இப்போது இந்த திடீர் திருமணம், அதுவும் தன் தம்பியின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்ததே பேரதிர்ச்சி தான்.
கூடவே மன சுணக்கமும். ‘ஏன் எங்களிடம் சொல்லியிருக்கலாமே?’ என்றும் கோபமுகம் காண்பித்து ஒதுங்கி நின்றனர்.
“என்ன சுடரு, திரு, உங்க தம்பி பொண்டாடிக்கு ஆரத்தி எடுக்கமாட்டீயலோ?…” என அம்மையப்பன் கேட்க, அவர்கள் அழகுமீனாளை பார்த்தனர்.
“ஓஓஹோ…” என்ற அம்மையப்பன் தன் மகன்களை காண, அவரின் பார்வை உணர்ந்து,
“புகழு, எங்காத்தா நிக்கித?…” என்றார் ஞானம்.
“இருக்கேன் பெரியப்பா…” என்று புகழ்மதி தில்லையின் அருகிலிருந்து வெளியே வந்தாள்.
“நீ எடுக்குதியா உன் மதினிக்கு? இல்ல…” என ஞானம் கேட்கவும்,
“செய்யிதேன் பெரியப்பா…” என்றவள் உடனே தட்டை வாங்கிக்கொண்டாள்.
சுடர்கொடி, திருமகள் இருவரின் முகமும் மாறிவிட்டது. அதன்பின்னே அங்கே சென்று என் உரிமை என்று நிற்க முடியாதே.
தங்கையே எடுக்கட்டும் என மௌனமாய் நின்றுகொண்டனர் இருவருமே. மாணிக்கவல்லிக்கு எவ்வித வருத்தமும் இல்லை.
தில்லை தான் பயந்து போனார். என்ன இருந்தாலும் உடன்பிறந்தவர்களை தாண்டி தானே அடுத்தவர்கள்.
ஒருவீட்டில் வளர்ந்தாலும் தன் மகள் சித்தப்பா பெண் தானே என்று தில்லை சுடர்கொடி, திருமகளை திரும்பி பார்த்தார்.
‘விடு சித்தி. அங்க பாரு.’ என திருமகள் சமாதானமாய் தில்லையை கண்ணமர்த்தி சமாளித்தாள்.
“இன்னும் கிட்ட வந்து எடுத்தா…” என சுடர்மணி மகளிடம் கூற அழகர், விருஷ்திகாவை நெருங்கி நின்ற புகழ்மதி ஆலம் சுற்ற எதிர்வீட்டில் இன்னும் படபடவென்று சப்தம்.
யாரோ அங்கிருந்து வருவதையும், சிலர் தடுப்பதையும் பார்த்தவளுக்கு பயத்தில் கைகள் நடுங்கியது.
“புகழ்…” என்றான் அழகர் தங்கையிடம் அழுத்தமாய்.
“சண்டையாவும் போலண்ணே…” என்றவளுக்கு கண்ணில் நீர் ததும்பிவிட்டது.
சுடர்கொடி, திருமகளை போலவெல்லாம் புகழ்மதி அத்தனை துணிச்சல் கிடையாது. சாதுவான பெண்.
அதுவும் பலவருடம் தவமிருந்து பெற்ற ஒற்றை பெண் என்பதனால் மிகவுமே பொத்தி பொத்தி வளர்த்துவிட தில்லையின் குணத்தில் வளர்ந்துவிட்டாள் அவள்.
தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஆரத்தி சுற்றி முடிக்க, அழகர் தன் விரலில் போட்டிருந்த மோதிரத்தை கழற்றி விருஷ்திகாவின் கையில் தந்து,
“புகழ்கிட்ட குடு லக்ஷ்மி…” என்றான்.
இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாத பாவனையுடன் மருண்டு விழித்தபடி தன் வீட்டில் என்ன நடக்கிறதோ என்னும் பயத்துடன் இங்கே கவனமின்றி இருந்தவளின் கவனத்தை தன் புறம் அவன் திருப்ப,
“ஹாங், என்ன?…” என்றாள் புரியாமல்.
“ஆரத்தி சுத்திருக்கா. மொதமொதல்ல வீட்டுக்குள்ள என் பொண்டாட்டியா வர்ற. அப்போ உன் நாத்தனாருக்கு செய்யனும்ல. போடு…” என்றான் அதட்டலாக.
பார்ப்பவர்களுக்கு மிரட்டி திருமணம் செய்துகொண்டதை போலவே ஒரு தோற்றம் அழகரின் முகமும், விருஷ்திகாவின் பயமும்.
“அழகரு…” என்றார் அம்மையப்பன் கண்டிப்புடன்.
அவரின் சத்தத்தில் அமைதியானவன் இன்னும் விருஷ்திகாவிடம் நீட்டிய கரத்தினை பின்னிழுக்கவில்லை.
“இந்தா இந்தாருங்க, என்னவாச்சின்னா…” என அழகுமீனாள் பேச்சை துவங்க, அம்மையப்பன் கேட்க தயாரில்லை.
தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறிக்கொண்டு விறுவிறுவென்று வீட்டினுள் சென்றுவிட அவரை பின்தொடர்ந்து மற்றவர்களும் செல்ல வந்திருக்கும் உறவுகள் முன் முற்றத்தில் தேங்கி நின்றனர்.
“தில்லை, வந்தவகள ஒக்காரவச்சி என்னன்னு பாருத்தா….” என்ற சுடர்மணி,
“செத்த இங்கின ஒக்காருங்க. வாரன்…” என பஞ்சாயத்து பேச வந்திருப்பவர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அங்கே விருஷ்திகாவுடன் அழகர் அம்மையப்பனின் தாயார் சுந்தரவல்லி அம்மாவின் புகைப்படத்தின் முன் நின்றிருந்தான்.
வீட்டின் நடுநாயகமாக அந்த புகைப்படம் தான் சுவற்றின் முழுவதிற்கும் மாட்டப்பட்டிருந்தது.
அதன்முன் எரிந்துகொண்டிருந்த விளக்கினை தொட்டு வணங்கிய விருஷ்திகா இன்னும் பொம்மை போல் தான் நின்றிருந்தாள்.
“பூச ரூமுக்கு…” என்று மாணிக்கவல்லி வாயை திறக்க,
“ஆக்கங்கெட்டவளே நிப்பாட்டுடி….” என வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார் அழகுமீனாள்.
என்ன நடந்தது என்று துரிதமாய் தன் பேத்திகளிடம் கேட்டு தெரிந்துகொண்டு வேகமாத் ஓடி வந்திருந்தார் அவர்.
அத்தனைபேரும் அதிர்ந்து திரும்ப மாணிக்கவல்லி கண்களை நீர் நிறைத்துவிட்டது.