“புகழ் நம்பருக்கு போன் பண்ணினா ரீச் பண்ண முடியலை. அதான், எனக்கு கால் பண்ண சொல்லு. இல்லைன்னா உன் மொபைலை குடேன். நான் விசாரிச்சிட்டு அங்க கன்வே பண்ணிடறேன்….” என்றான் விஷால்.
“உனக்கு புகழ் நம்பர் தெரியுமா என்ன?…” என்று தெரியாததை போலவே அவள் கேட்க,
“ஆமா விருஷ்தி, நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் போது உன்னை பத்தி விசாரிச்சேன் புகழ்க்கிட்ட. அப்போ தான் நம்பர் தந்தா. உன் லைன் கிடைக்கலைன்னா அவளை காண்டேக்ட் பண்ண சொல்லி. நல்ல பொண்ணு. நல்ல தன்மையா பேசினா…” என்றான் நயமாய்.
“ஓஹ், இது எனக்கு தெரியாதே…” என்றவள்,
“ஒருநிமிஷம் விஷால், செகேன்ட் கால் வருது. லைன்ல இரு…” என்று சொல்லியவளுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.
அழகருக்கு அழைத்துவிட்டாள் யோசிக்காமல். அவன் விசாரிப்பான், கேட்பான் என்று எதுவும் நினையாமல் அழைத்தவள்,
“சொல்லு லக்ஷ்மி…” என்றவனின் குரலில்,
“ஒருநிமிஷம்…” என்று கான்பரேன்சில் போட்டுவிட்டாள்.
“விஷால்…” என்று அவனை அழைக்க,
“ஹ்ம்ம், வந்துட்டியா விருஷ்தி…” என கேட்ட விஷாலின் குரலில் அழகர் குழம்ப,
“உன் மாமா லைன்ல தான் இருக்கார். அவருக்கு இங்க உள்ள காலேஜ் பத்தி எல்லாம் தெரியும். வேணும்ன்னா அவர்க்கிட்ட விசாரி விஷால்…” என்றவள்,
“என்னங்க, விஷால் ப்ரெண்ட்க்கு இங்க உள்ள காலேஜ்ல படிக்கனுமாம். அது விஷயமா என்கிட்ட கேட்டான். எனக்கு தெரியாதே? அதான் நீங்க ப்ரீன்னா அவனுக்கு விளக்கமா, புரியும்படி சொல்லுங்க…” என்று சொல்ல விஷாலுக்கு பயம் நெஞ்சை கவ்வியது.
“நிச்சயமா காலேஜ் விஷயமா பேச கூப்பிடலை. அவனை சமாளிக்க முடியாம என்னை கூப்பிட்டு பேசியிருக்க. ரைட்?…” என்றவன்,
“என்னையே சமாளிக்கிற. வந்து பயமில்லாம பேசற. உனக்கு விஷால் எல்லாம் ஒரு ஆளா?…” என்று அழகர் சிரிப்போடு கிண்டலாக கேட்க,
“அழகரை சமாளிக்க என்னால முடியும். அதுக்குன்னு ஆளாளுக்கு யார் யாரோ கிளம்பி வந்தா, எனக்கு வேற வேலை இல்லை…”
“புருஷன் பேர் சொல்ற?…” என்றான் மீசையை நீவியபடி கண்கள் சிரிக்க புன்னகையோடு.
“சொல்ல கூடாதுன்னா சொல்லுங்க. கூப்பிடலை…”
“பேச்சை மாத்தி என்னையே மடக்கற நீ…”
“மடங்கிட்டாலும்…” என்றவள் நாக்கை கடிக்க,
“வந்து வச்சிக்கறேன் உன்னை…” என்றான் ரகசிய குரலில் மிரட்டியபடி.
அவள் பேசும் பொழுதே விஷால் மீண்டும் அவளுக்கு அழைக்க விருஷ்திகாவின் கண்களில் எரிச்சல்.
“என்ன சைலன்ட்டா இருக்க? தப்பாச்சே…”
“இவன் வேற…” என்று அவள் விஷாலை சொல்ல,
“பேர் சொல்ற, அவன் இவன்னு பேசற. ஆனா மாமா மட்டும் எங்க காணாம போச்சு?…” அவனுக்கு அவன் கவலை.
“ப்ச், உங்களை இல்லை…” என்றாள் அழகரிடம்.
“பின்ன?…” என்றவன்,
“சரி, விஷால் பேசினா திரும்ப பேசு. சும்மா எனக்கு கூப்பிடாத. என்கிட்ட மட்டும் சாமியாட தெரியும். அங்க உன் வாய்க்கு என்ன பூட்டா போட்டிருக்க? வேலையை பார்க்க விடுடி சூனியபொம்மை…” என்று சொல்ல,
“சரி, வைக்கறேன்…” என்றவளின் அமைதியில் மீண்டும் அழகருக்கு யோசனை.
அத்தனை சுலபத்தில் இந்த வார்த்தையை விட்டுவிடமாட்டாளே அவனின் சண்டைக்கார மனைவி.
“திரும்ப விஷால் கூப்பிடறானா?…” என்று சரியாய் கணித்து கேட்க,
“இதெல்லாம் தெரியும் அழகருக்கு. ஆனா பொண்டாட்டி என்ன நினைக்கிறான்னு மட்டும் புரியாது. என்னை மட்டுமில்லை ஊரை ஏமாத்தறதுல நீங்க நம்பர் ஒன் கேடி…” என்று பொரிய,
“நீ என்னை நினைக்கிறன்னு தெரியும். இதைவிட எனக்கு வேற என்ன தெரியனும்….” என்று சிரித்தவன்,
“ஆனா ஒண்ணு, உன்கிட்ட பேசினா எவ்வளவு கோபம் வந்தாலும் திரும்ப உன்னோட வம்பிழுத்தா தான் நாளும் பொழுதும் போகுது…” என்று அவளை சீண்டினான்.
“ப்ச், இப்ப நான் என்ன பண்ணட்டும்?…” என அவனிடம் கேட்க,
“நான் சொல்றதை எல்லாம் செஞ்சிடற மாதிரி தான். ஏன்டி அநியாயம் பன்ற?…” என்றவன் தலையை கோதியபடி கண்ணாடியை பார்த்தான்.
அழகர் அழகன் தான் என்றது அவன் பார்த்த கண்ணாடி. அவனின் புன்னகை இத்தனை வசீகரிக்கும் என்பதை அவனுமே கண்டுகொண்ட நாள்.
“லக்ஷ்மி…” உள்ளார்ந்து ஓர் மாயக்குரல்.
“சொல்லுங்க…”
“ஹ்ம்ம், எதுவானாலும் நான் இருக்கேன். இருப்பேன். பேசு. என்ன தான் சொல்றான்னு பார்ப்போம்…” என்றான் அழகர் அவளின் முழு தைரியமாய்.
“சரி வைங்க. போய் வேலையை பார்க்காம எப்ப பாரு என்னோட வம்பு பண்ணிட்டு…” என்று திட்டிவிட்டு அழைப்பை துண்டிக்க, கீழுதட்டை மடக்கியபடி புன்னகையை அதக்கிக்கொண்டான் அழகர்.
விருஷ்திகாவின் கைப்பேசி மீண்டும் மீண்டும் விஷாலின் அழைப்பை தாங்கி வந்தது.
அழகரிடம் பேசிய இந்த நேரத்திற்குள் அத்தனை அழைப்புகள் வந்திருக்க, தானே அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“என்ன பன்ற விருஷ்தி? உனக்கு தெரிஞ்சா சொல்லு. இல்லையா புகழ்க்கிட்ட போனை குடு. ஏன் உன் புருஷனுக்கு கால் பன்ற?…” என்று எரிந்து விழுந்தான்.
“இந்த கோபத்தை நீ என் புருஷன்கிட்ட காமிச்சிருக்க வேண்டியது தானே விஷால்?…” என்ற விருஷ்தியின் குரலில் அவன் மௌனமாக,
“தொலைச்சு கட்டிருவேன் பார்த்துக்கோ. இப்பவுமா உனக்கு புரியலை?…” என அவள் கேட்க,
“விருஷ்தி…” என்றான் விஷால் அதிரும் வகையில்.
“இனிமே புகழ்க்கிட்ட பேசற வேலை வச்சிக்கிட்ட, நானே உன்னை சும்மா விடமாட்டேன். நீ பொய்யா விசாரிக்கிறன்னு தெரியாத அளவுக்கா அவரும், நானும் இருப்போம்?…”
“விருஷ்தி, ப்ளீஸ். நான் என்ன சொல்றேன்னு கேளு. அதுவும் லவ் மேரேஜ் பண்ணின உனக்கு என் மனசு…”
“புகழை பத்தி நினைக்கிறதை விட்டுட்டு விஷால். இது சரிவராது…” என்றவள்,
“திரும்ப அவளுக்கு தொந்தரவு குடுத்த நானே உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணிருவேன். பார்த்து இருந்துக்கோ…”
“என்ன விருஷ்தி மிரட்டற? ஏன் நான் எல்லாம் காதலிக்க கூடாதா?…”
“அதை நீ சொல்றியா? உன் நோக்கம் உண்மையான காதலா இருந்தா புகழை நீ கட்டாயப்படுத்த மாட்ட. அது இல்லை. இனிமே அவளை காண்டேக்ட் பண்ண நினைச்ச, உண்டில்லைன்னு பண்ணிருவேன். அப்பறம் என் புருஷன் அதை செஞ்சிட்டார், இதை செஞ்சிட்டார்னு புகார் சொல்லாத. புரியுதா?…” என்று எச்சரித்து அழைப்பை துண்டித்தாள் விருஷ்திகா.
அழகருக்கு தெரியாமேலேயே இந்த விஷயம் இதனுடன் முற்றுபெற்றுவிடவேண்டும் என்ற விருஷ்திகாவின் வேண்டுதல் கடவுளின் காதில் சென்று சேரும்முன் விளைவுகள் கைமீறியது.