“என்னால தான அந்த முடிவுக்குமே வந்தாங்க. விடுங்கம்மா. இதை பேசினா இன்னும் கஷ்டமா இருக்கும். இதுல நான் சொல்ல எதுவும் இல்லை…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
மாற்றி மாற்றி அன்றைக்கு பிரச்சனையாகவே செல்ல தலையை பிடித்துக்கொண்டு சாய்ந்திருந்தவள் அப்படியே உறங்கி போனாள்.
இரவு உணவிற்கும் கீழே வரவில்லை. கதவும் திறந்திருக்க புகழ் வந்து பார்த்துவிட்டு தூங்குவதாய் சொல்லிவிட, தில்லையும், வல்லியும் எழுப்ப வேண்டாம் என்றுவிட்டனர்.
இரவு அழகர் வரும்வரையில் கூட எழுந்துகொள்ளவில்லை விருஷ்திகா. தலைவேறு அப்படி வலித்தது.
அலைப்புறுதல், மனவுளைச்சல், விஷால் செய்துவைத்ததின் அச்சம் என்று அவளை எல்லாம் சேர்ந்து வாட்டி எடுத்தது.
அழகர் வந்ததும் அப்படியே உணவையும் முடித்துக்கொள்ள தில்லை தான் இன்னும் விருஷ்திகா உண்ணவில்லை என்றார்.
“ஏன் சித்தி, கீழ வரலையா?…” என்றவன் பார்வை அழகுமீனாளை தான் பார்த்தது.
“ஆத்தே, ராசா நா ஒண்ணுமே பேசலைய்யா…” என்றவர்,
“இந்த நெடுவட்டான் ஒருத்தன் வந்தியான். அந்நேரம் பொறுக்கமாட்டாம ரெண்டுவார்த்த வெறுமனே பேசினதுதேன். அதுக்கா உண்காம கெடக்கா?…” என்றுவேறு அவனின் பார்வையில் உளறி வைக்க, இப்போது நன்றாய் திரும்பி நின்று பார்த்தான் அவரை.
“ராசா, யய்யா நெசந்தேன்…” என அவர் பேசியதில், அழகருக்கு லேசாய் புன்னகை உதிக்க,
“உன்னை வந்து பேசிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு மாடியேற போனவன்,
“நீங்க போயி படுங்க. வேணுமின்னா வந்து சாப்பிடுவா…” என்றான்.
“அழகரு ஒரு நிமிசம்ய்யா…” என்று நிறுத்தினார் தில்லை.
மற்றவர்கள் அழகர் சொல்லியதும் சென்றுவிட தில்லையிடம் பேசிவிட்டு மாடிக்கு வந்தான் அழகர்.
இப்போதும் கதவு திறந்தே தான் இருந்தது. வந்தவன் அவளின் உறக்கம் கலைக்காமல் கதவை சாற்றிவிட்டு உடைமாற்றி, முகம் கழுவி வர அப்போதும் அயர்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள் விருஷ்திகா.
நிச்சயம் ஆழ்ந்த தூக்கம் தான். தன்னை பார்த்ததும் ஒரு நடிப்பு தூக்கம் போடுபவளிடம் அந்த பாவனை இல்லை.
புருவங்களின் சுருக்கம் வேறு அவளின் நிம்மதியற்ற உறக்கத்தை பறைசாற்ற அவளருகில் சாய்ந்து படுத்தவன்,
“லக்ஷ்மி…” என்றான் தோள் தொட்டு அசைத்து.
இரண்டுமுறைக்கு பிறகே கண்களை திறந்தவள் விளக்கொளியில் விழிகள் கூச திரும்பி கணவனை பார்த்தாள்.
“சாப்பிடாம என்ன இவ்வளோ தூக்கம்?…” என்றவனின் முகம் பார்த்தவளுக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவன் புறம் திரும்பி கழுத்தில் கையிட்டு நெஞ்சோடு முகம் சேர்த்துக்கொண்டவளின் அணைப்பில் அழகரின் மனம் சந்தோஷிக்காமல் யோசனையில் ஆழ்ந்தது.
“லக்ஷ்மி…” என மெல்லிய குரலில் அவன் முணுமுணுக்க,
“ப்ளீஸ்…” என்றவள் தன் ஆசுவாசத்திற்கு அவன் நெஞ்சத்தில் அடைக்கலாமானாள்.
சிலநிமிடங்கள் இந்த அணைப்பிலேயே கழிய எங்கே மீண்டும் உறங்கிவிட்டாளோ என அசைத்தான்.
அழகரின் தீண்டலில் அவன் முகம் பார்த்தவள் மெதுவாய் அவசரமின்றி விலகி எழுந்தமர்ந்தாள்.
“இப்ப தான் வந்தீங்களா?…” என்றும் கேட்க,
“உனக்கென்ன ஆச்சு?…” என்றான் அவன் அவள் கேள்விக்கு பதிலளிக்காமல்.
“ப்ச், எதுவும் இல்லை…” என சலிப்பாய் வந்தது அவளின் குரல்.
“சும்மா எல்லாம் இப்படி இருக்கமாட்டியே நீ…” என்றவன் அமர்ந்திருந்தவள் தோளை பற்றி இழுக்க, பெரிதாய் மறுப்பின்றி மீண்டும் அவன் கைகளுக்குள் வந்தாலும், அதற்குமேல் அவனையும் அனுமதிக்கவில்லை. அவனுமே முன்னேறவில்லை.
“சாப்பிடலையாம். எப்போ இருந்து இவ்வளோ தூக்கம்?…” என்றான்.
“எப்போ தூங்கினேன்னு தெரியலை. ஆனா தூங்கனும் போல இருந்து தூங்கிட்டேன்…”
“இது என்னடி பதில்?…”
“இதுதான் பதில். இதுக்கு மேல என்ன சொல்லனும்?…” இன்னுமே சலிப்பாய் வந்தது குரல்.
அவளின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பியவன் பார்வை அவளின் முகத்தில் ஆராய்ச்சி நடத்த,
“என்ன, என் முகம் பார்த்தே எல்லாம் படிச்சிருவீங்களோ?…” கேலி இழையோட அவள் கேட்கவும், தானுமே புன்னகைத்தான் அழகர்.
“விஷால் திரும்ப கால் பண்ணினானா?…” என்று கேட்க அதுவரை நிர்மலமாக இருந்த விருஷ்திகா முகத்தில் சட்டென்ற மாற்றம்.
“என்னடி இப்படி பார்க்கற?…” என மீசையை முறுக்கியபடி கேட்டவன்,
“கால் பண்ணிருந்தான் போல?…” என்றான்.
“ஹ்ம்ம், காலேஜ் பத்தி விசாரிச்சான். தேவை இல்லாத விஷயத்துல தலையிடாதன்னு சொல்லி திட்டி வச்சிட்டேன்…” என்றாள்.
“அவன் பேசினது தேவை இல்லாததா?…”
“ஆமா, அது அவனுக்கு அவசியமில்லாதது. தேவையும் இல்லாதது. இனிமே இப்படி கண்டதுக்காகவும் பேச வராதன்னு சொல்லி, ஒழுங்கா ஊர் போய் சேருன்னு சொல்லி வச்சிட்டேன்…” எனும்பொழுதே அவள் முகத்தில் அவ்வளவு ஆவேசம்.
“காலேஜ் பத்தி விசாரிச்சதுக்கேவா?…” என்று அழகர் நம்பமுடியாமல் கேட்டதோடு,
“உன் பெரியப்பா பேசலையா?…” என்றான்.
“அவரை பத்தியும் பேசாதீங்க. என் அப்பாவை எவ்வளோ பேசியிருக்கார். இந்த வீட்டை விக்க போர்ஸ் பண்ணினதே அவர் தான். பாவம் அப்பா நெஞ்சுவலி வந்து இப்ப தான் உடம்பு தேறி வருது. இப்ப போய் அவரை படுத்தறார் பாருங்க…” என்றவள்,
“கேட்கிறதுக்கு யாரும் இல்லையா என்ன? எல்லாம் இவர் வச்ச சட்டமா? இதை சும்மா விடமாட்டேன் நான்….” என்றும் பொரிய, வெகு இலகுவாய் பார்த்திருந்தான் அழகர்.
“அம்மா சொல்லி வருத்தப்பட்டாங்க. அம்மாவையும் பிடிச்சு நல்லா பேசிட்டேன். ஆனாலும் பாவம். எல்லாத்துக்கும் என்னை தான் காரணம் சொன்னாங்களாம் பெரியப்பா…” என்று சொல்லியவள்,
“அப்பா பாவம், வேற வழியில்லாம சரின்னு சொல்லி இப்ப கஷ்டப்படறாங்க…” என்றதும்,
“ஏன் உங்கப்பாவுக்கு வாயில்லையா? என்னை மட்டும் அன்னைக்கு சட்டையை பிடிச்சார். உன் பெரியப்பாவை கேட்கவேண்டியது தானே?…” என்றான் அழகர் எரிச்சலுடன்.
“திரும்ப நம்மளை கூப்பிட்டாங்க தானே? இப்ப நம்மளை சொல்லி தானே அப்பாவை பேசறாங்க…” என்றவள்,
“அப்பா பாவம். ரொம்ப வருத்தப்படறாங்க. என்னால அப்பாக்கிட்ட பேச முடியாது தான். ஆனா நான் எங்கப்பாவுக்கு தான் எப்பவும் சப்போர்ட். நாம தானே பார்த்துக்கனும் அப்பாவை…” என்று அவனையும் சேர்த்துக்கொண்டு விருஷ்திகா கூற,
“கேடிடி நீ. என்னையும் சேர்க்கற. முதல்ல உங்கப்பா உன்கிட்ட பேசட்டும். அப்பறம் இங்க வரட்டும். அதுக்கு அப்பறம் பார்த்துக்கறது, பாதுகாக்கறது எல்லாம் பார்ப்போம்…” என்று அலட்சியமாய் கூற விருஷ்திகா முகத்தில் ஏமாற்றம்.
ஒரு பேச்சுக்கேனும் ‘நாம இருக்கோமே’ என ஆறுதலாய் அவன் சொல்லக்கூடாதா என மனம் எதிர்பார்த்தது.
சட்டென்று அவள் மௌனமாகிவிட அவளை விட்டு விலகி எழுந்தவன் தண்ணீரை எடுத்து குடித்தபடி,
“பசியோட இருக்காம போய் சாப்பிட்டு வா…” என கூற,
“எனக்கு பசிக்கலை…” என்றாள் வீம்புக்கென்றே.
“அர்த்தராத்திரில பசில உருண்டு வந்து என்னை முழுங்கிடாத…” என்றான் விஷமமாய்.
“பெரிய லட்டு இவரு. முழுங்கறாங்க…”
“மனசுல வச்சிருக்கற பேரெல்லாம் ஆசையா இருந்தா நேரா சொல்லுடி. இதுக்கொரு சண்டையை போட்டு தான் என்னை பேசனுமா நீ?…” என்று சீண்டியபடி அவளருகில் மீண்டும் வந்தமர்ந்தவன்,
“சரி, மொபைல் எங்க?…” என்றான் கைநீட்டி.
“என்ன மொபைல்?…” உண்மைக்கும் அவளுக்கு ஞாபகம் இல்லை.