“என்னை விட இளையவ தான?…” என்ற விஷாலுக்கு, ‘இவனுக்கு ஏன் இத்தனை கோபம்?’ என்று புரியவில்லை.
“இப்ப அவளோட மரியாதை ரொம்ப முக்கியமா?…” மயில்வாகனன் கேட்க,
“அது இன்னொரு வீட்டு பொண்ணு. மரியாதையா தான் பேசனும். இப்ப பேச்சு அதில்லை. நான் கேட்டதுக்கும் நீ சொல்ற பதிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்ன பன்றீங்க?…” என்றான் அரவிந்த்.
“நாங்க என்ன பண்ணனும்? ஏன்டா பெத்த அப்பனையும், கூடப்பிறந்த தம்பியையும் பார்த்து கேட்கிற கேள்வியா இது? என் கூட பிறந்தவனும் அப்படி, என் மகன் நீயும் இப்படி. அட போங்கடா…” என சலிப்புடன் அவர் அமர,
“நிஜமாவே எதுவும் நீங்க பிரச்சனை பன்றீங்களா? எனக்கு தெரியலைப்பா. தயவு செஞ்சு தப்பா எதுவும் செஞ்சிடாதீங்க…” என தணிந்து பேசினா அரவிந்த்.
என்னவோ செய்கிறார்கள். ஆனால் என்னவென தெரியாமல் மண்டை காய்ந்தது அரவிந்திற்கு.
சிலநொடிகள் மௌனமாய் இருவரையும் பார்த்தவன் பெருமூச்சுடன் தகப்பன் முன் வந்தான்.
“எதுவா இருந்தாலும் வெளில வந்துதான் ஆகனும். அன்னைக்கு தப்புன்னு உங்க பக்கம் இருந்தது, நானே சும்மா இருக்கமாட்டேன்…” என்றது சொல்லிவிட்டு வெளியேறினான்.
விஷால் அப்போது தான் நிம்மதியாய் மூச்சுவிட்டவன் ஆசுவாசமாய் அமர மயில்வாகனன் முகத்தில் யோசனை குறிப்புகள்.
“என்னப்பா, என்ன யோசிக்கிறீங்க?…” விசால கேட்க,
“ஹ்ம்ம், அந்த அழகர் கண்டுபிடிச்சிருப்பானோ? இல்ல கண்டுபிடிச்சிட்டானோ?…” என்றவர்,
“ம்ஹூம், இது ரெண்டுமே இல்லை. இருந்திருந்தா இந்நேரம் சும்மா இருக்கமாட்டானே. பின்ன எப்படி இவன்?…” என்று யோசித்தார்.
“ஒருவேளை இது சித்தப்பா…”
“ச்சே, ச்சே. கதிருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. தெரிஞ்சிருந்தா என்கிட்ட நேரடியா தான் கேட்டு கண்ண கசக்கிருப்பான். எனக்கு அவனை சமாளிக்க தெரியாதா?…” என்றவர்,
“விஷயம் முடியற வரைக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. இனிமே எவனுக்கும் பார்க்கவேண்டாம். சொந்தமாவது ஒண்ணாவது…” என்றார் விஷமாய்.
வீட்டிலிருந்து வெளியே வந்த அரவிந்த் அழகருக்கு அழைக்க இரண்டு அழைப்பில் எடுத்துவிட்டான் அவன்.
“சொல்லுங்க அரவிந்த்…” என்றதும்,
“நான் விசாரிச்சிட்டேன். எதுவுமே இல்லைன்னு சொல்றாங்க….” என்றான் தான் பேசியதை எல்லாம் கூறி.
“ஹ்ம்ம், உங்கப்பா என்னைக்கு ஊருக்கு கிளம்பறாங்க…”
“மாப்பிள்ளை…”
“காரணமா தான் கேட்கறேன் அரவிந்த். சொல்லுங்க…”
“அப்பா இன்னைக்கு, இல்லை நாளைக்கு கிளம்பறதா பேசிருந்தாங்க. விஷால் என்னோட இந்த வீகெண்ட் துபாய் கிளம்பறான்….” என்றான்.
“ஹ்ம்ம்…” என்ற அழகருக்கு இன்னும் யோசனை தான்.
தனக்கு வந்த தகவலும் பொய்யில்லை. அதனை உறுதிப்படுத்த தான் விசாரித்த இடத்திலும் பொய்யில்லை.
இரண்டிற்கும் இடையேயான அந்த தொடர்பு நிச்சயம் விஷாலை தான் கை காண்பிக்கிறது.
நெற்றியை தட்டிக்கொண்டான் அழகர். இதில் நிச்சயம் பாதிப்பு கதிர்வேலனுக்கு என்பதை தான் அவனின் உள்ளுணர்வு உணர்த்தியது.
“மாப்பிள்ளை…” என்று அரவிந்த் அழைக்க,
“அழகர்ன்னே கூப்பிடுங்க. ஏன் இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்?…” என்றதும் மெலிதாய் சிரித்துக்கொண்டவன்,
“தங்கச்சி புருஷனாச்சே. சொந்தமா இருந்தப்போ பேர் சொல்லி தானே கூப்பிட்டேன்…”
“ஹ்ம்ம், மரியாதை தரும்போது வேணாமேன்னு சொல்லமுடியாது….” என்றவன்,
“சரி பார்த்துக்கோங்க. முடிஞ்சா உங்க அப்பா, தம்பி மேல ஒரு பார்வை வச்சுக்கோங்க. சப்போஸ் எனக்கு முதல்ல தெரியறதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரியவந்தா என் பார்வைக்கு வரும் முன்ன சரி முயற்சி பண்ணுங்க…”
“புரியுது. பார்க்கறேன்…” என்ற அரவிந்தின் குரல் உள்ளடங்கிவிட்டது.
“ஓகே, நீங்க என்னைக்கு கிளம்பறீங்க?…” என்று இயல்பாய் பேசி அரவிந்த்தை இலகுவாக்கியவன்,
“நீங்களும் நேரம் கிடைக்கும் போது துபாய் வாங்க மாப்பிள்ளை….”
“நான் மட்டும் வந்தா போதுமா?…”
“அதெப்படி? விருஷ்தி கூட தான்…”
“அப்போ கூப்பிடவேண்டியவங்க கூப்பிடட்டும். நான் என் பொண்டாட்டியோட துபாய் வந்துட்டு, அங்க அவளோட அப்பாம்மா வீட்டுக்கு போகாம திரும்பி வந்தா லக்ஷ்மி மனசு கஷ்டப்படுமே….” என்றவனின் பேச்சில் திகைத்துவிட்டான் அரவிந்த்.
“அதனால வரும்போது கண்டிப்பா வருவோம்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் அழகர்.
“சரியான ஆளு. என்னன்னு விருஷ்தி சமாளிக்கிறாளோ?…” என்று முணுமுணுத்தான் சிரிப்போடு.
அழகர் அரவிந்திடம் பேசி முடித்துவிட்டு தனக்கு தகவல் கூறிய எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“வணக்கம்ண்ணே அழகரு பேசுதேன்…” என்று அவன் கூற,
“சொல்லுங்க தம்பி. என்ன வெவரம்? வெசாரிச்சீங்களா?…” என்றார் மறுமுனையில்.
“ஆமாண்ணே. கேட்டாச்சு. ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல பார்த்துக்கோங்க…”
“அப்படியா?…”
“ஆமாண்ணே, அது போவட்டும். ஆனாலும் மனசு உறுத்தலா இருக்கு. நீங்க சொன்னா நெசமில்லாம போவாது. எனக்கு நீங்க இன்னொரு உதவி செய்யனும்ங்கண்ணே…” என்றான் அழகர் நயமாய்.