“நீயும் ஏன் இப்படி பன்ற? ஏன் எனக்கு ஒரு டவல் எடுத்து தர அவ்வளோ கஷ்டமா? இதுவே நீ என்னை கேளு…” என்றதும் கையெடுத்து கும்பிட்டுவிட்டாள்.
“நான் கேட்கவும் வேண்டாம். நீங்க குடுக்கவும் வேண்டாம்…” என்று வெளியேற போக, அவளின் கை பிடித்து நிறுத்தியவன்,
“இந்த வீம்பு கூட உனக்கு அழகா தான் இருக்கு. ஆனா பொறுமைக்கு அழகெல்லாம் கிடையாது லக்ஷ்மி…”
“எனக்கும் பொறுமை ரொம்ப குறைவு தான். நீங்க சாப்பிடாம போனா நான் என்ன செய்வேன்? என்னவோ நான் உங்களை கவனிக்காம பட்டினி போட்டுட்டேன்னு உங்க அப்பத்தா என்னை போட்டு வறுக்கறாங்க. சொல்லி வைங்க…”
“உங்கப்பத்தாவை நீங்க கவனிக்கவேண்டாம். நான் கவனிச்சிக்கறேன். இனி யார் தயவும் எனக்கு வேண்டாம்…” என்றவள் அவனின் கையை தட்டிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
“காலையில மட்டும் அலறின. இப்ப மட்டும் கத்தலை. பழகிருச்சா?…” நமுட்டு சிரிப்போடு அழகர் சத்தமாய் கேட்க,
“என்ன?…” என்றவள் சட்டென மனக்கண்ணில் நடந்ததை ஓட்டி பார்க்க, அப்படியெல்லாம் இல்லை.
சட்டென்று ஒரு ஆசுவாசமும் நிம்மதியும். கூடவே அழகர் கூறியதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டவள்,
“இனிமே இப்படி பேசினீங்க…” என்று தானும் கத்த,
“என்ன பண்ணுவ?…” என்று வந்துவிட்டான் அழகர்.
அவனை நிமிர்ந்தோ, திரும்பியோ பார்க்கவில்லை. தண்ணீர் விழும் சத்தம் வேறு கேட்க, எதற்கு வம்பு, எப்படி வந்திருந்தாலும் கண்ணை திறக்க கூடாதென முகத்தை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள் விருஷ்திகா.
————————————————–
மறுநாள் இரவு அரவிந்த் துபாய் கிளம்புவதாய் இருந்தான். அவனுடன் விஷாலும் சேர்ந்தே.
அவனையும் பார்த்துவிட்டு கதிர்வேலன், சாந்தாவையும் பார்க்கலாம் என்று வந்திருந்தாள் விருஷ்திகா.
வந்ததில் அவள் கேள்விப்பட்ட விஷயத்தில் துளியும் சந்தோஷமில்லை. ஆனால் கூடாதென்று கூறும் தைரியமும் இல்லை.
கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது. சிறிதுநேரத்திற்கு மேல் இருக்க முடியவில்லை.
சாந்தா மகளை உண்டுவிட்டு தான் செல்லவேண்டும் என முடிவாய் சொல்லிவிட அவர்களை மீற முடியவில்லை.
“சாப்பிடு விருஷ்தி…” என சாந்தா மகளை கவனிக்க இலையில் வைக்கப்பட இருக்கும் உணவுகளை கவனித்தாள் அவள்.
“எல்லாமே உனக்கு புடிச்சதா செஞ்சிருக்கேன்….” என்று வறுவலை எடுத்து வைக்க போக,
“ம்மா, வேண்டாம்…” என கை நீட்டி தடுத்தாள் விருஷ்திகா.
“ஏன்? எல்லாமே நீ விரும்பி சாப்பிடறது தானே? அப்பறம் என்ன?…” என்றவர்,
“அந்த வீட்டுல இன்னைக்கு இங்க நீ சாப்பிட்டு வரக்கூடாதுன்னு எதுவும் சொன்னாங்களா என்ன?…” என கவலையானார்.
“ச்சே, ச்சே. அதெல்லாம் இல்லை…” என்றவளுக்கு உணவருந்த மனது ஒப்பவே இல்லை.
“எனக்கு வெறும் ரசம் சாதம் போதும். இல்லை, இல்லை மோர் போதும்…” என்றாள் அவசரமாய்.
“ஏன் ரசம் கூட வேண்டாம்ன்னா?…”
“நீங்க தான் ரசத்துல கறி வேக வச்ச தண்ணி சேர்ப்பீங்களே. அதான் மோர் போதும்…” என்றவள் தாயின் பார்வையில்,
“இன்னைக்கு சனிக்கிழமை. வீட்டுல யாரும் நான்-வெஜ் சாப்பிடமாட்டாங்க. உங்களுக்கு தெரியுமே?…” என மெல்லிய குரலில் கூற,
“விருஷ்தி…” என திகைத்துவிட்டார் சாந்தா.
அசைவ உணவுகளை அத்தனை விரும்பி உண்ணும் பெண். அவள் விரும்பிவிட்டால் நாள், கிழமை கூட பார்த்துவிட கூடாது கதிர்வேலனுக்கு.
அப்படியிருக்க தன் மகள் யாரும் சொல்லாமலே ஒன்றை கடைபிடிக்கிறாளே என்பதை நினைக்கையில் அவள் எத்தனை தூரம் அந்த குடும்பத்தோடு ஒன்றி இருக்கிறாள் என்று புரிந்தது.
தூரத்தில் கதிர்வேலன் இதனை பார்த்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தார். தன் மகளுக்கு அத்தனை தூரம் முக்கியமானவர்களாகிவிட்டார்களா அவர்கள் என்று.
மகள் வருகிறாள் என்றதும் உடல்நிலை சரியில்லாத தன்னையும் கவனித்து அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து சமைத்திருந்தார் சாந்தா.
“விருஷ்தி அயிரை மீன் குழம்பு கூட வச்சிருக்கேன்…” அதை மட்டுமாவது மகள் சாப்பிடுவாளா என பார்க்க,
“ம்மா, ப்ளீஸ்…” என்ற மகளை வற்புறுத்த முடியவில்லை.
“நீ சாப்பிடாம இருப்பன்னு எனக்கு தெரியாதேடா. இல்லைன்னா சைவமா சமைச்சிருப்பேன்…” என்றபடி மகளுக்கு மோர் சாதமும், ஊறுகாயும் வைக்க புன்னகையுடன் அதனை உண்டு முடித்தாள் அவள்.
சிறிதுநேரம் இருந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு தான் அவள் புறப்பட்டாள். அதற்குமே சாந்தாவிற்கு அத்தனை மனத்தாங்கல்.
“இருந்துட்டு நைட் போகலாம்ல. அரவிந்தை கொண்டுவந்து விட சொல்றேன் விருஷ்தி…” என்று சொல்ல,
“இல்லம்மா. பக்கம் தானே? நானே போய்ப்பேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவளுக்காகவாவது, அவளை தினமும் பார்க்கவென்று அந்த வீட்டிற்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தார் கதிர்வேலன்.
முதலில் அழகர் மேலிருந்த கோபத்தில் அவனின் வீட்டின் எதிரே வாங்கியிருந்த அந்த வீட்டினை விற்பதற்கு ஏற்பாடு செய்திருந்தவருக்கு அதனை கைவிடும் அளவிற்கு யோசனை வலுத்திருந்தது.
உடனடியாக தரகருக்கு அழைப்பு விடுத்து இப்போதைக்கு விலை பேசவேண்டாம், அங்கேயே செல்லவிருப்பதாய் அவருக்கு பேசுவதை போல மனைவிக்கு தெரியப்படுத்தினார்.
இதை அறியாத விருஷ்திகா வீடு விற்க போவதை நினைத்தபடியே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்துவிட, விருதிஷ்காவை எதிர்கொண்ட வல்லி,
“அப்பா எப்படிம்மா இருக்காரு?…” என்று விசாரித்தார்.
“அவனுக்கென்ன, குத்துக்கல்லு மாதிரி இருப்பான். அதான் உன் மருமவ மொகத்துல லைட்டு இம்புட்டுக்கு எரியுதே?…” அழகுமீனாள் நீட்டி முழக்க,
“உண்மை தான் த்தை. எங்கப்பா ரொம்ப ரொம்ப நல்லா ஆரோக்கியமா இருக்கார். எந்திக்க முடியாம, உக்கார முடியாம எல்லாம் இல்லை. அவர் என்ன குத்துக்கல்லா? ஒரே இடத்துல உக்கார்ந்து நாட்டமை பண்ண? இல்ல கம்பு இருந்தா தான் எந்திக்க முடியும்ன்றதுக்கு…” என்று சொல்லியவள் முகத்தை வெட்ட,
“அடியாத்தி, யார பார்த்துடி குத்துக்கல்லுன்னு சொன்ன?…” என்று சண்டைக்கு கிளம்பிவிட்டார் பேத்தியோடு.
“ஏன்? உங்களை பார்த்து தான். எங்க சட்டுன்னு எந்திங்க பார்ப்போம்?…” என்று விருஷ்திகாவும் சண்டைக்கு நிற்க அழகரின் புல்லட் உள்ளே வந்துவிட்டது.
“வாயா சாமி, இந்த சேதிய கேட்டியா? நான் குத்துக்கல்லாம். எந்திக்கமாட்டாம, உக்காரமாட்டாம இருக்கேனாம். இந்த வாயாடி சொல்றா…” என்று பேரனிடம் புகார் படிக்க வல்லிக்கு பகீர் என்று ஆனது.
ஏற்கனவே மகனையும், மருமகளையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார். என்னவோ சரியில்லையே என மனது அடித்துக்கொள்ள இப்போது இதுவேறா என்று தோன்றியது.
“நீ உள்ள வாம்மா. சாப்பிடலாம்…” என்று வல்லி அங்கிருந்து மருமகளை அழைத்து செல்ல பார்க்க,
“சாப்பிட்டு தான் வந்தேன் த்தை…” என்றவளுக்கு இன்று பேரனையும், பாட்டியையும் ஒரு கை பார்த்துவிடும் வேகம்.
இந்த கோபத்தில் தானே வீட்டை விற்கும் அளவிற்கு தன் தகப்பன் சென்றுவிட்டார் எனும் ஆதங்கம்.
“ஆமா, சொல்லுவேன். என் அம்மா வீடு. எனக்காக விருந்தே செஞ்சி வச்சிருக்காங்க. சாப்பிடாம நான் ஏன் வரனும்?…” என்றவள்,
“அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச அயிரைமீன் குழம்பு…” என்று சொல்லி, தன் உள்ளங்கையில் வாசமிழுப்பதை அவனை பாராமல் பார்த்து வேண்டுமென்றே சீண்ட புரிந்துபோனது அழகருக்கு.
“ஐயோ, ஐயோ, ஐயோ. இந்த கொடுமைய நா எங்க போயி சொல்லுவேன். அங்க போயி விருந்து மொக்கினேன்னு சொன்னதும் இல்லாம, கவுச்சின்னு வேற சொல்லுறாளே….” என்று வாயில் அடித்துக்கொண்டவர்,
“பார்த்தியா வல்லி உன் மருமவ லச்சணத்த? எம்பேரன் இல்லாம ஒத்தையில கல்யாண விருந்து வேறயாம்? இதையெல்லாம் கேட்கமாட்டியா நீயி?…” என்று வல்லியிடம் திரும்பினார்.
“வேணும்னா உங்க பேரனையும் வர சொல்லுங்க பார்ப்போம்….” விடாமல் சண்டைக்கு நின்றாள் விருஷ்திகா.
“அம்மாடி நீ கொஞ்சம் அமைதியா இரேன். உள்ள போ…” என்று வல்லி இறைஞ்ச,
“இந்தவீட்டுல பதில் கூடவா நான் சொல்லக்கூடாது. பேசினாலும் தப்பு. பேசாம இருந்தாலும் தப்பு…” என்றவள் மேலும் பேசும்முன் தாயின் பார்வையில் அழகருக்குமே சங்கடம்.
சட்டென மனைவியின் கையை பிடித்துக்கொண்டு வீட்டினுள் இழுத்து செல்ல,
“கையை விடுங்க. விடுங்கன்னு சொல்றேன்ல….” என்று சொல்ல சொல்ல அவன் கேட்டான் இல்லை.
அவர்களின் அறைவரை அவளை தரதரவென்று தான் இழுத்துக்கொண்டு சென்றான்.
“இப்ப பேசு…” என்று கதவை மூடியதும் கப்பென்று அவளின் வாயும் மூடிக்கொண்டது.
“பேசு லக்ஷ்மி…” என்றான் மீண்டும்.
எதுவும் பேசாமல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த அறையின் ஓரத்திலிருக்கும் ஜன்னல் பக்கம் சென்று அதன் திண்ணையில் அமர்ந்துகொண்டாள் விருஷ்திகா.