வீட்டிலும் எவரும் இல்லை. முருகன் வெளியே சென்றிருக்க, அரவிந்த், விஷால் இருவருமே வீட்டில் இல்லை.
சாந்தா அழுதுகொண்டே கதிர்வேலனுக்கு தண்ணீரை எடுத்து நீட்டவும் வாங்கிக்கொண்டவர்,
“அரவிந்த்க்கும், விஷாலுக்கும் அண்ணா இப்படி பேசினது தெரியவேண்டாம். நீ எதுவும் சொல்லிடாத. பிள்ளைங்க சங்கடப்படுவாங்க…” என்றவர்,
“அவர் ஏதோ கோவத்துல பேசிட்டார். விடு. பெருசு பண்ணவேண்டாம். புரியுதா?…” என்றும் கூற,
“ஹ்ம்ம், சரிங்க…” என சாந்தா எப்போதும் போல் கணவனின் பேச்சிற்கு மறுபேச்சு பேசவில்லை.
“அரவிந்த், விஷாலை விட விருஷ்தி மேல ரொம்ப பாசம். அதுதான் அவ இப்படி செஞ்சதுல மனுஷனுக்கு தாங்கமுடியலை. விருஷ்தின்றதால திரும்ப அவ இங்க வந்தப்போ பெருசா ஆட்சேபிக்கலை. இதுவே அரவிந்த், விஷால் இப்படி செஞ்சிருந்தா சமாளிச்சிருக்கவே முடியாது அண்ணனை. பாவம்…” என்ற கதிர்வேலன் தான் தான் பரிதாபத்துக்குரியவர் என்பதை உணராது பேசினார்.
அவர் சொல்லியதற்கெல்லாம் சாந்தாதேவியும் தலையசைக்க இருவருமே மயில்வாகனன் கோபம் தணிந்து வரவேண்டும் என்று நினைத்தனர்.
அங்கே மயில்வாகனனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அந்த வீட்டை வைத்து எத்தனை பெரிய திட்டம்.
வீடு மட்டுமா? வீட்டின் அருகில் இருக்கும் காலி இடம் வேறு. இப்போது செய்வதறியாமல் நரி மூளை சூடாகி இருந்தது.
அதிலும் இதனை தோல்வி என்பதை விட, அந்த அழகரின் முன் தோற்றுவிட்டதை போல் நினைத்தார்.
விருஷ்திகாவினால் தன் மகனின் எதிர்காலம் போனதோடு, இப்போது அவளால் வீடும், அந்த நிலமுமா? என்று ஆத்திரம் மிகுந்தது.
இதனை மீண்டும் கைப்பற்றுவது எப்படி என்னும் யோசனையில் மூளையை கசக்க ஆரம்பித்தார்.
———————————————————–
புகழ்மதியிடம் தனியே அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்ட விருஷ்திகா எச்சிலை விழுங்கியபடி அவளை பார்த்தாள்.
“உங்க அண்ணன் தான் சொல்ல கூடாதுன்னு அதட்டுனாங்க…” என நடுங்கிக்கொண்டே கூறியவள் கண்களில் கண்ணீர்.
“சரி, அண்ணா வரும்போது நல்லா தான இருந்த? போன் எப்படி கீழ விழுந்தது?…” என விருஷ்திகா கேட்க,
“தண்ணி குடுத்துட்டு திரும்ப உள்ள வரும்போது போன் அடிக்கிற சத்தம். தெரியாத நம்பர் வேற. எப்பவும் தெரியாத நம்பர்னா எடுக்கமாட்டேம். அம்மாட்ட குடுத்து பேச சொல்லிருவேன். இன்னிக்கு என்னவோ ஞாபகத்துல எடுத்துட்டேம் மதினி…” என்றவளின் கண்ணிலிருந்து கரகரவென்று கண்ணீர்.
“அவங்க அந்த விசால் தான். என்னவோ போனுக்கு அனுப்பிருக்கேம்ன்னு சொல்லவும் பயத்துல போன கீழ போட்டுட்டேம். என்னன்னு அம்மா திரும்பையில போன எடுத்ததும் மறுக்கா அண்டாவுல போட்டுட்டேன். அம்மா என்னன்னு பாத்துட்டா…”
“பார்த்திருந்தா விஷாலை கையை காலை உடைச்சு வீசிருந்திருப்பாங்க உன் அண்ணா…”
“அது சடவாகிரும்ல மதினி?…” என்றாள் பாவம் போல.
“பைத்தியமா நீ? சொந்தமா இருந்தா என்ன? பிரச்சனை ஆனா தான் என்ன?…” என்றவள்,
“இதை நீ அன்னைக்கே உன் அண்ணாகிட்ட சொல்லியிருந்தா விஷாலை கண்டிச்சிருப்பாங்க. இப்ப இவ்வளோ தூரம் அவன் வந்திருக்கமாட்டான். உன்னோட பயம், அவனுக்கு பலமா போயிரும். என்ன பிரச்சனைன்னாலும் உன் மேல தப்பே இருந்தாலும் இந்தமாதிரி விஷயத்தை வீட்டுல சொல்லாம இருக்காத புகழ்….” என்று விருஷ்திகா சொல்லியும் புகழ் மறுத்தாள்.
“மதினி, ப்ளீஸ். இதை அண்ணாட்ட சொல்லவேண்டாம். நான் தான் அவங்க பக்கமே திரும்பலையே. இப்ப என் போனும் போச்சு. இனிமே என்கிட்ட பேசமுடியாது. வீட்டுக்கு வந்து பேச அவ்வளோ தைரியமா அவங்களுக்கு? இதை இப்படியே விட்டுடுங்க. ப்ளீஸ்…” என்றவள்,
“திரும்ப பிரச்சனையாகி உங்க வீட்டுக்கும், நம்ம வீட்டுக்கும் உறவு அத்து போனா எனக்கு உறுத்திட்டே இருக்கும். எனக்காக மதினி. அதான் அவங்க ஊருக்கு கிளம்பறாங்க இல்ல. அப்பறம் என்ன? என்னவோ கூறுகெட்ட தனமா நடந்துக்கறாங்க. அங்க போயிட்டா மறந்துருவாங்க…” என்று என்னென்னவோ காரணம் கூறினாள் புகழ்.
“உன் அண்ணாகிட்ட சொல்லாம எப்படி புகழ்?…”
“ப்ளீஸ், ப்ளீஸ் மதினி. இந்த ஒருதடவை. திரும்ப அவங்க தொந்தரவு பண்ணினா நானே சொல்லிடறேன். எனக்காக….” என்று அதையும் இதையும் சொல்லி மறுத்தவள் மனதினுள், அரவிந்தின் வார்த்தைகள் தான்.
அவன் பார்த்துக்கொள்வான் என்னும் ஒருவித நம்பிக்கை. ஆனாலும் விஷாலை எண்ணி பயமும் ஒருபக்கம்.
மீண்டும் தொடர்புகொள்ள முயன்றால் பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தாள் புகழ்மதி.
எங்கே தன் அண்ணனுக்கு தெரிந்து விருஷ்திகா பிறந்தவீட்டினருடான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டால்? இப்போதுதான் திருமணம் முடிந்து அங்கே முறையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தன்னால் எதற்கு புதிதாய் என வெகுசாதாரணமாக இதனை நினைத்துவிட்டாள் புகழ்மதி.
சொல்வதா வேண்டாமா என இருவேறு மனநிலையில் விருஷ்திகா தத்தளிக்க, ஒருபக்கம் இப்போதைக்கு இதனை சொல்லவேண்டாம் என்று முடிவுக்கும் வந்தாகிற்று.
புகழ் கூறியதை போல அவன் தான் துபாய் கிளம்ப போகிறானே என்ற எண்ணமும் ஒருவகையில் காரணம்.
தானும் அழைத்து எச்சரித்திருக்க இனி கொஞ்சம் பின்வாங்க கூடும். விலகி நிற்க முயல்வான் என்றே நினைத்திருந்தாள் விருஷ்திகா.
“ஹ்ம்ம், சரி. நானே இதை சரி பண்ணி தர்றேன்…” என்று சொல்லி புகழை அனுப்பி வைத்தவள் மனதினுள் பெருங்குழப்பம்.
இதில் மாலை நேரம் சாந்தா அழைத்து பேசியிருக்க, பேச்சுவாக்கில் மயில்வாகனன் பேசியதையும் மேலோட்டமாய் பேசியவர் சொல்லியதை கேட்டவளுக்கு ரத்தம் கொதித்தது.
“எவ்வளோ தைரியம் இருக்கனும்? இந்த அப்பா ஏன் இப்படி இருக்காங்க? என் வீடு அது. விக்கிறதும், விக்காததும் என் விருப்பம்ன்னு சொல்ல வேண்டியதுதானே?…” என்று சீறியவள்,
“உங்களை சொல்லனும். அவர் சொன்னா எல்லாத்துக்கும் சரின்னு சொல்லுவீங்களா? இப்ப இந்த பேச்சு தேவையா? வீட்டை விக்கனும்ன்னு சொன்னா உங்களை யார் தலையாட்ட சொன்னது?…” என்றாள் கோபமாய்.
“அன்னைக்கு சூழ்நிலை அப்படி இருந்தாங்க உன் அப்பா…”
“என்னம்மா நீங்க வேற. வீட்டை பத்தி பேச்சை எடுக்கவுமே அப்பவே அதை நீங்க மறுத்திருக்கனும். நான் என்னை கொலையா பண்ணிட்டேன்?…” என்று அவள் பேச பேச, அதிலேயே பயந்து சாந்தா முழுவிவரம் கூறவில்லை.
“அரவிந்த் அண்ணா எங்க? வந்தாச்சா? விஷால் என்ன பன்றான்?…” என்றாள்.
“அரவிந்த் ரூம்ல இருக்கான். பேக்கிங். விஷால் இன்னும் வரலையே….”
“ஹ்ம்ம், சரி. நாளைக்கு எத்தனை மணிக்கு ப்ளைட்?…”
“காலையில சொன்னேனே விருஷ்தி. இங்கருந்து சென்னை போய் அங்க இருந்து தான் ப்ளைட் போறாங்கன்னு…”
“ஹ்ம்ம், ஆமா. சரி அப்பாவை பார்த்துக்கோங்க. முக்கியமா பெரியப்பாவோட எதுவும் பேச்சு வச்சுக்க வேண்டாம். இல்லைன்னா நான் போன் பண்ணி அவரை பேசுவேன்…” என்று கூற,
“இதுல நானா ஏன் சந்தோஷப்பட போறேன்? சொந்த சம்பாத்தியம். அதனால கோவத்துல விக்க முடிவெடுத்தாங்க. இப்ப வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டாங்க. என்னை கேட்டு செஞ்சாங்களா என்ன? வித்தாலுமே அது அப்பாவோட விருப்பம். செய்யட்டும்…”
“என்னடி இப்படி பேசற? உனக்காக தான் முடிவை மாத்திக்கிட்டாங்க…”