“அது அப்பத்தாதேன். இம்புட்டு நேரம் இங்கின தான் இருந்துச்சு. உன் வண்டி சத்தம் கேக்கவும் ஒரே ஓட்டம். சிட்டா பறந்துடுச்சு…” என்றாள் சுடர்கொடி அடக்கமாட்டாத சிரிப்புடன் அவனிடம் மட்டும் மெதுவாய்.
“ஏன்?…” என்றபடி அழகர் அங்கே செல்ல,
“மெல்ல போயி என்னன்னு பாரு. புகழு கூட போடி…” என்றாள் திருமகள்.
மற்றவர்கள் இவர்கள் சென்றுவந்ததை பற்றி கதையாட, வல்லியும், தில்லையும் சமாளிக்க,
“அவென் பொண்டாட்டிய அவென் கூட்டிட்டு போனா ஒங்களுக்கு என்ன?…” என திருமகள் தான் வாயடைக்க செய்தாள்.
அழகர் புகழ்மதியை முன்னே விட்டு அவளுடன் செல்ல, கதவோரம் ஒளிந்துகொண்டு நின்றார் அழகுமீனாள்.
“அப்பத்தா…” என புகழ் அழைக்கவும்,
“யாத்தே, கம்மின்னிருடி…” என ரகசியமாய் சொல்லி எட்டிவேறு பார்த்தார்.
“ஆத்தே, யே ராசா. கோவிச்சிக்கிட்டாரே எம்மன்னவரு. நா எங்க போயி சொல்லுவேன்…” என பட்டு பாட ஆரம்பிக்க,
“என்னாச்சு அப்பத்தா?…” என சுடர்கொடி, திருமகளும் வந்துவிட,
“அண்ணே உன்ன கேட்டதும், அக்காதேன் கூட்டிட்டு போக சொல்லுச்சி. நா சொல்லுததுக்குள்ள நீ பேசிட்ட…” அடக்கப்பட்ட சிரிப்புடன் புகழ்மதி பேச,
“போங்கடி அம்புட்டு பேரும். யே ஆவிய அடக்கன்னே வந்திருக்களுவ. இப்ப நா என்ன செய்யிவேன். எஞ்சாமிய மல எறக்குவேன்?…” என்றே புலம்ப ஆரம்பித்துவிட,
“ஒரு ஐடியா சொல்லுதேம் கேளுத்தா….” என்ற சுடர்கொடி,
“அழகரு திரும்ப வாரப்ப அவனுக்கு நேரா கால நீட்டி, கைய தூக்கி ஆசிர்வாதம் செஞ்சிரு. மலையிறங்கிருவியான். எல்லாம் ஒரு ஆறுதலுக்கு சொல்லுதேன்…” என்றதும் பொங்கிவிட்டார்விட்டார் அழகுமீனாள்.
தள்ளாதவயதில் பேத்திகளை துரத்திக்கொண்டு வீட்டினுள் ஓட ஆரம்பிக்க மூவரும் இங்குமங்குமாய் அவரின் கையில் அகப்படாமல், விளையாட்டு காட்டியபடி ஓடினர்.
மாடிக்கு அழகர் வர, அதற்குள் குளித்து முடித்திருந்தாள் விருஷ்திகா. கட்டிலில் அவளின் பெட்டிகள் இரண்டில் இருந்த புடவை எல்லாம் வெளியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
அழகரை பார்த்ததும் தானாக ஒரு நமுட்டுச்சிரிப்பு பொங்க இதழ்களை மடக்கிக்கொண்டு அடக்கியபடி மீண்டும் உடைகளில் கவனம் செலுத்தினாள்.
வேகமாய் கோபமாய் வந்தவன் பார்வையில் புடவைகளின் மத்தியில் புடவை அணிந்து அமர்ந்திருந்தவளின் தோற்றம் பார்த்ததுமே மனதில் குளிர் பரவியது.
அந்த உணர்வினை அவளின் நக்கல் சிரிப்பு புறம் தள்ள இன்னும் வேகமாய் வந்தவன்,
“கீழ ஏன் தேவை இல்லாம பேசின லக்ஷ்மி?…” என்றான் அவளிடம் கோபமாய்.
“இனிமே நான் என்ன பேசனும்னும் நீங்களே எழுதி குடுத்திருங்க. மனப்பாடம் பண்ணிட்டு பேசறேன்….” என்று சொல்ல சுள்ளன்று வந்தது அவனுக்கு.
“நான் என்ன கேட்டுட்டேன்? எல்லாரும் பார்த்துட்டு இருந்தாங்க. என்னையும் தான் கேலியா பேசினாங்க. அதான் ஒரு ஆறுதலுக்கு உங்களுக்கு வருத்தம்ன்னு சொன்னேன்…”
“நான் சொல்ல சொன்னேனா? அதான் சொல்றேன்ல அவங்களா வர்றதில்லைன்னு. உனக்கு தெரியலைன்னா பரவாயில்லை. தெரிஞ்சே ஏன் இப்படி பேசற?…”
“உங்களுக்கும் தான் என்னை தெரியும். தெரிஞ்சும் நீங்க என்னை பேசலையா? இல்ல நீங்க சொல்லித்தான் நான் பேசனுமா? அதையும் சொல்லிருங்க…” என்று அவள் ஒன்று சொல்ல, இவன் ஒன்று அதிகாரமாய் பேச என்று வாக்குவாதம் ஆரம்பித்தது.
“நான் தப்பா எதுவும் கேட்கலை. எனக்கு நீங்க கூட்டிட்டு போனது சந்தோஷம் தான். சொல்லபோனா நீங்க எனக்காகன்னு ஒன்னு செஞ்சது எனக்கு. ப்ச், அதெல்லாம் வெறும் வார்த்தைல சொல்லிடமுடியாது. அதேநேரம் இதுவரை இப்படி மாமா ரெண்டுபேரும் அத்தையையோ, இல்ல அண்ணிங்களையோ கூட்டிட்டு போனதில்லை. நீங்களும் தான்..” என்றவள்,
“என்னை நீங்க கூட்டிட்டு போயிருக்கும் போது அவங்களுக்கும் தோணும் தானே? விளையாட்டா கேலியா பேசினாலும் அவங்களுக்கு சின்ன நெருடல் இருக்காம எப்படி? நீங்களா சொல்றீங்க வீட்டு சூழ்நிலை, தானா புரிஞ்சு வராம இருந்தாங்கன்னு. அதை தான் அக்சப்ட் பண்ணமுடியாது….” என கூறி,