மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தின் உச்சிக்கு சென்று அமர்ந்துவிட்டதை அழகரின் அறிவாற்றல் கப்பென்று கைப்பற்றியது.
“அடுத்த சண்டைக்கு ரெடி போல? ஓகே, உன்னோட தியரியை நீ ரெடி பண்ணி வை. நான் நைட் வந்து கேட்கறேன்…” என்றவன்,
“மறக்காம டவல் எதுவும் எடுத்து வைக்க நினைச்சிடாத. மாட்டிப்ப…” என்று வேறு சொல்லிவிட்டு தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு விசிலடித்தபடி அறையிலிருந்து வெளியேறினான் அழகர்.
அவன் நகர்ந்ததும் கட்டிலில் மடங்கி அமர்ந்துவிட்டாள் விருஷ்திகா. தலையை சுற்றிக்கொண்டு வந்தது.
அவனை எப்படி சரிக்கட்டி கொண்டுவருவது என்றும் புரியவில்லை. கணவனை கையாளவும் தெரியவில்லை.
இப்போது அவள் நினைப்பது ஒன்றே ஒன்றுதான். தன்னால் அவனுக்கு தன் உணர்வுகளை புரியவைக்க முடிவதில்லையா? இல்லை தனக்கு தெரியவில்லையா? என்று குழம்பி போய் அமர்ந்திருந்தாள்.
எத்தனை இலகுவாய் எதையுமே ஒன்றும் இல்லை, கடந்து வா என்கிறானே என நினைக்க மட்டும் ஆறவே இல்லை.
வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருக்க புகழ்மதி அழைக்க வந்துவிட்டாள் விருஷ்திகாவை.
“மதினி…” என வந்தவளை திரும்பி பார்த்தவள்,
“உள்ள வா புகழ்…” என்றாள் விருஷ்திகா.
“உங்க அண்ணன் வந்திருக்காங்க. அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க…”
“யாரு அரவிந்த் அண்ணாவா?…” என்று வேகமாய் கீழே வந்தாள் விருஷ்திகா.
திடீரென எதற்கு இந்த வருகை என்று புரியாமல் கீழே வந்தவள் அரவிந்தை பார்க்க அவன் தில்லை, வல்லியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
வழக்கம் போல் அழகுமீனாள் முகத்தை வெட்டியபடி என்னவோ முணுமுணுத்து கொண்டு அமர்ந்திருந்தார்.
அவரை பார்த்துக்கொண்டே ஹாலுக்கு அரவிந்தின் அருகில் வந்துவிட்டதுமே விருஷ்தியின் முகம் புன்னகை பூசியது.
“என்னண்ணா திடீர்ன்னு?…” என்று ஆரம்பித்ததை முடிக்கும்முன்,
“நீங்க தண்ணி கொண்டாரத்தான் உள்ள போனீங்களா மதினி?…” என்ற புகழ்மதி அசடுவழிய, அரவிந்தின் கண்கள் சுவாரஸியம் தாண்டிய பார்வையோடு விழிகளை தளர்த்திக்கொண்டது.
“சரி, குடிச்சிட்டாங்க இல்ல…” என்று அவள் திரும்ப,
“இல்ல, இன்னும் வேணும்….” என கை நீட்டிவிட்டான் அரவிந்த்.
அவனை யோசனையுடன் பார்த்தபடி விருஷ்திகா நிற்க, புகழ்மதி புன்னகையுடன் தண்ணீரினை தரவும் வாங்கி அருந்தினான்.
“போ…” என்று அவளிடம் தந்ததும், புகழ்மதி செல்ல,
“காபி ஆறியிருக்கும்….” என்றாள் விருஷ்திகா.
“மேனேஜ் பண்ணிப்பேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?…” என காபி தம்ளரை எடுத்தபடி அவன் கேட்க,
“என்ன சொல்லனும்? இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? விக்கிறதை நிப்பாட்டி வச்சா சந்தோஷமா? விக்கனும்ன்னு நினைச்சாங்க தானே? அப்போ அது என்னால தான?…” என்று முகம் சுனங்க அவள் பேச,
“ப்ச், எல்லாம் அப்பா பண்ணின வேலை. அவர் ஏத்தி விட்டு தான் சித்தப்பா எமோஷனலா இப்படி முடிவெடுத்தாங்க…” என்று அவளை சமாதானம் செய்ய,
“அப்பா யோசிச்சிருக்கனும் தானே ண்ணா? அதெப்படி சட்டுன்னு இவ்வளோ பெரிய முடிவு எடுக்க முடியும்? பெரிப்பா சொன்னா செஞ்சிருவாங்களா?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், நானும் அதையே தான் சொல்லி சத்தம் போட்டேன்…” என்றவன் இப்போது இந்த விஷயம் நின்றதில் என்னென்ன பிரச்சனைகளோ என்று யோசித்தான்.
அரவிந்த் நினைத்ததை போலவே தான் மயில்வாகனன் பிரச்சனையை துவக்கிவிட்டார்.