுகமும் சேர்ந்தே ஞாபகம் வர பயத்தில் உதறியது புகழ்மதிக்கு.
“புகழ்…” என்று இன்னும் நெருங்கி வந்தான் அழகர்.
“ஒன்னும் இல்லண்ணே. காய்ச்ச மாதிரி இருக்கு…” என சமாளிக்க,
“ஹ்ம்ம், வீட்டுல ஆளுங்க இருந்தா போதுமே. நேரத்துக்கு தூங்காம….” என கண்டித்தவன்,
“ஹாஸ்பிட்டல் போகலாம். ரெடியா இரு…” என்று சொல்லிவிட்டு மற்ற பெட்டிகளையும் எடுத்து உள்ளே வைத்தான்.
“இல்லண்ணே, போய் தூங்கத்தான் போறேன். மாத்தரை போட்டாச்சு…” என்று உடனே அவள் மறுக்க,
“என்ன புகழ், ஃபீவரா?…” என்று வந்தாள் விருஷ்திகா.
“ஹ்ம்ம், ஆமா மதினி…” என சொல்லிய புகழ்மதி,
“சேரி நான் போறேன்…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
“சரி லக்ஷ்மி, நானும் கிளம்பறேன். இன்னைக்கே இதை அரேஞ்ச் பண்ணவேண்டாம். ரெஸ்ட் எடு. நாளைக்கு பண்ணிக்கலாம்…” என்று அவன் சொல்ல,
“ஏன் இதை இப்பவே எடுத்து வச்சா என்ன?…” என்றாள் வேண்டுமென்றே.
“நாளைக்கு தேரோட்டம். வடம் பிடிக்க போகவேண்டாமா நாம? இதெல்லாம் எடுத்து வச்சு நீயும் படுத்துக்க போறியா? போடி. சொல்றதை கேளு…” அழகர் அதட்டல் போட,
“இத்தனை அக்கறையா கூட பேசுவீங்களா நீங்க?…” என்றாள் மெல்லிய முணங்கல் குரலில்.
“இதைவிட அக்கறையாவும், ஆறுதலாவும் பேசுவேன். நீ விடுவியா என்ன?…” என்று சொல்லியவன் அவளின் தலையில் குட்டு வைத்துவிட்டு செல்ல,
“ட்ரெஸ் மாத்தாம…” என்பதற்குள் கீழே இறங்கிவிட்டிருந்தான் அழகர்.
மறுநாள் தேரோட்டம். அதன் மறுநாள் தீர்த்தவாரி வைபவமும், உலகே எதிர்பார்த்திருக்கும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விசேஷமும்.
தங்கையின் திருமண வைபவத்தை காண அழகர்மலையில் இருந்து இறங்கி வரும் கள்ளழகர் அவர் கடந்து வழியில் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து, அவர்களின் அன்பில் நெக்குருகி காட்சியளித்து அருள்பாலித்தபடி வருகை புரிவார்.
வந்தவர் தங்கையின் திருமணத்தை காணமுடியாது போக, வைகை ஆற்றில் எழுந்தருளும் அந்நிகழ்வு உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
தல்லாக்குளத்தில் இருந்து புறப்படும் அழகர் பல்லக்கில் வைகை ஆற்றினை நோக்கி வரும் நிகழ்வினை காண லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
எப்போதுமே அதனை காண கதிர்வேலன் மகளை அங்கே ஆற்றிற்கு அழைத்து சென்றுவிடுவார்.
அழகர் வீட்டில் அத்தனை கூட்டத்தில் இவர்கள் எதற்கு என அழகுமீனாள் செல்லாமல், மாணிக்கவல்லி, தில்லை, என்று தொடர்ந்து பிள்ளைகளும் அப்படியே இருந்துகொண்டனர்.
இந்தமுறை செல்லமுடியாததில் ஏக வருத்தம் தான் விருஷ்திகாவிற்கு. இரவெல்லாம் அதனை நினைத்தபடி படுத்திருந்தாள் அவள்.
இந்த நேரம் இங்கே வந்துவிடுவார், இங்கே இப்போது இவ்விடத்தில் இருப்பார் என்று நேரலையில் பார்த்தபடியே தான் இருந்தாள் அவள்.
உறக்கத்திற்கு கண்கள் மயங்குவதும், பின் முயன்று கண் விழிப்பதுமாய் இருந்தவள் அப்போதுதான் லேசாய் கண்ணயர,
“லக்ஷ்மி…” என அழகரால் தட்டி எழுப்பப்பட்டாள்.
“ஹாங்…” என பட்டென்று கண்களை திறந்தவள் மீண்டும் தனது கைப்பேசியை பார்க்க, தல்லாக்குளத்தில் மக்கள் வெள்ளம் தண்ணீர் பீய்ச்ச தொடங்கியதன் நேரலை காண்பிக்கப்பட்டது.
“கிளம்ப போறார் போல?…” அவளாக சொல்லிக்கொள்ள,
“அழகர் கிளம்பறது இருக்கட்டும். நீ புறப்படு…” என்றான் அவன்.
நேரம் நான்கை தாண்டியிருந்தது. இந்தநேரம் எங்கே அழைக்கிறான் என விருஷ்திகா பார்க்க,
“கிளம்புடி முழிக்காம, நேரமில்லை…” அவன் அதட்ட,
“எங்கன்னு சொல்லாம கிளம்புன்னா? எங்க கிளம்ப?…” என எழுந்தமர்ந்தாள்.
உறக்கமும் இல்லாது, கள்ளழகரையும் காண முடியாமல் ஒருவித எரிச்சலும், ஏமாற்றமும் அவள் முகத்தில்.
“ஊர் சுத்த கூப்பிட்டா வந்துருவியா நீ?…”
“நீங்களும் என்னை கூட்டிட்டு போய்ருவீங்க. ப்ச், என்ன பிரச்சனை? தூங்கியிருப்பேன் அப்படியே. இப்ப எழுப்பி தூக்கமும் போச்சு…” என்றவள் விழிகள் மீண்டும் தன் கைப்பேசியில் தான் பதிந்தது.
“அங்க தான் போறோம். போய் குளிச்சிட்டு வா. இப்போ போனா தான் அழகர் வைகைக்கு வரும்முன்னமே நாம அங்க இருக்க முடியும்…” என்றான்.
கண்சிமிட்டாமல் அவனா அழைப்பது? என்பதை போல அவள் பேந்த பேந்த விழிக்க,