வந்து நின்றவன் பார்வையில் மொத்த ரத்தமும் சுண்டிப்போனதை உணர்ந்தாள் விருஷ்திகா.
உடைகள் களைந்து, முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாட வந்து நின்றான் அழகர்.
கையில் இருந்த கைப்பேசி நழுவி விழ அவனின் பார்வைக்கே நடுநடுங்கி போய் பார்த்தாள் விருஷ்திகா.
நிச்சயம் இது புகழ்மதி விஷயம் இல்லாது வேறு என்னவாக இருக்கும் என அவள் மனம் அடித்து கூறியது.
இதில் அவள் வேறு என்னவோ விஷால் இறுதியாக அனுப்பியதாக கூறினாளே என நினைக்கையிலேயே உயிர் வந்து தொண்டைக்குழியில் நின்றுவிட்டது.
உள்ளே வந்தவன் கதவை அடைக்கவும் இன்னுமே மிரண்டு பின்வாங்கினாள் விருஷ்திகா.
அவன் நெருங்கி வரும்முன்னரே பலவித யோசனைகள் காலம் கடந்து உதயமானது அவளுள்.
‘தான் சொல்லியிருக்கவேண்டும்.’
‘என்னதான் புகழ் வேண்டாம் என்றாலும் இதனை அழகரிடம் முதலிலேயே தெரியப்படுத்தியிருக்க வேண்டும்’
‘முதல்நாளாவது கைப்பேசியை அவனிடம் கொடுக்கும் பொழுதிலாவது கூறியிருந்திருக்கலாமோ?’
இப்படியாக அவளை சுழற்றி அடித்த விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், சாந்தா சொல்லியதில் வேறு நெஞ்சை அடைத்துக்கொண்டது.
‘கை, கால் உடைத்து போட்டுவிட்டானாமே?’ என்ன நடந்திருக்குமோ என்று அதுவேறு பயம் நெஞ்சை கவ்வியது.
அழகரை பார்த்தபடி பின்னால் நடந்து சென்றவளுக்கு வியர்த்து ஊற்ற இதயத்துடிப்பு எகிறியது.
“நில்லு லக்ஷ்மி, ஏன் பின்னாடியே போற?…” என்றான் அழகர் உணர்வற்ற குரலில்.
திருமணத்திற்கு முன்பு அவனிடம் பேசும் ஓரிரு வரத்தைகளில் அவன் தரும் அந்த தலையசைப்பில் கூட கோபம் இருக்குமே தவிர்த்து இப்படி எந்தவித உயிர்ப்பும் இல்லாதிருக்காது.
இன்று அவனிடம் அதனை உணரும்போழுதே உயிர்கூடு காலியாகி போனதை போலிருந்தது.
“உன்னை தான் கேட்கறேன். நில்லு….” என்று சொல்லியும் அந்த அதட்டலில் பயந்து பின்னே செல்ல,
சிலையாய் சமைந்துவிட்டாள் அந்த சத்தத்தில். அழுகை வரும்போலிருந்தது விருஷ்திகாவிற்கு.
“நான்…” என்றவளை கையமர்த்தி தடுத்தவன்,
“கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. யார் போன்ல?…” என்றான்.
“அம்மா…”
“ஓஹ்…” என்றவன்,
“விஷால் நேத்து எதுக்கு கால் பண்ணினான்?…” என்றதுமே முடிந்தது என்றானது அவளுக்கு.
“வேற எதுவும் பேசாம நான் கேட்கிறதுக்கு மட்டும் உண்மையான பதிலை சொல்லனும்…” என்று மீண்டும் எச்சரிக்க கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு.
“பதில்…” என்றான் ஆக்ரோஷத்தை அடக்கிக்கொண்டு.
“புகழ் தான் ரொம்ப பயந்துட்டா. நான் நான்…” என்று விருஷ்திகா திக்கி திணறிக்கொண்டு பேச,
“அப்போ உனக்கு முதல்லையே தெரிஞ்சிருக்கு…” என்று கேட்டவன் குரலில் இருந்ததென்ன என்று புரியவில்லை விருஷ்திகாவிற்கு.
“நான் சொல்றதை…”
“மூச்…” என்றவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிற்க,
“விஷால்…”
“ஏய்…” என்று விருஷ்திகாவின் மேல் கையை ஓங்கியவன்,
“அவன் பேரை சொன்ன…” என்று ஓங்கிய கையை அப்படியே மடக்கிவிட்டு இறுதியாய் அவளை ஒரு பார்வை தான் பார்த்தான்.
கோபம் இன்றி, ஆவேசமின்றி, அனலின்றி அந்த பார்வை. எச்சிலை கூட்டி விழுங்கியபடி அரண்டு நின்றவளை பார்த்தவன் அடுத்தநொடி அங்கிருக்கவில்லை.
எதுவும் பேசவில்லை. அப்படியே கிளம்பிவிட்டான். எங்கே செல்கிறான் என்று எதுவும் தெரியாமல் அவனின் பின்னே விருஷ்திகாவும் வேகமாய் ஓடினாள்.
படிக்கட்டில் தடதடவென்று இறங்கியவன் மனைவியின் வருகையில் திரும்பி பார்த்த ஒற்றை பார்வையில் அவளை நிறுத்திவிட்டான்.
அவனின் விழிகளே சொல்லியது என்னை தொடராதே என்று. அளவற்ற கோபம். மூர்க்கத்தனமாய் ஆவேசம்.
பயந்து போனவள் அவன் தலை மறையும் வரை பார்த்துவிட்டு புகழ்மதி அறைக்குள் சென்றாள்.
அங்கே அவள் ஒருபுறம் அழுதுகொண்டு அமர்ந்திருக்க உள்ளே சென்று கதவை அடைத்துவிட்டு,
“புகழ் என்னாச்சு?…” என்றாள் அவளிடம்.
“மதினி, அண்ணே வந்து இப்பத்தேன் கேட்டுட்டு போறாங்க…” என்று அழ,
“என்ன கேட்டாங்க?…” என்றாள் விருஷ்திகா.
“எப்ப இருந்து அவன் தொந்தரவு குடுக்கான்னு கேட்டு, நான் எல்லாம் சொல்லிட்டேன்…”
“எல்லாம்ன்னா?…”
“எல்லாமே தான். அன்னிக்கு உங்க வீட்டுக்கு போனப்ப விசால் பேசி நம்பர் வாங்கினதுல இருந்து, இப்ப வரைக்கு…”
“இப்ப வரைக்கும்ன்னா?…” என்றவளின் குரல் தடுமாறியது.
“உங்க அண்ணன் சொன்னது, உங்ககிட்ட நான் சொல்லவேண்டாம்ன்னு சொன்னது எல்லாம்…” என்றதுமே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் விருஷ்திகா.
“மதினி…”
“பெரிய தப்பு பண்ணிட்டேன் புகழ். இப்ப அதை சரிபண்ண முடியாத இக்கட்டுல நிக்க வச்சிட்டியே. என்னை சொன்ன சரி. அரவிந்த் அண்ணனை ஏன் சொன்ன?…” என்றவள்,
“விஷாலை அடிச்சு உன் அண்ணன் ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிருக்காங்களாம்….” என்றாள் அவள்.
“என்ன?…” இந்த விஷயம் புகழுக்கு தெரிந்திருக்கவில்லை.
விருஷ்திகா சொல்லவுமே புகழின் மனது அரவிந்த் பற்றிய எண்ணத்திற்கு செல்ல எங்கே அவனுக்கு எதுவுமாகிவிடுமோ என்று பயந்து போனாள்.
“மதினி, மதினி அவங்க, அவங்களை நான் வேணும்ன்னு சொல்லலை. மதினி…” என்றவளுக்கு பதற்றம் மேலும் கூடியது.
“இது சொல்லவேண்டிய நேரத்தில சொல்லாம போனதனால வந்த பிரச்சனை. அவன் அங்க வச்சு பேசின அன்னைக்கே நீ சொல்லியிருந்தா கூப்பிட்டு கண்டிக்கிறதோட முடிஞ்சிருக்கும். இப்ப பாரு….” என்றவளுக்கு ஆறவில்லை.
இருக்கும் சங்கடங்கள் எப்போதடா தீர்ந்து நிம்மதியாவோம் என்றவளின் நினைப்பில் மேலும் மேலும் சிக்கல்களை கொண்டுவந்து கொட்டியது அவளின் விதி.
“ஸாரி மதினி…” என்ற புகழை என்ன சொல்ல முடியும்?
“நீ சொன்னா எனக்கு புத்தி எங்க போச்சு? நான் சொல்லியிருந்திருக்கனும்….” என்றவள் விருட்டென்று எழுந்து தன் அறைக்கு வந்தாள்.
மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் அவன் அவளை பார்த்து சென்ற அந்த பார்வை தான்.
அழகரை போல் அவளால் இதனை சாதாரணமாய் கடந்துவிட முடியாதே. மனம் தாங்கவில்லை.
இந்த நேரத்தில், ‘உன் தங்கச்சின்னா வலிக்குதோ?’ என்று கேட்டுவிட முடியவில்லையே அவளால்.
மனம் அவன் மீதான நேசத்தில் கட்டுண்டு இருந்தாலும் கோபம் என்னும் வைராக்கியத்தோடு அவன் கூறிய வார்த்தைகளை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவளால் இந்த சூழ்நிலையில் அவன் வருத்தத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.