விருஷ்திகாவின் மனம் இப்போது அவனின் அருகாமைக்கு தான் ஏங்கியது. இதுவரை அவனின் பிடியில் நின்றவளின் தைரியம் வடிவதை போலிருக்க கண்ணீர் விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
ஒருநொடி அந்த பார்வை அழகரை உலுக்க குலுங்கி சீரானது அவனின் ஆழ்மனது.
ஆனாலும் பல்லை கடித்துக்கொண்டு அவன் மௌனமாய் நின்றான். புகழ்மதியுடன் விருஷ்திகா செல்ல அழகுமீனாள் அவளின் கழுத்தில் கிடக்கும் திருமாங்கல்யத்தை பார்த்தார்.
தங்கத்தில் தான் தாலி கட்டியிருந்தான் அழகர். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு என்று புரிந்துபோனது.
“போலாங்கய்யா…” என அம்மையப்பனை பார்த்து சொல்லிய அழகர் விறுவிறுவென்று வெளியே முன்முற்றம் நோக்கி சென்றுவிட்டான்.
அம்மையப்பனும், ஞானசேகரனும் அவனை பின்தொடர சுடர்மணி தன் தாயை முறைத்தார்.
“தலைய தட்டி ஆசிய பண்ணிபோட்டு பேச்சாத்தா பேசுத நீயி?…” என முறைத்துக்கொண்டு நிற்க,
“சேரி, அதுதேன் ஆனது ஆகிபோச்சு. இப்போ என்னத்துக்கு அந்த புள்ளைய ஏசுத நீயி? வாயடக்கலைன்னா அய்யாவே அமுத்திப்புடுவாரு. பாத்துக்கிடுத்தா…” என்று எச்சரித்துவிட்டு அவரும் சென்றுவிட்டார்.
சத்தமின்றி மருமகள்கள் இருவரும் தங்களின் மருமகள் என்ன செய்கிறாள் என்று காண கிளம்ப,
“இந்தாடி இங்கிட்டு வாங்க…” என்று கட்டளையாய் அழகுமீனாள் அழைக்கவும் அப்படியே பிரேக்கடித்து நின்றனர் மாணிக்கவல்லியும், தில்லையம்பாளும்.
“ம்க்கும், இப்ப ரோசிச்சு மட்டும் என்னத்த? மொத நம்ம மாமியாருக்கு போன போட்டு தாக்கல சொல்லுவோம். என்ன ஏதுன்னு எம்புருசென் சொன்னா ஒம்பொண்டாட்டிக்கு வாயில்லையா, அவ தாக்க சொல்லமாட்டாளான்னு அடுத்த கச்சேரிய அங்க நாட்டிரும்…” என்ற சுடர்கொடி தங்கையை இழுத்துக்கொண்டு சென்றாள் தன் புகுந்தவீட்டிற்கு தகவல் சொல்ல.
அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் கலங்கும் கண்களை துடைத்துக்கொண்டு அழகுமீனாள் வெளியே வந்தார்.
அதற்குள் வந்திருந்தவர்களுக்கு குடிக்க சூடாக டீ வழங்கப்பட்டிருக்க, வந்தவர்கள் முணுமுணுவென்று பேசியபடி இருந்தனர்.
இரவு நேரத்திலும் நான்கு காற்றாடிகள் ஓடியும் காற்று அனலை அள்ளிக்கொண்டு முற்றத்தில் வீச சுடர்மணி வீட்டினுள் இருந்து கூலரை நகர்த்திக்கொண்டுவந்து முற்றத்தில் வைத்தார்.
அவர்களின் நெருங்கிய சொந்தத்தில் ஞானசேகரனுக்கு அண்ணன் முறையில் இருப்பவர் இன்னும் இரு உறவுகளுடன் எதிர்வீட்டுக்கு சென்று இங்கே வந்துகொண்டிருந்தனர்.
அவரை எதிர்பார்த்துக்கொண்டு தான் அனைவருமே அமர்ந்திருந்தனர். அங்கே என்ன விஷயம் என்று தெரியவேண்டியதிருந்ததே.
“வாங்கண்ணே என்ன சொல்லுதாக?…” என ஞானசேகரன் கேட்க, அழகரும் போனில் பேசிவிட்டு அவ்விடம் வந்தமர்ந்தான்.
நடுநாயகனாக அவன் வந்தமர்ந்ததோடு மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கதிர்வேலனை காண சென்றுவந்தவர்களை கூர்ந்து கவனித்தான்.
“என்னத்த சொல்லுதது ஞானம்? அங்க நெலவரம் அம்புட்டுக்கு சுளுவா இல்லைய்யா…” என்றார் அவர் அழகரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.
“பொண்ண பெத்தவக இல்ல. இருக்கத்தேன் செய்யும்…” என்று அம்மையப்பன் பொதுவாய் கூற,
“அம்புட்டுக்கு இறங்கி ஒன்னும் போவ அவசியமில்ல பெரியப்பா. சொல்லுதத கேட்டுக்கோங்க…” என்ற அழகர்,
“நான் ஒன்னும் யாரோ ஒருத்திய கட்டிக்கலா. இங்க வளர்ந்த புள்ள தான? என்ன தப்பு? லக்ஷ்மிக்கும் புடிச்சு, அவ சரின்னு சொன்னதால தான் தாலியே கட்டுனேன்…” என்றான் அழகர் அப்போதும்.