அமைதிக்கு மீனாட்சியும் சொக்கரும் என்பார்கள். ஆராவாரத்துக்கும், ஆர்ப்பரிப்புக்கும் அழகர் கள்ளழகர் தான்.
வைகை கரை போதவில்லை அந்த மக்கள் திரளுக்கு. அத்தனை மக்களும் கூடி, ஆடி, அழகரின் அழகில் மயங்கி அவரின் காட்சியை கண்டுகளிக்க சிறப்பாய் நடைபெற்றது வைபவம்.
அழகர், விருஷ்திகா இருவருமே முழுதாய் நனைந்திருக்க, ஆர்ப்பரிப்பு அடங்காத அந்த வைகை ஆற்றின் கரையோரம் மெல்ல நகர்ந்து வெளியேறினார்கள்.
“உங்க ட்ரெஸ் எல்லாம் மஞ்சள்…” என்றவள் மீண்டும் தூரத்தே தெரிந்த கள்ளழகரை திரும்பி பார்த்தாள்.
“தங்கக்குதிரை வாகனம்…” மெல்ல சொல்லிக்கொள்ள கூட்டத்தில் எதுவும் கேட்கவில்லை அழகருக்கு.
“என்ன?…” என்றான் சத்தமாய்.
“ஒன்னுமில்லையே…” என தோளை குலுக்கியவள் வேடிக்கை பார்ப்பதை போல் திரும்பிக்கொள்ள அங்கே நிற்க நேரமில்லை அழகருக்கு.
ஏற்கனவே இந்த மூன்றுநாட்களும் மீண்டும் அவனின் வீடியோக்கள் உள்ளூர் சேனல்களில் இன்னுமே வைரலாகிக்கொண்டிருந்தது.
மதுராபுரி உணவக நிறுவனரின் திருமண வைபவம் பெரியோர்களோடு மீண்டும் அரங்கேறியது என்ற பேச்சுக்களோடு அதனை காண்பித்திருந்தனர்.
மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரன் திருக்கல்யாணத்தின் பொழுது மீண்டும் ஊடகங்கள் தங்களின் கைப்பேசியின் தீவிர பசிக்கு இதனை தீனியாக்கிக்கொண்டனர்.
அவர்கள் மாலை மாற்றி, மாங்கல்யம் புதுப்பித்துக்கொண்டதில் இருந்து, புதுமணதம்பதிகளின் முதல் திருவிழா என தேரோட்டத்தின் பொழுது வடம் பிடித்ததையும், இதோ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பார்க்க வந்திருந்ததையுமே ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர்.
அதையும் நம்பி மூலம் அழகர் தெரிந்துகொள்ள பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை அழகர்.
“பத்திரமா பிடிச்சுக்கோ லக்ஷ்மி. நழுவிடாம…” என சொல்லிக்கொண்டே பைக்கை கிளப்பினான்.
அத்தனை நேரம் தெரியாத குளிர் இப்போது தெரிய, அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள் விருஷ்திகா.
“கொஞ்சம் மெதுவா போங்களேன். குளிருது…” என்று அவனின் தோளை சுரண்டி, காதோரம் கூற அழகரின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
“மெதுவா போனா நீ நார்மலா உக்கார்ந்திடுவியே…” என்றான்.
லேசாய் வேகம் குறைத்து அவள் புறம் பக்கவாட்டாய் திரும்பி பார்த்தவன் முகத்தில் அப்பட்டமான கள்ளப்புன்னகையுடன்.
“வாட்?…” விருஷ்திகா திகைக்க,
“அதே வாத்தும், கோழியும் தான். திருவிழா முடிஞ்சது. குழம்பு வைக்கனும்…” என்று சொல்ல அவனின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளினாள் விருஷ்திகா.
“இதையே நான் செஞ்சாலும் நீ அக்சப்ட் பண்ணிக்கனும்…” அப்போதும் அசரவில்லை அழகர்.
மௌன புன்னகையுடன் அழகர் தோளை குலுக்கிக்கொண்டு சீரான வேகத்தில் செல்ல,
“அண்ணிங்க எல்லாரும் வந்திருந்தா இன்னும் நல்லாயிருக்கும்…” மீண்டும் பேச்சை துவக்கினாள் விருஷ்திகா.
“அவங்க தான் வரமாட்டாங்களே லக்ஷ்மி? உனக்கு தெரியாதா?…”
“நீங்க கூப்பிட்டிருக்கீங்களா?…”
“அக்கா எல்லாரும் சின்னப்பிள்ளையா இருக்கும் போது வந்தவங்க தான்…”
“எனக்கும் தெரியும். அதான் கேட்கறேன். எங்க ஸ்டாப் பண்ணுனீங்க?…”
“அது யாரும் சொல்லி இல்லை. தானா நின்னுட்டாங்க….” எனும்பொழுதே வீட்டின் கேட்டை தாண்டி வந்துவிட்டனர்.
“இது தப்பிக்கிறது இல்லையா? இப்போ நான் மட்டும் வந்திருக்கறது தெரிஞ்சா எவ்வளோ வருத்தப்படுவாங்க?…” என்றபடி இறங்கினாள் விருஷ்திகா.
“இதுல வருத்தப்பட என்ன இருக்கு? விருப்பம் இருந்தா யாரும் மறுக்க போறதில்லை. அவங்களா வராம இருந்துட்டாங்க. அங்க உள்ள கூட்டம் நீயும் பார்த்தது தானே?…” என்றான் பைக்கில் இருந்து இறங்காமல்.
“ஏன் வரலைன்னு ஒருதடவையாவது நீங்க கேட்டீங்களா? இன்னைக்கு என்னை கூட்டிட்டு போனப்போவும் அதே கூட்டம் தான். பாதுகாப்பா கூட்டிட்டு போனீங்க தானே?…”
“அதுவுமே கொஞ்சம் டென்ஷன் தான்….” என்ற அழகர்,
“இதுக்கும் எதாச்சும் சொல்லி சண்டைக்கு நிக்காத லக்ஷ்மி. உண்மைல டென்ஷன்…” என்றான்.
“நான் எதுவும் சொல்லலை. அப்பாவும் சொல்லியிருக்காங்க. கூட்டத்துல தொலைஞ்சிடுவேன்னு இல்லை. கீழே விழுந்து எதுவும் அடிபட்டுடுமோ, அத்தனை கூட்டத்துல விழுந்தா என்னவாகும் இப்படி எல்லாம் டென்ஷன்ல நான் இருக்கேனான்னு பார்த்துட்டே தான் இருப்பாங்க. அது இருக்கத்தான் செய்யும்…” என்றாள் புரிந்துணர்வோடு.
“ஹ்ம்ம், தேறிடலாம்…” என்றவன் பைக்கில் இருந்து இறங்க,
“செத்தமின்ன தான். வீரராகவ பெருமாள் கோவிலுக்கு பக்கத்துல நாம போட்டுருந்த தண்ணி பந்தல பயலுவ ஆட்டத்துல சாச்சி போட்டானுவ. கூர அம்புட்டும் போச்சு….”
“வேற புது பந்தல மாத்த வேணா சித்தப்பா. கூட்டம் நகரவும் அந்த தார்பாய போட்டு பந்தலா அடைக்க சொல்லுங்க. இன்னிக்கும், நாளைக்கும் தான. போதும்…” என்றான் அழகர்.
“அதுவுஞ்சரித்தான். நான் எல்லாத்தையும் எடுத்துட சொல்லுவோம்ன்னு பாத்தேன்…”
“இல்ல, அது சரியாவாது. கோவிலுக்கு நாள வரைக்கும் வந்துபோவாங்க. தண்ணி, நீர்மோர், பானகத்த நிப்பாட்டவேணாம்….” என்றதும், சுடர்மணி தனது கைப்பேசியில் அதற்கான ஏற்பாட்டை கவனித்தார்.
“சொல்லியாச்சு அழகரு. நீ போயி உடுப்ப மாத்து…” என்று சொல்லி அவர் ஹோட்டலுக்கு கிளம்பிவிட அழகர் உள்ளே நுழைந்தான் விருஷ்திகாவுடன்.
“நான் பேசிட்டு வருவேன்ல. நீ உள்ள போகவேண்டியது தானே? கூடவே நிக்கிற?…” என அவளோடு பேசியபடி வர,
“கூட்டிட்டு போனீங்க தானே? இப்ப எல்லாரும் கேட்பாங்க. நீங்களே பதில் சொல்லுங்க. தனியா நான் ஏன் சிக்க போறேன்?…” என்றாள் தோள்களை குலுக்கியபடி.
“வாய்டி அவ்வளவும். இவ்வளோ பேசற?…”
“அதை யார் சொல்றாங்க பாருங்களேன்…” என்றாள் கேலியாய் அவனிடம்.
அழகர் அதற்கும் பதில் கொடுக்கும்முன் முன்பகுதி முற்றம் தாண்டி வீட்டினுள் நுழைய மற்ற அனைவருமே ஹாலில் தான் அமர்ந்திருந்தனர்.
காலை உணவிற்கு காத்திருந்தவர்கள் அழகரையும், விருஷ்திகாவையும் தான் குறுகுறுவென்று பார்த்தனர்.
இன்னும் மிச்சமிருக்கும் சொந்தங்கள் அனைவரும் அதனை ஒவ்வொருவிதமாக கிண்டலாகவும் பேசிக்கொண்டனர்.