“அண்ணே, அப்படி சொல்லாதீங்க. இந்த முடிவு என்னோடது…”
“என்னடா உன் முடிவு? எனக்கு தெரியாது நீ உம்மவளுக்காக தான் இந்த முடிவுக்கு வந்திருப்பன்னு…” என்றார் ஆக்ரோஷமாய்.
“அதுல என்ன தப்புண்ணே? எனக்கு இருக்கறது ஒத்த பொண்ணு. அவ கலங்கி போய்…”
“ஓஹோ, ஊர் மத்தில உன்னை சந்தி சிரிக்க வச்சிட்டு போனவ கண்ணீர் உனக்கு இம்புட்டு உறுத்தல்ன்னா, உனக்காக ஒவ்வொருதடவையும் அசிங்கப்பட்டு நிக்கிறேனே? எனக்கு என்னடா செய்ய போற?…” என்றார்.
“அண்ணே, கொஞ்சம் பொறுமையா இருங்க…”
“எங்கிட்டு பொறுமையா? ஏன்டா உம்மவளுக்கு நான் சொன்ன வரனுக்கு கட்டி வைக்க சம்மதம்ன்னு நீயும் உன் பொண்டாட்டியுமா தான வலிய வந்தீங்க. நான் கட்டாயப்படுத்தினேனா?…”
“இல்லண்ணே…”
“உன் மக அதுக்கும் என் மூஞ்சில கரிய பூசினா. ஆனாலும் நான் உன் பக்கம் தான நின்னேன்?…”
“அண்ணே…”
“பேசாதடா. அன்னிக்கு அவ செஞ்ச காரியத்தால ஆடிப்போய் நின்னியே. உனக்கு தோள் குடுத்து நின்னது தான தானே? என்னோட ப்ரெண்ட்க்கிட்ட அசிங்கப்பட்டு என்ன பேச்சு வாங்கினாலும் என் தம்பி தான் முக்கியம்ன்னு உனக்காக நான் நின்னேன்ல…” என்று மருகி பேச, நிஜத்திற்கும் மருகியது கதிர்வேலன் தான்.
“புரியுதுண்ணே, என்னையும்…”
“உன்னை என்னத்தடா புரிஞ்சுக்க. நான் தான் என் புள்ளைகளை ரெண்டாம்பட்சமா பாத்து உன்னை என் மொத புள்ளையா நினைச்சு எல்லாம் செஞ்ச எனக்கு இந்த அவமானம் தேவை தான்…” என்றார்.
கதிர்வேலனுக்கு உண்மைக்கும் அவனை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.
அத்தனை பேச்சுக்களிலும் கதிர்வேலன் தான் தணிந்து பேசினார். சிலநேரம் எரிச்சலும் கூடியது தான்.
ஆனாலும் தனக்காக என்று பார்த்து இருந்தவரை சட்டென்று முறித்துவிட முடியாதே.
மகள் என்னதான் தன்னை அவமதித்து திருமணம் செய்துகொண்டாலும் அவளையே தள்ளிவைக்க முடியாமல் அவளுக்காக பார்த்தவருக்கு, தன் அண்ணன் தனக்காகவே அத்தனை செய்யும் பொழுது என் இஷ்டம், என் முடிவு என்று பேச முடியாமல் கட்டுப்பட்டு நின்றார்.
“நெஞ்ச புடிச்சிட்டு நீ ஹாஸ்பிட்டல்ல விழுந்ததும் யார்ரா உன் கூடவே நின்னது? என் வேலையை தொழிலை விட்டுபோட்டு அங்கயே கதியா கிடந்தேன்ல. அப்பவும் உன் மருமவன் என்னை இம்மிக்கும் மதிக்கலை…” என்று அவ்வப்போது அழகர், விருஷ்திகா மீதான கோபத்தை கதிர்வேலனின் மனதில் திணிக்க பார்த்தார்.
“எல்லா அவமானத்துக்கும் மேல இப்ப இந்த வீட்டு விஷயம். என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா?…” என்று பேச,
“அப்படி எல்லாம் இல்லண்ணே. நான் சொல்றதையும் நீங்க கொஞ்சம் பொறுமையா கேட்கலாம்….”
“அட போடா. நான் என்ன எனக்காகவா அந்த வீட்டை விக்கனும்ன்னு சொல்றேன்? உன்னை அவமானப்படுத்திட்டான்னு தான அந்த பக்கமே போகவேண்டாம்ன்னு நீ நினைச்சதனால அப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சோம்…” என்று கூற கதிர்வேலன் மனதில் அந்த விஷயத்தில் ஒவ்வாமை தான்.
அவர் கோபமாக இருந்ததென்னவோ உண்மை. ஆனால் வீட்டை விற்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை.
அங்கே இருந்து மகளை எதிர்கொள்ள அவரால் முடியவில்லை. பார்க்கும் பொழுதெல்லாம் இப்படி செய்துவிட்டாளே என்றுதான் தோன்றுமே என அங்கிருந்து காலி செய்து பூர்வீக வீடு வந்து சேர்ந்தது.
அதனை கொண்டு மயில்வாகனன் வீட்டையே விற்றுவிட நெருக்க அன்றிருந்த மனநிலையில் கதிர்வேலனும் சம்மதித்துவிட்டார்.
இப்போது அதனையே மயில்வாகனன் சொல்லி காண்பித்ததில், ‘நீங்கள் சொல்லியதனால் தானே?’ என்று எதிர்த்து பேசிவிட முடியாத ஒரு இறுக்கம் கதிர்வேலனிடம்.
“என்னடா நான் சொல்லவும் உனக்கு உறுத்துதோ?…” என்றவர்,
“அதுவும் இந்த விஷயத்தை நீ எனக்கு சொல்லலை. அந்த தரகர்கிட்ட வீடு விஷயமா விசாரிக்க போன் போட்டப்ப அவன் சொல்றான், நீ விக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டதா. எவ்வளோ பெரிய அவமானம் எனக்கு…” என்று கூற,
“இப்பவும் எனக்கு வீட்டை விக்கிறதுல உடன்பாடு இல்லைண்ணே…” அமைதியாய் கதிர்வேலன் கூறினார்.
“இந்த இழவை அன்னைக்கே சொல்லி தொலைக்க வேண்டியது தானே? நீ சரின்னு சொன்ன பின்னாடி தான நான் அந்த வீட்டை பத்தி பேசினதே?…” என்று சொல்ல கதிர்வேலனுக்கே தான் ஆரம்பித்தோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
“என்னதான் நான் சென்னையில பிஸ்னஸ் பண்ணினாலும், என் வரவு செலவு எல்லாம் நம்ம ஊர்ல இருக்கு தானே? நாளைக்கே நான் ஒருவிஷயம் ஆரம்பிக்கனும்ன்னா நம்பி எவன் வருவான்? இப்படி என்னை முச்சந்தில நிப்பாட்டி மூக்கறுத்த மாதிரி செஞ்சிட்டியே…” என்று ஏகத்திற்கும் பேசிக்கொண்டிருந்தார்.
உண்மையில் கதிர்வேலனுக்கு அப்போதுதான் நெஞ்சுவலியே வரும் போலிருந்தது.
மயில்வாகனனை ஒற்றை வார்த்தையில் நிறுத்த முடியாமல், பாசத்திற்கு கட்டுப்பட்டு எதுவும் பேச முடியாததிலேயே அயர்ந்து போய் தலையில் கைவைத்துவிட்டார்.
“இப்ப புரியுதுடா. எல்லாம் ஒன்னு சேர்ந்து என்னை கோமாளி ஆக்கிட்டீங்க. அதுதானே? என் புள்ளைகளும் உனக்கு நேந்துவிட்ட மாதிரி சித்தப்பா சித்தப்பான்னு உன் நலனை தான் பார்க்குதுங்க. இப்ப நான் அனாதையா அவமானப்பட்டு நிக்கிறேன்…” என்று கதிர்வேலனை குறிபார்த்து அடித்தார் மயில்வாகனன்.
“அண்ணே, என்னண்ணே. ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?…” என அவருக்கு கண்கள் கலங்கிவிட்டது.
சத்தமின்றி சாந்தா அழவே ஆரம்பித்துவிட மயில்வாகனனை நிறுத்த முடியவில்லை.
“இப்ப முடிவா என்ன சொல்ற? அந்த வீட்டை விக்கலை. அதானே?…” என மீண்டும் ஆரம்பிக்க,
“இல்லண்ணே. விக்கலை. வேண்டாம். உங்களுக்கு இப்ப கோபத்துல எதுவும் புரியலை. நிதானமா யோசிச்சா என் முடிவு சரின்னு தோணும். நீங்களே நான் செஞ்சது சரின்னு சொல்லுவீங்க…” என்றார் கதிர்வேலன்.
“அப்படி மட்டும் சொல்லவே மாட்டேன். உன் பொண்ணு செஞ்ச காரியத்தை என் பையன் செஞ்சிருந்தாலும் நான் இதை தான் சொல்லுவேன். இப்படித்தான் இருப்பேன். உன்னை மாதிரி என்னால மானம் கெட்டு இருக்கமுடியாது…” என்று சொல்லியவர்,
“புள்ளைய ஒழுங்கா வளர்க்க துப்பில்லாத உன்னை, பச்சைமண்ணுன்னு நினைச்சு நான் பார்த்தேன்ல. எனக்கு நல்ல பாடம் கத்து குடுத்துட்டடா…” என்று அழைப்பை துண்டித்துவிட்டார் மயில்வாகனன்.
மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது அவர் பேசி முடித்ததுமே. வெகுநேரம் கதிர்வேலன், சாந்தாதேவி இருவருமே மௌனமாய் இருந்தனர்.