“அண்ணா நான் அதை சொல்லலை. விஷால் பத்தி தெரிஞ்சது மட்டுமில்லை. புகழ் எல்லாமே சொல்லிட்டா. ஒருவேளை அவர் அங்க வந்தாலும் வரலாம். உங்ககிட்ட…”
“எதுக்கு பயப்படற விருஷ்தி? நான் பார்த்துக்கறேன்…”
“உங்களுக்கு புரியலையா? நாம விஷாலை காப்பாத்த நினைக்கிறோம்ன்னு அவர் தப்பா புரிஞ்சிருந்தா?…”
“அதுக்கு யார் என்ன செய்ய முடியும்? முதல்ல நீ பதட்டப்படாம இரு. விஷால் இன்னும் கண்ணு முழிக்கலை. இது நடந்தது எப்படி எங்கன்னு தெரியலை…”
“ரொம்ப அடிச்சிட்டாங்களா?…”
“ரொம்பன்னா, என்னன்னு சொல்ல? வாய்ல பல்லே இல்லை. வலதுகை முறிஞ்சிருக்கு. கால்ல பிராக்சர் இருக்கும் போல….” எனும்பொழுதே அரவிந்தின் குரல் தழுதழுத்து போனது.
“சொல்லியிருக்கலாம். ரெண்டு அறை விட்டிருந்திருக்கலாம். இப்படியா சாகற அளவுக்கு? அவன் உடம்பு தாங்குமா விருஷ்தி?…” என்ற அரவிந்தை சமாதானம் செய்ய கூட முடியவில்லை அவளால்.
“அண்ணா…”
“ப்ச், விடும்மா. இவன் என்ன பண்ணினான்னு தெரியலை. அதுக்கு முன்ன நாமளா ஜட்ஜ் பண்ண முடியாதே?…”
“என்னவோ புகழ்க்கு அனுப்பினதா புகழ் சொன்னா. அதை பார்க்க பயந்து தான் போனை கீழ போட்டிருக்கா புகழ்…”
“ச்சை இவன, என்ன மனுஷன்னு சொல்ல? ராஸ்கல்…” என்று பல்லை கடித்த அரவிந்த், விஷாலின் மீது ஆதங்கப்படவும் முடியாமல் இருக்க,
“என்னால அங்க வரமுடியுமான்னு தெரியலைண்ணா. பார்த்துக்கோங்க. அவன் எழுந்ததும் புத்தி சொல்லுங்க…”
“சரி, சித்தி பேசறாங்க…” என்று அரவிந்த் சாந்தாவிடம் போனை தந்ததும்,
“என்ன விருஷ்தி, என்ன பிரச்சனை?…” என்றார்.
“ம்மா, இப்ப எதுவும் கேட்கவேண்டாம். ஒருவேளை அவர் அங்க வந்தா எனக்கு கால் பண்ணுங்க…”
“நீ வரலையா? விஷாலை பார்க்க வேண்டாமா?…”
“ம்மா, என்ன பேசறீங்க நீங்க. என்னால அங்க வரமுடியாது. உங்களுக்கு எப்படி சொல்லி புரியவைக்க?…” என்றவளால் சட்டென்று விஷயத்தை தாயிடம் சொல்ல முடியவில்லை.
“என்னடி எனக்கு என்னவோ பயந்து வருது…”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. என் புருஷன் அடிச்சிருக்கார். அவன் என்ன பண்ணினான்னு தெரியலை. நான் அங்க எப்படி வரமுடியும்? அவர் வரவும் கேட்டுக்கறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டார்.
ஒருபக்கம் மயில்வாகனன் வேறு கொதித்துபோய் கிளம்பி வந்துகொண்டிருந்தார்.
“நான் இப்பவே கிளம்பி வர்றேன். வந்து உன் மருமவனை நான் போலீஸ்ல தூக்கி வைக்கலை. பார்த்துக்கோ…” என்று கதிர்வேலனிடம் ஆவேசமாய் பேசிவிட்டு கிளம்பியிருந்தார் மயில்வாகனன்.
“என்னன்னு விருஷ்தி எதுவும் சொன்னாளா தேவி?…” என்றார் கதிர்வேலன்.
“இல்லைங்க, நான் கேட்டேன். மாப்பிள்ளை வரவும் பேசறேன்னு சொல்லிட்டா. அவளுக்கும் தெரியாது போல…”
“ஹ்ம்ம்…”
“அவளால வரவும் முடியலை. என்ன பிரச்சனைன்னு தெரியாம வந்து இன்னும் பிரச்சனையாகிட்டா?…”
என்னவோ யோசனையில் முகம் கசங்க நின்றிருந்தான் அரவிந்த். அவர் பார்க்க கண்டவன் தானே முன் வர,
“எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அரவிந்த்…” என்றார் அவனின் கை பிடித்து.
“ப்ச், விடுங்க சித்தப்பா….” என்றான் அவருக்கு ஆறுதலாக.
“எதனால இப்படி நடந்ததுன்னு தெரியலை அரவிந்த். மருமகன்கிட்ட எப்படி கேட்கிறதுன்னு தெரியலை…”
“நீங்க அவர்கிட்ட எதுவும் கேட்கவேண்டாம். நான் பேசிக்கறேன்…”
“அரவிந்த், நீ கிளம்பனுமே….”
“எப்படி போக முடியும்? அதுவும் இந்த சூழ்நிலையில. ம்ஹூம். அது சரிவராது சித்தப்பா. நீங்க மனசுல போட்டு அலட்டிக்காதீங்க. ப்ளீஸ். விடுங்க…” என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு விஷாலின் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு தள்ளி வந்தமர்ந்தவன் மனம் கேளாமல் அழகருக்கு அழைத்துவிட்டான்.
என்ன பேசுவானோ, எப்படி கோபப்படுவானோ என்றெல்லாம் நினைத்தபடி அழைப்பு விடுத்தவன், ஒருவேளை கோபத்தில் எடுக்காமல் போய்விட்டால் என்று நினைக்கையில் அழைப்பு ஏற்கப்பட்டது.