“புகழ் எல்லாம் சொல்லிட்டா. இனிமே நான் எதுவும் சொல்ல போறதில்லை. வரட்டும். இது விஷயமா பேசறதுன்னா உங்கப்பா வந்து என்னத்தையோ புடுங்கி எறிய போறாராம், அப்ப பார்த்துப்போம். வேற எதுவும் பேசனுமா?…” என்றான் அழகர்.
என்ன பேச முடியும்? தவறு முழுவதும் அவர்கள் பக்கம். அதிலும் என்னவோ அதீதமாய் தன் தம்பி செய்திருக்கவும் தான் அழகர் இப்படி அடித்து துவம்சம் செய்திருக்கிறான் என்று புரிந்தது.
இதனை கொண்டு உறவுகளுக்கிடையில் வேறு மனக்கசப்பு. மனம் வெகுவாய் துவண்டு போனது.
காரணமின்றி புகழ்மதி முகம் மனக்குளத்தில் கலங்கி நிற்க, லேசாய் விழிகள் கலங்கியது அரவிந்திற்கு.
“அரவிந்த்…” என அழகர் அழைக்க,
“நான் தான் புகழ்க்கிட்ட சொல்லவேண்டாம்ன்னு சொன்னேன் மாப்பிள்ளை. அது பிரச்சனையை தருமோன்னு…”
“ஆனா என்கிட்ட நீங்க தனியா சொல்லியிருக்கலாமே?…” என்றதும் மீண்டும் அரவிந்திடம் மௌனம்.
“நடந்தது முடிஞ்சு போனதை பேசறதுல எனக்கு என்னைக்குமே விருப்பம் இருந்ததில்லை. முடிஞ்சு போச்சு. ஆனா இனிமே உங்க தம்பி இப்படி நடந்துக்கிட்டா நான் வேற மாதிரி நடந்துப்பேன்…” என்றவன்,
“புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன். அன்ட், நீங்க இப்பவும் கிளம்பற ஐடியால இருந்தா ஒரு கால் பண்ணுங்க. நானே வந்து ட்ராப் பன்றேன் உங்களை. பொண்டாட்டியோட அண்ணனுக்கு செண்டாஃப் பன்றது என்னோட கடமை தானே?…” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டான் அழகர்.
அரவிந்த் பேச்சற்று அமர்ந்துவிட்டான். எந்தவகையிலும் அழகரை அணுகமுடியாதபடிக்கு இருந்தது அவனின் பேச்சுக்கள்.
அரவிந்திடம் சாதாரணமாய் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாலும் உள்ளமெல்லாம் கொதித்து வந்தது அழகருக்கு.
அதிலும் விஷால் அவனிடம் புகழ்மதியை பற்றி பேசியதை நினைக்கையில் அருவருப்பில் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டான் அழகர்.
நேரம் அவன் காணாமலே சென்றது. சென்றுகொண்டே இருந்தது. ஹோட்டலை அடைக்கும் நேரமாகிவிட்டது.
நள்ளிரவு பொழுது. அப்போதுதான் அனைத்து வேலைகளையும் முடித்து சுத்தப்படுத்தி என்று எல்லாம் செய்துவிட, அதுவரையிலும் அங்கே தான் இருந்தான் அழகர்.
“அண்ணே, எல்லாரும் பொறப்பட்டுட்டாங்க…” என்று நம்பி வந்து கூறவும் தான் தெளிந்தான் அழகர்.
“ஹ்ம்ம்…” என்று எழுந்துகொண்டவன்,
“லாக் பண்ணிட்டு நீயும் கிளம்பு…” என்று வெளியே வந்தான்.
“நீங்க வீட்டுக்கு போவலயா?…” என்ற நம்பிக்கே அத்தனை சங்கடம்.
நம்பி அந்த உணவகத்தின் மேற்பார்வையாளன் தான். அவன் மூலமாக தான் அழகர் புகழ்மதியின் கைப்பேசியை தெரிந்த கடையில் சரி செய்ய கொடுத்தது.
கடையிலிருப்பவன் அதிலிருந்ததை பார்த்துவிட்டு நம்பிக்கு அழைத்து கூற, உடன் அழகரும் அங்கே வந்துவிட்டான்.
“விஷயம் வேற யாரு காதுக்கும் போகக்கூடாதுண்ணே…” என கிட்டத்தட்ட மிரட்டவே செய்திருந்தான் நம்பி.
“நான் என்னத்துக்கு சொல்ல போறேன் நம்பி? அதுவும் பொம்பளப்புள்ள வெவகாரம். பய எவன்னு பாத்து திக்கு தெச காணாம சுருட்டி வீசுங்க….” என்றான் கடைக்காரனுமே.
என்னதான் அவன் தங்களுக்கு ஆறுதலாக பேசினாலும் இது எத்தனை தூரம் அசிங்கம் என்று அழகர் ஆடிப்போய்விட்டான்.
அதிலிருந்து இப்போது வரை நம்பிக்கு அழகரின் முகம் காணவே அத்தனை வருத்தமாய் இருந்தது.
“கெளம்புங்கண்ணே. மதினி வேற பயந்துக்க போறாங்க இன்னும் காணுமின்னு…” என்று நம்பி கூற, அழகரின் இதழோரம் வருத்தமான புன்னகை.
எதுவும் பேசாமல் கிளம்பியவன் வீடு வந்து சேர, ஒன்றிரண்டை தவிர்த்து அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது வீட்டில்.
கதவை திறந்து உள்ளே வந்தவன் இன்னும் வீட்டில் யாருக்கும் விஷயம் தெரியவில்லை என்பதில் சற்றே ஆசுவாசம்.
இத்தனை நேரத்திற்கு மயில்வாகனன் வந்து ஆடியிருக்க கூடுமே என்று தான் நினைத்தான் அழகர்.
ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. மயில்வாகனன் அப்போதே விமானத்தில் மதுரை வந்துவிட்டதாய் தகவலும் வந்துவிட்டது.
நிச்சயம் விடியலில் அனைவரும் அறியவேண்டியதிருக்கலாம் என்ற நினைப்போடு தன் அறைக்கு வந்தான் அழகர்.
அவனின் வருகையை எதிர்பார்த்தே காத்திருந்ததை போல உறங்காமல் ஜன்னலோர திண்ணையில் அமர்ந்திருந்தாள் விருஷ்திகா.
அவனை பார்த்ததுமே எழுந்து நின்றவளை பார்த்தவன் முகத்தில் சிறிதும் அருளில்லை.
மௌனமாகவே குளியலறை செல்ல மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு நார்ந்தான்.
குளியலறையில் டவல் இல்லை. அதனை பார்த்தவன் தானே மீண்டும் வெளியே வந்து தேவையானவற்றை எடுக்கவுமே விருஷ்திகாவின் உள்ளம் துணுக்குற்றது.
தன்னை கொஞ்சமும் கண்களால் கூட தீண்டாததோடு இந்த ஒதுக்கமும், பாராமுகமும் அவளை வாட்டியது.
பெரும்பாரம் சூழ்ந்ததை போல் அப்படியே மடங்கி தரையில் அமர்ந்துவிட்டாள் விருஷ்திகா.
இந்தமுறை தவறு அவள் மீது என்பதிலேயே குறுகி, குற்றவுணர்வில் தத்தளித்தவளுக்கு அழகரின் விலகல் இன்னுமே நோவை உண்டாக்கியது.
அவன் வரும்வரையில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவள் அழகர் வந்ததும் மீண்டும் எழுந்து நிற்க, அதனை கண்டவன் வந்து கட்டிலில் அமர்ந்தான்.
அவனாக பேச போவதில்லை. தன் மீதான கோபத்தை அடக்கி கொள்கிறானோ என்று ஒருபக்கம் யோசனை.
மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசிவிடுபவன், இப்படி கோபத்தை அடக்குகிறான் என்றால் அதனை கூட காண்பிக்க கூடாதென்று தன்னை தள்ளி நிறுத்திவிட்டானோ என்று அவளாக என்னென்னவோ நினைத்தாள்.
எதுவாக இருப்பினும் தவறு தன் மீதும். தானே சென்று பேசவேண்டும் என நினைத்தவளுக்கு தொண்டையில் முள் சிக்கிக்கொண்ட உணர்வு.
பயம் ஒருபுறம். பதட்டம் ஒருபுறம். அவன் அமர்ந்திருக்கும் தோற்றமே அவளை மேலும் அச்சமூட்டியது.
ஒருவழியாக மனதை சமன் செய்துகொண்டு அழகரின் அருகில், அவனின் எதிரில் வந்தமர்ந்தாள் விருஷ்திகா.
அவள் வந்ததுமே அவளை உறுத்து விழித்தவன் பார்வையில் சில மாற்றங்கள்.
பேச வாய் திறக்கும்முன் அந்த பார்வை அவளின் வார்த்தையை தடை செய்ய அழகரே பேசினான்.
“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு நிமிஷம் கூட உன்னை என் மனசுல நிறுத்தி நான் பார்த்ததில்லை லக்ஷ்மி. உனக்கு என்னை பிடிச்சிருந்தாலும் கோபமா, இந்த பொண்ணுக்கு இது தேவையில்லாததுன்னு தான் எனக்கு தோணுச்சே தவிர உன்னை மரியாதை குறைவா நான் நினைச்சதில்லை….” என்றான் இறுகிய குரலில்.
அவன் சொல்லவும் விருஷ்திகா பதிலின்றி அவனை பார்க்க, அவள் பார்த்த ஷணம் மீண்டும் அழகரின் விழிகள் ரத்தமென ரௌத்திரத்தில் சிவந்தது.