“உங்களுக்கு தான் நீங்க பேசினா அது வெறும் பேச்சு. நான் பேசினா க்ரைம்ன்னு பார்ஷியாலிட்டி தாட் இருக்கே. ஸோ அப்படித்தான் இருக்கும்….” என்றாள் முறைப்புடன்.
“இந்த சண்டையை வந்து போடுவோமா? இப்ப கிளம்பற ஐடியா இல்லையா?…” என்றான் இடுப்பில் கை வைத்து நின்று.
இரண்டுநாட்கள் அவனோடான இந்த பேச்சிற்குமே பஞ்சம் தான். அத்தனை வேலைகள்.
உணவகத்தையும் கவனித்து, கோவில் பணிகளையும் பார்த்துக்கொண்டு என்று அத்தனை வேலைகள்.
களைப்பு முகத்தில் தெரிந்தாலும் அடுத்து அடுத்து என்று நிற்காமல் எந்த வேலையும் தள்ளியும் வைக்காமல் நடந்துகொண்டே தான் இருந்தது.
இப்போது இத்தனை நேரத்தில், அதுவும் வீட்டினர் என நினைக்கையிலேயே விருஷ்திகா சோர்வானாள்.
“எல்லாருமே வர்றாங்களா?…” என கேட்க,
“கொன்னுடுவேன் உன்னை. இங்க தான வளர்ந்த, உனக்கு தெரியாதா? எப்போ யார் வந்திருக்காங்க?..”
“நீங்க கூட்டிட்டு போகலைன்னு சொல்லுங்க…” மல்லுக்கட்டிக்கொண்டும், உள்ளூர பொங்கும் சந்தோஷத்துடனும் அவள் கிளம்பி செல்ல அதிலேயே தெரிந்தது அவளின் துள்ளல்.
“சேரி வேண்டாம். மொபைலும் வேண்டாம்…” என அடுத்ததாய் ஆச்சர்யப்படவைத்தான்.
“அம்மாச்சி?…” விருஷ்திகா கேட்க,
“நான் எதுக்கு இருக்கேன்?…” என அவளை சல்வார் மாற்ற வைத்து அழைத்துக்கொண்டு கீழே வர, அழகுமீனாள் எழுந்தமர்ந்திருந்தார் அந்தநேரமே.
அவர் வழக்கமாக எழுந்துகொள்ளும் நேரம் தான். அதுவும் வீட்டின் ஆண்கள் மூன்றுமணிக்கெல்லாம் அம்மையப்பனுடன் கிளம்பியிருந்தனர்.
“யய்யா, ராசா…” என்று அழகுமீனாள் ஆரம்பிக்கும் முன்னரே,
“ஆசிர்வாதம் பண்ணு அப்பத்தா…” என்று விருஷ்திகாவுடன் அவரின் காலில் விழுந்து எழுந்துவிட,
“இவேன் வேற பொசுக்குன்னு என்ன ஏதுன்னு சொல்லாம கால்ல விழுந்தே கவுத்துடுறானே?…” என அழகுமீனாள் நிமிர பேரனை காணவில்லை.
அழகருடன் வெளியே சென்ற விருஷ்திகா மீண்டும் ஓடி வீட்டினுள் வர அவளை பார்த்ததும்,
“நீயி எங்கடி இந்நேரம்?…” என கேட்க, அவரின் கன்னம் பற்றி அவரின் கையை எடுத்து வாயின் மீது வைத்தவள்,
“உன் பேரன் என்னோட கள்ளழகர தான் பார்ப்பேன்னு ஒரே அடம். அதனால இந்த அழகரையும் ஆத்துல இறக்கிட்டு வர்றேன். வர்ட்டா அழகு…” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஓடிவிட,
“அடியே, இந்தாடி…” என்று அவள் வேகத்திற்கு ஓடமுடியாது மூச்சுவாங்கினார் அழகுமீனாள்.
“என்னங்க? அழகரா, இப்பத்தேன் அத்தேக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு லச்சுமிய கூட்டிட்டு பொறப்பட்டான்…” என தில்லையின் குரலில் அழகுமீனாள் பதறி திரும்பி பார்க்க,
அப்படி இப்படி சின்ன தெருக்களில், சந்துக்களில் புகுந்து வைகை ஆற்றின் அருகில் இருக்கும் தங்களின் உணவகத்திற்கு வந்துவிட்டான் அழகர்.
“ஒரு காபி குடிச்சிட்டு போகலாம். இன்னும் நேரம் இருக்கே. அதுக்குள்ள உள்ள போய் நின்னுடலாம்…” என்று சொல்லி உணவகத்தினுள் நுழைய ஞானசேகரன் அவரின் சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“வாய்யா அழகரு, வாம்மா லச்சுமி…” என முகம் மலர அவர் அழைக்கவுமே சங்கடத்துடன் அழகரின் அருகில் ஒட்டி நின்றாள் விருஷ்திகா.
பாதிக்கு மேல் நன்றாகவே நனைந்திருந்தனர் இருவருமே. அங்கே பத்துபேருக்கு மேல் ஞானசேகரன் வயதொத்தவர்கள் நின்றிருந்தனர்.
“மகள கூட்டிவரத்தேன் மருமவப்புள்ள அம்புட்டு வெரசா பறந்தீயலோ? நல்லது நல்லது…” என்று சிரித்துக்கொண்டனர்.
அழகர் ஒரு தலையசைப்புடன் புன்னகைத்தவன் விருஷ்திகாவை அழைத்துக்கொண்டு உள்ளே தன்னுடைய அறைக்கு சென்றான்.
“இங்க ஏன்? காபி வெளிலையே குடிக்கலாமே?…”
“ப்ச், எல்லாரும் முறைமக்காரவங்க. நீ சங்கடப்பட்டுட்டே நிப்பியா? பேசாம உக்கார்…”
“ட்ரெஸ் நனைஞ்சிருக்கு…”
“எனக்கு தெரியாதாடி. உக்கார்…” என்றவன் வெளியேறி கிட்சன் இருக்கும் பக்கம் சென்றான்.
உணவகத்திற்கு அவள் ஊருக்கு வரும்பொழுதில் எல்லாம் வந்துவிடுவாள். ஆனால் அவனின் அறைக்கு எல்லாம் வந்ததில்லை.
சுற்றிலும் பார்த்தபடி இருக்க காபியின் மணம் நாசியை நிறைத்தது. திரும்பி பார்க்க அழகர் வந்துவிட்டான் காபியுடன்.
‘சொன்னா கொண்டுட்டு வர போறாங்க’ என தோன்றியதை மனதினுள் வைத்துக்கொண்டு காபியை குடிக்க, இருவரிடையே மௌனம் தான்.
அந்த சூழல் அத்தனை பிடித்தது இருவருக்குமே. காபி குடித்து முடித்ததும் அவள் குடிக்கும்வரை பொறுமையானவன் நம்பிக்கு அழைத்து பேசினான்.
“போலாம்…” என விருஷ்திகா சொல்லவும் அவளோடு கிளம்பினான் அழகர்.
“கையை கெட்டியா பிடிச்சுக்கோ. ம்ஹூம். இங்க இப்படி சட்டையையும் சேர்த்தே பிடிச்சுக்கோ லக்ஷ்மி….” என்று அவளை கூட்டத்தோடு அழைத்து செல்ல,
“ஹப்பா தொலைஞ்சிட மாட்டேன். நான் தான் ஒவ்வொரு வருஷமும் வந்திருக்கேனே?…” என்றாள் அவனிடம்.
“ஆனா இப்படி முதல்தடவையா நான் கூட்டிட்டு வர்றது உன்னை தான்….” என்றான் அழகர் அமிழ்திறைவன்.
அவன் சொல்லியதை போல இறுக்கமாய் அவனையும் அவன் சட்டையையும் பிடித்துக்கொண்டு கூட்டத்தினை கடந்து ஆற்றில் வந்து நிற்க மேளச்சத்தம் காதை பிளந்தது.
‘வாராரு, வாராரு அழகர் வாராரு’ என ஆடாதவரையும் ஆடவைக்கும் பாடலும், மேளச்சத்தமும், சுற்றிலும் தூறல்கள் போல பீச்சி அடிக்கும் தண்ணீரும், கோவிந்தா முழக்கமும், பூக்களும் என்று மதுரையே ஆர்ப்பரிக்க, இதோ பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கம்பீரமாய் தங்கக்குதிரை வாகனத்தில் ஆராவாரமாக வந்துவிட்டார் கள்ளகழர்.
“வாவ்வ் வாவ்வ், எவ்வளோ அழகு கள்ளழகர்….” என்றாள் விருஷ்திகா அழகரை பார்க்கவும்.
“அப்படியா?…” என அழகரும் அவள் முகம் பார்க்க,
“நான் கள்ளழகரை சொன்னேன்….”
“நானும் தான்….” என்றான் அமர்த்தலான புன்னகையுடன்.
இருவரின் முகத்திலும் நீர்த்திவலைகள். இன்னுமின்னும் மழை பொழிவதை போல சுற்றிலும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட முழுதாகவே நனைந்தனர்.
மஞ்சள் கலந்த நீரோடு, வைகை நீரும் சேர்ந்திருக்க அதிகாலை மெல்ல மெல்ல வெளிச்சம் எட்டிப்பார்க்க துவங்கிய காலை பொழுது அது.
அது உயிரில் கலந்துவிட்ட ஒரு உணர்வு. அவரை காண கண் கோடி வேண்டும் என்பதனை போல அத்தனைபேரும் கூச்சல் எழுப்பி கொண்டாட்டத்தோடு குதூகலித்தனர்.
மனமே நிறைந்துவிட்டது அவளுக்கு. இதைவிட வேறு என்ன வேண்டுமாம் என தோன்ற,